என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.
    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை.

    * விஜயை கைது செய்ய வேண்டும், சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

    * கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    * கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    * விஜயை கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது.

    * பொறுப்புடன் வந்த முதலமைச்சருக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.

    * சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும்.

    * விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள்.

    * உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்து ஆடுகிறது என்றார். 

    • ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.
    • எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார்.

    தெற்கு ஆப்பிரிக்காவில் எசுவாத்தினி என்ற நாடு உள்ளது. பின்னர் இந்த நாடு சுவாசிலாந்து என்று அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.

    எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார். 1986 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 40 வருடங்களாக அந்நாட்டை அவர் ஆட்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், எசுவாத்தினி மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி தனி விமானத்தில் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கினார். அப்போது ன்னர் மூன்றாம் எம்ஸ்வதி அந்நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

    மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி உடன் அவரது 15 மனைவிகள் மற்றும் 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்கள் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது. 

    • பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது.
    • சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு

    தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.

    இதனிடையே கன்னட மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார்.

    இதனால் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 முடிவுக்கு வருகிறதா என்று கன்னட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
    • இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் களமிறங்கி, பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் அஜித் குமாரின் 'Ajith Kumar Racing Team' அணி, 2025 ஆம் ஆண்டிற்கான Creventic 24H European Endurance Championship தொடரில் ஒட்டுமொத்தமாக 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!

    இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!

    மென்மேலும் அவரது அணி பல வெற்றிகளை குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என கூறியுள்ளார். 


    • வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
    • இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.

    இந்தியாவில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வரிவிதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து வாகனங்கள் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. வரி விதிப்புக்கு ஏற்ப வாகனங்கள் விலையை உற்பத்தியாளர்கள் மாற்றியமைத்தது, வாகன விற்பனை விரைந்து அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இந்ந நிலையில் ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் தனது மெர்சிடிசஸ் வகை கார்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வரி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்னர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி இதுவரை 5,119 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையை காட்டிலும் 36 சதவீதம் அதிகமாகும்.

    • சென்னை ஒன் செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.
    • சென்னை ஒன் செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த செயலி பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது.

    இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் புறநகர் ரெயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச் சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும். இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    'சென்னை ஒன்' செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச் சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம்.

    இந்நிலையில் சென்னையில் மாநகர போக்குவரத்து பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறுவதுபோல, சென்னை ஒன் செயலியிலும் மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான பணிகளை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை ஒன் செயலி மூலமே மாதாந்திர பாஸ் பெறும் வசதியும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

    • டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
    • பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், 'டியூட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை இன்று மாலை 05.04 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. 

    • ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.
    • 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவியிட்டுள்ளதாவது:-

    2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

    கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.

    கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார். 



    • சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
    • ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலை ராணுவத்தின் போராளிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபகாலமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை குறிவைத்து தாக்கினர். கடந்த மார்ச் மாதம் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தி 400 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து பயணிகளை மீட்டனர்.

    இந்த நிலையில் இன்று ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் குவெட்டா நகருக்கு சென்று கொண்டிருந்தது. சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதியில் ரெயில் சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதனால் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். உடனே மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார்.
    • தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கவாய்-க்கு போன் செய்து இந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்து சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இதையடுத்து தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நீதிபதி மீது காலணி வீச முயன்றது தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், "செப்டம்பர் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அந்த வழக்கை கேலி செய்தார். நமது சனாதன தர்மம் தொடர்பான ஒரு வழக்கு வரும்போது, உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கிறது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றாலும் அவரையும் கேலி செய்யாதீர்கள்.

    இதனால் நான் காயப்பட்டேன்... நான் குடிபோதையில் இதை செய்யவில்லை. அவரது செயலுக்கு நான் எதிர்வினை ஆற்றினேன். இதற்காக நான் பயப்படவில்லை. நடந்ததற்கு வருத்தப்படவும் இல்லை

    இதற்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் தான் என்னை இதைச் செய்ய வைத்தார். அவர் விரும்பினால் நான் சிறைக்குச் செல்ல தயார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்றாலும் அது கடவுளின் விருப்பம் தான்" என்று தெரிவித்தார்

    முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

    அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார். 

    • நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
    • 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இருமல் மருந்து உட்கொண்டதில் 14 குழந்தைகள் பலியான நிலையில் நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

    இச்சம்பவத்தையடுத்து இருமல் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய 2 இருமல் மருந்துகளின் விற்பனையை மத்திய பிரதேச அரசு முழுமையாகத் தடை செய்துள்ளது.

    இந்த மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமான அளவு ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு விசாரணை கோரி குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விற்பனைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருமல், சளிக்கு இந்த நிறுவன மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இருமல் மருந்து பயன்படுத்தியதில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. நிர்வாகி உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு வருகிற வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

    ×