search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அழகர் மலைக்கு பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்: கோவிந்தா... கோஷத்துடன் வழியனுப்பி வைத்த பக்தர்கள்
    X

    கள்ளழகரை பக்தர்கள் வழியனுப்பி வைத்த காட்சி.

    அழகர் மலைக்கு பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்: கோவிந்தா... கோஷத்துடன் வழியனுப்பி வைத்த பக்தர்கள்

    • பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. அன்று முதல் 2 நாட்கள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

    அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி மாலை பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து அங்குள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதி முன்பு உத்தரவு பெற்று கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.

    கள்ளந்திரி, அப்பன் திருப்பதி என வழி நெடுகிலும் உள்ள மண்டகப் படிகளில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மறுநாள்(4-ந்தேதி) மதுரை மூன்று மாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தார். அப்போது பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றடைந்தார்.

    மறுநாள் (5-ந்தேதி) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர் அதிகாலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு விடிய விடிய திருவிழா நடந்தது.

    மறுநாள் (6-ந்தேதி) வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். பின்னர் அங்கு திருமஞ்சனமாகி தங்க கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. கள்ளழகர் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று (7-ந்தேதி) மோகினி அலங்காரத்தில் பல்வேறு மண்டகப்படி களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தார்.

    இன்று (8-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு அனந்தராயர் பூப்பல்லக்கில் கள்ளழகர் தமுக்கத்தில் உள்ள கருப்பண்ணசாமி கோவிலில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் வையாழியாக உருமாறிய கள்ளழகர் அழகர் மலைக்கு புறப்படும் வைபவம் நடந்தது.

    தல்லாகுளம், அவுட்போஸ்ட் ஆகிய பகுதி களில் உள்ள ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் எழுந்தருளிய கள்ளழகர் காலை 6 மணிக்கு அவுட் போஸ்ட் மாரியம்மன் கோவிலிலும், 7 மணிக்கு அம்பலக்காரர் மண்டபத்திலும் எழுந்தருளினார்.

    இதையொட்டி ரேஸ்கோர்ஸ், புதூர், தாமரைதொட்டி, ரிசர்வ்லைன், டி.ஆர்.ஓ. காலனி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கள்ளழகருக்கு சக்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர். திரளான பக்தர்கள் "கோவிந்தா...கோவிந்தா..." கோஷமிட்டு கள்ளழகரை வழியனுப்பி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து கள்ளழகர் இரவு 7 மணியளவில் மூன்று மாவடி, கடச்சனேந்தல் வழியாக அப்பன் திருப்பதிக்கு இரவு சென்றடைகிறார். அங்கு இன்று இரவு விடிய, விடிய திருவிழா நடைபெறுகிறது.

    கடந்த 3-ந்தேதி கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் மதுரை சித்திரை திருவிழாவை முடித்துக் கொண்டு நாளை காலை 11 மணியளவில் தனது இருப்பிடம் சேருகிறார்.

    Next Story
    ×