search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP Sylendra Babu"

    • குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்களுக்கு அகர்சனா தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறார்.
    • இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இதுபோன்று புத்தகங்களை வழங்கி பாராட்டு பெற்று உள்ளார்.

    சென்னை:

    சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளின் படிப்பாற்றலை வளர்ப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையிலான புத்தகங்களும், கார்ட்டூன் புத்தகங்களும் உள்ளன.

    இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நூலகத்துக்கு ஐதராபாத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி அகர்சனா 1000 புத்தகங்களை வழங்கினார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    மாணவியின் தந்தை சதீஷ், அகர்சனாவின் இந்த செயலை பாராட்டி தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

    இதன் காரணமாக இதுபோன்று குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்களுக்கு அகர்சனா தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறார். இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இதுபோன்று புத்தகங்களை வழங்கி பாராட்டு பெற்று உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாணவர்களின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பேசினார். இது தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை மாணவர்களிடம் எடுத்துக்கூறி ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    நொளம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தற்போதைய நிலவரப்படி முதல் 2 இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர்.
    • வருகிற 28-ந்தேதி தமிழக டி.ஜி.பி. யார் என்று அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வருகிற 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நாளை (22-ந்தேதி) டெல்லியில் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, தற்போதைய டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    புதிய டி.ஜி.பி.க்கான போட்டியில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் முன்னாள் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, பி.கே.ரவி, தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார், தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனர் சீமா அகர்வால் உள்பட 10 பேர் உள்ளனர். டெல்லியில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இவர்களில் 3 பேர் இறுதி செய்யப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழக டி.ஜி.பி. பதவிக்கு சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சஞ்சய் அரோரா ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த 3 பேரில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி முதல் 2 இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர்.

    சைலேந்திர பாபுவுக்கு வருகிற 30-ந்தேதி பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை ஆகும். எனவே வருகிற 28-ந்தேதி தமிழக டி.ஜி.பி. யார் என்று அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • ள்ளச்சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 69 வாகனங்கள், 1,077 மோட்டார் சைக்கிள்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். இந்த ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உயிர் பலிக்கு காரணம் கள்ளச்சாராயம் இல்லை. மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல. ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த சாராய வியாபாரி அமரன் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், முத்து என்பவரிடம் வாங்கி உள்ளார். முத்து புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் இருந்து வாங்கி இருக்கிறார்.

    சித்தாமூர், பெருக்கரணை, பேரம்பாக்கம் பகுதியில் விஷச்சாராயத்தை விற்பனை செய்த அமாவாசை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாராயத்தை அருந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இவர், இந்த விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த வேலு, அவரது சகோதரர் சந்திரன் ஆகியோரிடம் இருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    வேலு பனையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் இருந்து வாங்கி உள்ளார். அவருக்கு இதனை விளம்பூரை சேர்ந்த விஜி என்பவர் விற்று இருக்கிறார். அவரும் இந்த விஷச்சாராயத்தை புதுச்சேரியை சேர்ந்த ஏழுமலையிடம் இருந்து வாங்கி உள்ளார். எனவே சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணத்தில் விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்தில் இருந்து வந்திருப்பது புலனாகி உள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 37 ஆயிரத்து 217 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு 2 ஆயிரத்து 957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 78 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதே போல் கள்ளச்சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 69 வாகனங்கள், 1,077 மோட்டார் சைக்கிள்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் தொழிற்சாலைகளில் இருந்து விஷசாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    எந்த தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த ஏட்டு தேசிங்கு மூதாட்டியை பத்திரமாக காப்பகம் ஒன்றில் சேர்த்தார்.
    • சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் போலீசாரையும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களையும் நேரில் அழைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னை மாம்பலம் சிவபிரகாசம் சாலையில் கடந்த மாதம் 28-ந்தேதி வயதான மூதாட்டி ஒருவர் தவித்துக்கொண்டிருந்தார். இது தொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். காக்கும் கரங்கள் செயலி மூலமாகவும் மூதாட்டியின் நிலை பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு தேசிங்கு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டிக்கு உதவி செய்தார். அவரது பெயர் மற்றும் விவரங்களை கேட்டார். அப்போது மூதாட்டி தனது பெயர் ஜெயம்மா என்று தெரிவித்தார். மற்ற விவரங்களை அவரால் கூற முடியவில்லை.

    இதை தொடர்ந்து மூதாட்டிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த ஏட்டு தேசிங்கு அவரை பத்திரமாக காப்பகம் ஒன்றில் சேர்த்தார். இது பற்றி தெரியவந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏட்டு தேசிங்கை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது சிறப்பாக பணியாற்றி இருக்கிறீர்கள். இதுபோன்ற பணிகள் தொடரட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

    டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதுபோன்று சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் போலீசாரையும் சிறப்பாக பணியாற்றும் காவலர்களையும் நேரில் அழைத்து தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.
    • இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    சென்னை :

    இந்தி இயக்குனர் சுதீப்டோ சென் இயக்கத்தில் இன்று வெளியாகும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்ட 'டீசர்' சமீபத்தில் வெளியானது. இதில் கேரளாவை சேர்ந்த பெண்கள் பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அம்மாநிலத்தில் வலுத்தது.

    தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் வெளியானால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசை மாநில உளவுத்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த படத்துக்கு தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி ஆனது. இதற்கிடையே இந்த திரைப்படம் இன்று வெளியாகிறது.

    இந்த படம் வெளியாகும் தியேட்டர்களின் முன்பு போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * இந்த திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

    * இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    * பதற்றமான பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * இந்த படத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்

    * சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெண்களுக்கு புத்தகமும், பேனாவும்தான் பாதுகாப்பான ஆயுதங்களாகும்.
    • பெண்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை இணையதளங்களில் பகிரக்கூடாது.

    சென்னை:

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், தற்காப்பு முறைகள், குடும்ப வன்முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சைலேந்திரபாபு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி முடிவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்களுக்கு புத்தகமும், பேனாவும்தான் பாதுகாப்பான ஆயுதங்களாகும். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மீதான வழக்குகளில் 90 நாட்களில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஆயிரத்து 711 வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 11 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 46 வழக்குகளில் குற்றவாளிகள் 5 ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். 219 வழக்குகளில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான தண்டனைகள் பெற்று தரப்பட்டதால்தான், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

    பெண்கள் தங்களது தனிப்பட்ட ரகசியங்கள், தகவல்களை இணையதளங்களில் பகிரக்கூடாது. ஒருவேளை அவ்வாறு பகிர்ந்து, அந்த தகவல்களை வைத்து பெண்களை யாரும் மிரட்டினால் உடனே அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க தற்போது 37 மாவட்டங்கள், 9 பெரிய நகரங்களில் சைபர் கிரைம் போலீஸ் பிரிவு செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கலைச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ-மாணவிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர்.
    • ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது.

    மதுரை :

    மதுரை விமான நிலையம் அருகே வலையபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில், தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முகாமில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு, இளைஞர்களை உற்சாகப்படுத்தி பேசினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் போலீசார் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரே கவலை, அவர்களது குழந்தைகளுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான். அதில் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதி பெரிய ஆளாக வருகின்றனர். சிலர் வேலைக்காக தனியார் நிறுவனத்தை நம்பியுள்ளனர். இதற்காக தனியார் வேலை வாய்ப்பு முகாம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில், சுமார் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அதில் 800 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு வேலை வாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது.

    தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர். அவர்கள், பெரிய, பெரிய ரவுடிகளை எல்லாம் பிடித்து வருகின்றனர். தற்போது ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது. தவறான எண்ணம் கொண்ட குற்றவாளிகள், பெண் போலீசாரை தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி பெண் போலீசாருக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலை செய்யும் இடத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் பற்றி புகார்கள் வருகிறது. காவல்துறையினரும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண் போலீஸ் நிலையங்கள் இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எங்கேயும் இல்லை. பெண் போலீஸ் நிலையங்களில், சென்ற ஆண்டு 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு, மகளிர் போலீஸ் நிலையங்கள் குறைகளை தீர்க்கக்கூடிய இடமாக இருப்பதால், பெண்கள் தற்போது தைரியமாக புகார் அளிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    • கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு டி.சவுந்தரராஜன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
    • சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் எஸ்.ராமசாமி அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை :

    தமிழகத்தில் 10 உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் எஸ்.ராமசாமி அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், பூக்கடை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் எஸ்.சம்பத் பாலன் அண்ணாநகர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனர் கே.சரவணன் கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    கடலூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு டி.சவுந்தரராஜன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.முருகராஜ் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், அப்பதவியில் இருந்த எம்.சீனிவாசன் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.

    சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் ஏ.கணேஷ்குமார் திருவள்ளூர் போலீஸ் பயிற்சி பள்ளியின் துணை முதல்வராகவும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டன்ட் எம்.சீனிவாசன் பரங்கிமலை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும், வீராபுரம் தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டன்ட் எம்.புருஷோத்தமன் பூக்கடை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனராகவும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பட்டாலியன் பிரிவு உதவி கமாண்டண்ட் ஜெ.பிரதாப் பிரேம் குமார் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்பதுதான் முதல்-அமைச்சரின் திட்டம்.
    • பல பகுதிகளில் போதைப்பொருட்களே இல்லை என்று கூறும் நிலை வந்துள்ளது.

    தென்காசி :

    தென்காசியில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை ஆகிய கேரள மாநில எல்லைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். கூடுதலாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு அவசியம் கருதி மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று கருதினால் உடனடியாக போலீசார் அனுப்பிவைக்கப்படுவார்கள்.

    போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்பதுதான் முதல்-அமைச்சரின் திட்டம். அந்த வகையில் கஞ்சா வேட்டை 1, 2, 3 என்று நடத்தப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 20 ஆயிரம் பேரை கைது செய்துள்ளோம். இவர்களில் 2 ஆயிரம் பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். சுமார் 750 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக போதைப்பொருட்களின் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல பகுதிகளில் போதைப்பொருட்களே இல்லை என்று கூறும் நிலை வந்துள்ளது. போதைப்பொருள் இல்லாத பகுதி என பல போலீஸ் நிலையங்கள் அறிவித்து உள்ளன. அடுத்தகட்டமாக போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டங்கள் என அறிவிக்க உள்ளனர். போதைக்கு அடிமையான பலர் போதைப்பொருட்கள் கிடைக்காததால் அதற்கு பதிலாக மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்று தகவல் வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவ துறை ஆகியவை இணைந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

    • சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.
    • போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    மீனம்பாக்கம்:

    சென்னையை அடுத்த மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் போலீஸ் நிலையத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

    போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்த அவர், போலீசாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக சமூக பதிவு சான்று வழங்க வேண்டும் என சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் இணைய தளங்கள், சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    இணைய தளங்கள் மூலம் நடைபெறும் பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமூக ஊடகங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    உதாரணமாக சென்னையில் கடந்த 2011-ம் ஆண்டு சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் 748 வந்தன. ஆனால் 2021-ம் ஆண்டு 13,077 சைபர் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இது கடந்த 10 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள், 1,648 சதவீதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

    இதனால் தமிழக காவல்துறையில் சைபர் குற்றப்பிரிவு தனியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் சைபர் குற்றப்பிரிவு தனியாக உருவாக்கப்பட்டு, அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து ஏற்கனவே இருக்கும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தவிர்த்து புதிதாக 46 சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதேபோல 6 மாவட்டங்களில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சைபர் குற்றங்களை ஆரம்பத்திலேயே தடுத்திடும் வகையிலும், சைபர் குற்றத்தினால் ஏற்படும் பண இழப்பை முற்றிலும் தடுக்கும் வகையிலும், சைபர் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏற்படும் தாமதத்தை தவிர்த்திடும் வகையிலும், சைபர் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்களை மட்டும் விசாரிக்க தனிப்பிரிவு தொடங்கும்படி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    காவல் நிலையத்தில் இந்த தனிப்பிரிவுக்கு ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு முதல் நிலை காவலர், ஒரு வரவேற்பாளர் தனியாக நியமிக்க வேண்டும் எனவும் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த தனிப்பிரிவுக்கு நியமிக்கப்படும் போலீசார் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பெற்றவராகவும், அந்த குற்றங்களை கையாள தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    இப்பிரிவில் உள்ள போலீசார், சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சைபர் குற்றத்தில் பணம் மோசடி குறித்து வரும் புகார்களை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் சைபர் குற்றப்பிரிவின் தலைமை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பண மோசடி தவிர்த்து பிற சைபர் குற்றங்கள் தொடர்பாக வரும் புகார்களை தேசிய சைபர் குற்றப்பிரிவு தகவல் மையத்துக்கு அனுப்பி உதவி பெறலாம்.

    சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக சமூக பதிவு சான்று (சி.எஸ்.ஆர்) வழங்க வேண்டும் எனவும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.


    ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகி உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகம் அசுரவளர்ச்சி அடைந்து இருக்கிறது. 2021-22-ம் நிதியாண்டில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ.10,100 கோடி என அகில இந்திய கேமிங் சம்மேளமான பிக்கி தெரிவித்து இருந்தது. 2023-ல் ஆன்லைன் விளையாட்டு வர்த்தகத்தின் வருவாய் ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது.

    இதற்கிடையே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது தொடர் கதையாகி உள்ளது. சிலர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல் ஆசையை தூண்டி விட்டு பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல. மோசடி ரம்மி.

    ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்ப பிரச்சினை மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் யாரும் ஈடுபட வேண்டாம்.

    இந்த காணொலியை கண்ட பிறகும் விளையாடினால் நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். மிகப்பெரிய பேராசை உங்களிடம் இருக்கிறது. எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தயவு செய்து யாரும் ஈடுபட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×