என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.
    • 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார்.

    முன்னதாக அங்கு முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

    காலை 10.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்தார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

    அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடத்தை அடைந்தார். அங்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் உறுதி மொழி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கொடைவள்ளல் தந்த கழகத்தை, அரண்போல் காத்து நின்ற நம் அம்மாவின் வழி நடக்க உறுதி ஏற்கிறோம்.

    திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். கழகம் காப்போம். வெற்றிக்காக எத்தகைய தியாகத்தையும் செய்திடுவோம்.

    தமிழ்நாடு சிறக்க, தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம். 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று திக்கெட்டும் வெற்றியைப் படைத்திடுவோம். திசையெட்டும் வெற்றியை அடைந்திடுவோம்.

    அதற்காக, அயராது உழைப்போம். மீண்டும் கழக ஆட்சி அமைந்திட வெற்றிச் சங்கொலி முழங்குவோம். வீர சபதமேற்கிறோம். 2026-ல், கோட்டையிலே நமது வெற்றிக்கொடி பறக்கட்டும், கொள்கையிலே நமது முழக்கம் தொடரட்டும் என்று சூளுரைப்போம்.

    சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இந்திய அரசியல் வரலாற்றில், தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர். இந்திய அரசியல் வரலாற்றில், ஆளும் கட்சியை தொடர்ந்து 2-வது முறையாக, ஆளுகின்ற இயக்கமாக்கி நம் கழகத்திற்கு, பெருமையைத் தேடித் தந்தவர் அம்மா.

    ''எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்'' என்று சூளுரைத்த, நம் அன்புத் தாயின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையில் 2026-ல் நடைபெற உள்ள, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வகுத்த பாதையில், அம்மா கொள்கை வழியில் நின்று இரவு, பகல் பாராமல் அரும்பணியாற்றி, தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்தி மீண்டும் கழக ஆட்சியை அமைத்திடுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

    இந்த உறுதியை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், தம்பிதுரை, நத்தம் விசுவநாதன், பொன்னையன், செம்மலை, விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜு, ரமணா, பா.வளர்மதி, கோகுலஇந்திரா, வாலாஜா பாத் கணேசன், நடிகை கவுதமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், கே.பி.கந்தன், ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்தியா, வி.எஸ்.பாபு, அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோகர், இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர், பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், முன்னாள் மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் வக்கீல் ஆ.பழனி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், வடபழனி மின்சார சத்திய நாராயண மூர்த்தி, டாக்டர் சுனில், வழக்கறிஞர் சதாசிவம், வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி, ஏ.எம்.காமராஜ், ஷேக் அலி, குமரி சந்தோஷ், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, வேல் ஆதித்தன், ஆயிரம் விளக்கு டி.ஈஸ்வரன், சைதை சொ.கடும்பாடி, ராணி அண்ணாநகர் கோவிந்தன், பி.டி.சி.முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    • இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
    • நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதன்படி, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.14,961ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமான கட்டணம் ரூ.6,805-ல் இருந்து ரூ.34,403 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான கட்டணம் ரூ.5,980-ல் இருந்து ரூ.42,448 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமான கட்டணம் ரூ.7,746-ல் இருந்து ரூ.32,782 வரை உயர்ந்துள்ளது.

    • மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது.
    • பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது.

    சென்னை :

    திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம் என்று கூறியுள்ளார். 



    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.
    • தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை.

    சென்னை:

    மறைந்த ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * தனிக்கட்சியை தொடங்க இருப்பதாக நான் எங்கேயும் எந்த சூழலிலும் சொல்லவில்லை.

    * டெல்லிக்கு சென்று மரியாதை நிமித்தமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன்.

    * பிரிந்து இருப்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என நோக்கத்தில் தான் அமித்ஷாவை சந்தித்தேன்.

    * பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என அமித்ஷாவிடம் கூறினேன்.

    * மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.

    * தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை என்றார். 

    • அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றவர்.
    • ஜெயலலிதா மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.

    சென்னை:

    ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்று, மக்கள் இதயங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்கிறேன்.

    பெண்கள் முன்னேற்றம், தமிழக நலன், ஒன்றுபட்ட இந்தியா என்று பல வகைகளில் அவர் மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.
    • பிரதமர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.

    டெல்லியில் இன்று நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக நேற்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார். டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.

    டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார். தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் புதின் கலந்துக்கொண்டார்.

    இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கைகலுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், புதினுக்கு ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை புதின் ஏற்றுக்கொண்டார்.

    அங்கிருந்து புறப்பட்ட புதபின் ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது. தொடர்ந்து, மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்துகிறார்.

    பின்னர் நடைபெறும் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
    • கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் பேரில் இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் செல்ல வேண்டும் என்றும் கடந்த 3-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

    ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தீபம் ஏற்றாமல் திரும்பினர். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர். பின்னர் நேற்று மாலையில் தன்னுடைய உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வழக்கை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது மீண்டும் நேற்று மாலை 7 மணிக்குள் ராம ரவிக்குமார் குழுவினர் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும் என்றும் அது தொடர்பான நடவடிக்கையை இன்று காலை 10:30 மணி அளவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

    அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை.

    பின்னர் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நேற்று தீபம் ஏற்ற வலியுறுத்திய ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உள் நோக்கத்துடன் செயல்படுகிறது.

    எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்த வேண்டும் என்று வாதாடினார்கள்.

    பின்னர் அரசு தரப்பு வக்கீல்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் உள்ளிட்டோர் ஆஜராகி, பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது அதே இடத்தில் தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற கோருவது ஏற்புடையதல்ல.

    இது தொடர்பான வழக்கில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி முன்பு வாதாடினார்கள்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த காரணத்தால் இந்த வழக்கை வருகிற செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கிறேன். இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    அதேபோல கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய படை கமாண்டர் தங்களுக்கு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    திருப்பரங்குன்றம் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில், ஆவணம் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.

    • திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது.
    • திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

    திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இருஅவைகளும் கூடியதும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

    இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். 

    • காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிக்கிறது.
    • தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் முருகன் என்பவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    அதே தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்ற வழக்கறிஞர் நேற்று முன்நாள் காலை அவரது அலுவலகத்தில் அமர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு கும்பல் சரமாரியாக படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளது. திமுகவைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டு 3 நாள்களாகும் நிலையில் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பதைக் கூட காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக நிர்வாகி ஹரிஷ் என்பவர் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கொலைகள் எவ்வளவு மலிவானவையாகி விட்டன என்பதற்கு அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைகள் தான் சான்றாகும்.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள் காவல்துறையினர், சட்டத்தைப் பாதுகாத்து நீதியை நிலை நிறுத்த வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள். ஆனால், காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்குமே பாதுகாப்பற்ற நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். கொள்ளைகளும் பெருகி விட்டன. ஆனால், அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. ஊழல்களைத் தவிர வேறு எதிலும் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • தமிழகத்தின் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த குருக்கல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது என கருத்து.

    கார்த்திகை தீபத்தை தவிர்த்து பிற நாட்களில் தீபமேற்றுவது நல்லதல்ல என்றும், இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது எனவும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது விஷேடமான முறையில் அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், சொல்லப்பட்டிருக்கின்றது.

    அத்தகைய திருக்கார்த்திகையன்று திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது. மேலும் கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்திலோ அல்லது பௌர்ணமியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதர நாட்களில் செய்யப்படுவது விஷேடமாக சொல்லப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.
    • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா அன்று, மலையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

    உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவு நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக அதே நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய படை பாதுகாப்புடன் மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல யாருக்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் தனது உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரத்தை நேற்று மாலை மீண்டும் எடுத்தார். அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதிட்டார்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த ஐகோர்ட் மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. எனவே அதுவரை உரிய அவகாசம் வழங்க வேண்டும் என வாதாடினார்.

    அதற்கு நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க கோவில் செயல் அலுவலர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தேன். அவர் இப்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

    மேலும் நீதிபதி கூறுகையில், இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் உடனடியாக காணொலியில் ஆஜராக வேண்டும் என்றார்.

    அதன்படி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நீதிபதி முன்பு காணொலியில் ஆஜர் ஆனார்.

    அவரிடம் நீதிபதி, "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு போலீஸ் கமிஷனர், "திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். அந்த நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவை அனுப்பி இருந்தார். அதை அமல்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையிலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை" என்றார்.

    இதைக்கேட்ட நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும்.

    தீபம் ஏற்றிய பின்பு, கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் இன்று நேரில் ஆஜராகி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஐகோர்ட் மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவிட்டதும் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பரங்குன்றம் மலையில் இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவு நகலுடன் வக்கீல்கள், மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், போலீசார், மலைக்கான படிப்பாதையை குறுக்காக மறித்து போலீஸ் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்தினர். இரும்பு தடுப்புகளையும் ஏற்படுத்தினர். யாரையும் முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து 2-வது நாளாக நேற்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,

    நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை செயல்படுவதாக தெரிவித்த மனுதாரர், மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பது குறித்து CISF அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் நிர்வாணமாக வருவேன் என மேத்யூ ஹைடன் கூறியிருந்தார்.
    • நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை என ஹைடன் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது. ஜோரூட் 135 ரன்னுடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார்.

    ஆஷஸ் தொடருக்கு முன்னதாக ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார்.

    அந்த பதிவுக்கு ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் பதிவிட்டிருந்தார். இவர்களது இருவரின் பதிவும் இணையத்தில் வைரலாகியது.

    இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

    அதற்கு ஹேடனின் மகள், நன்றி ஜோ ரூட் "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     

    ×