search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறச்சகுளம்-களியங்காடு வழியாக கனிமவளங்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள்
    X

    இறச்சகுளம்-களியங்காடு வழியாக கனிமவளங்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடுகள்

    • தாசில்தார் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் உடன்பாடு
    • கனரக வாகனத்தில் இருந்து பாறாங்கல் விழுந்த விவகாரம்

    பூதப்பாண்டி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. முறையான அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் செல்லும் கனரக லாரிகளால் விபத்துகளும், சாலை சேதமும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10 சக்கரங்களுக்கு மேலான கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தடை விதித்தார்.

    ஆனால் லாரி உரிமை யாளர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவுக்கு அவகாசம் பெற்றனர். இதனை தொடர்ந்து கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் மீண்டும் செல்லத் தொடங்கின.

    கடந்த வாரம் இறச்சகுளம்-களியங்காடு வழியாக ஒரு கனரக வாகனம், கனிமவளங்களை ஏற்றிச் சென்றது. அப்போது அந்த லாரியில் இருந்து பெரிய பாறாங்கல் சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சாலையில் அப்போது யாரும் இல்லாததால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. அதே நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை போலீசாரதும் அதிகாரிகளும் சமரசம் செய்தனர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தன். இதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அதிகாரிகள் கொடுத்த காலக்கெடு முடிந்த நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இன்று காலை தோவாளை தாசில்தார் வினைதீர்த்தான் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறச்சகுளம்-களியங்காடு சாலையில் இரு வழியாகவும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளதாகவும், மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் அந்த வழியாகச் செல்லும் கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் செல்ல தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக 15 நாட்களில் முடிவு செய்வது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    அவர்கள் கூறுகையில்,15 நாட்களில் உறுதியான முடிவு காணப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    Next Story
    ×