search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thamirabarani Maha Pushkaram"

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் 11-வது நாளான இன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். #ThamirabaraniPushkaram #OPS
    சிங்கை:

    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகளும், வேள்விகளும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெற்று வருகிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடக்க நாளில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் தாமிரபரணியில் நீராட வந்த வண்ணம் உள்ளனர்.

    விழாவின் 11-வது நாளான இன்று தாமிரபரணியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு அம்பை வந்தார். அம்பையில் உள்ள ஓட்டலில் தங்கிய அவர் இன்று காலை 7.50 மணிக்கு பாபநாசத்திற்கு வந்தார்.



    பாபநாசம் தலையணை அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மண்டபம் அருகே தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார். முன்னதாக அவர் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

    இதன் பிறகு அவர் பாபநாசம் பாபநாசம் நாதர் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி அம்பை பாபநாசம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பாபநாசத்தில் தரிசனம் செய்ததும் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து வீரவநல்லூர் அருகே உள்ள அத்தாளநல்லூருக்கு சென்றார். அங்குள்ள தாமிரபரணியில் வழிபாடு செய்த அவர் பின்னர் அப்பகுதியில் உள்ள கஜேந்திரபெருமாள் கோவிலில் நடந்த புஷ்கர பூஜையில் கலந்து கொண்டார்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #ThamirabaraniPushkaram #OPS

    தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காக நீராட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். #ThamirabaraniMahaPushkaram
    நெல்லை:

    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் தாமிரபரணி புஷ்கர விழா இந்த ஆண்டு கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதையடுத்து விருச்சிகத்துக்கு உரிய நதியான தாமிரபரணியில் மகா புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவுக்காக கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பல்வேறு ஆன்மீக அமைப்புகள் ஏற்பாடுகள் செய்து வந்தன. பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அந்தந்த பகுதியில் விழா நடத்தும் அமைப்புகள் காலையில் ஆற்றில் புனித நீராடலையும், தொடர்ந்து சிறப்பு யாகங்கள், கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. மாலையில் தாமிரபரணிக்கு மகா ஆரத்தியும், தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.

    அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக பாபநாசம் மற்றும் நெல்லை தைப்பூச மண்டபம் ஆகிய 2 இடங்களில் புஷ்கர விழா நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை இப்பகுதியில் சிறப்பு யாகங்கள், வழிபாடுகள் நடைபெற்றன.

    புஷ்கர விழாவின் 3-வது நாளான இன்று தாமிர பரணியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் சிறப்பு வசதிகள் செய்திருந்தன. தொடர்ந்து தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காக நீராட வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர்.

    பாபநாசம் சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் அனைத்து சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து சித்த மருத்துவர்கள் பங்கேற்றனர். இன்று மாலை பாபநாசம் இந்திர கீல தீர்த்த படித்துறையில் மகா ஆரத்தி நடைபெறுகிறது.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் மற்றும் பாபநாசம், சிங்கை ஊர்மக்கள் சார்பாக திரிநதி சங்கம தீர்த்தத்தில் புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. புஷ்கர விழாவின் 3-வது நாளான இன்று காலையில் சிறப்பு வேள்வி நடைபெற்றது. மாலையில் தமிழ் ஆகம விதிப்படி சிவனடியார்களால் மகா ஆரத்தி பூஜை நடத்தப்படுகிறது.

    காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூர் புடாட்சர தீர்த்தத்தில் நடைபெற்ற விழாவில் இன்று காலை சுதர்சன ஓமம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மாலையில் சிறப்பு ஆரத்தியும், திவ்யநாம சங்கீர்த்தனமும் நடைபெறுகிறது.

    அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படித்துறைகளிலும் தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நெல்லை மேலநத்தம் அக்னி தீர்த்த கட்டத்தில் நேற்று புஷ்கர விழா தொடங்கியது. இன்று காலையும் இங்கு தாமிரபரணிக்கு வழிபாடுகள் நடைபெற்றது.

    குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறையில் காலையில் தாமிரபரணிக்கு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. நெல்லை கைலாசபுரம் கைலாசநாதர் படித்துறையில் காலையில் வேதபாராயணம் மற்றும் ஓமங்கள் நடைபெற்றன. நெல்லை சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது. மாலையில் தாமிரபரணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் அலங்கார தீபாராதனை, ஆரத்தி நடைபெறுகிறது.

    அருகன்குளம் எட்டெழுத்துபெருமாள் கோவில் கோசாலையில் இன்று காலை சிறப்பு ஓமம் நடந்தது. 50-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கலந்துகொண்டு யாகம் வளர்த்தனர். இதேபோல் முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம், ஸ்ரீவைகுண்டம் படித்துறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை பல்வேறு யாகங்கள், வழிபாடுகள் நடைபெற்றன.

    புஷ்கர விழாவையொட்டி பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆற்றில் நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆற்றில் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.  #ThamirabaraniMahaPushkaram




    சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகளுடன் தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், படித்துறைகளில் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடினர். #Pushkaram #ThamirabaraniMahaPushkaram
    நெல்லை:

    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    144 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. மகா புஷ்கர விழா இன்று(11-ந் தேதி) முதல் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கடந்த ஒரு ஆண்டாகவே பல்வேறு ஆன்மீக அமைப்புகள் ஏற்பாடுகளை செய்து வந்தன.

    தாமிரபரணி நதி தொடங்கும் பொதிகை மலையின் பூங்குளத்தில் இருந்து இறுதியாக கடலில் சென்று கலக்கும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகளில் புஷ்கர விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இந்த புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கர விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு ஆரத்தி, மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், பொங்கலிடுதல், சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்புவனம், சேரன் மகாதேவி, மேலச்செவல், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், வண்ணார் பேட்டை, எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயுதீர்த்தம், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணிக்கு மஹா ஆரத்தி வழிபாடுகள் நடக்கின்றன.

    அகில பாரதீய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசம் படித்துறையில் இன்று அதிகாலை தாமிரபரணி புஷ்கர விழா தொடங்கப்பட்டது. இதையொட்டி சங்கராசாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், துறவியர்கள் கலந்து கொண்டு 108 புண்ணிய நதி கலச தீர்த்தங்களை தாமிரபரணி ஆற்றில் ஊற்றினர்.


    இதைத்தொடர்ந்து சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தாமிரபரணி நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பாபநாசம், அம்பை, சேரன்மகாதேவி, சுத்தமல்லி, குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, தைப்பூச மண்டபம், முறப்பநாடு, ஸ்ரீவை குண்டம், ஏரல் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.

    பாபநாசத்தில் துறவியர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தாமிரபரணி மகா புஷ்கர விழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து துறவியர்கள் மாநாட்டையும் கவர்னர் தொடங்கி வைத்தார்.

    பாபநாசம், வி.கே.புரம் சித்தர்கள் கோட்டம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக 28-வது தீர்த்த கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் இன்று புஷ்கர விழா தொடங்கியது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 54 ஓமகுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஓமம் வளர்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். இன்று காலை அங்கு தசமகாவித்யா ஓமம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். கோசாலையில் வழிபாடு நடத்தும் அவர் தொடர்ந்து அங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் காசியில் கங்கைக்கு நடைபெறுவது போன்று நடத்தப்படும் மகா ஆரத்தியை தொடங்கி வைக்கிறார்.

    காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பராகத மூலாம் நாயசர் வஞ்ய பீடம் சார்பாக புடார்ச்சன சேத்திரம் எனப்படும் திருப்புடைமருதூரில் தாமிரபரணி புஷ்கர விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்று மாலை நடைபெறும் விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.

    நெல்லை தைப்பூச படித்துறையில் இன்று காலை கணபதி ஹோமத்துடன் தாமிரபரணி மகா புஷ்கரவிழா தொடங்கியது. தொடர்ந்து அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதில் சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள், ஆதினங்கள், மடாதிபதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இங்கும் மாலை 6 மணிக்கு தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெறுகிறது.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆற்றில் ஆழமான பகுதிகளில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆற்றில் பக்தர்கள் நீராடும் போது பாதுகாப்புக்காக படகுகளுடன் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பாபநாசம், வீரவநல்லூர், அத்தாள நல்லூர், திருப்புடைமருதூர் மற்றும் முறப்பநாடு, ஏரல், முக்காணி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ரெயில் மூலம் வருபவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக நெல்லை ரெயில் நிலையத்தில தமிழக சுற்றுலாதுறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரி நேரடி மேற்பார்வையில் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள் நெல்லை அருண்சக்திகுமார், தூத்துக்குடி முரளி ரம்பா, நெல்லை மாநகர கமி‌ஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் ஆகியோர் ஏற்பாட்டில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தாமிரபரணி நதியில் உள்ள படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் 13 நாட்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    நெல்லையில் விழா நடைபெறும் இடங்களில் மாநகராட்சி சார்பாக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #Pushkaram #ThamirabaraniMahaPushkaram 
    திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து புனித நீராடினார். #ThamirabaraniMahaPushkaram #TNGovernor #BanwarilalPurohit
    நெல்லை:

    தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 8.50 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தென்காசிக்கு வந்தார். அவருக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. கபில்குமார்சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் தென்காசி டி.எஸ்.பி. மணிகண்டன், ஆர்.டி.ஓ.ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டு கவர்னரை வரவேற்றனர். இதை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றாலத்துக்கு சென்றார்.

    அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். இதன்பிறகு அவர் பாபநாசம் புறப்பட்டு சென்றார். பாபநாசம் வந்த கவர்னருக்கு துறவியர்கள், பண்டிதர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திரகீல தீர்த்தப்படித்துறையில் புனித நீராடினார். பின்னர் அவர் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பாக நடைபெற்ற துறவியர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் புஷ்கர விழாவை தொடங்கிவைத்து விழா மலரை வெளியிட்டு அவர் பேசினார்.

    பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திரகீல தீர்த்தப்படித்துறையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புனித நீராடிய போது எடுத்தபடம்.

    இதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை வந்தார். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார். மாலை 5.15 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நெல்லை அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு செல்கிறார்.

    அங்கு கோசாலையை பார்வையிட்டு அங்குள்ள யாகசாலையில் நடைபெறும் சிறப்பு யாகத்தில் கலந்துகொள்கிறார். பின்னர் அவர் அங்குள்ள ஜடாயுதீர்த்த படித்துறையில் தாமிரபரணி மகா ஆரத்தியை தொடங்கி வைக்கிறார். பின்பு அவர் அங்கிருந்து புறப்பட்டு திருப்புடைமருதூர் செல்கிறார்.

    அங்கு நடைபெறும் புஷ்கர விழாவில் அவர் கலந்துகொள்கிறார். பின்னர் அவர் நெல்லை வந்து வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை காலை அவர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ThamirabaraniMahaPushkaram #TNGovernor #BanwarilalPurohit
    144 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. #ThamirabaraniMahaPushkaram
    பாபநாசம்:

    குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழா என்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டன. தூத்துக்குடியில் முறப்பநாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு புஷ்கர விழாவிற்கு தயார்படுத்தப்பட்டன.

    இதையடுத்து மகா புஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் மகா புஷ்கர விழா தொடங்கியது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தாமிரபரணி நதியை வணங்கி புனித நீராடி மகிழ்ந்தனர்.



    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகி பங்கேற்க உள்ளார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

    மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கவர்னர் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. .

    ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட்டத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மகா புஷ்கர விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மீட்பு பணிக்காக  படகுகளும் தயார் நிலையில் உள்ளன. 22-ம் தேதி வரை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.  #ThamirabaraniMahaPushkaram
    தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HighCourt
    சென்னை:

    ஐகோர்ட்டில், புலவர் மகாதேவன் என்பவர் தொடர்ந்துள்ள மனுவில், ‘நெல்லை மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை புஷ்கரம் விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக நெல்லையில் தைப்பூசப் படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்து மாவட்ட கலெக்டரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

    நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறும் தைப்பூசப் படித்துறையில் புனித நீராட தடை விதித்து இருப்பது சட்டவிரோதமானது.

    அதேபோல, குறுக்குத் துறை படித்துறையில் நீராடுவதற்கு தடை விதித்து இருப்பதையும் ஏற்க முடியாது. எனவே இந்த 2 படித்துறைகளிலும் புஷ்கர விழாவின்போது பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும்போது, அதில் சுழல் ஏற்படும். குளிப்பவர்கள் அதில் சிக்கினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

    எனவே, அங்கு பெய்யும் மழையின் அளவு, தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். #HighCourt
    பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். #ThamirabaraniMahaPushkaram #BanwarilalPurohit
    நெல்லை:

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய தாமிரபரணி மகா புஷ்கர விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த‌ விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி சிருங்கேரி, காஞ்சி மடங்கள், துறவிகள் சங்கம், சித்தர்கள் கோட்டம், தாமிரபரணி புஷ்கர ஒருங்கிணைப்பு குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள், தாமிரபரணிக்கு ஆரத்தி வழிபாடு நடத்த‌ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் முறப்பநாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு உள்ளன.

    பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். புஷ்கர விழாவுக்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை(புதன்கிழமை) கார் மூலமாக குற்றாலத்துக்கு வருகிறார். அங்கு இரவில் தங்கும் அவர் 11-ந் தேதி காலையில் பாபநாசம் செல்கிறார்.

    அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் அங்கிருந்து திருப்புடைமருதூருக்கு சென்றுவிட்டு மதியம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். மாலையில் நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக்கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணிக்கு விழா தொடங்குகிறது.

    முன்னதாக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலைக்கு செல்லும் கவர்னர் அங்கு வழிபாடு நடத்துகிறார். தொடர்ந்து மகா ஆரத்தி நடைபெறுகிறது. ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பதுபோன்று மகாபாரணி ஆரத்தி செய்யப்படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ள படித்துறை மற்றும் மேடை.

    சிறப்பு வேத பண்டிதர்களும் வருகிறார்கள். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகின்றன. விழாவின்போது தாமிரபரணியின் மையப்பகுதியில் படகுகளில் மீட்பு படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். புஷ்கர விழாவுக்காக எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரமாண்டமான கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. 54 யாக குண்டங்களும், நடுவில் பத்ம குண்டமும் அமைக்கப்பட்டுள்ளன.

    புஷ்கர விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் கடந்த 6-ந்தேதி இரவு நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அவர் கடந்த 2 நாட்களாக நெல்லையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பாபநாசம் படித்துறைகள், அங்கு செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், நெல்லையில் உள்ள படித்துறைகள் தொடர்பாகவும் போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேசுவரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், புஷ்கர விழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடுவதற்கு வசதியாக ஆற்றுக்குள் பாதுகாப்பு வளையம் அமைக்க உத்தரவிட்டார்.

    ஏற்கனவே ஆற்றுக்குள் உள்ள ஆழம் குறித்தும், எந்தெந்த இடங்களில் எத்தனை அடி தூரம் வரை பக்தர்களை அனுமதிப்பது என்றும் விழா குழுவினர் அறிக்கை தயார் செய்துள்ளனர். அதன்படி குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பக்தர்கள் ஆற்றுக்குள் செல்ல முடியாத வகையில் இரும்பு கம்பிகளை நிறுவி, இரும்பு வலைகளை கட்டி பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க ஐ.ஜி.சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டார். புஷ்கர விழாவுக்காக மாநகரில் 600 போலீசார் மாவட்டத்தில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 1500 போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட உள்ளனர். தேவைப்பட்டால் இதர மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. #ThamirabaraniMahaPushkaram #BanwarilalPurohit

    தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniMahaPushkaram
    திருவொற்றியூர்:

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் நடந்த புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரையை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கரம் விழா வருகிற 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


    தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்க வேண்டும். இதில் முதல்- அமைச்சர் பங்கேற்க வேண்டும். இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்து உள்ளார். அதே போன்று தமிழக அமைச்சரும் நெல்லை மாவட்டத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்துக்கள் விழாக்களுக்கு, சமயம் சார்ந்த பூஜைகளுக்கு தடை விதிப்பதும் அதற்காக போராடுவதும் சிறை செல்வதும் வழக்கமாகி விட்டது. தமிழகத்தில் இந்த சூழ்நிலை மாற வேண்டும். இந்த காலகட்டத்தில் இந்து சமய விழாக்கள் அனைத்திற்கும் தமிழகஅரசு தடையாக உள்ளது இந்த நிலை மாறவேண்டும். இந்துக்களுக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்து முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    பல்வேறு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக இருந்தவர்கள் தற்பொழுது ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணையில் உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் கடமையே தவிர ஆட்சியில் இல்லாத எங்களிடம் ஆதாரம் கேட்பது நியாயமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தாமிரபரணி புஷ்கரம் குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் ராஜேந்திரன், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன், பா.ஜனதா திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய் கணேஷ், விசுவ இந்து பரி‌ஷத் மாநில தலைவர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniMahaPushkaram
    ×