என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இலங்கை பொருளாதார நெருக்கடி"
கொழும்பு:
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது.
பெட்ரோல்-டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயந்ததாலும், பற்றாக் குறையாலும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதையடுத்து அப்பொறுப்பை ரணில் விக்ரமசிங்கே ஏற்றார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
மத்திய வங்கியின் தற்போதைய கவர்னர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்து தனது நண்பரான தினேஸ்வீரக்கொடிக்கு பதவியை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இதற்கு கோத்தபய ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கே, நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்கேவின் பதிலால் கோத்தபய கோபம் அடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே பேச்சு வார்த்தையை ராஜபக்சே குடும்பத்தினர் உறவினர் திருகுமார் நடேசன் ஏற்பாடு செய்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். அதன்பின் புதிய அமைச்சர்களையும் நியமித்தார். ஏற்கனவே நாடு பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி கொண்டிருக்கும் வேளையில் கோத்தபய ராஜபக்சே-ரணில் விக்ரமசிங்கே இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தத்தளித்து வரும் இலங்கையில் விவசாயமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை விவசாயத்துக்காக வேதி உரங்களின் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு அரசு தடை விதித்ததால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் நெல், தேயிலை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் 50 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதனால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியும், விளைச்சல் இழப்பும் நீடித்தால் ஆகஸ்டு மாதத்தில் நாடு மிகப்பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் என வேளாண் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து விளைச்சலை அதிகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக மே-ஆகஸ்டு கால கட்டத்தில் நடைபெறும் யாலா பருவ சாகுபடிக்கு பெரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக இந்தியாவிடம் இருந்து உரம் கேட்டு இருக்கிறது. இந்தியா வழங்கி வரும் கடன் எல்லைக்கு உட்பட்டு இந்த உர கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இலங்கையின் இந்த கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்த்து உள்ளது. இலங்கை விவசாயிகளின் பயிரை பாதுகாத்து, நாடு உணவு பற்றாக்குறையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியா முடிவு செய்திருக்கிறது. இதை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், நேற்று உறுதி செய்துள்ளார்.
நீர்ப்பாசன அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய அவர், இலங்கையின் அடுத்த சாகுபடி பருவத்துக்கு இந்தியா உரம் வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்தியா வழங்கும் இந்த உரம் கொழும்பை அடைந்தவுடன், 20 நாட்களுக்குள் நாடு முழுவதும் வினியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உரம் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் டன் யூரியா வழங்கப்படும் என இந்தியா கடந்த மாதம் அறிவித்து இருந்தது. இந்தியாவில் உரம் ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதும், இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உரம் வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக இலங்கை தூதரகம் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடைக்கும் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் வாங்கி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை அரசுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களும் கடனுதவி வழங்கி வருகின்றன. ஆனாலும் நாட்டின் இன்னல்களுக்கு விடை தெரியவில்லை.
மக்களின் துயரங்களும் முடிவுறவில்லை. மாறாக நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இலங்கை பொது நிர்வாகத்துறை செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரியந்தா மயதுன்னே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இலங்கை பஞ்சத்தின் விளிம்பில் உள்ளது. மே மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்து இருக்கிறது. நாடு பஞ்சத்தை எதிர்நோக்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவோ, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவோ அரசிடம் பணம் இல்லை.
பெரும்பாலான இலங்கை மக்களுக்கு ஒரு கோப்பை பால் கூட, ஆடம்பரமாக மாறி விட்டது. தங்கள் தேவையை சமாளிப்பது மிகவும் கடினமாகி விட்டது. இலங்கையில் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் விரைவில் பயனற்றதாகிவிடும். உண்மையை மறைப்பதிலோ அல்லது மக்களை ஏமாற்ற முட்டாள்தனமான முயற்சிகளை மேற்கொள்வதாலோ எந்த பயனும் இல்லை.
இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு, நிபந்தனைகளுடன் வரும் சர்வதேச நிதியுதவி உள்ளிட்ட தொலைநோக்கு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து ஏற்றுக்கொள்ளாத வரையில் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்று மயதுன்னே கூறினார். இலங்கை மக்களின் நிலைமை இவ்வாறு மோசமாகிக்கொண்டே செல்லும் நிலையில், அங்கு உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளின் நிலைமையோ இன்னும் மோசமாகி வருகிறது.
இந்த விலங்குகளுக்கு நாள்தோறும் வழங்க வேண்டிய உணவுக்கான பணத்தை அரசால் வழங்க முடியவில்லை. இதனால் அவை பட்டினியில் சாகும் நிலை ஏற்பட்டிருப்பதாக உயிரியல் பூங்காக்கள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பார்வையாளர் வருகை குறைந்ததும் இதற்கு ஒரு காரணம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இலங்கை உணவு நெருக்கடியை தீர்க்க அரசு உறுதிபூண்டுள்ளதாக வேளாண்துறை மந்திரி மகிந்த அமரவீரா தெரிவித்து உள்ளார். இதற்காக தேசிய உரக் கொள்கை மற்றும் உரத் தேவைகளுக்காக பாஸ்பேட் இருப்புகளை உகந்த முறையில் பயன்படுத்துமாறு கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அரிசி உற்பத்தியில் அடுத்த ஆண்டுக்குள் நாடு தன்னிறைவை எட்டும் என்றும் அவர் கூறினார்.
நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு விவசாயிகளிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் இலங்கை அரசில் அதிபரின் வானளாவிய அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் 21-வது சட்ட திருத்தம் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் இதற்கு அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. குறிப்பாக ஆளும் இலங்கை மக்களின் கட்சி எம்.பி.க்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த கட்சியில் ராஜபக்சே குடும்பத்தின் விசுவாசிகளாக கருதப்படும், அதுவும் பசில் ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் பலரும் இந்த முடிவை எதிர்த்து வருகிறார்கள்.
இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய இந்த எம்.பி.க்கள், அரசியல் சாசன சீர்திருத்தங்களை விட பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுதான் முக்கியமானது என கூறியுள்ளனர். அதேநேரம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச உதவியை பெற வேண்டுமானால் அரசியல்சாசன சீர்திருத்தம் அவசியம் என்று வேறு சில எம்.பி.க்கள் கூறினர். இதனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பதில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிக்கலாம்...தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல: அண்ணாமலை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவில் பகுதியில் இன்று 3 அகதிகள் இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் அவர்களை மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கொழும்பு, தெமட்டோ கோட்டை பகுதியை சேர்ந்த வரதன் மனைவி ஜெசிந்தா மேரி (வயது 51), வரதன் மகன் பிரிவின் சஞ்சய் (10), லோகநாதன் மகன் அனிஸ்டன் (31) என தெரியவந்தது.
அவர்கள் இதுபற்றி கூறுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து எங்களால் கூலி வேலை செல்ல முடியாமல் உணவுக்கு தவித்து வந்ததாகவும், இதனால் இந்தியா சென்று பிழைத்து கொள்ளலாம் என முடிவு செய்து நேற்று மாலை மன்னார் பகுதியில் இருந்து பணம் கொடுத்து பிளாஸ்டிக் படகில் வந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் 3 அகதிகளும் 1995-ம் ஆண்டு முதல் 2017 வரை குடியாத்தம் அகதிகள் முகாமில் இருந்துள்ளனர் என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி மதிப்பு கூட்டு வரி (வாட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், தொலைத் தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு விலக்குகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் குறைந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு வரி சலுகைகள் அறிவித்ததையடுத்து ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரி வருவாயில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
2020-21-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், வரி சீர்திருத்தங்கள் அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழி வகுத்த கொள்கைகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2021-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக குறைந்து மோசமடைந்துள்ளது.
இந்த நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே வருவாயை மேம்படுத்துதல், நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றுவதில் வரி உயர்வை செயல்படுத்துவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்நாட்டு அரசு பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதனால் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர்.
இலங்கை விமானங்கள், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பி செல்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்தில், இலவச மிதிவண்டி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்கள் பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள் இல்லாமல் பயணிக்க முடியும்.
கொழும்புவில் பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனப்படுத்தும் நோக்கில் இந்த சைக்கிள் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள இந்த துறைமுகம் 469 ஹெக்டேர் (1,160 ஏக்கர்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் மிக நீளமான சாலை வசதி உள்ளது. அது சுமார் நான்கு கிலோமீட்டர்கள் (2.5 மைல்) வரை நீண்டுள்ளது.
துறைமுக தொழிலாளர்கள் துறைமுகத்தில் பயணிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக மிதிவண்டிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்காக 100 மிதிவண்டிகள் துறைமுகத்தில் உள்ளன.
இது குறித்து, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான்ன கூறியதாவது, "துறைமுகத்திற்கு வருபவர்கள் மற்ற வாகனங்களுக்கு பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்தும் வகையில், பயன்படுத்தப்படாத ரெயில் பாதையை சைக்கிள் பாதையாக மாற்றி அமைத்துள்ளோம். இலங்கையை கடுமையாக பாதித்துள்ள பொருளாதார பிரச்சனைகளில் இருந்து துறைமுகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி துறைமுகத்தில் செயல்பாடுகளை சீர்குலைக்கவில்லை. வேறு இடங்களில் எரிபொருளை பெறுவதற்கு சிரமப்படும் கப்பல்துறை தொழிலாளர்களுக்கு மட்டும், துறைமுகம் தனது சொந்த இருப்புகளிலிருந்து பெட்ரோலை வழங்கி வருகிறது. எங்களிடம் எரிபொருள் கையிருப்பு இருப்பதால் நாங்கள் வழக்கம் போல் எங்கள் வேலையைச் செய்கிறோம்" என்று தெரிவித்தார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் நிலையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கடந்த மாதம் 9-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர்.
அதிபர் மாளிகை முன்பு காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகி விட்ட நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
அவர் பதவி விலக கோரி போராட்டம் தொடருகிறது. இதற்கிடையே கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் நேற்று 50-வது நாளை எட்டியதையடுத்து கண்டன பேரணிகளை நடத்தினர்.
மேலும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை நோக்கி சென்றனர். அவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் தடையை மீறி முன்னேறினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் பேரணியாக வந்தவர்களை கலைத்து, நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படியுங்கள்.. உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகம்: பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்