search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edapapdi Palaniswami"

    • விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
    • விஜயகாந்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அன்னாரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய பிரேமலதா விஜயகாந்த் , குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.

    • கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அ.தி.மு.க. நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்துக்கு செல்வதற்கும் வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. தான்.
    • அப்படிப்பட்ட கட்சியையும், அந்த கட்சி தொண்டர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதை எடப்பாடி கைவிட வேண்டும்.

    கோவை:

    கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து, ஓ.பி.எஸ். ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியதாவது:-

    நமக்குள் இருக்கிற பிரச்சினைகளை பேசி தீர்க்கவே நீதிமன்றம் சென்றுள்ளோம். நீதிமன்றத்தின் கருத்தை விமர்சிக்க தயாராக இல்லை. ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு மாறி மாறி தீர்ப்பு வழங்கி வருகிறது. தேர்தல் ஆணையம் சொல்வது தான் இறுதி தீர்ப்பு. தேர்தல் ஆணையம் சொல்லும் தீர்ப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது.

    இன்றைக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 4½ ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துவதற்கு 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஆதரவு அளித்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

    மேலும் சட்டமன்ற தேர்தலின் போது முதல்-அமைச்சர் வேட்பாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் உங்களை தேர்ந்தெடுத்தாரே அதற்கு நீங்கள் கொடுக்கும் நிலைப்பாடு என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும்.

    கட்சியை அழிக்க பார்க்காதீர்கள். உங்களுக்கு வாழ்வு கொடுத்த கட்சி அ.தி.மு.க. நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்துக்கு செல்வதற்கும் வாழ்வு கொடுத்தது அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட கட்சியையும், அந்த கட்சி தொண்டர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதை எடப்பாடி கைவிட வேண்டும்.

    அ.தி.மு.க.வில் 28 ஆண்டுகள் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தார். அவர் இருந்த இடத்தில் வேறு யாரும் இனி இருக்க கூடாது என்பதற்காகவே ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும்., இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    6 ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட்டுவிட்டு, இப்பொழுது திடீரென 2 மாதத்தில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறீர்களே இது நியாயம் தானா?

    ஜெயலலிதா அமர்ந்த பொதுச்செயலாளர் பதவியில் யாரும் அமரமாட்டோம் என்று சொல்லியதன் காரணமாகவே சசிகலாவை தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினோம்.

    அப்படிப்பட்ட செயல்பாடுகளை செய்து விட்டு, நீங்கள் ஜெயலலிதா இருந்த இடத்தில் அமர அடம்பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம். இது ஜெயலலிதாவுக்கு நீங்கள் செய்யும் துரோகம். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஓ.பி.எஸ்.பக்கம் தான் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    • அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    புதுடெல்லி:

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2018-ல் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார்.

    குறிப்பாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசி பாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தம், முதல்வரின் உறவினர் ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை-செங்கோட்டை -கொல்லம் நான்கு வழிச் சாலையை விரிவுப்படுத்தி, பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் 'வெங்கடாஜலபதி அண்ட் கோ' என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், சேகர்ரெட்டி, நாகராஜன், பி.சுப்பிரமணியம் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மூலம், ரூ.200 கோடி மதிப்பில், மதுரை ரிங் ரோடு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்-வாலாஜா சாலை வரையுள்ள 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற ரூ.200 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம், 'எஸ்பிகே அண்ட் கோ' என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களின் கீழ் வரும் சாலைகளில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் 'வெங்கடாஜலபதி அண்ட் கோ' நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட சுமார் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள், பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம், நாகராஜன், செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டு, பெரிய அளவில் முறைகேடு நடந்து உள்ளன.

    இதன்மூலம் முதல்-அமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத்துறையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆதாயம் அடைந்துள்ளார். பொது ஊழியர் என்ற முறையில், 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படி அவர் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த துறையும் அவரிடமே இருந்தது. எனவே, இது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கடந்த 2018 அக்டோபரில் அளித்த தீர்ப்பில், "முதல்-அமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. சமீபத்தில் எஸ்.பி.கே. நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    ×