என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- அறிவு திருவிழாவில் அவர்கள் விமர்சித்து பேசிவிட்டோம் என்ற கோபம் வேற.
- எப்படி போலீஸ் பெயரை கேட்டால் திருடனுக்கு பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் "அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?
யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?
ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?
பவளவிழா பாப்பா - நீ
பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா
நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து
நாடே சிரிக்கிறது பாப்பா.
சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.
எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்" என திமுக-வை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறிவு திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "எப்படி நீங்கள் அறிவு திருவிழா நடத்தலாம். யாரைக் கேட்டு நடத்துறிங்க. எதுக்காக நடத்துறிங்க. அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான். அறிவு திருவிழாவில் அவர்கள் விமர்சித்து பேசிவிட்டோம் என்ற கோபம் வேற. எப்படி போலீஸ் பெயரை கேட்டால், திருடனுக்கு பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
- தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான்.
- மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும். அப்போது உறுதி செய்யப்படும்.
மதுரையில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* தே.மு.தி.க.வான நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.
* எங்களுக்கான பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை செய்வது, கேப்டனின் குரு பூஜை, மாநாடு ஆகியவைதான் எங்களுடைய ஒரே கவனம்.
* ரத யாத்திரை மற்றும் எங்களுடைய கட்சி வளர்ச்சி ஆகியவற்றை பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.
* தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். யாரும் தோழமை இல்லை எனச் சொல்ல முடியாது.
* தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை.
* மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும். அப்போது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தே.மு.தி.க. சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையிலிருந்து தொடங்குகிறோம். வருகிற டிசம்பர் 2-ந்தேதி ஈரோட்டில் நிறைவு பெறும் என அறிவித்தார்.
- அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பூத் ஏஜெணடுகள் தினமும் 50 படிவங்களை பெற்று வழங்க அனுமதி.
- பூத் ஏஜெண்டுகள் நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்வாடி நிலை அலுவலர்களிடம் அளிப்பர்.
தமிழகத்தில் SIR பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் கட்சிக்காரர்கள் படிவங்களை பெற்று விண்ணப்பித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக திமுக-வினர் மொத்தமாக படிவங்களை பெற்று நிரப்பி வருவதாக அதிமுக மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இந்த தீவிர திருத்த செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது ஆகும். அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பினை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தனது 27.10.2025 ஆம் நாளிட்ட 23/2025-ERS (Vol II) எண்ணிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும் போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அந்த படிவங்களில் உள்ள விவரங்கள் தன்னால் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என்ற கீழ்கண்ட உறுதிமொழியினையும் வழங்க வேண்டும்.
"என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன் எனவும் மேலும் தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1950 பிரிவு 31 ன் படி தண்டனைக்கு உரியது என்பதையும் அறிவேன்"
இவ்வாறு பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர்க்கு சமர்ப்பிப்பார்.
வாக்காளர் பதிவு அலுவலர் அப்படிவங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
- நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
- ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்
சென்னை:
வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாக்குரிமையை தடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாம் நதி போல பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அசிங்கமும் வரும் நல்லதும் வரும். நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
நமது செயல்பாடுகள் மூலம் தி.மு.க.வினர் இன்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. ஏன் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவில்லை. கிராமப்புறங்களில் காலையில் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் இரவில் தான் வீடுகளுக்கு வருவார்கள். இதுபோன்ற நபர்களிடம் எப்படி விண்ணப்பங்களை கொடுத்து பூர்த்தி செய்வது என்கிற சிக்கல்கள் உள்ளன.
இது போன்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாம் இப்போது வைத்திருக்கும் வாக்காளர் அட்டை இனி செல்லுபடியாகாது. அது போன்ற சூழல் ஏற்படும்போது ஆதார் அட்டையும் செல்லுபடியாகாமல் போகலாம். பின்னர் இந்திய குடிமகனா என்று நம்மை பார்த்து கேள்வி எழுப்புவார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இன்று இந்தியாவிலேயே இந்த தலைவரும் செய்யாத செயலை நேற்று வெளியிட்ட எஸ்ஐஆர் தொடர்பான வீடியோ மூலமாக நமது தலைவர் விஜய் செய்து உள்ளார்.
நேற்று இரவு 12 மணிக்குள் மூன்று கோடி பேர் அதனை பார்த்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலையை நமது தலைவர் செய்துள்ளார். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோதும் அவரிடம் எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்கள். ஆனால் அவர் மக்கள் ஆதரவை பெற்று முதலமைச்சரானார்.
தற்போது நம்மை பார்த்தும் அதே குற்றச்சாட்டை கூறுகிறார்கள். ஆனால் நமது தலைவரோ மக்களையே கட்டமைப்பாக உருவாக்கி வைத்திருக்கிறார். இருப்பினும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இளம் வாக்காளர்கள் முதல் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் வகையில் நாம் அனைவருமே வீடு வீடாக செல்ல வேண்டும்.
இப்படி அனைவரது வாக்குரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதனை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் 2026 தேர்தலில் நமது தலைவர் தான் முதலமைச்சராக அமருவார்.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.
- 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை.
- 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10-ந்தேதி முதல் 23ஆம் தேதி வரை.
6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும்.
10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10-ந்தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அட்டவணை
டிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வு
டிசம்பர் 16- ஆங்கிலம்
டிசம்பர் 17- விருப்ப மொழி தேர்வு
டிசம்பர் 18 கணிதம்
டிசம்பர் 19- உடற்கல்வி தேர்வு
டிசம்பர் 22- அறிவியல்
டிசம்பர் 23- சமூக அறிவியல்
10-ஆம் வகுப்பு
டிசம்பர் 10- தமிழ்மொழி
டிசம்பர் 12- ஆங்கிலம்
டிசம்பர் 15- கணிதம்
டிசம்பர் 18- அறிவியல்
டிசம்பர் 22- சமூக அறிவியல்
டிசம்பர் 23 விருப்ப மொழி தேர்வு
11ஆம் வகுப்பு
டிசம்பர் 10- தமிழ்
டிசம்பர் 12 ஆங்கிலம்
டிசம்பர் 15- இயற்பியல், பொருளாதாரம்
டிசம்பர் 17- கணிதம், விலங்கியல், வர்த்தகம்
டிசம்பர் 19- வேதியியல், கணக்கு பதிவியல்
டிசம்பர் 22- கணினி அறிவியல்
டிசம்பர் 23- உயிரியல், வரலாறு, தாவரவியல்
12ஆம் வகுப்பு
டிசம்பர் 10- தமிழ்மொழி தேர்வு
டிசம்பர் 12- ஆங்கிலம்
டிசம்பர் 15- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், விவசாய அறிவியல்
டிசம்பர் 17- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
டிசம்பர் 19- இயற்பியல், பொருளாதாரம்
டிசம்பர் 22- உயிரியல், தாவரவியல், வரலாறு
டிசம்பர் 23- கணினி அறிவியல்
- வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
- தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள்.
சென்னை:
வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது:-
மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
வாக்காளர்களின் பெயர்களை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் கூறி வருகிறார்கள்.போலியான காரணங்களை கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்குரிமையை நீக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.
அதே நேரத்தில் ஒரே நபரின் பெயரை பல இடங்களில் சேர்ப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் ஆட்சியாளர் கள் குறுக்கு வழியில் வெல்வதற்கு துடிக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். தொடர்பாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால் முறையான பதில் அளிக்க முடியவில்லை.
5 ஆண்டுக்கு ஒருமுறை தலைவிதியை நிர்ணயிக்கும் வாக்குகளை நாம் யாருக்கு போட வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து வந்தார்கள். ஆனால் இன்று யார் ஓட்டு போட வேண்டும் என்பதையே அதிகார வர்க்கம் தீர்மானிக்கும் நிலை உள்ளது.
எனவே இதனை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள். இதன் மூலமாக இளம் வாக்காளர்கள் முதல் அனைவருக்குமான வாக்குரிமையும் பறிபோகும் சூழல் உள்ளது.
எனவே நாம் அனைவரும் வாக்குகளையும் உறுதி செய்து 2026 தேர்தலில் அனைவரும் ஓட்டு போடுவதற்கான உரிமையை பெற்றுத் தர வேண்டும். இதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்று 2026 தேர்தலில் நமது தலைவர் முதலமைச்சராவது உறுதி.
இவ்வாறு ஆனந்த் பேசினார்.
- தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
- குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே, நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்.
தி.மு.க. அரசின் சமூக அநீதிகளைக் கண்டு தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அதை வெளிப்படுத்த ஒரு வழி தேவைப்படுகிறது. அதே போல், அதி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இயல்பாகவே நாம் தான் வன்னியர்களுக்கான சமூகநீதி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். எனவே, நமது பாட்டாளி சொந்தங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி நாம் நடத்தவிருக்கும் 'வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தின்' நோக்கங்களை விளக்கும் துண்டறிக்கைகளை அனைத்துக் கட்சியினரிடமும் கொடுத்து, குடும்பத்துடன் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைப்பு விடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக்கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் டிசம்பர் 17-ந்தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தமிழகத்தில் INDIA கூட்டணி எஃகு கூட்டணியாக உள்ளது
- இந்தியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைக்கும்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தவெக பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் தொடர்வதாக செல்வபெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சிலர் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். பீகார் மாநில தேர்தலை பொறுத்தவரை அங்கு வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்களும் இணைந்து 16 நாட்கள் பீகார் மாநிலத்தில் வாகன அணிவகுப்பு மூலமாக பரப்புரை மேற்கொண்டார்கள். இந்த பின்னணியில் பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு தேஜஸ்வி யாதவ் அவர்களை முதலமைச்சராக இந்தியா கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் வெற்றி வாய்ப்புகள் நிச்சயமாக இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த 2005 முதல் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கிற நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெறுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்று அரசியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். பீகாரில் மொத்த மக்கள் தொகையில் 33.76 சதவிகிதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள். பீகாரில் உள்ள குடும்பங்களில் 64 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் பத்தாயிரத்திற்கும் குறைவாக வருவாய் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவிலேயே வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவிகிதமாக பீகாரில் தலைவிரித்தாடி வருகிறது. ஏறத்தாழ 3 கோடி பேர் பீகாரில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். இத்தகைய அவலநிலைக்கு பீகார் மாநிலத்தை கொண்டு சென்ற பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க எந்தவித நியாயமான காரணங்கள் இல்லை என்று உறுதியாக கூற முடியும். ஆனால் வெற்றி வாய்ப்ப எப்படி ஏற்பட்டது ?
இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் இருந்து 2023 இல் இந்திய தலைமை நீதிபதியை நீக்கி விட்டு பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என்று மாற்றியமைத்தார்களோ அன்றைக்கே இந்திய தேர்தல் ஆணையம் மோடி - அமித்ஷாவின் கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்டது. இந்த பின்னணியில் தான் கடந்த காலங்களில் வாக்குத் திருட்டு மூலமாக மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அத்தகைய உத்தியை தான் பீகாரிலும் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். பீகார் வெற்றி என்பது மோடி-அமித்ஷா-கெய்னேஷ்குமார் கூட்டணியினால் விளைந்ததே தவிர, மக்கள் வாக்களித்து பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவில்லை.
பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிப்பதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 1.21 கோடி பெண்களுக்கு தலா ரூபாய் 10,000 விநியோகம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட போது, அதனை தடுத்து நிறுத்த மறுத்து விட்டது. ஆனால், தெலுங்கானா, ஜார்கண்ட் மாநிலத்தில் இத்தகைய திட்டங்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 10,000 வாக்குகளுக்காக கொடுக்கப்பட்டது லஞ்ச பணமாகத் தான் கருத வேண்டும். இது வெற்றிக்கான மிக முக்கிய காரணமாகும்.
நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் 20.6 சதவிகித வாக்குகளை பெற்று 89 இடங்களில் பா.ஜ.க.வும், 20.3 சதவிகித வாக்குகளை பெற்று 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. ஆனால், 23 சதவிகித வாக்குகளை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இன்றைக்கும் தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் விளங்கினாலும் 2020 சட்டமன்றத் தேர்தலில் 15.39 சதவிகித வாக்குகளை பெற்று 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது 85 இடங்களில் எப்படி வெற்றி பெற முடிந்தது என்பது கடுமையான சந்தேகத்திற்கு உரியதாகும். இதில் தேர்தல் ஆணையத்தின் சதி இருப்பதை அனைவரும் உறுதி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காகவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற நோக்கத்திலும் இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியயாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத போக்கிற்கு எதிராக மக்கள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறார்கள். எக்கு கோட்டை போல இருக்கிற இந்தியா கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி பங்கு போட்டுக் கொள்கிற சூழல் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருக்கப் போகிறது. இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
- தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 18-ந்தேதி தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 19-ந்தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 20-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.
- வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
சென்னை:
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும். இதே நாளில் கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுது றை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி 2025 நவம்பர் 15-ந் தேதி என அறிவிக்கை செய்யப்பட்டது.
எனினும் பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 2025 நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதலமைச்சரின் துரித நடவடிக்கையின் பேரில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் செய்யும் விவசாயிகளின் நன்மையை கருதி பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடுவானது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடு துறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 30-ந்தேதிக்குள் பதிவு செய்து பயனடையுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நவம்பர் 24-ந்தேதிக்குப் பிறகு உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
- சென்னை மாநகராட்சியில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி செல்லப் பிராணிகளான நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி உள்ளது. சென்னையில், செல்லப்பிராணிகளுக்கு நவம்பர் 23-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும் என்றும் நவம்பர் 24-ந்தேதிக்குப் பிறகு உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 3 ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னையில் உள்ள சிகிச்சை மையங்களில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி தொடங்கியது. மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும் வீதிவீதியாக சென்று தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 625 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 483 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
செல்லப்பிராணிகளுக்காக உள்ள 6 சிகிச்சை மையங்களில் தினமும் காலை 8 மணி முதல் 3 மணி வரையில் உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் செலுத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் முகாம் நடைபெறுகிறது.
- பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
- ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம்.
தேசிய பத்திரிகை தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம்.
பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து அதன் தோல்விகள், ஊழல்களை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






