search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyappa devotees"

    பெருந்துறை அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதியதில் வேலூரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். #Accident
    சென்னிமலை:

    வேலூர் காட்பாடி பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கோதண்டம் (வயது 60) என்ற குருசாமி தலைமை யில் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வேனில் புறப்பட்ட னர்.

    வேனில் செந்தில்குமார் (40), பழனி (40), நாகராஜ் (45), நாராயணசாமி (29), விமல் (27), சசி (28), ஜோதி (32), ஸ்ரீமதி (3), அருண் (5), ரோஹித் (7), மோனிஷா (8) உள்பட 13 பேர் இருந்தனர்.

    வேனை வேலூரை சேர்ந்த ராஜ்கபூர் (29) என்பவர் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த வேன் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    ஓலப்பாளையம் பிரிவு வந்தபோது ஆந்திர மாநிலத்திலிருந்து சிலிக்கான் லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை வேலூரை சேர்ந்த பலராமன் (53) ஓட்டிச் சென்றார்.

    அந்த லாரியை ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது லாரியின் பின்புறத்தில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனி, நாகராஜ் ஆகிய 2 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். குருசாமி கோதண்டத்தின் 2 கால்களும் முறிந்தன.

    வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Accident


    சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று பக்தர்கள் கருத்து தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக நேற்று வரை சுப்ரீம் கோர்ட்டில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வலியுறுத்தினர்.

    மறு சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. மேலும் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கமான வழக்குகளுடன் சேர்த்து சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்றும் இதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்க இயலாது என்றும் கூறி விட்டது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளை கேரள அரசு தொடங்கியது. இது ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர்கள், மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்தனர்.

    வருகிற 17-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைந்து விட வாய்ப்பு இருப்பதாக கருதிய பக்தர்கள் அதனை தடுக்க போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரங்களை பாதுகாக்கும் அமைப்பு, அகில பாரத ஐயப்ப பக்தர்கள் சங்கம், ஹைந்தவ சங்கம், நாயர் சொசைட்டி, ஐயப்ப தர்ம சம்ரக்‌ஷனா சமிதி, ஆதிவாசி சம்ரக்‌ஷனா சமிதி, சபரிமலையை பாதுகாப்போம் அமைப்பு என பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தது.

    இந்த அமைப்புகளுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பந்தளம் ராஜகுடும்பம் கோவில் தந்திரிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் இந்த அமைப்புகள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள், கண்டன பேரணிகளை கடந்த 1-ந்தேதி முதல் நடத்தி வருகிறார்கள். எர்ணாகுளத்தில் இன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து பேரணி நடத்துகிறார்கள். இதில், 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

    இதுபோல பம்பை, நிலக்கல், திருவனந்தபுரம், பாறசாலை பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தது.

    இதற்கிடையே பா.ஜனதா கட்சி மற்றும் ஐயப்ப தர்ம சம்ரக்‌ஷனா சமிதி உள்பட சில அமைப்புகள் இணைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நடைபயணம் தொடங்கினர்.

    வருகிற 15-ந்தேதி இந்த பயணம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு முடிவடைகிறது. அங்கு சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் முற்றுகை போராட்டம் நடக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீதான உத்தரவு வரும் வரை பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மாநில அரசிடம் மனு கொடுக்கவும் உள்ளனர்.

    இதற்கிடையே திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு நேற்று பந்தளம் ராஜ குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எஸ். சிவக்குமார், பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மா, பந்தளம் சுதாகரன், நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநிலத்தின் பெருநகரங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு இணையாக சபரிமலை செல்லும் பிரதான சாலைகளிலும் போராட்டங்கள் நடைபெறுகிறது. பந்தளம், நிலக்கல் பகுதியில் ஆதிவாசி சம்ரக்‌ஷனா சமிதியை சேர்ந்தவர்கள் குடில் அமைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    இப்போராட்டங்கள் பற்றி பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, இந்த போராட்டங்களை கேரளத்திற்கு வெளியே கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் அனைத்து தென்மாநிலங்களிலும் சபரிமலையை பாதுகாப்போம் போராட்டம் நடக்கும் என்றார்.  #Sabarimala

    சபரிமலையில் பாரம்பரியமிக்க புனித தன்மை காக்க வேண்டி சிதம்பரம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
    சிதம்பரம்:

    சபரிமலையில் பாரம்பரியமிக்க புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும், பெண்கள் தரிசனம் செய்ய பழைய நடைமுறை நீடிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேவா சங்க தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இதில் சபரிமலையில் பழைய நடைமுறை தொடர வேண்டி ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வேண்டினர். ஐயப்ப பாடல்கள் பாடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் மந்தார குப்பத்தில் உள்ள புவனேஷ்வரி அம்மன் கோவிலில் அகில இந்திய பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனைக்கு மந்தார குப்பம் கிளை தலைவர் குருசாமி நாகராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சபரிமலையின் புனிதம், தொன்மை மற்றும் விரதமுறைகள் குறித்து அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் பேசினர். இதில் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    சபரிமலைக்கு வழிபாடு செய்ய செல்ல விரும்பும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். #SabarimalaVerdict #Sabarimala
    சென்னை:

    சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பெண்களையும், அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று முற்போக்கு சிந்தனையாளர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களும், ஆண்டுதோறும் விரதம் இருந்து சபரிமலை செல்பவர்களும் இந்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதுபற்றி ஆன்மீகவாதிகள் கூறும்போது, கோவிலுக்கு பெண்கள் செல்வதை எதிர்க்கவில்லை. ஆனால் இயற்கையிலேயே பெண்ணாக படைக்கப்பட்டவர்களுக்கும், ஆணாக படைக்கப்பட்டவர்களுக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துதான் ஆலய வழிபாட்டிலும் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள் என்றனர்.

    சபரிமலையானது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடு மலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. அது சங்க காலத்தில் சேரர்களின் வழிபாட்டு தலமாக விளங்கியது.

    சுவாமி அய்யப்பன் சார்ந்த வரலாற்று கதைகளில் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் இங்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு காரணமாக சுவாமி அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமும் சொல்லப்படுகிறது.

    கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின்போது வன விலங்குகளால் ஏதாவது ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பூப்படைந்த பெண்கள் இக்கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டது.

    10 வயது வரையுள்ள பெண்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் மற்ற வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு செல்வதில்லை.

    சபரிமலை பயணம் மேற்கொள்வதற்கு பக்தர்கள் 41 நாட்கள் கடினமான விரதம் இருக்க வேண்டும். இதற்காக பக்தர்கள் விரதத்தின் தொடக்க நாளன்று உத்திராட்சமோ அல்லது துளசிமணி மாலைகளோ அணிய வேண்டும். 41 நாட்களும் மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, புகைப்பிடித்தல், பெண்கள் தொடர்பு, அநாகரீகமான பேச்சுக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காலணிகள் அணியக்கூடாது.

    மேலும் தலைமுடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தக்கூடாது. ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

    கருப்பு, நீல நிறம் அல்லது குங்குமப்பூ கலரில் பாரம்பரிய துணிகள் மட்டுமே அணிய வேண்டும். தற்போது விரதங்களுக்கான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் குறைந்து விட்டாலும் பொதுவான விதிமுறைக்கு உட்பட்டு விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.

    சில தீவிர பக்தர்கள் வீட்டில் இருந்து வெளியேறி தனி இடத்தில் 41 நாட்கள் கடும் விரதம் கடைபிடிப்பார்கள். முன்பு ‘பெரிய பாதை’ என்ற ஒரு வழி மட்டுமே இருந்தது. அடர்ந்த காட்டின் வழியே செல்ல வேண்டும். இதில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருந்தது. வெள்ளை நிற ஆடைகள் வெகுதூரம் வரை தெரியும் என்பதால் வனவிலங்குகளிடம் இருந்து தப்ப குறைந்த ஒளிசிதறல் கொண்ட கருப்பு, நீலம், சிவப்பு நிற துணிகளை பயன்படுத்தினர்.

    முந்தைய காலத்தில் காட்டு வழியாக நடந்து சென்று பம்பா நதியை அடையவே வெகுநாட்கள் ஆகும். தற்போது பம்பா நதிவரை வாகனங்கள் செல்வதுபோல் முந்தைய காலத்தில் செல்ல வழியில்லை.

    இதனால் முந்தைய காலத்தில் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்கள் ஒருபுறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடியை எடுத்துச் சென்றனர்.

    10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களால் 41 நாட்கள் விரதம் இருப்பது கடினம். எனவேதான் தடை விதித்தனர். ஆனால் இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆணுக்கு பெண் சமம் என்ற கோ‌ஷம் ஓங்கி வருகிறது.

    சபரிமலை பயணம் என்பது அடர்ந்த வனப்பகுதி வழியாக 45 கி.மீ. தூரமாக இருந்தது. ஆனால் இப்போது காட்டு வழிப்பாதை மேம்படுத்தப்பட்டு இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய சாலையாக மாறி விட்டன.

    சபரிமலை விரதமும், கட்டுப்பாடுகளும் பக்தர்களை சபரிமலை பயணத்துக்கு தங்களை தயார் செய்வதாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் விரத முறைகள் மாறிவிட்டன. கட்டுப்பாடுகளும் தளர்ந்து விட்டன. அவரவர் விருப்பப்படி ஒருநாள் ஒரு வாரம் என விரதம் இருந்து சபரிமலை சென்று திரும்புகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு தற்போது பெண்களை கோவிலுக்கு அனுமதித்தாலும் அவர்களால் 41 நாட்கள் விரதம் இருப்பது இயலாத ஒன்றாகும். கழுத்தில் மாலையுடன் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டிச் செல்பவர்கள் மட்டுமே 18 படிகள் வழியாக அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.



    எனவே குறைந்த நாள் விரதம் இருந்தும் பெண்கள் 18 படிகளில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சந்நிதானத்தின் பின்புற வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தென் மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டுக்கு 4½ கோடி முதல் 5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இதன்மூலம் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

    அதிக வருவாய் கிடைப்பதால் கேரள அரசாங்கமும் அய்யப்பன் கோவில் நடைமுறைகளில் மாற்றம் செய்வதை கண்டுகொள்ளாமல் வரவேற்கிறது. தற்போது பெண்களும் அனுமதிக்கப்படுவதால் வருவாய் மேலும் இரட்டிப்பாகும் என்பதால் கேரள அரசு வரவேற்கிறது. ஆனால் ஆன்மீகவாதிகளும், தீவிர பக்தர்களும் பெண்கள் அனுமதிப்பதை ஏற்கவில்லை. விரதத்தின் புனிதம் கெட்டுவிடும் என்ற அதிருப்தி நிலவுகிறது. #SabarimalaVerdict #Sabarimala


    சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பெண்களை அனுமதிக்கும்போது அவர்கள் விரத முறைகளை கடைபிடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #Sabarimala #SCVerdict
    நாகர்கோவில்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்தே சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பெண்களுக்கும் அனுமதி உண்டு என சுப்ரீம்கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அவ்வாறு பெண்களை அனுமதிக்கும்போது அவர்கள் விரத முறைகளை கடைபிடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து ஆண்டுதோறும் சபரிமலை சென்று வரும் இரணியலைச் சேர்ந்த குருசாமி கோபி கூறியதாவது:-

    நான் 35 வருடங்களாக சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகிறேன். நித்ய பிரமச்சாரியான அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உள்ளன. அய்யப்பனை வேண்டி மாலை அணியும் பக்தர்கள் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் கடும் விரதம் இருக்க வேண்டும். காலை, மாலை என இருவேளை கண்டிப்பாக குளிக்க வேண்டும். மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை வைத்து படுக்க கூடாது என்பது போன்ற பல விதிமுறைகள் உள்ளன.

    சபரிமலையில் 18-ம் படி ஏற வேண்டும் என்றால் கண்டிப்பாக கழுத்தில் மாலை அணிந்திருக்க வேண்டும். தலையில் இருமுடி கட்டியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கு நிற்கும் போலீசாரே அவர்களை தடுத்தி நிறுத்தி 18-ம் படி ஏற அனுமதிக்க மாட்டார்கள். மாலை அணியாமல் வரும் பக்தர்கள் வடக்கு பாதை வழியாகச் சென்று அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இப்போது 5 நாட்கள், 10 நாட்கள் என்று கூட பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு படி பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டால் மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர்களால் 41 நாட்கள் விரதம் இருக்க முடியாது. ஏற்கனவே ஆண்கள் 5 நாட்கள், 10 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்வது போல் பெண்களும் விரதம் இருந்து சென்று தரிசிக்கலாம்.

    ஏற்கனவே அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பெண்கள் கூட்டமும் சேரும்பட்சத்தில் சாமி தரிசனம் செய்ய கடும் சிரமங்கள் ஏற்படும். மேலும் கோவிலின் மகிமையும் குறைந்து சுற்றுலாதலம் போல் மாறி விட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த குருசாமி மணி கூறியதாவது:-

    நான் 55 வருடமாக விரதமுறைகளை கடைபிடித்து சபரிமலைக்கு சென்று வருகிறேன். ஊர்ப்புறங்களில் இருக்கும் அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்று வருகிறார்கள், ஏன் சபரிமலைக்கு மட்டும் செல்ல அனுமதி இல்லை என கேட்கிறார்கள்.

    ஊர்ப்புற கோவில்களில் உள்ள அய்யப்பன் சிலை, மக்களாக சேர்ந்து பிரதிஷ்டை செய்தது. ஆனால் சபரிமலையில் மட்டும் அய்யப்பன் தானாகவே வந்து அமர்ந்ததாக ஐதீகம் உள்ளது. அங்கு அய்யப்பன் யோக நிலையில் சன்னியாசி கோலத்தில் இருக்கிறார். அவரை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக விரதமுறைகளை கடைபிடித்தே ஆக வேண்டும். அவ்வாறு விரதமுறைகளை கடைபிடிக்காமல் சபரிமலை சென்றால் கண்டிப்பாக சுவாமியின் கோபத்தையும், சில கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஒரு பெண்ணால் பிறக்கவில்லை. அவர் ஹரி, ஹரனுக்கும் ஒளியாக பிறந்தவர். அதனால் தான் மாதவிடாய் உள்ள பெண்கள் அங்கு செல்லக்கூடாது என சொல்லப்படுகிறது.

    ஆனால் தற்போது சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு அளித்த வருத்தமளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #SCVerdict

    சபரிமலைக்கு போக முடியாததால் ராணி பேட்டையில் அய்யப்ப பக்தர்கள் இருமுடிகட்டி வேண்டுதலை நிறைவேற்றினர். #AyyappaDevotees
    வாலாஜா:

    ஆண்டுதோறும் மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். இதையொட்டி, அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக இந்த ஆண்டும், வேலூர் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர்.

    இந்நிலையில் கேரளாவில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அய்யப்பன் கோவிலுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பம்பை ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இதனால் பக்தர்கள் சபரி மலைக்கு வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

    இதனால் தவித்த தமிழக பக்தர்கள், அந்தந்த பகுதி அய்யப்பன் கோவில்களில் இருமுடிக்கட்டி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும், அந்தந்த பகுதி பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

    வேலூர், காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்றுகாலை ராணிப்பேட்டை சிப்காட் சபரி நகரில் உள்ள ஸ்ரீநவ சபரி அய்யப்ப கோவிலில் இன்று காலை வேண்டுதலை செலுத்தினர்.

    நெய் அபிஷேகம் செய்யலாம் என குருசாமி ஜெயச்சந்திரன் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, அய்யப்ப பக்தர்கள் இரு முடியுடன் 18 படியேறி சாமி தரிசனம் செய்தனர். பிறகு மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி விரதத்தை முடித்தனர்.

    இதற்காக கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது.  #AyyappaDevotees



    ×