search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP Sylendra Babu"

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார்.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்கு நேற்று இரவு 8 மணியளவில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வந்தார். அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்திடம் இப்பகுதியில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் அதன் பின்னணி நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் குற்றங்களை தடுப்பதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரித்த எழுத்தர் தமிழ்ச்செல்வியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அளித்தார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் இந்த இரவு நேர அதிரடி ஆய்வால் ஓட்டேரி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    • டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார்.
    • கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    கோவை:

    கோவையில் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நடந்தது.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனடியாக கோவைக்கு விரைந்து வந்தார். சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இதில் தொடர்புடையவர்களை விரைந்து பிடிக்குமாறும், விசாரணையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து போலீசார் துரித விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடையதாக 6 பேரை கைது செய்தனர். மேலும் வெடி மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றினர்.

    மேலும் அசம்பவாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரைகளையும் டி.ஜிபி. வழங்கினார்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகளும் இந்த வழக்கு சம்பந்தமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு நாளை மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) கோவைக்கு வருகிறார். கோவைக்கு வரும் அவர், கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவையில் தற்போது உள்ள நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

    மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

    மேலும் கோவையில் சில இளைஞர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்வார் என போலீசார் தெரிவித்தனர்.

    • நாளை முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் முழுவதும் நாளை (9-ந் தேதி) முதல் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் மீட்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சை போன்ற 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதோடு காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் படகுகளுடன் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை டி.ஜி.பி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    • முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
    • கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    சென்னை :

    போக்சோ வழக்குகள் தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டின் சிறுவர் நீதிக்குழு மற்றும் 'போக்சோ' குழுவினர் 'போக்சோ' சட்டத்தை (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்) ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அந்த குழுவினர் 'போக்சோ' வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    * திருமண உறவு, காதல் உறவு போன்ற 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரிகள், எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம்.

    * குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

    * குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

    * முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த அறிவுரைகளை போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

    • ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
    • நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.

    சென்னை :

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச்சாலை சுங்கச்சாவடிகளிலும் பெண்களையும், குழந்தைகளையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை சில கும்பல்கள் இந்த தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 9 போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள், 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

    இவர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்துக்கும், குழந்தைகள் காப்பகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 150 பேர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ஏழை பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் மற்றும் வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணக்கமாக ஆய்வு செய்து வருகிறோம்.
    • நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் "சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- 

    சைபர் கிரைம் மோசடிக்கு ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் கிரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். எந்த ஒரு வங்கியும் ஓ.டி.பி. எண்ணை கேட்பது கிடையாது. எனவே ஓ.டி.பி. எண்ணை யாராவது கேட்டால் பகிரக்கூடாது இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது.

    எனவே ஆசைவார்த்தை கூறுபவர்களின் உண்மைத்தன்மை அறிந்து நாம் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக 46 காவல் நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அளித்த பேட்டி வருமாறு:- 

    சென்னை பல்கலைக்கழகத்தில் சைபர் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடம் செல்போன் உள்ளது. இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது.

    எனவே உலகத்தில் உள்ள எந்த நபரும் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். வெளிநாட்டில் போதைப்பொருள் ஏற்றுமதி செய்தது தொடர்பாக உங்களது வங்கிக்கு பணம் வந்துள்ளது என்றோ உங்களுடைய ஆதார் எண் கொடுங்கள் என்றோ உங்கள் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்யலாம்.

    தற்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை. எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி நாங்கள் அனுப்புகிற லிங்கில் பத்து ரூபாய் செலுத்துங்கள். உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது என்று கூறுவார்கள். மின் இணைப்பை மீண்டும் பெற நாம் அவர்கள் கொடுத்த லிங்கிற்கு பத்து ரூபாய் அனுப்பினால் நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள்.

    அதுபோல் உயர் கலெக்டர், டி.ஜி.பி. பேசுவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. நம்மை ஏமாற்றுபவர்கள் வெளிநாட்டில் இருக்கலாம். சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணிற்கு புகார் கொடுக்கலாம்.

    பிரதமர் வருகையின்போது பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் எப்படி உள்ளன என்பது பற்றி நுணக்கமாக ஆய்வு செய்து வருகிறோம்.

    செயல்படாத உபகரணங்கள் இருந்தால் மாற்று உபகரணங்கள் வாங்கும் பழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகவே இருந்து வருகிறது. அதை தவறாமல் செய்து வருகிறோம். தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தரமான உபகரணங்கள் உள்ளன.

    தற்போது கூட நமது காவல்துறையைச் சேர்ந்த 2 குழுவினர் மோப்ப நாய்களுடன் அந்தமான் சென்றுள்ளனர். அங்கிருந்து விமானத்தில் திரும்ப உள்ளனர். இதே போன்று கேரளாவுக்கும் சென்றுள்ளனர்.

    இப்படி வெளி மாநிலங்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நாம் வழங்கி வருகிறோம். எனவே அதில் எந்த குளறுபடிகளுமே இல்லை. பழையதை மாற்றி விட்டு புதியன வாங்குவது வழக்கமாக மேற்கொள்ளப்படுவது தான். நம்மிடம் இருப்பது பழைய டெக்னாலஜி எல்லாம் கிடையாது. வெளி மாநிலத்தவர்களும் பாதுகாப்பு உபகரணங்களை கேட்டு வாங்குகிறார்கள். பழைய டெக்னாலஜி என்றால் அவர்கள் வாங்க மாட்டார்கள்.

    நவீன தரமான பாதுகாப்பு உபகரணங்கள்தான் நம்மிடம் உள்ளன. 2 மடங்கு அதிகமாக அளவுக்கு அதிகமானவே பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. அதில் எதை பயன்படுத்த வேண்டும், எதனை களைய வேண்டும் என்கிற விதி உள்ளது. அதைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

    பிரதமர் பாதுகாப்பு தொடர்பாக எஸ்.பி.ஜி.யிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

    என்.ஐ.ஏ.விடம் ஏற்கனவே 15 வழக்குகள் உள்ளன. அது தொடர்பான உதவிகள், தகவல்கள் பரிமாற்றங்களை மேற்கொள்ளவே என்.ஐ.ஏ. ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்கள் தரப்பிலும், நமது காவல்துறை தரப்பிலும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    நமது ஊரில் உள்ள அப்பாவி இளைஞர்களின் செல்போனை பயன்படுத்தியும் வெளிநாட்டினர் சைபர் குற்றங்களில் ஈடுபடுவார்கள். எனவே இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து வேலை செய்யும்போது அதிக குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான கேள்விக்கு வட மாநிலத்தவர் சராசரியான குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • பழிக்கு பழிவாங்கும் கொலைகளை தடுக்க முடியும்.
    • ரவுடிகளின் சமூக விரோத செயலையும் கண்காணித்து தடுத்து நிறுத்தலாம்.

    சென்னை :

    ரவுடிகளின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் டிராக் கேடி என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த புதிய செயலியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முறைப்படி அறிமுகப்படுத்தி வெளியிட்டார்.

    தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா தலைமையிலான குழுவினர் இந்த செயலியை உருவாக்கி உள்ளனர். புதிய செயலியை வெளியிட்ட நிகழ்ச்சியிலும், இவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த புதிய செயலியில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, அவர்களின் நன்னடத்தை பிரிவின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டு உள்ளனர் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் குற்றவாளிகளின் விவரமும் இதில் அடங்கும். இவர்கள் செய்த குற்ற விவரம் இருக்கும். நன்னடத்தை பிணையில் இருப்பவர்கள் அதை மீறும் பட்சத்தில் அது தொடர்பான எச்சரிக்கை தகவலும் இதில் வெளியாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்கள் மற்றும் 9 கமிஷனரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் இதர குற்றவாளிகளின் பட்டியல் புதிய செயலி மூலம் டிஜிட்டல் மயமானது. இதன் மூலம் ரவுடிகளின் செயல்பாட்டை போலீசார் கண்காணிக்க முடியும்.

    பழிக்கு பழிவாங்கும் கொலைகளை தடுக்க முடியும். ரவுடிகளின் சமூக விரோத செயலையும் கண்காணித்து தடுத்து நிறுத்தலாம்.

    மொத்தத்தில் ரவுடிகளின் விவரங்கள் அதிகாரிகளின் விரல் நுனியில் இருக்கும் வகையில் இந்த செயலி பேருதவியாக இருக்கும்.

    • டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் தருண் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தினான்.
    • சிறுவன் தருண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளான்.

    சென்னை:

    நாடு முழுவதும் காவல்துறையில் பணிபுரிந்து உயிரிழக்கும் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் 264 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மெரினா கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

    டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் தருண் போலீஸ் உடையில் சென்று மரியாதை செலுத்தினான். சிறுவன் தருண் ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளான்.

    இதையொட்டி போலீஸ் தொடர்புடைய நிகழ்ச்சியில் அவன் அடிக்கடி பங்கேற்று வருகிறான். அந்த வகையில்தான் இன்று நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்று மரியாதை செலுத்தியுள்ளான்.

    இது தொடர்பாக சிறுவன் தருண் கூறும்போது, "காவல் துறை பணி சிறப்பானது. பெரிய ஆளான பிறகு நானும் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்தான்.

    இந்த மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இன்று நடைபெற்றது. அந்தந்த மாநில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    • தீபாவளி பண்டிகை 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • மோட்டார் சைக்கிளில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது.

    சென்னை :

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.

    * சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    * சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது.

    * எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மோட்டார் சைக்கிள், கார்கள் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    * பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்க கூடாது.

    * குடிசைகள், ஓலைக்கூரைகள் உள்ள இடங்களில் வாணவெடிகளையோ, எந்தவித பட்டாசு வகைகளையோ கொளுத்தக்கூடாது.

    * பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

    * ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கோர்ட்டுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் (ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்கள்) பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.

    * பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதோ கூடாது.

    * பட்டாசுகளை வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.

    * கால்நடைகள் அருகே பட்டாசு வெடித்தால் அவைகள் மிரண்டு சாலையில் செல்வோரை தாக்கி விபத்துகளை ஏற்படுத்தலாம். எனவே கால்நடைகள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்க கூடாது.

    * விதிமுறைகளை மீறி அல்லது உரிமம் இன்றி பட்டாசு விற்றால், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்தால், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் தகுந்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை விழிப்போடு பாதுகாக்க வேண்டும்.

    * பட்டாசு பொருட்கள் பஸ், மோட்டார் சைக்கிள், ரெயில் போன்றவற்றில் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

    * நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைக்க வேண்டும். அதிவேகமாக செல்வதை தவிர்த்து விபத்தின்றி பயணம் செய்ய வேண்டும்.

    * மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    * பட்டாசு மூலம் அல்லது வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை, தீயணைப்பு மட்டும் மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண்-100, 112 மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து குற்றங்கள் இல்லாத, விபத்தில்லாத தீபாவளியை உறுதி செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் இந்த தீபாவளியை கொண்டாட அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் போகவேண்டாம்.
    • வெளிநாட்டு வேலைக்குப் போக விருப்பம் உள்ளவர்கள் 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம்.

    சென்னை :

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய படிப்புக்கு ஏற்ற நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வந்தன. அதை நம்பி தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏஜெண்டுகள் வாயிலாக சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுள்ளனர். அவர்களை பின்னர் மியான்மர் நாட்டுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். அந்த 18 பேரும் தமிழக அரசு உதவியுடன் மீண்டும் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.

    அதேபோல கம்போடியா நாட்டுக்கும் சிலர் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டனர். அவர்களும் தமிழக அரசு மூலம் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக வேலை பார்த்த ஷாநவாஸ், முபாரக்அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு யாரும் போகவேண்டாம்.

    வெளிநாட்டு வேலைக்குப் போக விருப்பம் உள்ளவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தை அணுகினால் அதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்துகொள்ள 044-28447701 என்ற தொலைபேசி எண்ணில் பேசலாம். உரிய விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன.
    • 822 மகளிர் போலீஸ் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தமிழக போலீஸ் டி,ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று தஞ்சை வந்தார். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு போலீஸ் நிலையம் அருகே கண்காணிப்பு கேமரா நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

    பின்னர் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன.

    மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 822 மகளிர் போலீஸ் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள்.

    மேலும் 1,480 போலீஸ் நிலையங்களில் ஒரு காவல் அதிகாரியை குழந்தைகள் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்கொலையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புகார்தாரர்களிடம் துன்புறுத்தும் வகையில் செயல்படுவது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர வேண்டும்.
    • காவல் துறைக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

    சென்னை:

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார்தாரர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.

    சில போலீஸ் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் உள்ளனர். புகார்தாரர்கள் சில நேரங்களில் உயர் அதிகாரிகளை அணுகி இருந்தால் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது.

    புகார்தாரர்களிடம் துன்புறுத்தும் வகையில் செயல்படுவது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர வேண்டும். காவல் துறைக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×