என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேர் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக பயணிப்பவர்கள், ஒருவழிப்பாதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாகன சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போதிலும் கடந்த 2 மாதங்களாக மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2½ மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து சந்திப்புகளில் ஸ்டாப் லைன் என்று அழைக்கப்படும் நிறுத்த கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேரும் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். 3 ஆயிரத்து 328 பேர் செல்போன் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டியதால் பிடிப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதாக 7 ஆயிரத்து 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 33 ஆயிரத்து 331 பேர் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்று விடுபட்டு இருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாமல் அவர்களை ஓட்டிச்சென்ற 2 ஆயிரத்து 26 1 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை போலீசார் வாகன சோதனை மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பிடித்து வருகிறார்கள்.

    இதன்படி சென்னை மாநகரில் தாமாகவே முன் வந்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 293 சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மூலமாகவும் வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் எந்த சந்திப்பாக இருந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை இயக்காவிட்டால் நிச்சயம் மாட்டிக் கொள்வது உறுதி. இதுபோன்ற அபராதங்களை தவிர்க்க வேண்டும் என்றால் விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வாகனங்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57).

    இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.

    அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, டவுன் உதவி கமிஷனர் அஜிகுமார் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து சென்றனர். அப்போது முகம் மற்றும் பின் தலை பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள தொட்டிப்பாலம் தெருவை அடுத்த பிரதான சாலையில் 36 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை முற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜாகீர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மேலும் முன்விரோதம் அதிகரித்த நிலையில், எதிர்தரப்பினர் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களினால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலிக்கு மனைவி, 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    கும்பலால் வெட்டிக்கொலை செய்யபட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது ஜாகீர் உசேன் பிஜிலியின் உறவினர்கள், இடப்பிரச்சனை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையை தவிர்த்திருக்கலாம் என்று வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் உறவினர்கள் அவரது உடலை எடுக்க சம்மதம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, ஜாகிர் உசேன் பிஜிலி கொலை தொடர்பாக அக்பர்ஷா, தவ்ஃபீக் ஆகிய இருவர் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

    நெல்லை மாநகரின் முக்கிய இடத்தில் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான கேடி கோல்மேன் பேட்டியளித்தார்.
    • பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள்.

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 நாள் பயணமாக விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.

    பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள். தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர் திரும்பி வருவதும் பல முறை தாமதமானது. இப்போது அவர் இறுதியாக இன்று அல்லது நாளைக்குள் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் திட்டமிடப்பட்டதை விட அதிக நாட்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ்க்கு நாசா எவ்வளவு பணம் கொடுக்கும் என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் வழங்கியுள்ளார்.

    நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான கேடி கோல்மேன் கூறுகையில்,  விண்வெளி வீரர்கள் அமெரிக்க அரசு ஊழியர்கள் என்பதால், அவர்கள் விண்வெளியில் செலவிடும் நேரம் எந்தவொரு சாதாரண வேலையையும் போலவே கருதப்படுகிறது. அவர்கள் வழக்கமான ஊதியத்தைப் பெறுகிறார்கள். கூடுதலாக, விண்வெளி நிலையத்தில் அவர்களின் உணவு மற்றும் தங்குமிட செலவுகளை நாசா ஏற்கிறது.

     

    விண்வெளி வீரர்கள் பெறும் ஒரே கூடுதல் இழப்பீடு, தற்செயலான செலவுகளுக்கான ஒரு சிறிய தினசரி கொடுப்பனவு மட்டுமே. இது ஒரு நாளைக்கு வெறும் 4 டாலர் தான் என்று கூறினார். அதாவது ஒரு நாளைக்குத் தோராயமாக 347 ரூபாய்.

    2010-11 ஆம் ஆண்டில் கேடி கோல்மேன் 159 நாள் விண்வெளிப் பயணத்திற்குச் சென்றபோது, அவருக்கு மொத்தம் 636 டாலர், அதாவது அவரது சம்பளத்தைத் தவிர தோராயமாக ரூ.55,000 கூடுதலாகப் கிடைத்தது.

    இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் விண்வெளியில் 285 நாட்களுக்கு மேல் செலவிட்டுள்ளனர். இதன்படி, சம்பளத்தைத் தவிர, அவருக்கு 1,100 டாலர்கள் மட்டுமே, அதாவது தோராயமாக 1 லட்சம் ரூபாய் கூடுதல் தொகையாகக் கிடைக்கும்.   

    அதன்படி, 9 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த  இருவருக்கும் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை (93 ஆயிரத்து 850 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 4 அமெரிக்க டாலர் வரை) வளநாகமான சம்பளம் கிடைக்கும்.

    கூடுதல் ஊக்கத்தொகையையும் சேர்த்து, அவர்களுக்கு கிடைக்கும் மொத்த சம்பளம் ரூ.82 லட்சம் முதல் ரூ.1.06 கோடி வரை (94 ஆயிரத்து 998 அமெரிக்க டாலர் முதல் 1 லட்சத்து 23 ஆயிரத்து 152 அமெரிக்க டாலர் வரை) இருக்கும் என தெரிய வந்துள்ளது. 

    • மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

    நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. கேப்டன் சல்மான் ஆஹா 28 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். ஜேக்கப் டபி, பென் சீயர்ஸ், நீசம், சோதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள், ஆலன் 16 பந்தில் 38 ரன்களை அடித்தனர்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    • வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம்.
    • வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் 6-வது நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் பூஜ்ய நேரத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

    தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக புதுவை, காரைக்காலில் செயல்படும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகை களில் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கடுத்து தான் பிறமொழி வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும்.

    பல மாநிலங்களில் அவர்கள் சார்ந்த தாய் மொழி எழுத்துக்களில்தான் வணிக நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர், தமிழ் பயன்படுத்த வேண்டும் என்றும், பிற மொழிகளுக்கான அளவு 5:3:2 என இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கடைகளில் வைக்கப்படும் பெயர் பலகையில், தமிழ் மொழி பெரிய அளவிலும், ஆங்கிலம் மொழி சிறிய அளவிலும் இருத்தல் வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்த விதியை பெரும்பாலான கடைகள் பின்பற்றுவதில்லை. இந்த விதியை பின்பற்றாத கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ் கவிஞர்கள் மற்றும் பெரும்புலவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருகிறது. பிற மொழிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழ் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும், எழுத வேண்டும்.

    வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும். அது நமது உணர்வு. இதைப்போல் அரசு விழா அழைப்பிதழ்களையும் தமிழில்தான் அச்சடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல சிவாஜி மறு அவதாரம் எடுத்துள்ளார்
    • பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி முந்தைய பிறவியில் புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று என்று பாஜக எம்.பி. பிரதீப் புரோகித் மக்களவையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய பிரதீப் புரோகித், "பிரதமர் மோடி அவரது முந்தைய பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று ஒரு துறவி என்னிடம் கூறினார். பிரதமர் மோடி உண்மையிலேயே சத்ரபதி சிவாஜி தான் என்றும், மகாராஷ்டிராவையும் நாட்டையும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல அவர் மறு அவதாரம் எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.

    பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜியை அவமதித்து விட்டார் என்று பாஜக எம்.பி.க்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
    • ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.

    சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.

    ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

    பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.

    இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.

    இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-

    எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.

    • வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
    • காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதில், வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.

    நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச்செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும். ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கிடையே கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைபிடிக்கவில்லை.

    காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நடைபயிற்சி செல்லும் போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும் போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதாவது, உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, வாய்மூடி அணிவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும். பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளில் அபராதம் குறித்து தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
    • ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

    இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22-ந்தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக்குழுவினர் 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    • அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி தனது நண்பர்களுக்கு விற்கிறது.
    • அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

    நாட்டின் உயிர்நாடியான ரெயில்வே துறை 'வென்டிலேட்டரில்' இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ரெயில்வே துறையை தங்களின் நண்பர்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், 'வந்தே பாரத்' ரெயிலைக் காட்டி ரெயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது.

    ரெயில்வே நாட்டின் உயிர்நாடி. இந்த உயிர்நாடி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ளது. இந்தப் பணியை இந்த அரசு செய்துள்ளது.

    ரெயில்வே நிதி நிலை குறித்து மிகுந்த கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது "நண்பர்களுக்கு" விற்று வருகிறது. வரும் நாட்களில் ரெயில்வேயும் நண்பர்களின் கைகளுக்குச் செல்லுமா?. அப்படி ஏதாவது சதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்த அவர், மற்ற நேரங்களில் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விபத்து நடக்கும்போது, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

    விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவாச்' பாதுகாப்பு அமைப்பை, பயணிகளின் பாதுகாப்பை விட, தனது பிம்பப்பத்தை பாதுகாத்துக்கொள்ள அமைச்சர் அதை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சித்தார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளா செல்ல அதிகளவில் மக்கள் நடைமேடையில் காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.

    அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
    • மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகரில் ஆட்டோக்களில் இப்போது யாருமே மீட்டர் போடுவது கிடையாது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால், தோராயமாக ஒரு தொகை கேட்பார்கள். பயணிகள் அப்போது பேரம் பேசுவார்கள். இதில் உத்தேசமாக ஒரு தொகையை கேட்டு அதன் பிறகுதான் பயணம் செய்ய முடியும்.

    இதுதான் இன்றைய யதார்த்தம். ஓலா, ஊபர், ராபிட்டோ, ஆட்டோ, கார்களில் அந்த அளவுக்கு பேரம் பேசுவதில்லை. ஒரு சிலர் தான் கூடுதலாக 20 ரூபாய் 50 ரூபாய் கேட்பது இப்போது தொடர் கதையாகி வருகிறது.

    இது பற்றி ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்கிறார்கள். தவறு எங்கள் மீது கிடையாது. அரசு மீதுதான் என்று கூறுகின்றனர். இப்போது ஆட்டோ சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்து உள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    இன்றைய காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசு கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.

    2013-ம் ஆண்டுதான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கி.மீ.க்கு ரூ.12 என்றும் உயர்த்தி நிர்ணயித்தது அன்றைய அரசாங்கம். இப்போது விலைவாசி பல மடங்கு ஏறி விட்டது. அன்றைக்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது.

    எனவே ஆட்டோ கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று நிர்ணயிக்குமாறு கேட்டு உள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் தாருங்கள் என்கிறோம். அரசு இதில் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.

    எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.

    எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணாசாலை, தாராபூர் டவர் சாலை, தாராபூர் டவர் ஆகிய இடங்களில் நாளை காலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறோம். இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.
    • இதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவீதமாக உள்ளது.

    தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மாநில உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது.

    கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29% இடஒதுக்கீடும் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் 23% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் 2 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 42% இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்திக்க வேண்டும். பிரதமரின் சந்திப்பதற்கு மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்களை உதவி செய்ய வேண்டும்

    இந்த மசோதாக்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசவுள்ளேன்.

    சாதிவாரி மக்கள்தொகை குறித்த தகவல்கள் இல்லாததால், இடஒதுக்கீடு 50 சதவீத வரம்பை தாண்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது, இதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவீதமாக உள்ளது.

    நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதை உறுதி செய்வது தெலுங்கானா சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாகும்" என்று தெரிவித்தார்.

    ×