என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நகைக்கடனில் கை வைத்த ரிசர்வ் வங்கி... இனி தங்கம் விலை உயர்ந்தாலும் பயன் இல்லை - அட போங்கப்பா!
- நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.
- தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்வதும், பின்னர் லேசாக குறைவதுமாக உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு வகையான நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கைவசம் உள்ள நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கி வருகிறார்கள்.
வங்கிகளில் நகையை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 40 முதல் 45 சதவீதம் அளவிலான நகைக்கடனை 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.
தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும்போது, வாங்கிய கடன் தொகையானது அடகு வைக்கப்படும் நகையின் மதிப்பை விடவும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நகை கடனை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்துவதில்லை. மேலும் நகையை திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து இருந்தது. நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72 சதவீதம் வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தங்க நகையின் மதிப்பில் இருந்து 60 முதல் 65 சதவீதம் வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.






