என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
- பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம்.
- அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய்,
"தமிழ்நாட்டில் மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம். அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர்." என தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர்,
"விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். 3 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின், கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்னவென்று தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார்.
அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?" என்று தெரிவித்துள்ளார்.
- ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது.
- உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே எடுத்துக்காட்டு
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
"வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.
தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" புத்தகத்தின் வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் போராடியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே
எழுதிய "விதியின் நான்கு நட்சத்திரங்கள்" (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.
ஒரு புத்தகத்தின் ஐந்து வரிகளுக்கு முன்னால் மோடி அரசின் கதறல் நாடே எதிரொலிக்கும் படி கேட்கிறது. உண்மைகள் அதிகாரத்தை எவ்வளவு கதறவைக்கும் என்பதற்கு இன்றைய நாளே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார்.
- முதல்வரை எழுப்பி எந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்கு என்றுதான் கூறுவார்.
- தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களால் உடனடியாக பொய்சொல்ல முடியாது.
த.வெ.க. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்து, 3-வது ஆண்டு தொடங்கிய நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அபோது திமுக மற்றும் அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுக மற்றும் அதன் கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து பேசுகையில் "2 ஆண்டுகளுக்கு முன்பு, முதல்-அமைச்சர், கட்சி நிர்வாகிகள் நடவடிக்கையால் தூக்கம் வரவில்லை என்று கூறினார்.
என்றைக்காவது ஒருநாள் நன்றாக தூங்கினார் என்றால், அவரை எழுப்பி எந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்கு என்றுதான் கூறுவார். (Stalin would ask the people to vote for 'whistle' (TVK election symbol) when he was asked in the midst of his deep slumbe). தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களால் உடனடியாக பொய்சொல்ல முடியாது.
அப்படி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களில்தான் த.வெ.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை என்று கூறுகிறார்கள். விசில் சின்னம் ஊதாத ஊரே இல்லை. இங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது" என்றார்.
இதற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கிண்டல் அடிக்கும் தொனியில் பதில் அளித்துள்ளார்.
டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பதிலில் "விஜயால்தான் ஜிடிபி-யில் தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது. விஜயால்தான் எல்லோரும் கல்வி பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு மக்களுக்காக அவர் ஏராளமாக செய்திருக்கிறார். விஜய் நிம்மதியாக தூங்கும்போது, மக்களிடம் த.வெ.க.வுக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் கேட்பார் என நினைக்கிறார். என்னவொரு யோசனை" எனக் கிண்டல் அடிக்கும் வகையில் கூறியுள்ளார்.
- எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை சந்தித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்
- கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார் கமலேஷ்.
- மகள் எக்ஷிதா ஏஞ்சல் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியில் வசித்தவர் கமலேஷ் (வயது 48). இவர் கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களது மகள் எக்ஷிதா ஏஞ்சல் (10). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கமலேஷின் மனைவி இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை என தெரிகிறது. இதனால் கமலேஷும், அவரது மனைவியும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் கமலேஷ் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
இதற்கிடையே கமலேஷ் உயிர்மாய்ப்பு தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் உடல்நல பாதிப்பு சரியாகததால் குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்ததாக வீடியோவில் பேசி உள்ளார். பின்னர் வீடியோவை அந்த பகுதியில் உள்ள ஒருநபருக்கு அனுப்பி இருக்கிறார்.
இரவு வெகுநேரத்துக்கு பிறகு வீடியோ அனுப்பியதால் அந்த நபர் உடனடியாக வீடியோவை பார்க்கவில்லை. இன்று அதிகாலை தான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் கமலேசும், அவரது மனைவி மற்றும் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் நோய் பாதிப்பு காரணமாகதான் அவர்கள் இறந்தார்களா அல்லது எதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ் மொழி நம் மூச்சு, நம் உயிர், நம் அடையாளம்.
- மொழியினை பற்றி பெருமை கொள்ளாது தமிழ்நாட்டில் வாழ்வது தமிழுக்கு இழுக்கு.
3500 ஆண்டுகள் பழமையான என் தமிழ் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாகத்தான், மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சீர்மிகு சட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம் மற்றும் ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் மூன்றாவது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரை போட்டி சென்னை தரமணியில் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.
மாணவர்களின் தமிழ் வழக்காடு திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் பெரும்பாலும் தமிழில் நடைபெற்று வருவதை மையமாக கொண்டு நடத்தப்பட்ட வழக்குரை போட்டியின் இறுதிச்சுற்று, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடந்தது.
இறுதிச்சுற்று போட்டிக்கு பிறகு நடந்த நிறைவு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன், ராகேஷ் சட்ட அறக்கட்டளை தலைவரும், நாடாளுமன்ற திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மாதிரி வழக்காடு மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே. பாலாஜி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் கௌரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உரையாற்றியதாவது:-
மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகாச்சிறந்தவையாக குண்டூசி, சக்கரம், மின்சாரம், மொழி ஆகியவை. முதலிடத்தில் உள்ள மொழி என்பது தனி மனிதன் கண்டுபிடித்தது இல்லை. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த மாபெரும் கண்டுபிடிப்பு.
உலகம் முழுவதும் உள்ள 6000 மொழிகளில், மொழிகளுக்கான எழுத்தகளை கொண்டவை 200ஐ கூட தாண்டவில்லை. அவற்றில் 120 - 130 மொழிகளுக்கு சொந்த எழுத்து கிடையாது. அதிலும், 1000 ஆண்டுகளை கடந்த மொழிகள் 10 மட்டுமே இருக்கும். அப்படி ஆயிரம் ஆண்டுகளை தாண்டாத அங்கலத்தை பேசி பெருமைபடுத்துகிறோம். 2000 ஆண்டுகளை கடந்தவை கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி.
இதில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 4 மொழிகள் பேச்சு வழக்கில் இல்லை. சமஸ்கிருதம் என்பது மனிதன் கடவுளிடம் பேசும் ஒரு மொழி. அதாவது சாமியும் சாமியும் பேசிக்கொள்ளும் அந்த மொழி நடைமுறையில் பேச்சு வழக்கில் இல்லை. பேச்சு வழக்கில் 2000 ஆண்டுகளை கடந்து இருப்பவை சீன மொழி, தமிழ் மொழி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் கீழடி அகழாய்வில் 3500 ஆண்டுகளை தாண்டி நிற்கின்ற ஒரே மொழி தமிழ் தான் என நிரூபணமாகியுள்ளது. ஒரு மொழியில் இலக்கணம் உரைநடையில் இருக்கும். ஆனால் தமிழில் மட்டுமே இலக்கணமும் கவிதை வடிவில் இருக்கும். மரத்தை சகோதரியாக பார்த்தது தமிழ் இலக்கணம், ஆனால் இப்போது மனிதர்கள் மரமாக செல்கிறார்கள்.
உலகத்தின் எல்லா மூலைமூடுக்குகளிலும் மதம், சாதி, இனம் ஆகியவற்றின் பெயரால் பதற்றம் நிறைந்த சூழலை மனிதன் செயற்கையாக உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில் நாம் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
திருக்குறளில் எந்த அரசனையும் தூக்கிப்பிடிக்கவில்லை, இறைவனை உயர்த்திப் பிடிக்கவில்லை, எந்த மதத்துக்கும் சார்பாக இல்லாமல் எந்த சமய சாயத்தையும் தான் மீது பூசிக்கொள்ளாமல் அகில உலக மாந்தர் குலத்தின் செழுமைமிக்க பாடப்பட்ட பொதுமுறை நூல் திருக்குறள்.
அதில் ஒவ்வொரு அறக்ககூற்றையும் நுட்பமாக சொல்ல முடிந்தது என்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழனின் வளர்ச்சியை மனதில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். இந்த மொழியை பேசுவதும் பாதுகாப்பதும் நாம் அனைவரின் கடமை.
மகனுடம் பராசக்தி படத்துக்கு போனேன். படத்தை பார்த்த பிறகு மொழி போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது தெரியுமா என கேட்டேன். தெரியாது என்றபோது ரொம்ப அவமானப்பட்டேன். அதை சொல்லிக்கொடுக்காமல் என் கடமையிலிருந்து தவறியதாக என்னை கருதிக்கொண்டேன். அது நாம் அனைவருக்கும் கட்டாயம் தெரிய வேண்டும். ஏனென்றால் எங்கள் பள்ளிபருவத்தில் போராட்டத்தின் அதிர்வுகள் இருந்தது.
அப்போதெல்லாம், பள்ளிகளில் இரண்டாவது மொழி தமிழ் என்பது இயல்பு, திரைப்படங்களில் கூட தமிழ் வசனங்கள் தெறிக்கும், "கொங்குதேர் வாழ்க்கை" என்ற குறுந்தொகை பாடலை நான் கற்றேன், அதற்கான சந்தர்ப்பம் இருந்தது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் "ஊமைப் பெண்ணல்லவோ" பாடலில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துக்களையும், வல்லின, மெல்லின, இடையினத்தை திரைப்பாடல்கள் மூலம் கற்றுக்கொடுத்தன.
கம்யூனிசம் உள்ளிட்ட சித்தாந்தங்களை அறிந்தக்கொள்ள "மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் " தமிழ்ப்பாடல்கள் உதவின.
காலங்கள் மாறின காட்சிகள் மாறின. மதிப்பெண்கள் எடுப்பது முக்கியம் என காலகட்டம் வந்தபோது, தமிழ் படித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இந்தி, பிரெஞ்ச், சமஸ்கிருதம் என மாறினார்கள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இன்று தெரிகிறது.
மொழியில் முக்கியம் மதிப்பெண் எடுப்பதில்லை, மொழி நம் மூச்சு, நம் உயிர், நம் அடையாளம். மதிப்பெண் முக்கியமாக போனதால் பள்ளிப்பாடத்திட்டத்தில் வேறு சில மொழிகள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதனால் மாணவர்களின் exposure குறைந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். அதனால் தமிழ் எல்லாவற்றிலும் ஓரடி பின்னே வைத்துள்ளது
இதற்காக நாம் அடுத்த வேள்வி நடத்த வேண்டிய முக்கிய காலகட்டம் இது. மொழியினை பற்றி பெருமை கொள்ளாது தமிழ்நாட்டில் வாழ்வது தமிழுக்கு இழுக்கு. ஆங்கிலம் தெரியாமல் தமிழ்நாட்டை தாண்ட முடியாது என எங்கள் எல்லவோருக்கும் தெரியும்.
தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை மாறாக விரும்பி படிக்கிறான். என் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாக, மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்கமாட்டேன்.
நான் தமிழன் என தலைநிமிர்ந்து சொல். மொழிக்கு ஒரு இழுக்கு வரும்போது உன் குரல் உயர வேண்டும். எந்த கட்டத்திலும் இந்த தமிழ் மொழியின் அருமையை தூக்கிப்பிடிப்பது நம் கடமை என்பதை மறவாதீர்கள்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
- ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அப்போது மாணவர் புஷ்பராஜ் என்பவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை இணைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து முழு சோதனைக்குப் பிறகே மற்ற மாணவர்கள் மேடையேற அனுமதிக்கப்பட்டனர்.
கடந்தாண்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது.
- கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரது இந்த ரத யாத்திரை நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வந்தது.
தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
சென்னை கோட்டை முதல் கன்னியாகுமரி வரை நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சி இன்று கொட்டாரம் சந்திப்பில் நிறைவு பெற்றுஉள்ளது. இனி நமது கட்சிக்கு எல்லாம் நல்லதாக நடக்கும். படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம், கன்னியாகுமரி. இங்கு தான் குமரி கண்டம் இருந்தது. அதேபோல தமிழ் மொழி பிறந்ததும் இந்த குமரி கண்டத்தில்தான்.
ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது. 2026-ல் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். கூட்டணி குறித்து சென்னையில் பிப்ரவரி 3-ந் தேதி (நாளை) அறிவிப்பேன். கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலம் ஆகும். தே.மு.தி.க. இடம் பெறும் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த சுற்றுலா தளம் மேம்படுத்தப்படும்.
தோவாளை மலர் சந்தையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும். மயிலாடியில் கல் சிற்ப பூங்கா அமைக்கப்படும். சுசீந்திரத்தில் தடுப்பணை கட்டப்படும்." என அவர் தெரிவித்தார்.
- மத்திய அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமில்லை.
- டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை தந்து ஏமாற்றுகிறது பாஜக அரசு
பாஜகவிற்கு சித்தாந்த ரீதியாக சிம்ம சொப்பனமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழர்கள் மீது பாஜக கொண்டுள்ள வன்மம் தீராது என்பதை இந்த ஒன்றிய பட்ஜெட் நிரூபித்து விட்டது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறார்கள்!
எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்
ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்!
வழக்கமாக ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமே இல்லை. பாஜகவிற்குச் சித்தாந்த ரீதியில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழர்கள் மீது பாஜக கொண்டிருக்கும் வன்மம் ஒருபோதும் தீராது என்பதை மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நிரூபித்துவிட்டது.
தமிழ்நாடு என்கிற பெயரே இல்லாத பட்ஜெட்டை கடந்த காலங்களில் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த முறைப் பெயருக்காவது தமிழ்நாடு என்ற வார்த்தையைச் சேர்த்துவிடுவது என்று குறியாக இருந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுவும் பெயரளவு அறிவிப்புகள்தான். தமிழ்நாட்டிற்கென பிரத்தியேகமான சிறப்புத் திட்டங்கள் எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
கடந்த காலத்தில் பீகார் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அள்ளி வழங்கியது ஒன்றிய பாஜக அரசு. குறிப்பாக 'பீகார் பட்ஜெட்டா!' என சொல்லும் அளவிற்கு, வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 11 ஆயிரம் கோடி, மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க 26 ஆயிரம் கோடி, பெகல்பூர் மின் நிலைய திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி எனச் சுமார் 70 ஆயிரம் கோடிக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. ஆனால், இப்போதும் தமிழ்நாட்டை வழக்கம் போலவே புறக்கணித்திருக்கிறார்கள்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது, 50 சதவிகித வரிப் பகிர்வு கேட்டுப் போராடினார். அவர் பிரதமர் ஆன பிறகு அதனைச் செயல்படுத்த மறுக்கிறார்.
விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான சமக்ரா சிக்ஷா நிதி 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி போன்றவற்றை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பும் இடம்பெறவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்திருக்கும் திருப்பூர் ,கோவை தொழிற்துறையை மீட்பதற்கு ஆக்கப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நாட்டின் பொருளாதாரத்திற்கு 9 விழுக்காடு பங்களிப்பைச் செய்யும் தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு வெறும் 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்குச் சுமார் ரூ. 5,000 கோடி நிதி இழப்பு ஏற்படும்.
பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றிய அரசின் அறிவிப்பா? ஆட்சியைத் தாங்கி பிடிக்கும் பீகாருக்கும் ஆந்திராவுக்கு வாரிக் கொடுப்பார்கள். ஆட்சி அமைக்கக் கூடிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், தேர்தல் நடக்கும் காலத்தில்கூட அள்ளிக் கொடுக்க மனம் இல்லாமல் டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் தொழில் வழித்தடம், தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா, மதுரையிலிருந்து கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை, சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என சொல்வார்களா?
பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையில் இருக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. அதன் விளைவு என்ன தெரியுமா? பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் பலனே இல்லை என்பதைப் பங்குச் சந்தையே பறைசாற்றிவிட்டது.
தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்த பட்ஜெட்டை வெட்கமேயில்லாமல் வரவேற்று அறிக்கைவிடுகிறார் அடிமை பழனிசாமி. சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமல் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நிதி அமைச்சருக்கு வாழ்த்துகள் என்று அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி.
அதிமுகவோ பாஜகவோ எத்தனை முகமூடிகளை அணிந்து வந்தாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல இனி எப்போதும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் ஒன்றிய பட்ஜெட்டில்கூட தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றும் செய்யாமல் வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.
- நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டேங்கிறீங்களே.
- தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா. இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால் அது உங்களால்தான். மேலும் நம்மை நேசிக்கிற கோடிக்கணக்கான மக்களும் தான் அதற்கு ஒரு மிக முக்கிய காரணம். உங்களை நம்பிதான் நானும், நம்ம கட்சியும் இருக்கிறோம்.
நம் கட்சியில் இருக்கிற தோழர்களுக்கும், தொண் டர்களுக்கும் இந்த கட்சியின் தலைமை தொண்டனான என்னுடைய வாழ்த்துகள்.
1977-ம் ஆண்டு ஜூன் மாதம் எம்.ஜி.ஆர். ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் பேசும்போது பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கிற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்றைக்கு அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என்று சொன்னார்.
அதே மாதிரி 2017-ம் ஆண்டுக்கு அப்புறம் 2021-க்கு அப்புறம் தமிழ்நாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பார்த்த நமது தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று கண்ணீர் வடித்தார்கள். இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்.
இப்படியெல்லாம் நாம் பேசுவதால் சில பேர் கொந்தளிப்பார்கள். அது பற்றி நாம் கவலைப்படக்கூடாது. ஏனென்றால் கொந்தளிப்பது தான் அவர்களின் வேலையே.
எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, ஏன்? ஜெயித்த பிறகு சட்டசபையில் கூட ஏதோ ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறதாம். ஏதோ ஒரு புதிய கட்சி வந்திருக்கிறது. புரட்சி தலைவர்னு ஒருத்தர் வந்திருக்கிறார் என்றெல்லாம் கேலி, கிண்டல் செய்தனர்.
அதன்படி யார் அரசியலுக்கு வந்தாலும் இப்படி கொந்தளிப்பதுதான் அவர்களுக்கு வேலையே. நாம் அரசியலுக்கு வந்த பிறகு கூட விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு அனுபவம் இருந்தது தெரியுமா?
1952-ல் இருந்து 1972 வரைக்கும் தி.மு.க.வில் இருந்த அவருக்கு அரசியல் அனுபவம் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று பேசிய அதே வாய்தான் அன்றைக்கு எம்.ஜி.ஆரை பார்த்து அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்.
கவர்ச்சியை மட்டுமே நம்பி இருப்பவர். அட்டக்கத்தி, வாய் விளம்பர வள்ளல், இவருக்கு கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும். பதில் சொல்ல தெரியாது. நிருபர்களை சந்திக்க மாட்டார். டெல்லியை பகைத்துக் கொள்ள மாட்டார். மேலே இருந்து அவருக்கு அவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்று சொன்னதும் அதே வாய் தான்.
அதனால் எம்.ஜி.ஆரை மட்டும் அல்ல, அவரது தொண்டர்களையும் விட்டு வைக்கவில்லை. பளபளப்பு, ஜொலி ஜொலிப்பை பார்த்தால் பல் இளிப்பவர்கள் என்று கிண்டல் செய்தனர். இதை மக்கள் அமைதியாக கவனித்து என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
அவர் ஜெயித்ததுக்கு அப்புறம் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட அனுபவசாலிகள் இருப்பார்கள் என்று சொல்வாங்கல்ல, அவர்கள் அனைவருக்கும் கோட்டை என்பது பகல் கனவாகவே மாறி விட்டது.
1977-ம் ஆண்டு போலவே அதே பழைய ஆயுதத்தை இப்பவும் கையில் எடுக்கிறார்கள். டெக்னாலஜி வளர்ந்து வேறெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. உங்க டெக்னிக்கையாவது மாத்துங்க பாஸ். காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. அவரைப் பற்றியும் கிண்டல் கேலி செய்து கொந்தளித்தனர்.
அவர்கள் செய்யும் ஊழல் பற்றி நாம் எடுத்து சொன்னால் 50 வருடத்துக்கு முன்னாடி இருக்கிற அதே தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள். பவள விழா பாப்பாவுக்கு வேறு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்ட தானே தெரியும். அதுக்காக நாம் அவர்கள் செய்யும் தப்பை வெளியில் சொல்லாமல் இருக்க முடி யுமா? சொல்லுவோம். சொல்லிக் கொண்டே இருப்போம்.
நம்மை தவிர அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கு தில் இருக்கிறது. மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த தீய சக்தியை பற்றி என்ன திருக்குறள் எழுதி இருப்பார். ஒரு கற்பனையா "அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு" என்று எழுதி இருப்பார்.
மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம்.
அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். என்னப்பா சிரிக்கிறீங்க உண்மையை தானப்பா சொன்னேன்.
இப்படி எத்தனை சக்திகள், எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நம்ம த.வெ.க.வால் மட்டுமே முடியும். இப்படி இருக்கிற இந்த நிலைமையில் ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா இப்படியெல்லாம் கேட்கும்போது எனக்கு என்ன தோணுகிறது என்றால் அய்யய்யோ இவங்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஒவ்வொரு விஜய்யையும் கூப்பிடுகிற மாதிரி எனக்கு தோணுது. பொறுங்க பாஸ் வருவார்கள். முறையாக வருவார்கள்.
ஓட்டு போடும் அன்றைக்கு வாக்காளர் அடையாள அட்டையை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டில் இருக்கிற ஒவ்வொரு விஜய்யும் ஒவ்வொரு விஜியும் பூத்து பூத்தா காலையிலேயே வந்து நிப்பாங்க பாருங்க. அன்னைக்கு தெரியும் பாருங்க. ஏண்டா இந்த விஜய்யை கூப்பிட்டோம்னு.
இப்படி பேசினால் சினிமாவா இது என்று ஆரம்பித்து விடுவார்கள். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டேங்கிறீங்களே.
கருத்து கணிப்பில் நிறைய பேர் உண்மையான கருத்து கணிப்பை சொல்கிறார்கள். அதை நான் தப்பு சொல்லலை. சிலருடைய கடுப்பில் விட்ட கணிப்பாகவும் இருக்கிறது. அதற்கும் நான் தப்பு சொல்லவில்லை. கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ஒவ்வொரு ஊர் ஊரா, தெரு தெருவா, வீடு வீடா போய் கருத்து கணிப்பு எடுத்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
ஒருவேளை அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தால் ரப்பர் வச்சி எல்லாவற்றையும் அழித்து விட்டு மறுபடியும் முதலில் இருந்து எடுக்க பாருங்கள். அதே ரிசல்ட்தான் வரும்.
அது என்ன லாஜிக், எல்லார் வீட்டிலும் த.வெ.க. இருக்கும் என்று கேட்டால் ஒரு சின்ன டெஸ்ட் ஒன்று பண்ணி பாருங்களேன். நம்ம சி.எம். ஸ்டாலின் சார் இருக்காங்கள்ல, 2 வருடத்துக்கு முன்னாடி இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மேடையில் பேசும்போது சொன்னார். அவங்களுடைய கட்சிகாரங்க, ஒரு சில மந்திரிகள் செய்கிற அட்ரா சிட்டியை பார்த்து ராத்திரியில் எனக்கு தூக்கமே வர மாட்டேங்கிறது என்று பேசினார். அப்படி இருக்கிற அவர் என்றைக்காவது ஒரு நாள் அசந்து தூங்குவார். அப்போது அவரிடம் போய் சார், எந்த சின்னத்துக்கு சார் ஓட்டு போடுவீங்க அப்படின்னு கேட்டு பாருங்க... விசில் சின்னத்துக்கு தான்.... தூக்கத்தில் இப்படி எழுப்பி கேட்டால் உண்மையை போட்டு உடைத்து விடுவார். அப்படி இருக்கிற இந்த நிலைமையிலும் த.வெ.க. சிட்டியில்தான் இருக்கிறது. டவுனில்தான் இருக்கிறது.
கிராமங்களில் இல்லை என்று சொல்பவர்களுக்கு இப்படி சில டெஸ்ட் பண்ணி பார்த்தால் தெரியும். விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் சின்னம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது என்று அர்த்தம். என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தம்பிகள், த.வெ.க.வுக்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.
ரத்த சொந்தமாக நினைக்கிற நம்ம வகையறாக்களை எந்த கட்சியாலும், எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது. இதுதான் களநிலவரம். தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும்.
இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.தான் மக்களின் ஒரே ஆப்சன். டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின், எவ்வளவு என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் நம்ம த.வெ.க.தான் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.
நமது தோழர்கள் அதை மனதில் நன்றாக ஏற்றிக் கொண்டு இன்னும் இன்னும் ஷார்ப்பா வேலை பாருங்கள். நம்முடைய வேட்பாளர்களுடன் ஒற்றுமையாக இருந்து வேலை செய்யுங்கள். நம்முடைய விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைப்பது மட்டும் தான் உங்கள் வேலை. மாற்றத்தை யெல்லாம் மக்களுடன் சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன். மக்கள் விசிலை ஊதுகிற ஊதலில் இந்த தீயசக்தியும், இந்த ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும். அன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் த.வெ.க. ஆளும் கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்மளுடன் நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேணும். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் நட்பு ரீதியான கூட்டணி என்பார்கள்.
- தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது அனைத்து மக்களும் அதிகமான வெறுப்பில் இருக்கிறார்கள்.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரையில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னரும் 30 சதவீத பகுதிகளுக்கு இன்னும் குடிநீர் போய் சேரவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்கள் அனைவரும் பயனடைவார்கள்.
தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் நட்பு ரீதியான கூட்டணி என்பார்கள். அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அடிமை என்கிறார்கள்.
இது தி.மு.க.வுக்கு தான் பொருந்தும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது தமிழ்நாட்டில் இந்தியை கொண்டு வந்தவர்கள் தி.மு.க.வினர். தற்போது அதி.மு.க., பா.ஜ.க. கூட்டணி செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கிறது.
அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சி பதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன் செல்லாகாசாகி விட்டார். அவரைப் பற்றி பேசுவது தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். அவர் மு.க. ஸ்டாலினை விட பன்மடங்கு சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார். அவருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பதட்டம் அதிகரித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டை தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக தாக்கல் செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மத்திய பட்ஜெட் சிலருக்கு கசப்பாகவும், பலருக்கு இனிப்பாகவும் இருக்கிறது.
ஆனால் மத்திய பட்ஜெட் பொருத்தவரை நெல்லிக்கனி போல சிறப்பாக அமைந்துள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு தர மறுக்கவில்லை. ஆனால் தி.மு.க. அரசு தயார் செய்துள்ள திட்ட விவரங்களில் குளறுபடிகள் உள்ளன.
எனவே தான் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு மெட்ரோ ரெயிலை ரத்து செய்து விட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது அனைத்து மக்களும் அதிகமான வெறுப்பில் இருக்கிறார்கள். இப்படி ஒரு ஆட்சி நமக்கு தேவை இல்லை என்று உறுதியாக இருக்கிறார்கள். எனவே வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றத்தை மக்கள் நிச்சயம் கொண்டு வருவார்கள்.
இவர் அவர் கூறினார்.






