என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடன்"

    • உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்;
    • மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கிற வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28, 2025 அன்று சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார். அதனை எக்ஸ் தள பக்கத்தில் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.

    ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்,

    தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் அளித்துள்ளார்.

    *முயற்சிகள் தொடரும்*

    ஏற்கனவே நான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப் பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.

    நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன் என சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    • 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.
    • ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நகைக்கடன் விதிகள் குறித்த தளர்வுகள் போதுமானவை அல்ல: இப்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும்!

    வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில் அவற்றில் இரு தளர்வுகளை செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

    புதிய விதிகள் நடைமுறைக்கு 2025-ஆம் ஆண்டு வரை செயல்படுத்தக்கூடாது; ரூ. 2 லட்சம் வரையிலான நகைக்கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த பரிந்துரைகள் ஆகும். இவை போதுமானவை அல்ல.

    இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை; அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில் 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.

    அதேபோல், கிராமப்புறங்களில் கல்வி, குடும்பத் தேவைகள் மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத பல தேவைகளுக்கு நிதி ஈட்டுவதற்கான ஒரே வாய்ப்பு நகைக்கடன் தான். அவ்வாறு கடன் பெறும் போது ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.

    இவை அனைத்தையும் விட பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை எங்கிருந்து வந்தது? ஒவ்வொரு தனிநபரும் எவ்வளவு நகைக்கடன் பெறுகிறாரோ, அதை விட குறைந்தது 40% கூடுதல் மதிப்பு உள்ள நகைகளை ஈடாக வைக்கிறார்.

    நகைக்கடனை குறித்த காலத்தில் செலுத்தத் தவறினால் அவற்றை ஏலத்தில் விட்டு பணமாக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது புதிய விதிகள் தேவையற்றவை. அதனால், எந்த பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம்.

    தங்க நகைக்கடன் என்ற தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான். புதிய விதிகளின் மூலம் அதை சிக்கலாக்கக்கூடாது.

    எனவே, நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், வரைவு விதிகளின் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வது எனது நிலையான கோரிக்கையாகும்.
    • எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.

    நகைக் கடன் விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர்," ஒன்றிய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கியின் தங்கக் கடன்கள் தொடர்பான வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில் எழுப்பிய கோரிக்கைகளுக்கு மத்திய நிதி அமைச்சர் பதிலளித்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    சிறு கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பது, குறிப்பாக விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் போன்ற ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்களை நாடுபவர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் சரியான நேரத்தில் மற்றும் அணுகக்கூடிய கடன் கிடைப்பதை உறுதி செய்வது எனது நிலையான கோரிக்கையாகும்.

    இந்தப் பிரச்சினையில் கொடுக்கப்பட்ட நேர்மறையான பரிசீலனையைப் பாராட்டுகையில், ஏழைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய கொள்கைகள் மாநிலங்களுடன் உரிய முன் ஆலோசனைக்குப் பிறகு எட்டப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நகைக்கடன் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
    • ரூ.2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விலக்களிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

    நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    சிறிய அளவில் நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படக்கூடாது என ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ரூ.2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விலக்களிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

    நகைக்கடன் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் விதிகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நகைக்கடனுக்கான புதிய விதிமுறைகளை தற்போது அமல்படுத்த வேண்டாம் என்றும் மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    • தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன்பெற முடியாது.
    • ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும்- ஆர்பிஐ.

    தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே ஒன்றிய பாஜக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள்– தொழிலாளர்கள்– ஏழை மக்களை மென்மேலும் பாதிக்கும் கொள்கைகளையே செயல்படுத்தி, சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

    தேசிய வங்கிகளில் சாமானிய மக்களுக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்காமல், பெரும் நிறுவனங்களுக்கு கடன்களை அள்ளி வழங்கி, பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாராக் கடன் என்று சொல்லி ஒன்றிய பாஜக அரசு தள்ளுபடி செய்கிறது. சாமானிய மக்களின் வரிப்பணமான பல லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளையும் பணக்காரர்களுக்கு வழங்கி வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு.

    விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு மற்றும் வங்கிகளில் அடமானம் வைத்து விவசாய மற்றும் அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அடகு வைத்த நகையை திருப்ப முடியாத மக்கள் வட்டியை மட்டும் கட்டி மறுஅடமானம வைப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

    தற்போது ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி, "இனிமேல் வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும், தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன்பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும், விவசாயிகளுக்கு நகையை புதுப்பித்து மீண்டும் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது" போன்ற புதிய நிபந்தனைகளை விதித்து விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஏழை மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி தி.மு.க. விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் இணைந்து வருகிற 30.5.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் எதிரில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்துகிறது.

    இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. விவசாய அணியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் – கழக விவசாய அணித் தோழர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    • தங்க நகையின் மீதான மூல ரசீதோ அல்லது உடமை உரிமை ஆவணமோ அவசியம்.
    • கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம் என்கிறது ஆர்.பி.ஐ.

    சு. வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நகைக்கடன் பெறுவது சம்பந்தமாக ரிசர்வு வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. நகைக்கடன் பெறும்போது

    "கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்" என ரிசர்வு வங்கியின் புதிய நிபந்தனை கூறுகிறது.

    பெரும்பாலான நகைக் கடன்தாரர்கள் தினக்கூலிகளாக, நிலையான மாதச் சம்பளம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கான ஆவணச் சான்றை காண்பிப்பது என்பது இயலாததாகும். அதுமட்டுமல்ல

    நகைக் கடனை பொறுத்தவரையில் அது 100% பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும். ஆகவே கடன்தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?.

    அடுத்ததாக "தங்க நகையின் மீதான மூல ரசீதோ அல்லது உடமை உரிமை ஆவணமோ அவசியம் என்கிறது" புதிய விதிமுறை. தங்க நகைகள் என்பது பல பத்தாண்டுகளாகவோ அல்லது இரண்டு மூன்று தலைமுறையாகவோ இருந்து வரும் நிலையில் மூல ரசீதுக்கோ அல்லது உடமை உரிமை ஆவணமோ பெறுவது எளிதல்ல.

    நகைக்கடன் என்பது எளிய, நடுத்தர மக்கள் கடன் பெறுவதற்கான கடைசி புகலிடமாகும். வங்கிகளைப் பொறுத்தவரை நூறு சதவிகிதம் லாபம் ஈட்டுதல் மட்டுமல்ல வராக்கடன் என்கிற பிரச்சனையே இதில் இல்லை. அப்படி இருக்கும் சூழலில் நகைக்கடன் மீது புதிதாக இவ்வளவு கடுமையான விதிமுறைகளை ரிசர்வு வங்கி ஏன் விதித்துள்ளது.

    ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் கருத்துகள் பெறுவதற்கான நகல் என்று சொல்லிவிட்டு, அடுத்த பாராவில் "இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

    வங்கிகளை பொறுத்தவரை நூறு சதவிகித பாதுகாப்பானது, வராக்கடன் என்பது துளியும் இல்லாத ஒன்று நகைக்கடன். அதனால்தான் இது சம்பந்தமாக வங்கிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை. அது மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகையின் விலை கூடிக்கொண்டேதான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை. அப்படியிருக்கும் சூழலில் நகைக்கடன் சார்ந்து இவ்வளவு கடுமையான விதிமுறைகளை, அவசர அவசரமாக ரிசர்வு வங்கி விதிப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

    கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கு எதிரானதாக உள்ள ரிசர்வு வங்கியின் நகைக்கடன் தொடர்பான புதிய நிபந்தனைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கீழ்க்கண்ட மனுவினை அளித்தேன். மனுவில் உள்ள விபரங்களை கேட்டறிந்த நிதியமைச்சர் இதன் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

    • தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.
    • நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.

    ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா தான். இந்தியர்கள், தங்கத்தைத் தங்கள் சொத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தங்கம் என்பது திருமணம் போன்ற இன்ன பிற விசேஷ நிகழ்ச்சிகளின்போது மட்டுமே ஆபரணமாக அணியப்படுகிறது.

    மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள், வாகனம், நிலம், வீடு போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குவதற்கும், கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் வங்கிகளில் அடமானம் வைத்துத்தான் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளில், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதற்கான உரிமையாளர்கள் தாங்கள்தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள், அதற்குப் பதிலாக வேறு ஆவணங்களையோ, உறுதிமொழிச் சான்றையோ அளித்துக் கடன் பெறலாம் என்றும், அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக் கூடாது என்றும் சொல்லியிருப்பதால், நகைக்கடன் மறுக்கப்படும் சூழல் உருவாகும்.

    ஏனெனில், பல குடும்பங்களில் இன்றும் பாட்டியின் நகைகளே தாய்க்கும் அவரது மகளுக்கும் மருமகளுக்கும் கொடுக்கப்பட்டு வரும் நடைமுறை, பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. அப்படியிருக்கையில், அவற்றிற்கான ரசீதையோ, ஆவணத்தையோ அவர்கள் எங்குபோய்ப் பெற முடியும்?

    மேலும், ஒரு பக்கம் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிக்கொண்டிருக்க, மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் தொகையோ குறைந்துகொண்டே போனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பது ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?

    ரிசர்வ் வாங்கியின் புதிய விதிகளில், கடன் தொகை வழங்கும் அளவானது தங்கத்தின் மொத்த மதிப்பில் இருந்து 75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கடன் தொகையையும் குறைத்தால், பணம் அதிகம் தேவைப்படுவோர் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களையும், கந்து வட்டிக் கும்பலையுமே நாடிர் சென்று தங்க நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், மீளாத் துயருக்கு ஆளாக நேரிடும்.

    ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் ஒரு புறம் இருக்க. வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் என்பது போன்ற புதிய விதி, மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும்.

    இந்தப் புதிய விதியால், வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

    மேலும், ஏற்கெனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதற்கு வட்டித் தொகை மட்டுமே செலுத்தி அதை அப்படியே புதுப்பித்துக் கொள்ள முடியாது என்றும், அடகு வைத்த நகையை முழுவதுமாக மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் அடகு வைத்துக் கடன் பெற முடியும் என்ற புதிய நிபந்தனையால் மக்கள் இன்னும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவர்.

    எனவே, ரிசர்வ் வங்கி வெளியீட்டுள்ள புதிய வரைவு விதிகளை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.
    • 22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் சங்க தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:-

    வங்கிகள் மற்றும் தங்க நகைக்கடன்கள் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நகைக்கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் 9 கட்டுப்பாடுகள் அனைவரையும் கடுமையாக பாதிக்கும்.

    குறிப்பாக சிறு, குறு, தொழில் செய்பவர்கள் மற்றும் விசைத்தறி தொழில் செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர்.

    சிறு, குறு தொழில் செய்பவர்கள், தங்களது தொழிலுக்கு, அவசர தேவை என்றால், உடனே வங்கிக்கு சென்று தங்க நகையை அடமானம் வைத்து கடன் பெற்று அதனை சரி செய்து கொள்வார்கள்.

    தற்போது தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனையும் 75 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது மிகவும் கடுமையாக பாதிக்கும்.

     

    22 கேரட் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படும் என்பதும், பழைய நகையை வைத்திருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று ஒரு நபருக்கு ஒரு கிலோ தங்கம் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.

    உரிமையாளர்கள் நாங்கள் தான் என்பதற்கு சான்று கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளும் அவசர தேவைக்காக அடகு வைத்து பணம் உதவி பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    ஏற்கனவே பல்வேறு சிக்கல்களில் உள்ள தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் சிறு, குறு தொழில் செய்பவர்கள் இந்த கட்டுப்பாடுகளால் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    எனவே மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் கட்டுப்பாடுகளை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கோவை வையம்பாளையத்தை சேர்ந்த முரளி என்பவர் கூறும்போது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.

    சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.

    எனவே இந்த கட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

    • வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
    • வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது.

    தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த மாம்பழம் மற்றும் தக்காளி மொத்த வியாபாரியான தக்காளி ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:

    வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட அனைத்து விதமான ஏழை மக்களும் உடனடி பண தேவையை தங்கத்தை அடகு வைத்து தான் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

    ஆனால் ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பில் அடகு வைக்கும் நகைகளை திருப்ப முழு தொகையும் வங்கியில் செலுத்தி திருப்ப வேண்டிய நிலை உள்ளதால் அதற்கான பணத்தை திரட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை பொதுமக்கள் நாடும் நிலை உள்ளது. இதில் ஒரு நாளைக்கு ஒரு மாத வட்டி செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் பொதுமக்களுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது

    மேலும் ஒவ்வொருவருக்கும், தனது தாய் மற்றும் மனைவியின் பெற்றோர் மூலம் தங்க நகைகள் கிடைக்கிறது. இந்த நகைகளை தங்களுக்குள்ளது என்று எப்படி யாரிடம் சான்று வழங்க முடியும், இது முடியாத செயல், இதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    கடந்த காலங்களில் நகைகளின் மதிப்பில் 90 சதவீதம் கடன் கொடுத்த நிலையில் தற்போது 75 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தொழிலுக்கு போதுமான பணத்தை திரட்ட முடியாத நிலை ஏற்படும். இதனால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.

    எனது வியாபாரத்திற்கு தேவையான பணத்தை பெற அரசு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளேன். இதன் மூலம் வங்கிகளுக்கு லட்சக்கணக்கில் வட்டி கட்டி வருகிறேன். இனி வரும் நாட்களில் புதிய அறிவிப்புகளால் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு என்னை போன்றவர்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால் அரசு வங்கிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும்.

    நகைக்கு தர உறுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பால் அதற்கு தனியாக செலவு செய்யும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு இந்த திட்டம் தேவையில்லாதது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு உதவுவது போல அமைந்துள்ளது.

    இதனால் நாடு முழுவதும் உள்ள என்னை போன்ற நடுத்தர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த புதிய அறிவுப்புகளை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

     

    தக்காளி ஆறுமுகம் - ஆட்டோ டிரைவர் ஏழுமலை 

    வேலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை கூறுகையில்,

    ஆட்டோ ஓட்டும் தொழில் மூலம் சில நேரங்களில் போதிய வருமானம் கிடைப்பதில்லை. அவசர தேவை மற்றும் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்க வேண்டி உள்ளது.

    ஏற்கனவே வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்கும் போது மொத்தமாக பணத்தைக் கட்டி அதனை மீட்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளதால் நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் நகைகளை எளிதில் வங்கிகளில் அடகு வைக்க முடியாது. 20 ஆண்டுக்கு முன்பு வாங்கிய தங்க நகைக்கான ஆதாரத்தை எங்கிருந்து நாங்கள் கொண்டு வருவோம். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கந்து வட்டி வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் என்றார்.

    • ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
    • புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

    தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மதுரை மாவட்டம் திடீர் நகரை சேர்ந்த பூ வியாபாரி தனம் கூறுகையில்,

    மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது குண்டு மல்லி தான். நாங்கள் பல தலைமுறைகளாக பூ வியாபாரம் பார்த்து வருகிறோம். என் கணவர் இறந்து 15 வருடங்கள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். பிள்ளைகளை வளர்ப்பதற்காக கடந்த 37 வருடங்களாக பெரியார் பேருந்து நிலையம் அருகே பூ கட்டி வியாபாரம் செய்து வருகிறேன்.

    குடும்ப தேவைகளுக்காகவும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக நான் சிறிது சிறிதாக வாங்கிய நகைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறேன். முன்பெல்லாம் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தால் ஒரு வருடத்திற்குள் நகைகளை திருப்ப வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. மேலும் நகைகளை திருப்ப இயலவில்லை என்றால் நகைகள் மீது கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு மறு அடகு வைக்கும் நடைமுறையும் இருந்தது.

    ஆனால் தற்போது நகைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வட்டி தொகையை செலுத்தி திருப்ப வேண்டுமெனவும், அதன் பிறகு மறுநாளில் மீண்டும் அடகு வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய வட்டி தொகையை விட இந்த புதிய நடைமுறையால் இரண்டு முறை வட்டி கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

    இதனால் எங்களைப் போன்ற ஏராளமான நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிப்படைந்து உள்ளனர். ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது இன்றைய விலையில் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் நாங்கள் வாங்கிய தங்கத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறுகிறோம். அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.

    முன்பெல்லாம் நகை வாங்கும்போது ஜி.எஸ்.டி. வரி என்பது கிடையாது. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி. வரி போடுகிறார்கள். அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தங்கத்தை அடகு வைக்கும்போது அதற்கான பில்லை சாமானிய மக்களால் எப்படி வங்கியில் தர முடியும். இது நகை அடகு வைப்பவர்களை மிகவும் பாதிக்கும். மொத்தத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் என்னை போன்ற அன்றாட கூலிகளுக்கு நகை அடமானம் வைப்பதையே மறக்கடித்துவிடும் என்றார்.

     

    பூ வியாபாரி தனம் - இல்லத்தரசி அஞ்சலி

    தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி அஞ்சலி கூறியதாவது:-

    முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொண்டு வந்தோம்.

    ஆனால் தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் நகை அடைமானம் காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும் என வங்கி கூறியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எங்களுடயை கடன் சுமையை குறைக்க வேண்டியே வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கிறோம். முழுத் தொகை செலுத்தி அதனை எடுக்க முடியாத சூழ்நிலையில் நகைக்கடனுக்காக வட்டியை மட்டும் கட்டி விட்டு அதனை மறுபடியும் வங்கியில் அடமானம் வைத்து வந்தோம்.

    ஆனால் தற்போது முழுதொகை மற்றும் அதற்கான வட்டியை முழுவதும் கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் எனக் கூறும் இந்த புதிய நடைமுறையால் என்னை போன்ற நடுத்தர பெண்கள் நடுத்தர குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

    சில தனியார் வங்கிகள் முழுதொகை மற்றும் அசல் வட்டியை உடனே கட்ட வேண்டும். இல்லையெனில் நகை ஏலத்திற்கு சென்று விடும் கூறி வருகின்றனர்.

    இதனால் நடுத்தர குடும்பத்தினர் வங்கியின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து கந்து வட்டியில் கடன் வாங்கி நகையை மீட்டு மறுபடியும் நகையை வங்கியில் அடமானம் வைத்து கந்துவட்டி நபர்களுக்கு பணத்தை கொடுத்து வரும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

    ஆகையால் ஏழை எளிய மக்களின் நலன் கருதி ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்பது எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது என பேசி முடித்தார்.

    • தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
    • வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.

    தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த விவசாயி முகமது இப்ராஹிம் கூறுகையில்,

    தமிழகத்தில் தங்க நகை கடன் பெறுவோர் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகின்றனர் . தற்போது நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    குறிப்பாக தங்கத்தின் மதிப்பில் 75 சதவீத பணம் மட்டுமே கடனாக வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது . மேலும் அடகு வைக்கும் தங்கத்திற்கு உரிமையாளர் என்பதற்கான ஆதாரம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் சிரமத்தையே கொடுக்கும்.

    முழுத்தொகை மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக கட்டி நகையை பெற்று அதனை மீண்டும் மறுநாள் அடமானம் வைக்கலாம் என கூறும் புதிய நடைமுறையால் நடுத்தர குடும்பத்தினர் பாதிப்பை சந்திப்பர். இது விவசாய மக்களையும் பெருமளவில் பாதிக்கும்.

    எனவே புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே திரும்ப பெற வேண்டும். தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காதவாறு எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் - விவசாயி முகமது இப்ராஹிம்

     

    திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

    திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் தினமும் கோடிக்கணக்கில் ஆடை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வர்த்தகம் கோடிக்கணக்கில் நடைபெற்றாலும், தொழில்துறையினர் பலரும் தங்களது நிறுவனத் தேவைக்காக வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியும் வருகிறார்கள். குறிப்பாக வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் பலரும் கடன் பெறுவது வழக்கம்.

    இதன் பின்னர் ஆடைகளுக்கான பணம் கிடைத்தவுடன் அடகு வைத்த நகைகள் மற்றும் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப பெறுவது வழக்கம். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த 9 கட்டுப்பாடுகள் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதில் 75 சதவீதம் தான் கடன் தொகை வழங்கப்படும் என்பது உள்பட கட்டுப்பாடுகள் திருப்பூர் தொழில்துறையினருக்கு கடும் சவாலாக உள்ளது.

    சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு ஆண்டுதோறும் வட்டியை கட்டி அதனை மீண்டும் திருப்பி வைத்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டால் பணத்தை முழுமையாக செலுத்தி நகையை திருப்ப வேண்டும் என்பது முடியாத காரியம்.

    எனவே இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும்.
    • தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.

    சென்னை:

    தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. தங்களது அவசர தேவைக்குஉதவும் பொருளாகவும் பார்க்கிறார்கள்.

    ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடனடி பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தை பெற்று வந்தனர். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து பணம் பெற்று வந்தனர்.

    இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பேரிடியாக விழுந்தது.

    அதாவது முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம். தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர், இந்த முறை முற்றிலும் மாறியது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும்.

    இந்த கட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதித்தது.

    இந்த சூழ்நிலையில் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தகவலாக, நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

    தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் 9 அம்சங்கள் முன் மொழியப்பட்டுள்ளன.

    அதன் விவரம் வறுமாறு:-

    * தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும்.

    * தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.

    * வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.

    * தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும்.

    * தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.

    * ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.

    * தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.

    * தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

    * கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்குள் தங்கத்தை திருப்பி தர வேண்டும்.

    * அடமான நகையை திருப்பி தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 பணத்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×