search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "four arrested"

    கொழும்பில் இருந்து கோவைக்கு பயணிகள் மூலம் 1½ கிலோ தங்கம் கடத்திய விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். #CoimbatoreAirport
    கோவை:

    இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி இயக்கப்படுகிறது.

    இந்த விமானம் நேற்று கோவைக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த அபுதாகீர் என்ற பயணி தனது கைப்பையில் 16 கட்டிகளாக 1.6 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்து விமான நிலைய ஊழியர்களான மனோஜ், சதிஷ் ஆகியோரிடம் தங்கம் இருந்த பையை கொடுத்தார். அப்போது அங்கு இருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 55 லட்சம் ஆகும். பின்னர் 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதன்படி தங்கத்தை பெற விமான நிலையத்தின் முன்புறம் உள்ள கார் நிறுத்துமிடத்தில் காத்து இருந்த திருச்சியை சேர்ந்த ராஜா என்பவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதனையடுத்தி 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விமான நிலைய ஊழியர்களை அதிகாரிகள் சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால் அவர்கள் மூலம் தங்கம் கடத்தியது தெரிய வந்தது. இந்த கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்டு வரும் மிஸ்ரா என்பவரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள். #CoimbatoreAirport
    குஜராத்தில் போலீஸ் எழுத்து தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய பாஜகவினர் உள்பட 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #GujaratConstableRecruitmentExam #PaperLeak
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வை சுமார் 8.75 லட்சம் பேர் எழுதவிருந்தனர்.

    ஆனால், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினாத்தாள் வெளியானதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீஸ் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.



    இந்நிலையில், வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய 2 பாஜகவினரையும், அவர்களுக்கு உதவிய மேலும் 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாஜகவை சேர்ந்த மன்ஹர் படேல், முகேஷ் சவுத்ரி மற்றும் அவர்களுக்கு உதவிய ரூபால் ஷர்மா, வி.பி.படேல் ஆகியோரை கைது செய்துள்ளோம். இதில் தலைமறைவாகி உள்ள முக்கிய குற்றவாளியான யஷ்பால் சோலங்கி குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர். #GujaratConstableRecruitmentExam #PaperLeak
    அம்பத்தூர் அருகே தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 4 பேரை போலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த ஓரகடம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 27). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது தம்பி மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த போது எதிரில் வந்த அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவருக் கொருவர் தாக்கிக் கொண்டனர்.

    வீட்டிற்கு வந்த மணிகண்டன் தனது அண்ணன் மகேசிடம் தான் தாக்கப்பட்டது குறித்து கூறினார். இதையடுத்து மகேஷ் தனது தம்பியை அடித்து குறித்து பாலசந்தரிடம் தட்டிக்கேட்டார்.

    அப்போது பாலச்சந்தர் நண்பர்களை போன் செய்து வரவழைத்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் மகேசை கடுமையாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த மகேசை சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து பாலச்சந்தர் அவரது நண்பர்கள் சசி, சதீஷ், தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #puzalprison
    பள்ளிபாளையத்தில் 100 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். #FakeCurrency
    பள்ளிபாளையம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற ஒரு பெண்ணை நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட தனிப்படை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அந்த பெண் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிபுதூர் சின்னவீதியைச் சேர்ந்த பானு என்ற நாகூர் பானு (வயது 33) என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பள்ளிபாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ரமேஷ் (28) என்பவர் பள்ளிபாளையம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    திருச்செங்கோடு தாலுகா பாப்பம்பாளையத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் சுகுமார் (43) என்பவர் எனக்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ததற்காக ரூ.80 ஆயிரம் தராமல் நிறுத்தி வைத்திருந்தார். அதனை கேட்பதற்காக நான் சென்றேன். அப்போது அவர் வீட்டில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நான் பணத்தை கேட்டபோது அந்த கள்ளநோட்டில் இருந்து எடுத்து தர முயன்றார். அப்போது நான் கள்ளநோட்டு வேண்டாம் என்று கூறிவிட்டு வந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார்.

    இதையடுத்து போலீசார் பாப்பம்பாளையத்துக்கு விரைந்து சென்றனர். சுகுமார் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம், கம்ப்யூட்டர், ஸ்கேன் கருவி, 2,000 ரூபாய் கள்ளநோட்டு அச்சடிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாள் ஆகியவற்றையும் அங்கிருந்து போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

    இதையடுத்து பானு, சுகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கள்ளநோட்டு அச்சடிக்க உதவிய பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் பொன்னிநகரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் ரமேஷ் (31), கள்ளநோட்டுக்கு கம்ப்யூட்டரில் வடிவமைத்த பள்ளிபாளையம் ஆவாரங்காடு காந்திபுரம் முதல்தெருவைச் சேர்ந்த சக்தி என்ற சந்திரசேகரன் ஆகியோரையும் கைது செய்தனர். மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 4 பேரையும் திருச்செங்கோடு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  #FakeCurrency
    தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரன்(வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(46) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்றும் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகார்களின் பேரில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவிந்தராஜ் மற்றும் மணிகண்டன்(22), அருண்பாண்டியன்(21), கோவிந்தன்(28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்தமோதல் தொடர்பாக வி.ஆண்டிக்குப்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 19). இவரது நண்பர் அஜித்குமார்(18). இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் பண்ருட்டி சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    வரும் வழியில் ஒட்டுக்காட்டுஅம்மன் கோவில் அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த விஜயன் (42), அருண்குமார்(21) ஆகியோர் ஏன்? மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறீர்கள் என்று அவர்களை தட்டிக்கேட்டனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயன், அருண்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்த், அஜித்குமார் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்று தங்களது ஆதரவாளர்களிடம் கூறினர். இதைத் தொடர்ந்து அரவிந்துக்கு ஆதரவாக கருணாகரன்(25), சங்கர்(45) ஆகியோர் வந்தனர். பின்பு அரவிந்த் ஆதரவாளர்களுக்கும், விஜயன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இருதரப்பினரும் அடி-தடியில் ஈடுபட்டனர். சரமாரியாக கற்களை வீசிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அரவிந்த், அஜித்குமார், விஜயன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக பண்ருட்டி போலீசில் அரவிந்த் தரப்பிலும், விஜயன் தரப்பிலும் புகார் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், தாசில்தார் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த விஜயன், அருண்குமார், கருணாகரன், சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தமோதல் தொடர்பாக வி.ஆண்டிக்குப்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    கேரள மாநிலம் அட்டக்குளம் பகுதியில் வாகனச் சோதனையின்போது கேரளாவுக்கு கடத்திவரப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். #Drugsseized
    திருவனந்தபுரம்:

    கேரளாவிற்கு அடிக்கடி போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, கேரளாவின் மலையோர கிராமங்களான அட்டப்பாடி, இடுக்கி பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில், கஞ்சா கடத்தி வந்த கும்பல் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அட்டக்குளம் வழியாக ஒரு கும்பல் போதைபொருட்கள் கடத்தி வர இருக்கும் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தினர். இதற்காக நடந்த வாகனச் சோதனையின்போது அட்டக்குளம் பகுதியில் காரில் வந்த 4 பேர் சிக்கினர்.

    அவர்களிடம் சோதனை செய்தபோது 6.400 கிராம் எடையுள்ள ஹாஷிஷ் என்ற போதை பொருள் சிக்கியது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். கேரளா வழியாக இதனை மாலத்தீவிற்கு கடத்திச் செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த கும்பலில் இருந்த இடுக்கியைச் சேர்ந்த தங்கமணி, பினோய் தோமஸ், கோபி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்தவர்கள் யார்? யாருக்காக கடத்தி வரப்பட்டது? இவர்களுக்கு பின்னணியில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் உள்ளனரா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.  #Drugsseized

    தனது எதிர்ப்பையும் மீறி சென்னை துணை நடிகை கார் டிரைவரை திருமணம் செய்வேன் என்றதால், டிரைவரை நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டினார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உகார்தே நகரில் கடந்த 25-ந் தேதி கார் ஒன்று அனாதையாக நின்றுகொண்டிருந்தது. கொடைக்கானல் போலீசார் அந்த காரை திறந்துபார்த்தபோது, உள்ளே ரத்தம் உறைந்துகிடந்ததுடன் மிளகாய் பொடியும் தூவப்பட்டிருந்தது. விசாரணையில், அந்த காரின் உரிமையாளர் கொடைக்கானலை சேர்ந்த பிரபாகரன் (வயது 28) என்று தெரிந்தது.

    24-ந் தேதி இரவு வாடகைக்கு செல்வதாக கூறிச்சென்ற பிரபாகரன் பின்னர் வீடு திரும்பவில்லை. போலீசார் தீவிரமாக தேடியதில் சிட்டிடவர் என்ற இடத்தில் வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் பிரபாகரனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பிரபாகரனின் செல்போனுக்கு கடைசியாக 24-ந் தேதி இரவு தொடர்புகொண்டு பேசிய அவரது நண்பரான மற்றொரு கார் டிரைவர் செந்தில்குமார் (37) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பணத்துக்காக பிரபாகரனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். செந்தில்குமாரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலையில் தொடர்புடைய மணிகண்டன் (28), முகமது சல்மான் (20), அவரது தம்பி முகமது இர்பான் (18) ஆகியோரையும் கைது செய்தனர்.

    செந்தில்குமார் போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு-

    சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். அவருடைய மனைவி துணை நடிகை விஷ்ணுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுபிரியா நடிகர் சூர்யா நடித்த ‘மாயாவி’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார்.

    விஷ்ணுபிரியாவின் தந்தை சூரியநாராயணன் ஐதராபாத்தில் தொழில் அதிபராக உள்ளார். இவருக்கு கொடைக்கானலில் வீடு, நிலம் உள்ளது. ரமேஷ்கிருஷ்ணன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் கொடைக்கானலில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைத்துள்ளனர். அவரை பார்க்க விஷ்ணு பிரியா அடிக்கடி கொடைக்கானலுக்கு வந்துசெல்வார்.

    இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வரும் அவரை கொடைக்கானலுக்கு அழைத்துவருவதற்காக பிரபாகரன் காரில் செல்வார். அப்போது அவர்களுக்கிடையே தொடர்பு ஏற்பட்டு நெருங்கி பழகினர். பிரபாகரனுக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு பழக்கம் அதிகரித்தது. ரூ.15 லட்சம் வரை பிரபாகரனுக்கு அவர் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

    விஷ்ணுபிரியா மூலம் பிரபாகரன் வளர்ச்சி அடைவது எனக்கு பொறாமையாக இருந்தது. ஒரு மாதம் முன்பு விஷ்ணுபிரியா கொடைக்கானல் வந்தபோது, ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கினார்கள். அப்போது சூரியநாராயணன், விஷ்ணுபிரியாவுடன் செல்போனில் பேசினார்.

    அவர், கார் டிரைவர் பிரபாகரனை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தந்தையிடம் தெரிவித்தார். பிரபாகரனின் புகைப்படத்தையும் செல்போன் மூலம் தந்தைக்கு அனுப்பினார். இதற்கு சூரியநாராயணன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மகளை கண்டித்தார்.

    இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் விஷ்ணுபிரியா தனது செல்போனை வீசி எறிந்தார். அந்த செல்போன் செயல்பாட்டில் இருந்ததால் பிரபாகரனும், விஷ்ணுபிரியாவும் பேசியதை சூரியநாராயணன் கேட்டுக்கொண்டிருந்தார். 2 பேரும் ஓட்டல் அறையில் ஒன்றாக இருப்பதையும் தெரிந்துகொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சூரியநாராயணன், பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    விஷ்ணுபிரியா சென்னை திரும்பியதும், சூரியநாராயணன் என்னை தொடர்புகொண்டார். கொடைக்கானலில் அவர் கட்டிய வீட்டின் காண்டிராக்டருக்கு நான் டிரைவராக பணிபுரிந்தேன். அப்போதே சூரியநாராயணனை எனக்கு தெரியும். பிரபாகரனை கொலை செய்ய ரூ.3½ லட்சமும், 13 சென்ட் நிலமும் தருவதாக அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நான் மணிகண்டன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டேன். மணிகண்டனின் வங்கி கணக்கில் சூரியநாராயணன் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் செலுத்திவிட்டு, மீதியை பின்னர் தருவதாக கூறினார்.

    24-ந்தேதி பிரபாகரன் நான் கேட்டுக்கொண்டபடி குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதிக்கு வந்தார். நான், எனது கூட்டாளிகள் அனைவரும் பிரபாகரனுடன் சேர்ந்து மது குடித்தோம். குடிபோதையில் இருந்த பிரபாகரனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தோம்.

    பின்னர் உடலை காரில் ஏற்றி சிட்டிடவர் வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றோம். அவரது காரை உகார்தே நகரில் நிறுத்திவிட்டு போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க காருக்குள் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றோம்.

    இவ்வாறு அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சூரியநாராயணன் தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து பலியான நகை வியாபாரியிடம் தங்க கட்டிகளை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    திருச்சி சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 68). நகை வியாபாரியான இவர் திருச்சியில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்துள்ளார். இவர் வாரந்தோறும் வியாழக்கிழமை திருச்சியில் இருந்து ரெயிலில் சென்னை எழும்பூர் வருவார்.

    எழும்பூர் ரெயில் நிலைய வாகனம் நிறுத்துமிடத்தில் அவரது ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருக்கும். ரெயிலை விட்டு இறங்கியவுடன் தனது ஸ்கூட்டரில் ஏறி சவுகார்பேட்டைக்குச் செல்வார். தனது நகைப்பட்டறையில் செய்த தங்க நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வார்.

    அந்த நகைகளுக்கு பதிலாக தங்க கட்டிகளையோ அல்லது ரொக்கப்பணமாகவோ வாங்கிக் கொள்வார். வழக்கம்போல கடந்த மாதம் 24-ந் தேதி அன்று ரெங்கராஜன் சென்னை வந்தார். தான் கொண்டுவந்த நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடைகளுக்கு சப்ளை செய்தார்.

    25-ந் தேதி அன்று இரவு அவர் மீண்டும் திருச்சி புறப்பட்டார். எழும்பூரில் ரெயில் ஏறுவதற்காக தனது ஸ்கூட்டரில் சவுகார்பேட்டையில் இருந்து ரெங்கராஜன் வந்து கொண்டிருந்தார். அன்றைய தினம் இரவு 10.30 மணி அளவில் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே. சம்பத் சாலையில் வந்தார்.

    அப்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறும்போது, அவரது ஸ்கூட்டர் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. ரெங்கராஜனும் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே ரெங்கராஜன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்தநிலையில் ரெங்கராஜன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் வைத்திருந்த ½ கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சில மர்மநபர்கள் கொள்ளையடித்ததாகவும், அந்த மர்ம நபர்களை ரெங்கராஜன் விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் அல்லது தங்க கட்டிகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், ரெங்கராஜனின் உறவினர்கள் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

    கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் வேப்பேரி உதவி கமிஷனர் சார்லஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வீரக்குமார், சித்தார்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    ரெங்கராஜன் சவுகார்பேட்டையில் இருந்து புறப்பட்டபோது, அவருடன் மகேந்தர் என்ற வாலிபர் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். மகேந்தர் சவுகார்பேட்டை நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்தவர் ஆவார். சூளை பகுதியில் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கிவிட்டார்.

    அதன்பிறகு ரெங்கராஜன் மட்டும் தனியாக ஸ்கூட்டரில் வந்துள்ளார். சூளை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். வாலிபர் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கியபிறகு ரெங்கராஜனை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்துள்ளனர்.

    வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்சியிலும் அதே 4 பேரும் ரெங்கராஜன் வந்த ஸ்கூட்டரை பின்தொடர்ந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட 4 பேர் மீதும், வாலிபர் மகேந்தர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மகேந்தரை பிடித்து விசாரித்தார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்களை மகேந்தர் வெளியிட்டார்.

    ரெங்கராஜனை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கொள்ளை ஆசாமிகள் என்று தெரியவந்தது. வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் மகாவீர் காலனி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ஆசாமிகளும் ரெங்கராஜனை வழிமறித்து தாக்கி உள்ளனர்.

    அவர் வைத்திருந்த ½ கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை ரெங்கராஜன் தனது ஸ்கூட்டரில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் வேகத்தடையில் சிக்கி நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து ரெங்கராஜன் பலியாகியிருக்கிறார்.

    இந்த கொள்ளை திட்டத்திற்கு மூளையாக வாலிபர் மகேந்தர்தான் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. ரெங்கராஜன் தங்க கட்டிகள் கொண்டு செல்லும் தகவலை அவர்தான் கொள்ளை கும்பலுக்கு தெரிவித்துள்ளார். இதனால் முதலில் வாலிபர் மகேந்தரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்தவர். அவர் சொன்ன தகவலின்பேரில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மம்முட்டியான் என்ற ராஜ்குமார் (32), சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முகமது சித்திக் (28), ஆனந்த் (28) ஆகியோரையும் வேப்பேரி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் இம்ரான், நூரு, பீட்டர், ‘ஸ்பென்சர்’ ரகுமான் ஆகிய மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இம்ரான்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவர்தான் கொள்ளை திட்டத்தை வகுத்துக்கொடுத்து கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தங்க கட்டிகள் இம்ரானிடம் இருப்பதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த தங்க கட்டிகளை தன்னிடம் வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக ரொக்கப்பணமாக எங்களுக்கு கூலியாக கொடுத்தார் என்று இம்ரானை பற்றி கைதானவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் இம்ரான் உள்பட மேலும் 4 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டதையடுத்து உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியில் ஆயுர்வேத வெல் சென்டர் என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் இந்த மசாஜ் சென்டர் தொடங்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டாவை சேர்ந்த நவீன் (30) இதனை நடத்தி வந்தார். இங்கு ஊழியர்களாக கோட்டயத்தை சேர்ந்த சம்பத், திருச்சூர் ஜினேஷ், எர்ணாகுளம் ‌ஷனு ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் இங்கு விபசாரம் நடப்பதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசுக்கு புகார் வந்தது.

    இதை தொடர்ந்து டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இந்த மசாஜ் சென்டரை கண்காணித்தனர். அப்போது அங்கு விபசாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் நவீன், ஊழியர்கள் சம்பத், ஜினேஷ், ‌ஷனு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை மற்றும் பெங்களூரை சேர்ந்த 2 இளம்பெண்கள் அங்கு இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கோவை சங்கனூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், துப்பாக்கி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், துப்பாக்கி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை படத்தில் காணலாம்.


    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 7-ந் தேதி மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் பணம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

    மன்னார்குடி பகுதியில் துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ், மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் கொள்ளை நடந்த வங்கிக்கு மன்னார்்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இவர்களை தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோரும் வங்கிக்கு வந்து பார்வையிட்டு கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி தொடர்புடைய கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



    இந்த கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர். முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஒரு படையானது தூத்துக்குடிக்கு சென்று கார் டிரைவர் பரசிவம் மகன் முத்துக்குமார்(வயது 27), சுல்தான் மகன் மீரான் மைதீன்(29), மாடசாமி மகன் சுடலைமணி(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிவேல் ஆகியோர் மணப்பாறை சென்று மரியசெல்வம்(35) என்பவரை கைது செய்தனர். மரியசெல்வம் மணப்பாறை மெர்க்கன்டைல் வங்கி கடைநிலை ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். கைதானவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம், 2 துப்பாக்கி, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த தகவலை திருவாரூரில் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். 
    ×