search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப் பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்
    X

    கண்டாங்கி பட்டுடுத்தி தங்கப் பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர்

    • மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார்.
    • வைகையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

    மதுரை அருகே உள்ள அழகர் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வாக, நாளை மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்காக இன்று மாலையில் அழகர் மலையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டார்.

    பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு வையாழி ஆகி தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், வழியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மொத்தம் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலையில் மதுரை புதூர் மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுதினம் (23-ந்தேதி) காலை 5.51 மணியில் இருந்து 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அப்போது அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்வார்கள்.

    மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையிலிருந்து ஆவலாய் புறப்பட்டு வரும் கள்ளழகர், தங்கையின் திருமணம் முடிந்ததால் ஆற்றில் நீராடிவிட்டு, தங்கையை காணாமலேயே திரும்புவதாக ஐதீகம்.

    இதேபோல், வைகைக் கரையில் தவம் செய்துகொண்டிருந்த மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக அழகர், மதுரைக்கு வந்து வைகையில் இறங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    அழகர் எந்த நிறத்தில் பட்டுப்புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது, கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்பு பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதி இருக்காது. மஞ்சள் பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். எனவே, அழகர் எந்த நிறத்தில் பட்டு உடுத்தி வரப்போகிறார்? என்பதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம்.

    Next Story
    ×