search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aani thiruvizha"

    • இந்த திருவிழா 28-ந்தேதி வரை நடக்கிறது.
    • 25-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

    திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆனித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி சீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 10.30 மணியளவில் கொடி மரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் இந்த ஆனித்திருவிழா வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) சுவாமி நாகல்நகர் புறப்பாடும், 23-ந்தேதி திருக்கல்யாணம், 25-ந்தேதி திருத்தேரோட்டம், 27-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 28-ந்தேதி நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தோடு திருவிழா நிறைவு பெறுகிறது.

    • அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.
    • பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் குறிப்பாக ஆனி மாதம் நடைபெறும் திரு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜூலை மாதம் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்க நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த விழாவிற்கான தொடக்கமாக பந்தல்கால் நடும் விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபி ஷேகமும், அதனைத்தொடர்ந்து அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலாவும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோவில் யானை காந்திமதி முன்செல்ல அப்பர் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக வர கோவில் மகா மண்டபத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பந்தல் காலை சுமந்து செல்ல, சுவாமி சன்னதி கோவில் வாசல் மண்டபத்தில் பந்தல் கால் நடப்பட்டது.

    இந்த விழாவை தொடர்ந்து ஊர் காவல் தெய்வமாக விளங்கும் பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனை தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் 10 நாட்கள் விநாயகர் திருவிழாவும், அதன் பின்னர் அப்பர் திருவிழா 10 நாட்களும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூலை மாதம் நெல்லையப்பருக்கான ஆனிப் பெருந்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மொத்தம் 40 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் முதல் விழாவான பந்தல்கால் நடும் விழாவில் இன்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
    • சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும்.

    நெல்லை :

    தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும்.

    இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கோவிலில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமி நெல்லையப்பர் தேர் தமிழகத்தின் 3-வது பெரிய தேராகும். இதன் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, அலங்கார தட்டுகளை சேர்த்து உயரம் சுமார் 70 அடியாக கொண்டுள்ளது.

    பல்வேறு சிறப்புகள் கொண்ட சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆனிப்பெருந் திருவிழா பிரசித்தி பெற்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் சுவாமி, அம்பாள் ஆகியோர் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

    காலை 9 மணிக்கு சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் முக்கிய பிரமுகா்கள் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவர்களும் தேரோட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டும் கோஷத்துடன் தோ் 4 ரதவீதிகளிலும் வலம் வந்தது.

    அதனை தொடாந்து அம்பாள் தேரும், கடைசியாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், பல்வேறு கட்சியினர் சார்பில் ரதவீதிகளில் அன்னதானம், தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    மேலும் மாநகராட்சி சார்பிலும் தண்ணீர் டேங்குகள் வைக்கப்பட்டு இருந்தது. ரதவீதிகள் முழுமையும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு முழுமையாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    அந்த பகுதிகளில் ஏற்கனவே 32 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், கூடுதலாக 13 காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி மாநகர பகுதி முழுவதும் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    முன்னதாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பழைய பேட்டை கண்டியபேரியில் தென்காசியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. ரதவீதிகளில் மாலை வரை மாநகர பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை.

    தேரோட்டத்தை காண கார், மோட்டார் சைக்கிள்களில் திரளானோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு 8 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    • நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் 5 தேர்களில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. 7-ம் நாள் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு சுவாமி நடராஜபெருமான் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளலும், 8 மணிக்கு சுவாமி நடராஜப்பெருமாள் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளலும் நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், படையல் பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
    • பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பெரியகுளம் தென்கரையில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆனி திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று இரவு கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி வடகரையில் உள்ள பரம்பரை பூசாரி வீட்டில் இருந்து கம்பம் மற்றும் கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

    மேலும் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் கம்பம் நடப்பட்டு, ஆனி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • இன்று (வியாழக்கிழமை) சுவாமி, அம்பாள் வீதி உலா செல்கின்றனர்.
    • வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருநெல்வேலி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-வது திருநாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதிஉலா சென்றனர்.

    இரவு வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா சென்றனர். மேலும் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 5-வது திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் வீதி உலா செல்கின்றனர்.

    மேலும் பக்தி இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கூட்டு வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

    • வருகிற 10-ந்தேதி சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
    • 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

    நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 2-வது நாள் திருவிழாவையொட்டி காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும் மாலை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இசை மற்றும் பொம்மலாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. மேலும் கலையரங்கத்தில் சிறப்பு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வருகிற 10-ந்தேதி சுவாமி கங்காள நாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. 11-ந்தேதி (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களில் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுவாமி தேரில் கம்புகள் வைத்து கட்டி, மரக்குதிரைகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி என்ற பெயரில் பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. நெல்லை உதவி வன பாதுகாவலர் ஹேமலதா நேற்று மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து காந்திமதி யானையை நேரில் பார்வையிட்டார். பின்னர் யானைக்கு வழங்கப்படும் உணவு வகைகள், தற்போது பக்தர்களால் வழங்கப்பட்ட காலணி ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் கோவில் வளாகத்தில் யானை குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நீச்சல்குளத்தையும் அவர் பார்வையிட்டார். அதை தொடர்ந்து யானையை நல்லமுறையில் பராமரிக்கும்படி பாகன்களுக்கு ஆலோசனை வழங்கிச்சென்றார்.

    • தீர்த்தவாரியும், அம்மன் சப்பர பவனி வருதல், கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் தீர்த்தவாரியும், அம்மன் சப்பர பவனி வருதல், கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முதல் நாள் திருநாள் ஹரிராம் சேட் நற்பணி மன்றம் மற்றும் நாடார் இளைஞர் அணி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    11 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, பகலில் அம்மனுக்கு பூஜைகள், மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து முக்கூடல் நகரை சுற்றி தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் ரத பவனியும், இரவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவில் 8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். 9-ம் நாள் அன்று இரவு அம்மன் சப்பர பவனி உடன் கலை நிகழ்ச்சிகள், 10-ம் திருநாள் அன்று தாமிரபரனி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், 11-ம் நாள் தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எல்.வேல்சாமி, செயலாளர் எஸ்.சந்திரன், துணை தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்தரசன் மற்றும் முக்கூடல் இந்து நாடார்கள் செய்து உள்ளனர்

    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.
    • தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆனித்தேரோட்டம் சிறப்பு பெற்றது. 516-வது ஆண்டு ஆனித்தேரோட்டம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 7.40 மணிக்கு சுவாமி -அம்மாள் பூக்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது ஆனித்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை )நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு நடக்கும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

    • 8-ம்தேதி இரவு 9 மணிக்கு பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • வருகிற 11-ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஸ்ரீமந் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்டத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 1ம் திருநாளான இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விசேஷ பணி விடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    கோவில் மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். அதன் பின் கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

    திருவிழாவின் 8-ம் நாளான வருகிற 8-ம்தேதி இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.
    • தேரோட்ட விழா 4-ம்தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் 93-வது ஆனி திருவிழா கடந்த 24-ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான இன்று பரிவேட்டை விழா நடந்தது.

    இதையொட்டி மாலையில் அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி பரிவேட்டையாடினார்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 4-ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா நடக்கவில்லை.
    • தேரோடும் வீதியில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

    தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி. இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குங்கும காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா நடக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டிற்கான விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று வந்தது.

    9-ம் திருநாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் குங்கும காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 4.45 மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க தேர் இழுக்கப்பட்டு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    மாலை 6.46 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. முன்னதாக தேரோடும் வீதியில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ்(தேவகோட்டை), ஆத்மநாபன் (திருப்பத்தூர்) ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×