search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel merchant"

    சென்னை வண்ணாரப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தது ஏன்? என கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
    பிராட்வே:

    சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ். வீட்டின் அருகே நகை கடை வைத்துள்ளார். சந்தோஷ், தனது வீட்டில் லாக்கரில் இருந்த தங்க நகைகள், வெள்ளி மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டதாக கொருக்குப்பேட்டை போலீசில் 7-ந் தேதி புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். சந்தோஷ் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

    மேலும் சந்தோஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் கொள்ளைபோனதால் அவருடைய வீட்டை பற்றி நன்கு தெரிந்த நபர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் (வயது 26), சந்தோஷிடம் வேலை பார்த்து வந்ததும், டிசம்பர் மாதம் அவரை வேலையில் இருந்து நிறுத்தியதும் தெரியவந்தது.

    அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா பகுதியில் சென்று கொண்டு இருப்பது தெரிந்தது. பின்னர் ஹன்ஸ்ராஜின் புகைப்படத்தை முகநூலில் இருந்து எடுத்த போலீசார், தென்மத்திய ரெயில்வே போலீஸ் கமாண்டர் ஜி.வி.குமாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் ஆந்திர போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்துக்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த ரெயிலில் உத்தரபிரதேசத்துக்கு தப்பிச்செல்ல முயன்ற ஹன்ஸ்ராஜ், அவருடைய தம்பி ஹரேந்திரசிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4½ கோடி மதிப்பிலான நகை, வெள்ளி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தனிப்படை போலீசார், விஜயவாடா சென்று கைதான 2 பேரையும் சென்னை அழைத்து வந்தனர்.

    நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தது ஏன்? என கைதான ஹன்ஸ்ராஜ் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-

    நான், 3½ ஆண்டுகளாக சந்தோஷ் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்தேன். அவர் 3 மாதத்துக்கு ஒரு முறை சம்பளத்தை மொத்தமாக கொடுப்பார். நான், மாதந்தோறும் சம்பளம் தரவேண்டும் என்று கேட்டதால் என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷிடம் எனது சம்பள பாக்கியை கேட்டேன். அவர் தர மறுத்து விட்டார். இதனால் நான், பெங்களூரு சென்று அங்கிருந்த எனது தம்பி ஹரேந்திரசிங்குடன் சேர்ந்து சந்தோசை பழிவாங்க திட்டம் தீட்டினேன். அதன்படி 6-ந்தேதி எனது தம்பியுடன் பெங்களூருவில் இருந்து சென்னை வந்தேன். அன்று இரவு எனது தம்பியுடன் சந்தோஷ் வீட்டுக்கு சென்றேன்.

    ஏற்கனவே பழக்கப்பட்ட இடம் என்பதால் சந்தோஷ் வீட்டின் சாவியை வைக்கும் இடத்தில் இருந்து எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றோம். பின்னர் அங்கு இருந்த 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி, ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றோம்.

    பின்னர் கோயம்பேட்டில் இருந்து வாடகை காரில் விழுப்புரம் சென்று, அங்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி உத்தரபிரதேசம் தப்பிச் செல்ல முயன்றோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது பற்றி அறிந்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த போலீஸ் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் கைதான கொள்ளையர்கள், மீட்கப்பட்ட தங்க நகை, வெள்ளி மற்றும் பணத்தை பார்வையிட்டனர். கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு, வெகுமதி வழங்கினர். அப்போது துணை கமிஷனர் ரவளிபிரியா கந்தபுனேனி உடன் இருந்தார்.

    கொருக்குப்பேட்டையில் நகை வியாபாரி வீட்டில் 11 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வாலிபர் ரெயிலில் தப்பிச்சென்றபோது ஆந்திராவில் பிடிபட்டார். #GoldRobbery
    பெரம்பூர்:

    கொருக்குப்பேட்டை உள்ளார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). சவுகார்பேட்டையில் நகை வியாபாரம் செய்து வரும் இவர் வீட்டின் அருகிலேயே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் வீட்டில் வேலை செய்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த அன்ஸ்ராஜ் (வயது 26) மற்றும் அவரது நண்பர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து இருவரையும் தேடியபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தில் ரெயிலில் செல்வது தெரியவந்தது.

    உடனே தனிப்படை போலீசார், ஆந்திர ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தபோது இருவரும் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி சென்ற நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தப்பிச்செல்வதை தெரிந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் விஜயவாடா ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரெயில் அங்கு வந்ததும் அதில் இருந்து இறங்கிய அன்ஸ்ராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ தங்கமும் 120 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அன்ஸ்ராஜுடன் இருந்த அவருடைய நண்பர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

    இதுபற்றி சென்னை கொருக்குப்பேட்டை போலீசாருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தனிப்படை போலீசார் அன்ஸ்ராஜை பிடிப்பதற்காக விஜயவாடா விரைந்துள்ளனர். அவரிடம் விசாரித்தால் தான் இந்த சம்பவம் பற்றி முழுமையான தகவல் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #GoldRobbery
    போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே வேகத்தடையில் தவறி விழுந்து நகை வியாபாரி பலியான வழக்கில் மேலும் 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    திருச்சியை சேர்ந்த நகை வியாபாரி ரங்கநாதன் கடந்த மாதம் 25-ந்தேதி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே வேகத்தடையில் சிக்கி பலியானார்.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 3 கொள்ளையர்களை விரட்டிச் சென்ற போது அவர் தவறி விழுந்து உயிரிழந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் வீரகுமார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்தார்.

    அப்போது ரங்கநாதனிடம் ½ கிலோ தங்கம், கொள்ளையடிக்கப்பட்டதும், இந்த நகையுடன் தப்பிச் சென்றவர்களை விரட்டியபோது தான் அவர் கீழே விழுந்து பலியானதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    இந்த வழிப்பறியில் 9 பேர் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. இது தொடர்பாக மகேந்திரன், ஆனந்த், முகமது, மம்முட்டியான் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நூர் முகமது, பீட்டர், முகமது ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான ஸ்பென்சர்குமார், இம்ரான் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் ஸ்பென்சர் குமாரிடம் தான் ½ கிலோ நகையும் இருப்பதாக கூறப்படுகிறது. 2 பேரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து பலியான நகை வியாபாரியிடம் தங்க கட்டிகளை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    திருச்சி சின்னக்கடை வீதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 68). நகை வியாபாரியான இவர் திருச்சியில் சொந்தமாக நகைப்பட்டறை வைத்துள்ளார். இவர் வாரந்தோறும் வியாழக்கிழமை திருச்சியில் இருந்து ரெயிலில் சென்னை எழும்பூர் வருவார்.

    எழும்பூர் ரெயில் நிலைய வாகனம் நிறுத்துமிடத்தில் அவரது ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருக்கும். ரெயிலை விட்டு இறங்கியவுடன் தனது ஸ்கூட்டரில் ஏறி சவுகார்பேட்டைக்குச் செல்வார். தனது நகைப்பட்டறையில் செய்த தங்க நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வார்.

    அந்த நகைகளுக்கு பதிலாக தங்க கட்டிகளையோ அல்லது ரொக்கப்பணமாகவோ வாங்கிக் கொள்வார். வழக்கம்போல கடந்த மாதம் 24-ந் தேதி அன்று ரெங்கராஜன் சென்னை வந்தார். தான் கொண்டுவந்த நகைகளை சவுகார்பேட்டையில் உள்ள நகைகடைகளுக்கு சப்ளை செய்தார்.

    25-ந் தேதி அன்று இரவு அவர் மீண்டும் திருச்சி புறப்பட்டார். எழும்பூரில் ரெயில் ஏறுவதற்காக தனது ஸ்கூட்டரில் சவுகார்பேட்டையில் இருந்து ரெங்கராஜன் வந்து கொண்டிருந்தார். அன்றைய தினம் இரவு 10.30 மணி அளவில் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே ஈ.வி.கே. சம்பத் சாலையில் வந்தார்.

    அப்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறும்போது, அவரது ஸ்கூட்டர் நிலை தடுமாறி கீழே சாய்ந்தது. ரெங்கராஜனும் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே ரெங்கராஜன் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்தநிலையில் ரெங்கராஜன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் வைத்திருந்த ½ கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சில மர்மநபர்கள் கொள்ளையடித்ததாகவும், அந்த மர்ம நபர்களை ரெங்கராஜன் விரட்டிச் சென்றபோது, கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்றும் அல்லது தங்க கட்டிகளை கொள்ளையடித்த மர்மநபர்கள் தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என்றும், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், ரெங்கராஜனின் உறவினர்கள் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

    கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் வேப்பேரி உதவி கமிஷனர் சார்லஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் வீரக்குமார், சித்தார்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    ரெங்கராஜன் சவுகார்பேட்டையில் இருந்து புறப்பட்டபோது, அவருடன் மகேந்தர் என்ற வாலிபர் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். மகேந்தர் சவுகார்பேட்டை நகைக்கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்தவர் ஆவார். சூளை பகுதியில் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கிவிட்டார்.

    அதன்பிறகு ரெங்கராஜன் மட்டும் தனியாக ஸ்கூட்டரில் வந்துள்ளார். சூளை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். வாலிபர் மகேந்தர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கியபிறகு ரெங்கராஜனை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்துள்ளனர்.

    வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்சியிலும் அதே 4 பேரும் ரெங்கராஜன் வந்த ஸ்கூட்டரை பின்தொடர்ந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் குறிப்பிட்ட 4 பேர் மீதும், வாலிபர் மகேந்தர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மகேந்தரை பிடித்து விசாரித்தார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்களை மகேந்தர் வெளியிட்டார்.

    ரெங்கராஜனை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேரும் கொள்ளை ஆசாமிகள் என்று தெரியவந்தது. வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் மகாவீர் காலனி அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 ஆசாமிகளும் ரெங்கராஜனை வழிமறித்து தாக்கி உள்ளனர்.

    அவர் வைத்திருந்த ½ கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை ரெங்கராஜன் தனது ஸ்கூட்டரில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போதுதான் வேகத்தடையில் சிக்கி நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து ரெங்கராஜன் பலியாகியிருக்கிறார்.

    இந்த கொள்ளை திட்டத்திற்கு மூளையாக வாலிபர் மகேந்தர்தான் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. ரெங்கராஜன் தங்க கட்டிகள் கொண்டு செல்லும் தகவலை அவர்தான் கொள்ளை கும்பலுக்கு தெரிவித்துள்ளார். இதனால் முதலில் வாலிபர் மகேந்தரை போலீசார் கைது செய்தனர். அவர் சென்னை விநாயகபுரத்தைச் சேர்ந்தவர். அவர் சொன்ன தகவலின்பேரில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மம்முட்டியான் என்ற ராஜ்குமார் (32), சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முகமது சித்திக் (28), ஆனந்த் (28) ஆகியோரையும் வேப்பேரி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் இம்ரான், நூரு, பீட்டர், ‘ஸ்பென்சர்’ ரகுமான் ஆகிய மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    இம்ரான்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவர்தான் கொள்ளை திட்டத்தை வகுத்துக்கொடுத்து கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட தங்க கட்டிகள் இம்ரானிடம் இருப்பதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொள்ளையடித்த தங்க கட்டிகளை தன்னிடம் வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக ரொக்கப்பணமாக எங்களுக்கு கூலியாக கொடுத்தார் என்று இம்ரானை பற்றி கைதானவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் இம்ரான் உள்பட மேலும் 4 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×