search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallazhagar"

    • அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும்.
    • அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது.

    மதுரை சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பானது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை நேர்த்திக்கடனாக வைத்து பக்தர்கள் செய்வது வழக்கம்.

    இந்நிலையில், மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    மேலும், கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை அடிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
    • வைகையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

    மதுரை அருகே உள்ள அழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வாக, நாளை மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்காக இன்று மாலையில் அழகர் மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.

    பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலையில் மதுரை புதூர் மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுதினம் (23-ந்தேதி) காலை 5.51 மணியில் இருந்து 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையிலிருந்து ஆவலாய் புறப்பட்டு வரும் கள்ளழகர், தங்கையின் திருமணம் முடிந்ததால் ஆற்றில் நீராடிவிட்டு, தங்கையை காணாமலேயே திரும்புவதாக ஐதீகம்.

    இதேபோல், வைகைக் கரையில் தவம் செய்துகொண்டிருந்த மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக அழகர், மதுரைக்கு வந்து வைகையில் இறங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    அழகர் எந்த நிறத்தில் பட்டுப்புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்பு பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதி இருக்காது. மஞ்சள் பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். எனவே, அழகர் எந்த நிறத்தில் பட்டு உடுத்தி வரப்போகிறார்? என்பதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம்.

    • விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
    • இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த நாகராஜன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது.

    பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் திரவியம் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள், பெண்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என மனு செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த விழாவில் பாரம்பரியமாக கள்ளழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது என்பது நடந்து வருகிறது.

    தற்போது இது பெண்கள், குழந்தைகள் மீது ஒரு சில இளைஞர்கள் தவறுதலாக வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது போன்ற துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சட்டத்தின் கடமையாக உள்ளது.

    எனவே இனி இந்த விவகாரம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். பாரம்பரிய உடை அணிந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பவர்கள், மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களின் முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

    மேலும் கள்ளழகர் மலையிலிருந்து இறங்கி வரும் வழிகளில் எங்குமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க அனுமதிக்க கூடாது. ஆற்றில் இறங்கும் போது மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    எனவே இந்த விதிகளை முறையாக பின்பற்ற மதுரை மாவட்ட கலெக்டர் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு இந்த வருடத்திற்கு மட்டுமானது அல்ல. இனி எதிர்காலங்களில் இந்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • தேரை அலங்கரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    • கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது தேரோட்ட திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி தேருக்கு புதிய வண்ண அலங்கார திரைச்சீலைகள் இணைத்தல், தேரின் 4 சக்கரங்கள், குதிரைகள் உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதலுக்கு உரிய பிரேக் ஆகியவை புதுப்பித்து சரிபார்க்கும் பணிகள் மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில், கோவில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியும், பணியாளர்களின் பணிகளையும் பார்வையிட்டார் அப்போது கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • 2-ந்தேதி புஷ்ப சப்பரம் நடக்கிறது.
    • 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று காலையில் மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், வண்ணபூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.25 மணிக்கு ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தத்தால் விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

    இதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனை நடந்தது. அப்போது கொடிக்கம்பம் அருகில் நின்ற சுந்தரவல்லி கோவில் யானை துதிக்கையை தூக்கி ஆசிர்வதித்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதையடுத்து இன்று(செவ்வாய்கிழமை) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    26-ந்தேதி இரவு அனுமார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 28-ந் தேதி காலையில் 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளுகிறார். அன்று இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.

    29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலையில் 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் விழா நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

    • பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
    • கிடாய் வெட்டி வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகாலையில் இருந்து மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பதினெட்டாம்படி கருப்பணசாமி திருநிலைக் கதவுகளுக்கு நிலை உயர மாலைகளும், சந்தனமும், எலுமிச்சம் பழம், பரிவட்டங்கள், பக்தர்களால் சாத்தப்பட்டது. மேலும் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடந்தது. இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

    அழகர் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை ராக்காயி, அம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர். அழகர் மலை அடிவாரம் முதல் சோலைமலை முருகன் கோவில் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கோவில் கோட்டை சுவர் வெளி வளாகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்திருந்து நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • தேரோட்டம் ஆகஸ்டு 1-ந்தேதி நடக்கிறது.
    • 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.

    மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரம்மோற்சவ விழா தனி சிறப்புடையது. இந்த ஆடி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

    25-ந் தேதி காலையில் தங்கப்பல்லக்கு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந் தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந் தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந் தேதி காலை பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    மேலும் 29-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந் தேதி காலையில் சூர்ணோத்சவம், இரவு புஷ்ப சப்பரமும் நடைபெறும். 31-ந் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். பின்னர் காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் தேர் வடம் பிடித்தல், இரவு புஷ்ப பல்லக்கு, 2-ந் தேதி சப்தவர்ணம், புஷ்ப சப்பரம், 3-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். இத்துடன் ஆடி பெருந்திருவிழா முடிவடையும்.

    திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • வசந்த உற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று 10-ம் நாள் நிறைவு விழா நடந்தது. இதில் மேளதாளம் முழங்க தீவட்டி, வர்ணக்குடை, பரிவாரங்களுடன், சுந்தரவல்லி யானை முன்னே செல்ல, சகல பரிவாரங்களுடன் பல்லக்கில் புறப்பாடாகி, கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் அங்குள்ள ஆடி வீதிகள், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில், அக்ரஹாரம், வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அந்த மண்டபம் முழுவதும் வண்ண, வண்ண, பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி அதே பரிவாரங்களுடன் வந்த பாதை வழியாகவே சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார்.

    விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், செய்திருந்தனர்.

    • திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது.
    • இந்த விழா 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வைகாசி மாதம் வசந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) மாலை தொடங்குகிறது. தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்வு நடைபெறும், இதில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் சகல பரிவாரங்களுடன் புறப்பாடு நடைபெறும்.

    தொடர்ந்து விழா 4-ந் தேதி நிறைவு பெறுகிறது.. இந்த விழாவில் கள்ளழகர் பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி அங்குள்ள ஆடி வீதிகள், வழியாக, பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வழியாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • 5-ந்தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
    • நாளை அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது.

    மதுரை கள்ளழகர் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பிரசித்தி பெற்றது சித்திரை திருவிழா வாகும். இந்த திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து 3-ந்தேதி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு புறப்பட்டார். சுமார் 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி 4-ந்தேதி மதுரை வந்து சேர்ந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரளாக நின்று கள்ளழகரை தரிசித்தனர்.

    மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்று மாவடி, தல்லாகுளம் பகுதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் எதிர்சேவை நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ந்தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கள்ளழகரை தரிசித்தனர். தொடர்ந்து தீர்த்தவாரியும் நடந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், உற்சாக நடனமாடியும் பக்தர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    6-ந்தேதி காலை தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றது.

    மறுநாள் (7-ந்தேதி) கள்ளழகர் மோகினி அவதார கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அன்று இரவு 11 மணியளவில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கிருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோவிலில் விடைபெற்று அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர்களை தூவி உற்சாகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    மலைக்கு புறப்பட்ட கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி வழியாக நேற்று இரவு அப்பன் திருப்பதி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 11.10 மணியளவில் அழகர் இருப்பிடம் சென்றடைந்தார். அழகர் மலைகோட்டை வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அழகரை வரவேற்றனர்.

    இதையடுத்து நாளை (10-ந்தேதி) அழகருக்கு உற்சவ சாந்தி நடைபெறுகிறது. அத்துடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    • மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
    • நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 3-ந் தேதி தங்கப்பல்லக்கில் அழகர், மதுரைக்கு புறப்பட்டார். 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி மதுரை வந்த கள்ளழகரை மூன்றுமாவடி, தல்லாகுளத்தில் பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.கடந்த 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும், மறுநாள் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றன.

    நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளிய கள்ளழகரை, கோவிந்தா கோவிந்தா... எனும் கோஷம் முழங்கிட பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    அதை தொடர்ந்து கருப்பணசுவாமி கோவில் சன்னதியில் விடைபெற்று, அழகர் மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர் தூவியும், கண்ணீர் மல்க, மனமுருகி வணங்கி அவரை வழியனுப்பி வைத்தனர்.

    பின்னர் கள்ளழகர் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.32 மணிக்கு மேல் அழகர் மலைக்கு சென்றடைகிறார். அதனை தொடர்ந்து நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    • பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. அன்று முதல் 2 நாட்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

    அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி மாலை பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து அங்குள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதி முன்பு உத்தரவு பெற்று கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழி நெடுகிலும் உள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மறுநாள்(4-ந்தேதி) மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தார். அப்போது பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றடைந்தார்.

    மறுநாள் (5-ந்தேதி) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர் அதிகாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு விடிய விடிய திருவிழா நடந்தது.

    மறுநாள் (6-ந்தேதி) வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அங்கு திருமஞ்சனமாகி தங்க கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. கள்ளழகர் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று (7-ந்தேதி) மோகினி அலங்காரத்தில் பல்வேறு மண்டகப்படி களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.

    இன்று (8-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு அனந்தராயர் பூப்பல்லக்கில் கள்ளழகர் தமுக்கத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வையாழியாக உருமாறிய கள்ளழகர் அழகர் மலைக்கு புறப்படும் வைபவம் நடந்தது.

    தல்லாகுளம், அவுட்போஸ்ட் ஆகிய பகுதி களில் உள்ள ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் எழுந்தருளிய கள்ளழகர் காலை 6 மணிக்கு அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவிலிலும், 7 மணிக்கு அம்பலக்காரர் மண்டபத்திலும் எழுந்தருளினார்.

    இதையொட்டி ரேஸ்கோர்ஸ், புதூர், தாமரைதொட்டி, ரிசர்வ்லைன், டி.ஆர்.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். திரளான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." கோஷமிட்டு கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து கள்ளழகர் இரவு 7 மணியளவில் மூன்று மாவடி, கடச்சனேந்தல் வழியாக அப்பன் திருப்பதிக்கு இரவு சென்றடைகிறார். அங்கு இன்று இரவு விடிய, விடிய திருவிழா நடைபெறுகிறது.

    கடந்த 3-ந்தேதி கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதுரை சித்திரை திருவிழாவை முடித்துக் கொண்டு நாளை காலை 11 மணியளவில் தனது இருப்பிடம் சேருகிறார்.

    ×