என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது.
- பிரதமர் மோடியின் உத்தரவாதம் தேர்தல் பொய்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஜால்பைகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-
பா.ஜனதா 200 இடத்தில் கூட வெற்றி பெறாது. வடக்கு பெங்காலுக்கு அவர்கள் செய்தது என்ன?. பிரதமர் மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகிவிடாதீர்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. தேர்தல் பொய். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நாட்டின் அரசமைப்பை பா.ஜனதா அழித்து விட்டது.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தோடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களில் கூட வெற்றி பெறாது எனக் கூறி வருகின்றனர்.
அதேவேளையில் தேர்தல் கருத்துக் கணிப்பில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது.
- ஒரு குடும்பத்தில் பெண் வேலையை பார்த்தால் அந்த குடும்பம் மட்டுமல்லது அந்த சந்ததியே நன்றாக இருக்கும்.
- வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் புதுக்கோட்டை பகுதிகளுக்கு உட்பட்ட கரூர், ஒக்கூர், குறுந்தலூர்,பெரம்பூர், இரும்பாநாடு, தீயத்தூர். பெருங்குளம், பொன்பேத்தி. வேல்வரை, தாழனூர், மதகம் உட்பட 29 கிராமங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் திரண்டு வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் வேட்பாளர் ஜெயபெருமாள் பேசுகையில், ஒரு குடும்பத்தில் பெண் வேலையை பார்த்தால் அந்த குடும்பம் மட்டுமல்லது அந்த சந்ததியே நன்றாக இருக்கும். அதன் அடிப்படையில் தான் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார் ஜெயலலிதா.
அதேபோல் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களின் குடும்பங்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் கொண்டு செல்லவும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து தாலுகாக்களிலும் இலவச தொழில் மையங்கள் அமைக்கப்பபடும்.
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்காமல் பெரிய தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற அவர்களுக்கு இலவச தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பேசினார். இதில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரம் முத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராஜநாயகம், அனைத்து உலகை எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆனி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
- ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார்.
சிவகாசி:
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களிடம் ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு அதிக உரிமை உள்ளது. வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பிரதானமாக உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும், அதில் மாணிக்கம் தாகூர் அமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது பட்டாசு பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலையை 150 நாட்களாகவும், சம்பளம் 400 ஆகவும் உயர்த்தி தரப்படும். தேர்தல் முடிந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை திட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் தான் செயல்படுகிறது. பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
அதனைப் போன்று ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்படும். அதற்காக பத்திரம் ஒன்று எழுதி உறுதி கொடுத்துள்ளார் என்றார். பிரசாரத்தில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கைச்சின்னத்தில் வாக்களித்து சமூக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- பாஜக தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது.
- பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சி அகற்றப்படும்.
திருச்சி:
திருச்சியில் இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. உப்பு சத்தியாகிரகத்தை பற்றி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை பற்றி மோடியும், அண்ணாமலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி அண்ணாமலை தான். கர்நாடக எம்.பி. தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திய போது அதற்கு அண்ணாமலை பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்?தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும். காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சி அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக கொண்ட சுமார் 10 ஆயிரம் பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
- தி.மு.க.வின் பேஸ்புக் பக்கத்தை 3 லட்சத்து 29 ஆயிரம் பேரும், டுவிட்டரை 16 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அதாவது இந்த வாக்காளர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள். அதிலும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
இந்த இளம் வாக்காளர்களின் வாக்குகளை மொத்தமாக பெற வேண்டும் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சிகள் இடையே தீவிர போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இளம் வாக்காளர்களில் சுமார் ஒரு கோடி பேரை வாக்களிக்க செய்து விடவேண்டும் என்பதில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக இருக்கிறது.
இதை கருத்தில் கொண்டு 4 கட்சிகளும் இளம் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களை கையில் எடுத்துள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக வலைதள பக்கங்கள் மூலம் இந்த இளைஞர்களை கட்சிகள் தினமும் ஏதாவது ஒரு வகையில் நெருங்கியபடி உள்ளன.
ஒரு கோடி இளம் வாக்காளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ப சமூக வலைதள பக்கங்களில் இந்த 4 கட்சிகளும் பதிவுகளை தினமும் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் மிக பிரமாண்டமான விளையாட்டு ஸ்டேடியம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதன் பின்னணியில் இளம் வாக்காளர்களை கவருவதற்கான வியூகம் இருப்பதாக தகவல் வெளியானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை பகுதியில் சுற்றுப்பயணம் செய்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கோவை இளைஞர்களுக்கு விளையாட்டு மீது அதிக ஆர்வம் இருப்பதால் நவீன ஸ்டேடியம் தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார். அந்த பதிவை கண்ட சில மணி நேரத்துக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதை பார்த்த அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும், பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையும் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இளம் வாக்காளர்களில் சுமார் 56 லட்சம் பேர் ஆண்கள், சுமார் 54 லட்சம் பேர் பெண்கள். இதையும் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் இளைஞர்களை கவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதில் முன்னணியில் இருப்பது தி.மு.க.தான். தி.மு.க.வில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் எளிமையான நடையில் தகவல்களை வெளியிடுகிறார்கள். அந்த ஒவ்வொரு தகவலும் திராவிட சித்தாந்தத்தை தாங்கி நிற்கும் வகையில் உள்ளன.
அதிலும் குறிப்பாக தி.மு.க. நடத்தும் "எல்லோரும் நம்முடன்" என்ற சமூக வலைதள பக்கம் பெரும்பாலான இளைய சமுதாயத்தினரை கவர்ந்துள்ளது. இந்த பக்கத்தை சுமார் 50 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர். அதாவது தினமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை ஸ்டாலினின் குரல் சென்று அடைகிறது.
இதில் தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக கொண்ட சுமார் 10 ஆயிரம் பதிவுகள் இடம் பெற்றுள்ளன. 71 ஆயிரத்து 500 பேர் இந்த பக்கத்தை பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல தி.மு.க.வின் பேஸ்புக் பக்கத்தை 3 லட்சத்து 29 ஆயிரம் பேரும், டுவிட்டரை 16 ஆயிரம் பேரும் பின் தொடர்கிறார்கள். தி.மு.க.வின் யூடியூப்பை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள். தி.மு.க.வின் இந்த சமூக வலைதள பக்கங்கள் அனைத்துமே இளைஞர்களை குறி வைத்தே தினசரி பதிவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்த சமூக வலைதள பக்கங்களில் ஆடியோ, வீடியோ வசதிகளும் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுவதால் தி.மு.க. சமூக வலைதள பக்கங்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இதனால் தி.முக..வின் டிஜிட்டல் மனசாட்சியாக இந்த சமூக வலைதள பக்கங்கள் கருதப்படுகின்றன.
- தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
- மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று.
தருமபுரி:
தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வாகன பிரசாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.
இந்தியாவிலேயே அன்புமணி ராமதாசை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 108 ஆம்புலன்ஸ் என்றால் உலகத்திலேயே இந்தியா அதற்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அன்புமணி ராமதாஸ் .
தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு ஏராளமான பொய் வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது. ரூ.1,000 மகளிருக்கு தருவதாகக் சொன்னார்கள். ஆனால், இந்த தொகை சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பலருக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை.
ஒருபுறம் உரிமைத் தொகை என்ற பெயரில் பணம் வழங்கும் இந்த அரசு மறுபுறம் மதுக்கடைகளை திறந்து அந்த பணத்தை பறித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
திட்டங்களையும், வாக்குறுதிகளையும் செயல் படுத்துவதில் தமிழக அரசு முதலிடம் பிடித்துள்ளது என விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த அரசு போதை பொருட்கள் புழக்கத்திலும், கஞ்சா விற்பனையிலும் முதலிடம் பிடித்த அரசாகத் திகழ்கிறது.
மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்த தேர்தலில் நீங்கள் தி.மு.க.வுக்கோ அ.தி.மு.க-வுக்கோ வாக்களிக்கக்கூடாது. அப்படி தவறுதலாக உங்கள் வாக்கை போட்டால் உங்களது வாக்கு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம். என்றார்.
பின்னர் வேட்பாளர் சவுமியா அன்புமணி உடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
- சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செந்தூரில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா கூட்டணியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அத்தை கனிமொழி எம்.பி.க்கு வாக்கு கேட்டு இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு உங்களது எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் முடிந்து 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெறபோவது இப்போதே தெரிகிறது.
இதே எழுச்சியோடும், உணர்வோடும் வருகிற 4 நாட்களும் நீங்கள் கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டும். வருகிற 19-ந் தேதி தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலாவததாக இடம் பெற்றுள்ள நமது வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தேர்தலில் மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். கடந்த தேர்தலின்போது 3.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை இருமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமைகளை ஒன்றிய அரசு முழுவதும் பறித்து விட்டது. அதனை மீண்டும் பெற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ரூ.100 கோடியில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.1000 கோடியில் பர்னிச்சர் பூங்கா, ரூ.29 கோடியில் அலுமினிய பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் மினி டைட்டல் பூங்கா பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனல் மின் நிலைய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி முயற்சியால் கொண்டு வரப்பட்டது.மேலும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி மருதூர் அணைக்கட்டு முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்படும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்தபடி ரூ.850 கோடி மதிப்பீட்டில் பெரு வளர்ச்சி திட்டம் அமல்படுத்தப்படும்.

திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த துறைக்கு நான்தான் அமைச்சர். எனவே நிச்சயமாக அந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவேன்.
2014-ம் ஆண்டு ரூ.400-க்கு விற்கப்பட்ட கியாஸ் சிலிண்டர் விலை இப்போது ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. ரூ.800-யை உயர்த்தி விட்டு தேர்தல் நேரத்தில் பெயர் அளவுக்கு ரூ.100-யை பிரதமர் மோடி குறைத்துள்ளார்.தற்போது சிலிண்டரின் விலையை குறைப்பதாக பா.ஜ.க. நாடகமாடி வருகிறது.
ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும்.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75-ம், டீசல் லிட்டருக்கு ரூ.65-ற்கும் விற்கப்படும்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். இதனால் நீங்கள் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை இனி செலுத்த தேவையில்லை. எனவே மாநில உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள். எனவே நீங்கள் தேர்தல் மூலம் மானமிகு சுயமரியாதை உள்ள ஒருவரை தேர்வு செய்ய இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இரக்கமற்ற சர்வாதிகாரி பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டாலும் அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கவுன்சிலிங் முறையில் மருத்துவப்படிப்பு சேர்க்கையை நடத்தினர்.இதன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை பெற்றனர்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்தது. இதனால் அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதீசன் வரை இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டு மக்கள் ஜி.எஸ்.டி.யில் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பி வழங்குகிறது. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
விடியல் பயணம் மூலம் தமிழகம் முழுவதும் இலவச பஸ்களில் பெண்கள் இதுவரை 460 கோடி முறை பயணம் செய்துள்ளனர். தூத்துக்குடியில் மட்டும் 6 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. மாநில முழுவதும் 3 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில் தூத்துக்குடியில் 3 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். இதேபோல் எதிர்கட்சிகள் நடக்கவே நடக்காது, செய்யவே முடியாது என்று கூறிய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடும் நிதி நெருக்கடியிலும் செயல்படுத்தி உள்ளோம். இத்திட்டத்திற்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 1 கோடியே 18 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த துறைக்கு நான்தான் அமைச்சர். நான் கூறுகிறேன் தேர்தல் முடிந்த பிறகு தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் 100 சதவீதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றாமல் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியவர் பிரதமர் மோடி. இதேபோல் கடும் வெள்ளப் பாதிப்பின் போது நெல்லை, தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்க ஒருமுறை கூட பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் உங்கள் தொகுதி எம்.பி. கனிமொழி 2 மாதங்கள் இங்கேயே தங்கி இருந்து வீட்டுக்கு வீடு நலத்திட்டங்கள் வழங்கி அவர்கள் சகஜ நிலைக்கு திரும்பும் வரை மக்களுடன் இருந்தார்.
முதல்-அமைச்சர் நெல்லை, தூத்துக்குடிக்கு 10 அமைச்சர்களை அனுப்பி நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார். நெல்லை, தூத்துக்குடிக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கிய ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. எனவே வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
கனிமொழி எம்.பி. தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
- தோல்வி பயம் தான் மோடியை இது போன்ற தவறுகளில் குதிக்க வைக்கிறது.
திருவனந்தபுரம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார். முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்திருக்கும் பதில் விவரம் வருமாறு:-
கேள்வி: தமிழகம் யாருடன் இருக்கும்?
பதில்: தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். ஒவ்வொரு நாளும் நான் பார்க்கும் மக்களின் முகங்களில் அந்த நம்பிக்கை தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மாநில அரசு செயல்படுத்திய திட்டங்கள் மக்களுக்கு தெரியும். எங்களுக்கு 2021-ல் இருந்ததை விட ஆதரவு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிரான மக்களின் கோபம் பல மடங்கு அதிகரித்துள்ளது.மோடி ஒரு நொறுங்கிய கட்டுக்கதை. தமிழகத்தில் கடந்த 2 சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை. தமிழ் மொழிக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்த பா.ஜ.க.வை வீழ்த்தவேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
கேள்வி: டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது பற்றி...
பதில்: தோல்வி பயம் தான் மோடியை இது போன்ற தவறுகளில் குதிக்க வைக்கிறது. 370-400 இடங்களில் வெற்றி பெறு வேன் என்று கூறும் ஒருவர், எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது ஏன்? வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி வலுப்பெற்றுள்ளது.
இந்த மாநிலங்களில் கெஜ்ரிவால் பிரசாரத்தை தொடங்கினால் எதிர்பார்த்த இடங்களை கூட வெல்ல முடியாது என்பது உறுதி. அவர் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், அவரது நற்பெயரை கெடுக்கவும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு கெஜ்ரிவாலின் புகழ் பல மடங்கு அதிகரித்தது.
கேள்வி: மோடியின் மாற்று யார்?
பதில்: இனி மோடி தேவையில்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்நிலையில் மோடியின் மாற்று யார் என்று மக்களின் வாக்குகள் மூலம் நிரூபிக்கப்படும். மக்களின் விரும்பப்படி மோடி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார். ஒரு தகுதியான நபர் ராஜ்ஜியத்தை ஆளுவார்.
கேள்வி: மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில்: மோடி வாக்காளர்களுக்கு பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கறுப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று வடமாநிலங்களில் பிரசாரம் செயதார். இந்த வாக்குறுதி பாரதிய ஜனதா பெரும்பான்மையை வெல்ல உதவியது. ஆட்சிக்கு வந்ததும் வங்கி கணக்கு தொடங்கச்சொல்லி அனைவரையும் ஏமாற்றினார்.
இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி மாநிலங்களில அமைதியான சூழலும் அழிக்கப்பட்டது. மோடி வெற்றி பெறுவது நாட்டுக்கு மட்டுமல்ல. பாரதிய ஜனதாவுக்கும் நல்லதல்ல.
கேள்வி: தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு இடையே சண்டையா?
பதில்: தமிழகத்தில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்துக்கு போராடும் அ.தி.மு.க. மிகவும் பின்தங்கியுள்ளது. மற்ற கட்சிகள் கனவுலகில் உள்ளன. தி.மு.க.வை எதிர்ப்பது மட்டுமே அ.தி.மு.க.வின் கொள்கை.
- மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
- அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நாகர்கோவில்:
தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரி அமித் ஷாவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அவர் நேற்று மதுரையில் ரோடு-ஷோ சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்பு அவர் அங்கிருந்து டெல்லிக்கு சென்றார். இந்நிலையில் மத்திய மந்திரி அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குமரி மாவட்டத்திற்கு வந்தார்.
அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இன்று காலை வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவிலுகு வந்து சேர்ந்தார். நாகர்கோவில் போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
அங்கு மத்திய மந்திரி அமித ஷாவை பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து மத்திய மந்திரி அமித் ஷா கார் மூலமாக தக்கலைக்கு புறப்பட்டார்.

தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுக்கடை வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் வாகனத்தில் ரோடு-ஷோ சென்றார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.
மத்திய மந்திரி ரோடு-ஷோ சென்ற பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் அமித் ஷாவை மலர் தூவி வர வேற்றனர். மேலும் தாமரை பூ சின்னத்தை காண்பித்து உற்சாகப்படுத்தினர்.
தக்கலையில் ரோடு-ஷோவை முடித்துக் கொண்டு மத்திய மந்திரி அமித்ஷா கார் மூலமாக மீண்டும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாகர்கோவிலில் இருந்து தக்கலை வரை சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் ரோடு-ஷோ நடந்த பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் நாகர்கோவில்-தக்கலை இடையே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. கனரக வாகனங்கள் அனைத்தும் தக்கலைக்கு செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்பட்டன.
- கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது.
- மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான சசி தரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்றும் 12 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது. வருகிற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவதே இறுதியாகும். இனி மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- பா.ஜெயபெருமாள் தொகுதி முழுவதும் பட்டிதொட்டியெங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
- எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்கள் என ஆரவாரத்துடன் ஓட்டு கேட்கிறார்கள்.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் தொகுதி முழுவதும் பட்டிதொட்டியெங்கும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று இவர் கடலாடி யூனியனில் பூக்குளம், மேல சிறுபோது, இளஞ்செம்பூர், குருவிகாத்தி, தேவர் குறிச்சி, பொதிகுளம், ஆப்பனூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளர் பா.ஜெயபெருமாளுடன் கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலெட்சுமி முனியசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் என்.கே.முனியசாமி பாண்டியன் தேர்தல் பொறுப்பாளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி.எம்.எஸ்.நிறைகுளத்தான், சாமிநாதன் ஆகியோர் கடலாடி யூனியனில் வீடு, வீடாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது மலேசியா எஸ்.பாண்டியா கூறுகையில், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கடலாடி யூனியனில் கிராமங்களில் வீடு வீடாக இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு செல்லும் இடங்களிலெல்லாம் வேட்பாளர் பா.ஜெயபெருமாளை ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுபோடுங்கள் என ஆரவாரத்துடன் ஓட்டு கேட்கிறார்கள். ஆகையால் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது என்றார்.
- பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை ரூ. 450 ஆக இருந்தது.
- மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கேஸ் விலையை ரூ.500 ஆக குறைக்கப்படும்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், ஹார்வி பட்டி, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை ரூ. 450 ஆக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.ஆயிரத்திற்கு மேல் சென்று விட்டது. தற்போது தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்தவர்கள், மீண்டும் வெற்றி பெற்றால் சமையல் கேஸ் விலையை ரூ.2000 ஆக உயர்த்தி விடுவார்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கேஸ் விலையை ரூ.500 ஆக குறைக்கப்படும். இது தவிர மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து செய்யப்படும். மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல ஏழைகளுக்கு ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு ஊரக வேலை உறுதித்திட்டம் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். மேலும் அதற்கான ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதே போல இளைஞர்களுக்கு மத்திய அரசில் 30 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும். எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் பிரதமராகும் வகையில் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், பகுதி செயலாளர் உசிலை சிவா, மண்டல தலைவர் சுவிதா, மண்டல தலைவர் கவிதா விமல், அணி அமைப்பாளர்கள் விமல், ஆலங்குளம் செல்வம், கீழக்குயில்குடி வி.ஆர். செல்வந்திரன், காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் எம்.பி.எஸ். பழனிக்குமார், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தென்பழஞ்சி சுரேஷ், கரு வேலம்பட்டி வெற்றி, சாமி வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






