search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுப்பாடுகள்"

    • 63 வயதான தருண் குலாடி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
    • தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு குலாடி முன்னுரிமை அளிக்கிறார்

    அடுத்த வருடம் மே 2 அன்று, இங்கிலாந்து தலைநகரம் லண்டன் நகரில் அந்நகர மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இங்கிலாந்தின் லேபர் கட்சியின் சார்பில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாதிக் கான் தற்போது மேயர் பதவியில் உள்ளார்.

    அடுத்த வருட தேர்தலில் போட்டியிட விரும்புவதாக 20 வருடங்களுக்கு மேல் லண்டனில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 63 வயதாகும் தொழிலதிபர் தருண் குலாடி அறிவித்துள்ளார்.

    தனது விருப்பத்தை கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த போதே அறிவித்திருந்த குலாடி, லண்டன் மக்கள் பாதுகாப்புடன் வாழவும், லண்டன் உலகின் முன்னணி நகரமாக தொடர்வதை உறுதி செய்யவும், அங்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேயர் தேர்தலில் வென்றால் தான் செயல்படுத்த விரும்புவதாக குலாடி பல திட்டங்களை அறிவித்தார்.

    அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    லண்டனில் வாழ்கின்ற குறைந்த வருமான வசதி மற்றும் நடுத்தர வசதி மக்களுக்கு இன்னும் பல வசதிகள் செய்து தரப்படும். லண்டன் நகரில் பல நாடுகளிலிருந்து மக்கள் வந்து வாழ்வதால் இங்கு வாழும் மக்களின் தாயக நாடுகளுக்கு இடையே ஒரு ஆக்கபூர்வமான இணைப்பு உருவாக்கப்படும். நகர வளர்ச்சிக்கான தடைகள் முற்றிலும் நீக்கப்படும். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் "தூய்மை பகுதி கட்டுப்பாடுகள்", "குறைவான வாகன போக்குவரத்து பகுதி", வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடுகள் ஆகியவை நீக்கப்படும். குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் அதிகளவு காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சிக்கன விலையில் வீட்டுவசதி மக்களுக்கு கிடைக்க செய்வது முக்கியமாக பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு குலாடி அறிவித்துள்ளார்.

    குலாடியை தவிர சூசன் ஹில், ராப் ப்ளாக்கி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

    • தாசில்தார் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் உடன்பாடு
    • கனரக வாகனத்தில் இருந்து பாறாங்கல் விழுந்த விவகாரம்

    பூதப்பாண்டி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முறையான அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் செல்லும் கனரக லாரிகளால் விபத்துகளும், சாலை சேதமும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10 சக்கரங்களுக்கு மேலான கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தடை விதித்தார்.

    ஆனால் லாரி உரிமை யாளர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவுக்கு அவகாசம் பெற்றனர். இதனை தொடர்ந்து கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் மீண்டும் செல்லத் தொடங்கின.

    கடந்த வாரம் இறச்சகுளம்-களியங்காடு வழியாக ஒரு கனரக வாகனம், கனிமவளங்களை ஏற்றிச் சென்றது. அப்போது அந்த லாரியில் இருந்து பெரிய பாறாங்கல் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சாலையில் அப்போது யாரும் இல்லாததால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. அதே நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை போலீசாரதும் அதிகாரிகளும் சமரசம் செய்தனர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தன். இதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அதிகாரிகள் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இன்று காலை தோவாளை தாசில்தார் வினைதீர்த்தான் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறச்சகுளம்-களியங்காடு சாலையில் இரு வழியாகவும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளதாகவும், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் அந்த வழியாகச் செல்லும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் செல்ல தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக 15 நாட்களில் முடிவு செய்வது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அவர்கள் கூறுகையில்,15 நாட்களில் உறுதியான முடிவு காணப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும்
    • இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும்

    புதுடெல்லி:

    சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது.

    சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி.-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அவர்கள் இந்தியா வந்ததும் 2 சதவீத ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • சுத்தமாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
    • சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் மூடி வைக்கப்பட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல்களுக்கு 12 கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    உணவகம் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் உடனடியாக மாநகராட்சி மூலம் தொழில் உரிமம் பெற்று அவரவர் நிறுவனங்களில் வைத்திருக்க வேண்டும். ஓடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

    அனைத்து உணவகங்களிலும் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சமையல் செய்யும் இடத்தினை கடையின் உட்பகுதியில் உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும். அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் புகை போக்கி எந்திரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதலுக்குட்பட்டு அமைக்கப்பட வேண்டும்.

    சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் மூடி வைக்கப்பட வேண்டும்.அனைத்து உணவகங்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் தேவைக்கேற்ப வைக்கப்பட வேண்டும் . வர்ணம் பூசுதல் உள்ளிட்ட வருடாந்திர பராமரிப்பு நிறுவனங்களில் முறையான இடை வெளிகளில் செய்யப்பட வேண்டும்.உணவு கையாளும் அனைத்து பணியாளர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து அதற்கான மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும்.

    சமையல் அறை உள்ளிட்ட உணவகம் மற்றும் தேநீர் விடுதியின் அனைத்து அறைகளில் தரை தளங்களும் நீர் புகாதவாறு உறுதியாகவும் , சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும் . அனைத்து கடைகளிலும் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியாக தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் . அனைத்து கடைகளின் முன் பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும்.

    மேற்படி குறைபாடுகளை 10 தினங்களுக்குள் நிவர்த்தி செய்ய ேவண்டும். மேலும் தவறும் பட்சத்தில் கடை மீது அபராதம் விதிக்கப்படுவதுடன் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

    • மாணவர்கள் பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும்
    • பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை சார்ந்த சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அவ்வகையில், சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த உத்தரவில், பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 20க்கும் அதிகமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    எண்ணெய் தேய்த்து தலைவாரவேண்டும், டாட்டூ குத்தக்கூடாது, காலணி அணிந்து வரவேண்டும், கம்மல், செயின், காப்பு போன்றவற்றை மாணவர்கள் அணியக்கூடாது, பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மாணவர்களிடையே பிளவு உருவாகி வருகிறது. சில சமயங்களில் இது மோதலுக்கும் வழிவகுக்கிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

    ×