search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Struggle In Kerala"

    சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று பக்தர்கள் கருத்து தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பந்தளம் ராஜகுடும்பம், கோவில் தந்திரிகள், ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக நேற்று வரை சுப்ரீம் கோர்ட்டில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வலியுறுத்தினர்.

    மறு சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. மேலும் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கமான வழக்குகளுடன் சேர்த்து சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்றும் இதற்காக தீர்ப்பை நிறுத்தி வைக்க இயலாது என்றும் கூறி விட்டது.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கைகளை கேரள அரசு தொடங்கியது. இது ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர்கள், மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்தனர்.

    வருகிற 17-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைந்து விட வாய்ப்பு இருப்பதாக கருதிய பக்தர்கள் அதனை தடுக்க போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் ஆச்சாரங்களை பாதுகாக்கும் அமைப்பு, அகில பாரத ஐயப்ப பக்தர்கள் சங்கம், ஹைந்தவ சங்கம், நாயர் சொசைட்டி, ஐயப்ப தர்ம சம்ரக்‌ஷனா சமிதி, ஆதிவாசி சம்ரக்‌ஷனா சமிதி, சபரிமலையை பாதுகாப்போம் அமைப்பு என பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தது.

    இந்த அமைப்புகளுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பந்தளம் ராஜகுடும்பம் கோவில் தந்திரிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் இந்த அமைப்புகள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள், கண்டன பேரணிகளை கடந்த 1-ந்தேதி முதல் நடத்தி வருகிறார்கள். எர்ணாகுளத்தில் இன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து பேரணி நடத்துகிறார்கள். இதில், 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

    இதுபோல பம்பை, நிலக்கல், திருவனந்தபுரம், பாறசாலை பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தது.

    இதற்கிடையே பா.ஜனதா கட்சி மற்றும் ஐயப்ப தர்ம சம்ரக்‌ஷனா சமிதி உள்பட சில அமைப்புகள் இணைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நடைபயணம் தொடங்கினர்.

    வருகிற 15-ந்தேதி இந்த பயணம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு முடிவடைகிறது. அங்கு சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் முற்றுகை போராட்டம் நடக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீதான உத்தரவு வரும் வரை பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மாநில அரசிடம் மனு கொடுக்கவும் உள்ளனர்.

    இதற்கிடையே திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு நேற்று பந்தளம் ராஜ குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எஸ். சிவக்குமார், பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மா, பந்தளம் சுதாகரன், நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநிலத்தின் பெருநகரங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு இணையாக சபரிமலை செல்லும் பிரதான சாலைகளிலும் போராட்டங்கள் நடைபெறுகிறது. பந்தளம், நிலக்கல் பகுதியில் ஆதிவாசி சம்ரக்‌ஷனா சமிதியை சேர்ந்தவர்கள் குடில் அமைத்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

    இப்போராட்டங்கள் பற்றி பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது, இந்த போராட்டங்களை கேரளத்திற்கு வெளியே கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் அனைத்து தென்மாநிலங்களிலும் சபரிமலையை பாதுகாப்போம் போராட்டம் நடக்கும் என்றார்.  #Sabarimala

    ×