என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
    • கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் பேரில் இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் செல்ல வேண்டும் என்றும் கடந்த 3-ம் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

    ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் தீபம் ஏற்றாமல் திரும்பினர். இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்தனர். பின்னர் நேற்று மாலையில் தன்னுடைய உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட வழக்கை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது மீண்டும் நேற்று மாலை 7 மணிக்குள் ராம ரவிக்குமார் குழுவினர் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும் என்றும் அது தொடர்பான நடவடிக்கையை இன்று காலை 10:30 மணி அளவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

    அப்போது மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை.

    பின்னர் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் நேற்று தீபம் ஏற்ற வலியுறுத்திய ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் உள் நோக்கத்துடன் செயல்படுகிறது.

    எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்த வேண்டும் என்று வாதாடினார்கள்.

    பின்னர் அரசு தரப்பு வக்கீல்கள் ரவீந்திரன், வீரா கதிரவன் உள்ளிட்டோர் ஆஜராகி, பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது அதே இடத்தில் தான் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற கோருவது ஏற்புடையதல்ல.

    இது தொடர்பான வழக்கில் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என நீதிபதி முன்பு வாதாடினார்கள்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த காரணத்தால் இந்த வழக்கை வருகிற செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கிறேன். இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    அதேபோல கடந்த 3-ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலையில் ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய படை கமாண்டர் தங்களுக்கு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    திருப்பரங்குன்றம் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழக அரசு முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில், ஆவணம் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூரியகாந்த் தெரிவித்துள்ளார்.

    • திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது.
    • திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

    திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இருஅவைகளும் கூடியதும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

    இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். 

    • காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிக்கிறது.
    • தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் முருகன் என்பவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    அதே தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்ற வழக்கறிஞர் நேற்று முன்நாள் காலை அவரது அலுவலகத்தில் அமர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு கும்பல் சரமாரியாக படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளது. திமுகவைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டு 3 நாள்களாகும் நிலையில் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பதைக் கூட காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக நிர்வாகி ஹரிஷ் என்பவர் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கொலைகள் எவ்வளவு மலிவானவையாகி விட்டன என்பதற்கு அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைகள் தான் சான்றாகும்.

    தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தி மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள் காவல்துறையினர், சட்டத்தைப் பாதுகாத்து நீதியை நிலை நிறுத்த வேண்டியவர்கள் வழக்கறிஞர்கள். ஆனால், காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்குமே பாதுகாப்பற்ற நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். கொள்ளைகளும் பெருகி விட்டன. ஆனால், அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. ஊழல்களைத் தவிர வேறு எதிலும் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. திமுக அரசு உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • தமிழகத்தின் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த குருக்கல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது என கருத்து.

    கார்த்திகை தீபத்தை தவிர்த்து பிற நாட்களில் தீபமேற்றுவது நல்லதல்ல என்றும், இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது எனவும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது விஷேடமான முறையில் அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், சொல்லப்பட்டிருக்கின்றது.

    அத்தகைய திருக்கார்த்திகையன்று திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது. மேலும் கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்திலோ அல்லது பௌர்ணமியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதர நாட்களில் செய்யப்படுவது விஷேடமாக சொல்லப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.
    • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா அன்று, மலையில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

    உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றப்படும் நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவு நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக உடனடியாக அதே நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மத்திய படை பாதுகாப்புடன் மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் இரவில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல யாருக்கும் போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

    நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் தனது உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்பது குறித்து விசாரிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த விவகாரத்தை நேற்று மாலை மீண்டும் எடுத்தார். அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி வாதிட்டார்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்த ஐகோர்ட் மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளது. எனவே அதுவரை உரிய அவகாசம் வழங்க வேண்டும் என வாதாடினார்.

    அதற்கு நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க கோவில் செயல் அலுவலர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தேன். அவர் இப்போது வரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

    மேலும் நீதிபதி கூறுகையில், இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் உடனடியாக காணொலியில் ஆஜராக வேண்டும் என்றார்.

    அதன்படி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நீதிபதி முன்பு காணொலியில் ஆஜர் ஆனார்.

    அவரிடம் நீதிபதி, "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரர் உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களை தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு போலீஸ் கமிஷனர், "திருப்பரங்குன்றம் மலையை சுற்றிலும் பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தோம். அந்த நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவை அனுப்பி இருந்தார். அதை அமல்படுத்தும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கும் வகையிலும் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை" என்றார்.

    இதைக்கேட்ட நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று (அதாவது நேற்று) இரவு 7 மணிக்குள் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் குழுவினரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய வசதிகளை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செய்து தர வேண்டும்.

    தீபம் ஏற்றிய பின்பு, கோர்ட்டின் உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் இன்று நேரில் ஆஜராகி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஐகோர்ட் மதுரைக்கிளை இவ்வாறு உத்தரவிட்டதும் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பரங்குன்றம் மலையில் இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு வந்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவு நகலுடன் வக்கீல்கள், மனுதாரர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், போலீசார், மலைக்கான படிப்பாதையை குறுக்காக மறித்து போலீஸ் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்தினர். இரும்பு தடுப்புகளையும் ஏற்படுத்தினர். யாரையும் முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து 2-வது நாளாக நேற்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதற்கிடையே ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,

    நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை செயல்படுவதாக தெரிவித்த மனுதாரர், மத்திய உள்துறை அமைச்சகத்தை இணைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மனு மீதான கோரிக்கையை விரிவாக்க வேண்டாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். என்ன நடந்தது என்பது குறித்து CISF அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • ஜோ ரூட் சதம் அடிக்கவில்லை என்றால் நிர்வாணமாக வருவேன் என மேத்யூ ஹைடன் கூறியிருந்தார்.
    • நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை என ஹைடன் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்தது. ஜோரூட் 135 ரன்னுடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை ஜோ ரூட் பதிவு செய்தார்.

    ஆஷஸ் தொடருக்கு முன்னதாக ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருந்தார்.

    அந்த பதிவுக்கு ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன், "தயவு செய்து இந்த முறை சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட்" என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் பதிவிட்டிருந்தார். இவர்களது இருவரின் பதிவும் இணையத்தில் வைரலாகியது.

    இந்நிலையில் சதம் அடித்து மானத்தை காப்பாற்றிய ரூட்-க்கு ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியாவில் நீங்கள் சதம் அடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சதம் அடிக்க நீண்ட நேரம் பிடித்துவிட்டது. நீங்கள் சதம் அடிக்கவில்லையெனில், என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிக ஆபத்து இல்லை. அதனால், மீண்டும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

    அதற்கு ஹேடனின் மகள், நன்றி ஜோ ரூட் "எங்கள் கண்கள் தப்பித்தது" என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     

    • திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
    • எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

    காஞ்சிபுரம்:

    அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கண்ணாடி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்தியாவில் செல்போன் உபரி பொருள்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.

    பாரத் இன்னோவேட்டிவ் கண்ணாடி டெக்னாலஜீஸ் நிறுவனம், கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்பிராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.

    இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் முன்-கவர் கண்ணாடி உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் நாட்டிலேயே முதன் முறையாக உயர் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.

    இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு அதே ஆண்டு ஜூன் மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி வைத்த 17 மாதங்களில் இத்திட்டத்தின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் வணிகம் புரிதலுக்கான சூழலமைப்பு சிறப்பு உள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

    * ஆயிரத்துக்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.

    * எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 41 சதவீதம் பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்.

    * எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

    * செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    * தொலைநோக்கு சிந்தனையுடன் கொள்கைகளை உருவாக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    * முதலீட்டாளர்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பை தந்து தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன் பரசன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அலர்மேல்மங்கை, கார்னிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் ஆன்ட்ரூ பெக், கரர்னிங் நிறுவனத் தின் சர்வதேச துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் கோகன் டோரான், ஆப்டிமஸ் இன் பிராகாம், நிறுவனத்தின் தலைவர் அசோக்குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், சுதிர் பிள்ளை, கார்னிங் நிறுவனத்தின் வணிக இயக்குனர் ஜோய் லீ, கார்னிங் கொரில்லா கண்ணாடி ஆசியா நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஜூம் எஸ்.கிம், பிக்டெக் நிறுவனத்தின் திட்டத் தலைவர் டாக்டர் ரவி கட்டாரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    • காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
    • உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலை நாட்டுகிறோம்.

    ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார்.

    இதில் காங்கோ, ருவாண்டா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ஒப்புக்கொண்டன.

    இதையடுத்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இந்த அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து காங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    இது ஆப்பிரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள், உலகிற்கு ஒரு சிறந்த நாள். இன்று, பலர் தோல்வியடைந்த இடத்தில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலை நாட்டுகிறோம்.

    இதுவரை யாரும் கண்டிராத அளவில் போர்களை நாங்கள் தீர்த்து வருகிறோம். இதுவரை 8 போர்களை தீர்த்துவிட்டேன். மேலும் இன்னொரு போரை தீர்க்க முயற்சி நடக்கிறது. அது ரஷியா- உக்ரைன் போர். அதனை நிறுத்த நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம்.

    கனிமங்களை வெட்டி எடுக்க மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களில் சிலவற்றை இரு நாடுகளுக்கும் அனுப்புவதில் நாங்கள் ஈடுபடுவோம். அனைவரும் நிறைய பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
    • இனிவரும் நாட்களில் ‘தலைவர் 173’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.

    இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது 'தலைவர் 173' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.



    படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அபயங்கர் தற்போத சூர்யாவின் 'கருப்பு', ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்', அல்லு அர்ஜூன் - அட்லீயின் கூட்டணியில் உருவாகி வரும் AA22XA6 மற்றும் கார்த்தியின் மார்ஷல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
    • ஜெயலலிதா அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவுத:-

    தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் இன்று.

    சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர்தம் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது.
    • சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. முதலில் தினமும் ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் உடனடி முன்பதிவு மூலமாக தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. இதனால் சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

    இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க, உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    இதனால் சபரிமலை, பம்பை மற்றும் மலைப்பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டபடியே இருந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரினத்துக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.

    ஐகோர்ட்டு அறிவுறுத்தலின் படி நெரிசல் எதுவும் இல்லாத நேரத்தில் உடனடி முன்பதிவு பக்தர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கூட்ட நெரிசல் எதுவும்இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் அதிக அளவிலான பக்தர்கள், முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்துக்கு சரியாக வருவதில்லை. பலர் தங்களின் பயணத்தை நிறுத்தியிருந்தாலும், பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்த நேரத்தில் வராமல் காலதாமதமாக வருகிறார்கள்.

    அவ்வாறு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்வற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், அது போன்று வரக்கூடிய பக்தர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் இருக்கக்கூடிய பக்தர்களில் பலர், வெளி மாநில பக்தர்கள் ஆவர்.

    அவர்கள் வரக்கூடிய ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது. இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய பக்தர்களை தேதி மற்றும் நேரத்தை பார்க்காமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்றும் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் ஏராளமானோர் சபரிமலைக்கு வரவில்லை. இதனால் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் இன்று காலை குறைவாகவே காணப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு 16,989 பக்தர்களே மலையேறிச் சென்றனர்.

    இதன் காரணமாக சன்னிதானம் அருகே பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்பு உள்ள நடைப்பந்தலில் இரண்டு வரிசையில் மட்டுமே பக்தர்கள் காத்து நின்றனர். சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர். இதனால் பதினெட்டாம் படியில் பக்தர்கள் வேகமாக ஏறிச் செல்லாமல், பொறுமையாக ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    • ரெப்போ வங்கி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    • வீடு, வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வங்கி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    வட்டி வகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் ஆக உள்ளது.

    வங்கிகளுக்கான ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்ட நிலையில் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×