search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bakrid festival"

    • ரூ.1 கோடி வரை ஏலம் போன செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது.
    • தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் செம்மறி ஆட்டுக்கு கொடுக்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர், அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது செம்மறி ஆட்டின் உடலில் 786 என்ற எண்கள் காணப்பட்டது தெரிய வந்தது. இந்த 786 என்ற எண்கள் இஸ்லாமிய மதத்தில் புனிதம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இதனால் அந்த செம்மறி ஆட்டை விற்பதற்கு ராஜூசிங் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    செம்மறி ஆட்டின் உடலில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என எனக்கு தெரியாது.

    இதுபற்றி இஸ்லாமிய சமூக உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்த போதுதான், அது 786 என்ற எண் என கூறினர். பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை அதிக விலை கொடுத்து வாங்க சிலர் முன்வந்தனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட கொடுத்தும் வாங்குவதற்கு முன்வந்தனர். ஆனால் அதனை விற்க நான் தயாராக இல்லை. ஏனென்றால் அந்த ஆடு என்னிடம் மிகவும் அன்பாக உள்ளது என்றார்.

    ரூ.1 கோடி வரை ஏலம் போன அந்த செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது. தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுக்கப்படுகிறது.

    • சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்.
    • விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

    இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள், சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

    சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என்ற நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும். இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாக கொண்டாடுகிற பக்ரீத் பண்டிகை, தியாகத்தை போற்றுகிற நாளாகும்.

    தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்கள்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    உலக முஸ்லிம்களில் பலர் ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்றி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    உலக முஸ்லிம்கள் கொண்டாடிடும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

    கொடுங்கோலன் நம் ரூத்தின் அடக்குமுறைகளைத் துணிவுடன் எதிர்கொண்டு வென்ற இறைத் தூதர் இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் ஆகியோரின் அரும்பெரும் தியாகத்தையும் இறைவனுக்கு அடிபணியும் ஒப்பற்ற தன்மையையும் நினைவு கொள்ளும் வகையில் தியாகத்திருநாள் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.

    இந்திய துணைக்கண்டத்தில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் அமைதியும் வளமும் சுதந்திரமும் உரிமைகளும் மேலோங்குவதற்கும் பிரார்த்தனை செய்வோம். அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணிராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், திருநாவுக்கரசர் எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது ஆகியோரும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
    • உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனையும் நடக்கிறது.

    இங்கு அண்டை மாவட்டங்களான தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கு வருவார்கள். வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகள், மாடுகளை வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கம். இதனையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது.

    இங்கு நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பண்டிகையையொட்டி இந்த ஆண்டு ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று காலை 6 மணி முதல் சந்தை தொடங்கியதில் இருந்தே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுமார் 3,500-க்கும் அதிகமான டோக்கன்கள் சந்தையில் வினியோகிக்கப்பட்டது. வெள்ளாடு, செம்மறி கிடா, மயிலம்பாடி, பொட்டுக்குட்டி, வேலி ஆடு, கொர ஆடு, பிள்ளை போர், கரும்போர் என பல்வேறு வகைகளை சேர்ந்த ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    குறைந்தபட்சம் ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. குறிப்பாக உசிலம்பட்டியில் இருந்து வந்த நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது. விலை சற்று அதிகமானாலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சுமார் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர்.
    • பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகையையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அரசு விடுமுறையாகும். இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன.

    பொதுவாக வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வெளியூர் பயணம் அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக நாளை (புதன்கிழமை) மாலையில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. அரசு விரைவு பஸ்கள் கூடுதலாக 100 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல விழுப்புரம், மதுரை, சேலம், கோவை போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர். அரசு பஸ்களில் வழக்கத்தைவிட நாளை (புதன்கிழமை) பயணம் செய்ய முன்பதிவு அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையை போல் முன்பதிவு கூடி உள்ளது.

    குறிப்பாக தென்மாவட்ட பஸ்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் 300-ஐ தாண்டியுள்ளது. தக்கல் முன்பதிவு காத்திருப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில் விடுமுறை தினத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வார நாட்களில் பொதுவாக குறைந்த அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

    மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் தென்காசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரித்துள்ளது.

    கூட்ட நெரிசலை குறைக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது.
    • ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.

    கொளத்தூர்:

    பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (29-ந்தேதி) கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    சென்னையில் புளியந்தோப்பு, ஆடு தொட்டி, ரெட்டேரி சந்தை, தாம்பரம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத்தையொட்டி ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் பக்ரீத் பண்டிகையையொட்டி கடந்த 24-ந்தேதியில் இருந்தே ஆடுகள் விற்பனை இந்த சந்தைகளில் சூடு பிடித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்காக வந்துள்ளன.

    இநத ஆடுகள் விற்பனை நாளை வரை நடைபெறுகிறது. இதுவரை ரூ.14 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருப்பதாக ஆடு வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ரெட்டேரி சந்தையில் மட்டும் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகி இருக்கிறது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளது.

    வெளி மாநிலங்களில் இருந்து ஆடுகளை கொண்டு வரும் போது இது போன்ற பண்டிகை நாட்களில் போலீசார் பண வசூலில் ஈடுபடுவது வாடிக்கையாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் இருந்து மாதவரம் பகுதிக்கு வருவதற்குள் போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    • ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும்.
    • திருப்பதி-காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் ஜூன் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (28-ந்தேதி) இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரெயில் (எண்:06052) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து 29-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரெயில் (எண்:06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    திருப்பதி-காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (எண்:07581/07660) ஜூன் 26-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில்கள் (எண்:16057, 06753) 29-ந்தேதி முதல் ஜூலை 2-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரெயில்கள் (எண்:16054, 06728) 29-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    மேலும் கோவை-திருப்பதி அதிவிரைவு ரெயில் (எண்:22616/22615) 29-ந்தேதியும் விழுப்புரம்- திருப்பதி விரைவு ரெயில் (எண்:16854/ 16853) ஜூன் நேற்று முதல் ஜூலை 2-ந்தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

    அதே தேதிகளில் இந்த ரெயில்கள் காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை, விழுப்புரத்துக்கு இயக்கப்படும். தாம்பரம், சாந்த்ராகாச்சி அந்தியோதயா விரைவு ரெயில் (எண்:22842), பெங்களூரு- ஹவுரா குளிர்சாதன அதிவிரைவு ரெயில் (எண்:22864) நாளை (புதன் கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர்.
    • சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது.

    நெல்லை:

    நெல்லை, மேலப்பாளையம் மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும்.

    இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவு வருவார்கள்.

    இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை களை கட்டியது. பக்ரீத் நெருங்கி வருவதால் வியாபாரிகளும், மாடு வாங்குபவர்களும் மாட்டுச்சந்தையில் கூடினர். ஏற்கனவே கடந்த வாரம் நடந்த மாட்டுச்சந்தையில் மாடு வாங்க முடியாதவர்கள் இந்த வாரம் மாடு வாங்க குவிந்தனர்.

    மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் மூரி வகையான காளை மாடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர். மேலும் சந்தையில் அனைத்து வகையான மாடுகளுக்கும் கிராக்கி நிலவியது. குறிப்பாக வழக்கமான நாட்களை விட இன்று ஒரு மாட்டின் விலை ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சாதரண நாட்களில் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் மாடுகள் இன்று ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனையானது. சந்தையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகின்றன.

    இதுகுறித்து மாட்டு உரிமையாளர்கள் கூறும்போது, 'மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு இன்று கிராக்கி நிலவியதால் வழக்கமான நாட்களை விட இன்று நல்ல லாபம் கிடைத்தது' என்றனர்.

    • வருகிற வியாழக்கிழமை அன்று பக்ரீத் திருநாள் வருவதையொட்டி இன்று சந்தையில் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது.
    • மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரில் சந்தைப்பேட்டை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை சந்தை நடைபெறும். இதில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    மேலூர்-திருச்சி மெயின்ரோட்டில் இந்த சந்தைப்பேட்டை அமைந்துள்ளதால் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. இதனால் இந்த சந்தையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். வருகிற வியாழக்கிழமை அன்று பக்ரீத் திருநாள் வருவதையொட்டி இன்று சந்தையில் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது.

    மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால் நேற்று நள்ளிரவு முதலே சந்தை பகுதி கூட்டமாக காணப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த ஆடுகள் சுமார் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுவரை விற்பனை செய்யப்பட்ட ஆடுகளில் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

    பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை ஜோராக நடந்ததுடன் ஆட்டுச்சந்தை களை கட்டியது.

    • கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
    • இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை 29-ந்தேதி முஸ்லிம் மக்களால் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.

    இன்று அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

    வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் விலை போகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு, 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

    குறைந்த பட்சம் ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக ஒரு ஆடு 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனது.

    இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கிராமப்பகுதிகளிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி சந்தையில் மிகவும் பிரசதிப் பெற்றது கருவாடு மற்றும் ஆட்டு சந்தை ஆகும்.

    சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மற்றும் புதுவை, பெங்களூரு போன்ற மாநிலங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று செஞ்சி வாரசந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களூரு மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

    அதற்கேற்றார் போல் கிராமப்பகுதிகளிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக ஆடுகள் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மேலும் தனி ஆடு அதிகபட்சமாக ரூ 20 ஆயிரம் வரை விலை போனது. இது விவசாயிகளுக்கு நல்ல விலையாகும். இந்த வார சந்தையில் மட்டும் சுமார் ரூ 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகி இருக்கலாம் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். அதன் படி இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த வாரம் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சி சந்தைக்கு அடுத்தப்படியாக பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாத புரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமங்கலம் ஆட்டுச்சந்தை தொடங்கியது. வழக்கத்தை விட இன்று வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். இதனால் சந்தை கடுமையான கூட்டத்துடன் காணப்பட்டது.

    இதனால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. வழக்கமாக ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் இன்று கடும் கிராக்கி இருந்ததால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின. 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்க்கும் ஆடுகளை தவிர்த்து இந்திய அளவில் நாட்டினம் குறும்பை கொங்கு ஆந்திரா கிடா, ராஜஸ்தான் கிடா உள்ளிட்ட கிடாக்கள் இந்த சந்தையில் பார்க்கலாம். சண்டைக்கு வளர்க்கும் குட்டிகள் இங்கு கிடைக்கும். இந்த சந்தையில் கடந்த வாரத்தை விட விலை அதிகமாக இருந்தாலும், ஆடுகளின் வரத்து அதிகமாக உள்ளது.

    மேலும் வியாபாரிகளும் அதிகளவில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். இன்று அதிகப்படியாக 90 ஆயிரம் ரூபாய்க்கு கிடாக்கள் வந்துள்ளது. இது 60 கிலோ கறி உள்ளதாகும். ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள சண்டை செய்யும் கிடாக்கள் விற்பனைக்கு உள்ளது.

    பக்ரீத்திற்கு இதுபோல கிடாக்கள் வாங்குவதில் எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. திருமங்கலம் சந்தையை பொறுத்தவரை திருப்தி அடைந்து தான் சென்றுள்ளனர். ஆடுகளின் விலை வழக்கத்தை விட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக உள்ளது. தற்போது ஆட்டுக்கறி விலை 800 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் சந்தையில் ஒரு கிலோ 1,200 ரூபாய் கறி அளவுக்கு மதிப்பு கூடுதலாக விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
    • பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

    பொள்ளாச்சி:

    தமிழகத்திலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாக பொள்ளாச்சி மாட்டுச்சந்தை உள்ளது.

    இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இங்கு பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து ஆடு மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள்.

    நேற்றும் வழக்கம் போல சந்தை கூடியது. வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

    ஆடுகளை வாங்குவதற்கும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையானது. ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது.

    இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

    ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால் வர்த்தகம் ரூ.1 கோடியை தாண்டியது என்றார்.

    ×