search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money Cheating"

    • முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையை கொடுத்து வந்துள்ளார்.
    • மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை குருடம்பாளையம் அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் மதுமிதா (வயது32).

    இவர் தன்னுடன் படித்தவர்கள் மற்றும் தனக்கு அறிமுகமானவர்களை செல்போனில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் நான் என்.பி. என்ற பெயரில் ஆன்லைன் வர்த்த நிறுவனம் தொடங்கி உள்ளேன்.

    அதில் நீங்கள் ரூ.1லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.20 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு பணம் தருவதாகவும், வருடத்தின் இறுதியில் முதலீடு செய்த ரூ.1 லட்சத்தையும் திரும்ப தந்து விடுவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

    மேலும் புதிய முதலீட்டாளர்களை அறிமுகம் செய்து வைத்தால், 5 சதவீதம் வரை ஊக்கத் தொகை தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அவரது நிறுவனத்தில் ஏராளமானோர் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இவ்வாறாக அவர் பலரிடம் இருந்து ரூ.2 கோடி அளவுக்கு முதலீடு பெற்றதாக கூறப்படுகிறது.

    முதல் 2 மாதங்கள் மட்டும் தன்னிடம் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையை கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

    இதனால் முதலீடு செய்தவர்கள் அவரை தொடர்பு கொண்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. ஒரு சிலர் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று தங்கள் பணத்தை கேட்டுள்ளனர்.

    அப்போது தன்னை மிரட்டுவதாக பணம் கேட்டு வந்தவர்கள் மீதே மதுமிதா போலீசில் புகார் அளித்தார். சில நாட்களில் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. திடீரென தலைமறைவாகி விட்டார்.

    மதுமிதாவை, அவரிடம் முதலீடு செய்தவர்கள் தேடி வந்தனர். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் முதலீட்டாளர்கள் தவித்தனர். இதுகுறித்து தடாகம் போலீசிலும் அவர்கள் புகார் அளித்தனர். போலீசார் மோசடி செய்த மதுமிதாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர் துபாயில் இருப்பது தெரியவந்தது. அங்கும் இது போன்று மோசடியில் ஈடுபட்டதும், அங்கு அவர் மீது போலீசில் புகார் அளிக்க இருப்பதை அறிந்ததும், அங்கிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு தப்பி வர இருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியவந்தது.

    அவரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த பாதிக்கப்பட்டவர்கள், மதுமிதாவிடம் பாதிக்கப்பட்ட எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு நபரை கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று அந்த நபர், விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்தார். மதுமிதா விமானத்தை விட்டு இறங்கி வந்ததும், அவரை நேரில் பார்த்த பாதிக்கப்பட்டவர், நான் உங்களுக்கு உதவி செய்வதற்காக வந்துள்ளேன். நான் உங்களை பத்திரமாக காரில் கொண்டு கோவையில் விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    அதனை மதுமிதாவும் உண்மை என நம்பி காரில் ஏறினார். இதையடுத்து இரவில், அந்த நபர் காரில் மதுமிதாவை அழைத்து கொண்டு கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே மதுமிதாவால் பாதிக்கப்பட்ட 20 பேர் நின்றிருந்தனர்.

    அவர்கள் அனைவரும் அவரை சுற்றி வளைத்து, ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.

    ஆனால் போலீசார் இது தொடர்பாக நீங்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மதுமிதாவுடன் கார்களிலேயே இரவு முழுவதும் போலீஸ் வளாகத்திலேயே இருந்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் மதுமிதா திடீரென காரில் இருந்து இறங்கி தப்பியோடினார்.

    இதனை பார்த்த, அவரிடம் முதலீடு செய்தவர்கள் மதுமிதாவை பிடிக்க முயன்றனர். அப்போது நீங்கள் என் அருகே வந்தால் தற்கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இருந்தபோதும், பாதிக்கப்பட்டவர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

    அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் மதுமிதாவிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மதுமிதா தன்னுடன் பள்ளியில் படித்த தோழிகளின் பெற்றோர் மற்றும் தன்னுடன் படித்தவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதும், அவர் துபாய்க்கு சென்று விட்டார். அங்கு சென்ற பின்னரும், அங்கிருந்தபடியே ஆன்லைன் மூலமாக சிலரிடம் பங்கு வர்த்தகம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறியும் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார்.

    இதுதவிர துபாயில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது அங்கு வரும் இளைஞர்களிடம் நட்பை ஏற்படுத்தி கொள்ளும் மதுமிதா, அதன்பின்னர் அவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும், அதில் ஒரு இளைஞர் போலீசில் புகார் அளிக்க போவதாக தெரிவித்ததும், அங்கிருந்து தப்பி கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.

    இவர் இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கிடையே மதுமிதா மீது கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மினிஜான் பிரதீப் புகார் அளித்தார். அதன்பேரில் மதுமிதா மீது மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
    • ஸ்ரீதர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி (வயது 47).

    இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்மநபரிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய 'லிங்க்' மூலம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து, வேலை செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார்.

    பின்னர் அந்த மர்மநபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 22-ந்தேதி அந்த மர்மநபர், ஜின்னாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 20 ஆயிரம் பணமும், அதனைத் தொடர்ந்து ரூ. 30 ஆயிரமும், அதற்கு மறுநாள் ரூ 9 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.

    இதனையடுத்து ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 20-ந் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    • வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி மற்றும் சகோதரி பெயரில் போலியான நகைகளை அடகு வைத்துள்ளார். மேலும் அதன் மூலம் ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இந்த உண்மை வங்கியில் நடைபெற்ற தணிக்கை பணியின் போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    அதேபோல் ஏ.டி.எம். எந்திரங்களில் வங்கி சார்பில் வைக்க வேண்டிய ரூ.39 லட்சத்து 19 ஆயிரத்தையும் தனது மனைவி மற்றும் சகோதரியின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார்.

    அவ்வாறு கிடைத்த பணத்தை கொண்டு சுரேஷ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சுரேஷ் மீதும் அவருக்கு உதவியதாக லட்சுமணன், சியர்ல தினா சுமதி ஆகிய 3 பேர் மீதும் கிளை மேலாளர் பெருகினியன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சுரேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வங்கியில் வேலை பார்த்துக்கொண்டே வங்கி பணம் ரூ.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 5 துணி ரோல்கள் வேண்டும் என்று பணியில் இருந்த ஊழியரிடம் கூறி உள்ளார் டிப் டாப் ஆசாமி.
    • திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் துணி வாங்கிக் கொண்டு பணம் செலுத்தாமல் காரில் பறந்த டிப்டாப் ஆசாமி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் சிவன் தியேட்டர்- பிச்சம்பாளையம் ரோட்டில் பிரபல பாலியஸ்டர் துணி விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் துணி வாங்க வருவதால் எந்த நேரமும் பரபரப்பாகவே இருக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திற்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி ஒருவர் துணி வாங்க சென்றுள்ளார்.

    அவர் வழக்கம் போல எல்லா வாடிக்கையாளரையும் போன்று தனக்கு தேவையான துணிகளை பார்வையிட்டுள்ளார். பின்னர் 5 துணி ரோல்கள் வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் கூறி உள்ளார் அந்த டிப்டாப் ஆசாமி. இதைத் தொடர்ந்து தான் பணம் செலுத்திவிட்டு வருவதாகவும், அதற்குள் துணி ரோல்களை தனது காரில் ஏற்றுமாறும் அந்த ஆசாமி கூறி உள்ளார். இதை நம்பிய ஊழியர் அந்த துணிகளை அவருடைய காரில் ஏற்றி உள்ளார்.

    ஆனால் அந்த டிப்டாப் ஆசாமி பணத்தை செலுத்தாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏறி அங்கிருந்து சிட்டாக பறந்தார். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் துணிகளை வாங்கிக் கொண்டு, அதற்கான பணத்தை செலுத்தாமல் காரில் பறந்த டிப்டாப் ஆசாமியின் வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
    • டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர்.

    செந்துறை:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது தன்வீர்(வயது 35). இவர் தற்போது அரியலூர் ஜெஜெ நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து, அவர் அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்டார். அப்போது, அதில் பேசிய நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

    இதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சத்து 47 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அவருக்கு லாப தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது தன்வீர் இது குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மர்ம கும்பல் இணையம் வழியாக இதுபோன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளது. இதை தொடர்ந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78 லட்சத்து 54 ஆயிரத்து 56 யை போலீசார் முடக்கம் செய்தனர். வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    மாலிக் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3 ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் போதிய லாபம் கிடைக்காததால், ஆன்லைனில் அதிகளவில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.

    இதற்காக டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர். இதற்காக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சிலரை வேலைக்கு சேர்த்தனர்.

    அவர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் தொடங்கினர். மேலும் புதிய சிம் கார்டுகளை வாங்கி மோசடி பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாலிக்கிடம் இருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள், 15 சிம்கார்டுகள்,8 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு காசோலை புத்தகம், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ள மும்பையை சேர்ந்து க்ளோன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • புதுவையில் கடந்த சில மாதங்களாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மோசடி கும்பலிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 61). இவர் புதுவையில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.

    இந்த நிலையில் வைத்தியநாதன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசினார்.

    தங்களது வங்கிக்கணக்கு காலாவதி ஆகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு ரகசிய எண் (ஓ.டி.பி.) வரும். அதை சொன்னால் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதாக தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய வைத்தியநாதன் செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண், ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்களை தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் இணைப்பை துண்டித்தார். அடுத்த சில நிமிடங்களில் வைத்தியநாதன் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்திய நாதன் தன்னுடன் பேசிய வங்கி மேலாளரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயன்றார்.

    ஆனால் அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. வங்கி மேலாளர் போல் மர்மநபர் பேசி பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைத்தியநாதன், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவையில் கடந்த சில மாதங்களாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி கும்பலிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பலமுறை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், பொதுமக்கள் இதனை கருத்தில் கொள்ளாமல் பணத்தை இழந்து வருகின்றனர்.

    • மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள பொத்தாம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் (30), பட்டதாரி. இவரது உறவினர் முருங்கப்பட்டி பாறைக்காட்டை சேர்ந்தவர் கணேசன் (45), இவரது மனைவி அமுதவள்ளி (36), இவர் பொத்தாம்பட்டியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கோவிந்தராஜிடம், வருவாய் துறையில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது, அப்பதவியை பெற தலா 5 லட்சம் வீதம் 7 பேருக்கு 35 லட்சம் ரூபாய் செலுத்தினால் உடனே பணியை வாங்கி தருகிறேன் என கணேசன் மற்றும் அவரது மனைவி அமுதவல்லி ஆகியோர் கூறினர்.

    இதை உண்மை என நம்பிய கோவிந்தராஜ் 5 லட்ச ரூபாய் கொடுத்தார். அதனை பெற்ற தம்பதியினர் 2020-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கியது போல் போலி நியமன உத்தரவு, வருவாய் துறை அடையாள அட்டையை வழங்கினர்.

    இதை பெற்ற கோவிந்தராஜ் ஜூலை 20-ந்தேதி நாமக்கல் தாலுகா அலுலகத்திற்கு சென்ற போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணேசன், அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் கோவிந்தராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கோவிந்த ராஜ் சேலம் மாநகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறவைாக உள்ள கணேசனை தேடி வருகிறார்கள்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணம் செலுத்தியும் ஒரு மாதமாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் வந்து சேரவில்லை.
    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயரட்சகன் இணையவழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆனந்த ரங்கப்பிள்ளை நகரை சேர்ந்தவர் ஜெயரட்சகன். (வயது 46).

    இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்துவிட்டு தற்போது புதுவையில் தங்கி ஆன்லைனில் முதலீடு செய்து வருகிறார். அவர் கடந்த மாதம் கிரிப்டோ கரன்சி வாங்குவதற்காக தனியார் நிறுவனத்தில் அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் வந்த நபர் நான் தென்னிந்தியாவிற்கான தனியார் நிறுவனத்தின் நிர்வாகி என்றும் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.

    அதை நம்பிய ஜெயரட்சகன் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

    அப்போதைய மார்க்கெட் ஒரு டாலரின் மதிப்பு ரூ.88 என்றும் இருந்தபோதும் தொடர்பு கொண்ட நபர் ரூ. 85-க்கு டாலர் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பி, ஜெயரட்சகன் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்தை அந்த நபர் சொன்ன 4 வங்கி கணக்குகளுக்கு செலுத்தி உள்ளார்.

    இவர் பணம் செலுத்தியும் ஒரு மாதமாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இணையவழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை.
    • பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம், பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதனை நம்பிய ஒரு சிலர் பணத்தை கட்டியுள்ளனர். அறிவித்தபடி வட்டி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்துவந்தார்.

    தொடர்ந்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.12 லட்சம் என முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு வட்டி திட்டங்களை அறிவித்தார். மேலும் மூரார்பாளையம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், நெடுமானுர், சங்கராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு மூரார்பாளையத்தில் நகை கடை, சூப்பர் மார்க்கெட், ஷேர் மார்க்கெட் போன்ற பல்வேறு நிறுவனங்களைத் திறந்து ஷமீர் குரூப் ஆஃப் கம்பெனியை தொடங்கினார்.

    இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை. பணத்தை முதலீடு செய்தவர்கள் ஷமீர் அகமதுவிடம் பணத்தைக் கேட்டனர். விரைவில் தருவதாக கூறிய ஷமீர் அகமது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரார்பாளையத்தில் உள்ள கடைகள், அலுவலகத்தை காலி செய்து விட்டு தலைமறைவானார்.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஏஜெண்டுகளை சுற்றிவளைத்து பணத்தை திருப்பி கேட்டனர். இதையடுத்து ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை ஏஜெண்டுகள் கண்டுபிடித்தனர். அவரிடம் பேசி முரார்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய ஷமீர் அகமதுவை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம் கட்டிய ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்களிடமும் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.50 கோடிக்கு வட்டியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல், ஷமீர் அகமது மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஷமீர் அகமதுவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை என்ன செய்தார்? என்பது குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரள பெண் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை சைதன்ய ராஜின் தாயார் மருத்துவ செலவிற்கு அனுப்பியுள்ளார்.
    • மணிகண்டன் சாய் பெண்களிடம் மோசடி செய்த பணத்தை வைத்து ஊர் ஊராக சுற்றித்திரிந்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

    சென்னை:

    கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். தனது திருமணத்திற்காக சுயவிவர தகவல்களை திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து மாப்பிள்ளை பார்த்து வந்தார். இந்த நிலையில் இணையதளத்தில் சைதன்ய ராஜ் என்ற பெயரில் மணிகண்டன் சாய் என்பவர் அறிமுகமாகி கேரள பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் மணிகண்டன் சாய் தனது தாய்க்கு உடல் சரியில்லை என்று கூறியுள்ளார். இதனை நம்பிய கேரள பெண் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை சைதன்ய ராஜின் தாயார் மருத்துவ செலவிற்கு அனுப்பியுள்ளார். பின்னர் கேரள பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டன் சாயிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளார்.

    இதற்கு மணிகண்டன் சாய் மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதற்கு மணிகண்டன் சாய் தன்னிடம் பணம் கேட்டால் உனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டல் விடுத்து தொடர்பை துண்டித்துள்ளார்.

    இதையடுத்து கேரளா பெண் சென்னை சேத்துபட்டு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் பத்ம குமாரி தலைமையிலான போலீசார் மணிகண்டன் சாயை தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் தனது நண்பரின் அறையில் பதுங்கி இருந்த போது கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    மணிகண்டன் சாய் தெலுங்கானாவில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பி.டெக் பட்டதாரியான மணிகண்டன் சாய் பல்வேறு திருமண செயலியில் போலியான முகவரி கொடுத்து போலி கணக்கை தொடங்கி பணம் பறிக்கும் நோக்கில் 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பேசி வந்தது தெரியவந்தது. மணிகண்டன் சாய் பெண்களிடம் மோசடி செய்த பணத்தை வைத்து ஊர் ஊராக சுற்றித்திரிந்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வேறு ஏதாவது பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கிக் கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால்சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர்.
    • வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு தேடுபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் வேலைவாய்ப்பு உள்ளது போன்று அவர்களை நம்பவைத்து போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை அனுப்பி மோசடி செய்வது வழக்கமாக உள்ளது.

    இதை நம்பி படித்த இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.

    இதே போல் புதுவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி ரூ.30 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த ரியூபென், உகாண்டாவை சேர்ந்த நம்லேபுரோசி, பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேரை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான குழு கைது செய்தது.

    கைது செய்யப்பட்டவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த லால் சங்லிர் சோரி (வயது 24) என்பவரது வங்கிக்கணக்கு மூலம் பணத்தை பெற்றிருப்பது தெரியவந்தது. 9-ம் வகுப்பு வரையே படித்த அந்த வாலிபர் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் சமையல் வேலை செய்துவந்தார்.

    அவரது வங்கிக் கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால்சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர். மோசடி பணம் என்று தெரிந்தும் அதை அவர் செலவு செய்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து லால் சங்லிர் சோரியையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • மோசடி குறித்து பிரசன்னா குமார் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    சென்னை :

    கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசன்னா குமார் (வயது 33) வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் கடை மொத்த வியாபாரி. இவரது நண்பர் மூலம் கடந்த ஜனவரி மாதம் தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் 2-வது தெருவை சேர்ந்த சுஜாதா (40) ரிஸ்வான் (23) தாய், மகன் அறிமுகம் ஆகியுள்ளார்.

    தாய் மற்றும் மகன் ஆகியோர் பிரசன்னா குமாரிடம் குறும்படம் எடுத்து ஓ.டி.டி. தளங்களில் வெளியிட்டு நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி குறும்படம் எடுப்பதற்காக ரூ. 15 லட்சம் வாங்கியுள்ளனர். பின்னர் தாய், மகன் பணத்தை வாங்கிக் கொண்டு குறும்படத்தை எடுக்காமல் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு இருந்துள்ளனர்.

    இது பற்றி பிரசன்னா குமார் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற ஜாமினில் சுஜாதா விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகன் ரிஸ்வானை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×