என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டேங்கிறீங்களே.
    • தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா. இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால் அது உங்களால்தான். மேலும் நம்மை நேசிக்கிற கோடிக்கணக்கான மக்களும் தான் அதற்கு ஒரு மிக முக்கிய காரணம். உங்களை நம்பிதான் நானும், நம்ம கட்சியும் இருக்கிறோம்.

    நம் கட்சியில் இருக்கிற தோழர்களுக்கும், தொண் டர்களுக்கும் இந்த கட்சியின் தலைமை தொண்டனான என்னுடைய வாழ்த்துகள்.

    1977-ம் ஆண்டு ஜூன் மாதம் எம்.ஜி.ஆர். ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் பேசும்போது பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கிற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்றைக்கு அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என்று சொன்னார்.

    அதே மாதிரி 2017-ம் ஆண்டுக்கு அப்புறம் 2021-க்கு அப்புறம் தமிழ்நாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பார்த்த நமது தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று கண்ணீர் வடித்தார்கள். இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்.

    இப்படியெல்லாம் நாம் பேசுவதால் சில பேர் கொந்தளிப்பார்கள். அது பற்றி நாம் கவலைப்படக்கூடாது. ஏனென்றால் கொந்தளிப்பது தான் அவர்களின் வேலையே.

    எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, ஏன்? ஜெயித்த பிறகு சட்டசபையில் கூட ஏதோ ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறதாம். ஏதோ ஒரு புதிய கட்சி வந்திருக்கிறது. புரட்சி தலைவர்னு ஒருத்தர் வந்திருக்கிறார் என்றெல்லாம் கேலி, கிண்டல் செய்தனர்.

    அதன்படி யார் அரசியலுக்கு வந்தாலும் இப்படி கொந்தளிப்பதுதான் அவர்களுக்கு வேலையே. நாம் அரசியலுக்கு வந்த பிறகு கூட விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு அனுபவம் இருந்தது தெரியுமா?

    1952-ல் இருந்து 1972 வரைக்கும் தி.மு.க.வில் இருந்த அவருக்கு அரசியல் அனுபவம் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று பேசிய அதே வாய்தான் அன்றைக்கு எம்.ஜி.ஆரை பார்த்து அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்.

    கவர்ச்சியை மட்டுமே நம்பி இருப்பவர். அட்டக்கத்தி, வாய் விளம்பர வள்ளல், இவருக்கு கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும். பதில் சொல்ல தெரியாது. நிருபர்களை சந்திக்க மாட்டார். டெல்லியை பகைத்துக் கொள்ள மாட்டார். மேலே இருந்து அவருக்கு அவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்று சொன்னதும் அதே வாய் தான்.

    அதனால் எம்.ஜி.ஆரை மட்டும் அல்ல, அவரது தொண்டர்களையும் விட்டு வைக்கவில்லை. பளபளப்பு, ஜொலி ஜொலிப்பை பார்த்தால் பல் இளிப்பவர்கள் என்று கிண்டல் செய்தனர். இதை மக்கள் அமைதியாக கவனித்து என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

    அவர் ஜெயித்ததுக்கு அப்புறம் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட அனுபவசாலிகள் இருப்பார்கள் என்று சொல்வாங்கல்ல, அவர்கள் அனைவருக்கும் கோட்டை என்பது பகல் கனவாகவே மாறி விட்டது.

    1977-ம் ஆண்டு போலவே அதே பழைய ஆயுதத்தை இப்பவும் கையில் எடுக்கிறார்கள். டெக்னாலஜி வளர்ந்து வேறெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. உங்க டெக்னிக்கையாவது மாத்துங்க பாஸ். காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. அவரைப் பற்றியும் கிண்டல் கேலி செய்து கொந்தளித்தனர்.

    அவர்கள் செய்யும் ஊழல் பற்றி நாம் எடுத்து சொன்னால் 50 வருடத்துக்கு முன்னாடி இருக்கிற அதே தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள். பவள விழா பாப்பாவுக்கு வேறு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்ட தானே தெரியும். அதுக்காக நாம் அவர்கள் செய்யும் தப்பை வெளியில் சொல்லாமல் இருக்க முடி யுமா? சொல்லுவோம். சொல்லிக் கொண்டே இருப்போம்.

    நம்மை தவிர அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கு தில் இருக்கிறது. மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான்.

    இந்த டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த தீய சக்தியை பற்றி என்ன திருக்குறள் எழுதி இருப்பார். ஒரு கற்பனையா "அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு" என்று எழுதி இருப்பார்.

    மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம்.

    அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். என்னப்பா சிரிக்கிறீங்க உண்மையை தானப்பா சொன்னேன்.

    இப்படி எத்தனை சக்திகள், எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நம்ம த.வெ.க.வால் மட்டுமே முடியும். இப்படி இருக்கிற இந்த நிலைமையில் ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா இப்படியெல்லாம் கேட்கும்போது எனக்கு என்ன தோணுகிறது என்றால் அய்யய்யோ இவங்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஒவ்வொரு விஜய்யையும் கூப்பிடுகிற மாதிரி எனக்கு தோணுது. பொறுங்க பாஸ் வருவார்கள். முறையாக வருவார்கள்.

    ஓட்டு போடும் அன்றைக்கு வாக்காளர் அடையாள அட்டையை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டில் இருக்கிற ஒவ்வொரு விஜய்யும் ஒவ்வொரு விஜியும் பூத்து பூத்தா காலையிலேயே வந்து நிப்பாங்க பாருங்க. அன்னைக்கு தெரியும் பாருங்க. ஏண்டா இந்த விஜய்யை கூப்பிட்டோம்னு.

    இப்படி பேசினால் சினிமாவா இது என்று ஆரம்பித்து விடுவார்கள். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டேங்கிறீங்களே.

    கருத்து கணிப்பில் நிறைய பேர் உண்மையான கருத்து கணிப்பை சொல்கிறார்கள். அதை நான் தப்பு சொல்லலை. சிலருடைய கடுப்பில் விட்ட கணிப்பாகவும் இருக்கிறது. அதற்கும் நான் தப்பு சொல்லவில்லை. கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ஒவ்வொரு ஊர் ஊரா, தெரு தெருவா, வீடு வீடா போய் கருத்து கணிப்பு எடுத்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    ஒருவேளை அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தால் ரப்பர் வச்சி எல்லாவற்றையும் அழித்து விட்டு மறுபடியும் முதலில் இருந்து எடுக்க பாருங்கள். அதே ரிசல்ட்தான் வரும்.

    அது என்ன லாஜிக், எல்லார் வீட்டிலும் த.வெ.க. இருக்கும் என்று கேட்டால் ஒரு சின்ன டெஸ்ட் ஒன்று பண்ணி பாருங்களேன். நம்ம சி.எம். ஸ்டாலின் சார் இருக்காங்கள்ல, 2 வருடத்துக்கு முன்னாடி இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மேடையில் பேசும்போது சொன்னார். அவங்களுடைய கட்சிகாரங்க, ஒரு சில மந்திரிகள் செய்கிற அட்ரா சிட்டியை பார்த்து ராத்திரியில் எனக்கு தூக்கமே வர மாட்டேங்கிறது என்று பேசினார். அப்படி இருக்கிற அவர் என்றைக்காவது ஒரு நாள் அசந்து தூங்குவார். அப்போது அவரிடம் போய் சார், எந்த சின்னத்துக்கு சார் ஓட்டு போடுவீங்க அப்படின்னு கேட்டு பாருங்க... விசில் சின்னத்துக்கு தான்.... தூக்கத்தில் இப்படி எழுப்பி கேட்டால் உண்மையை போட்டு உடைத்து விடுவார். அப்படி இருக்கிற இந்த நிலைமையிலும் த.வெ.க. சிட்டியில்தான் இருக்கிறது. டவுனில்தான் இருக்கிறது.

    கிராமங்களில் இல்லை என்று சொல்பவர்களுக்கு இப்படி சில டெஸ்ட் பண்ணி பார்த்தால் தெரியும். விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் சின்னம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது என்று அர்த்தம். என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தம்பிகள், த.வெ.க.வுக்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.

    ரத்த சொந்தமாக நினைக்கிற நம்ம வகையறாக்களை எந்த கட்சியாலும், எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது. இதுதான் களநிலவரம். தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும்.

    இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.தான் மக்களின் ஒரே ஆப்சன். டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின், எவ்வளவு என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் நம்ம த.வெ.க.தான் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.

    நமது தோழர்கள் அதை மனதில் நன்றாக ஏற்றிக் கொண்டு இன்னும் இன்னும் ஷார்ப்பா வேலை பாருங்கள். நம்முடைய வேட்பாளர்களுடன் ஒற்றுமையாக இருந்து வேலை செய்யுங்கள். நம்முடைய விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைப்பது மட்டும் தான் உங்கள் வேலை. மாற்றத்தை யெல்லாம் மக்களுடன் சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன். மக்கள் விசிலை ஊதுகிற ஊதலில் இந்த தீயசக்தியும், இந்த ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும். அன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் த.வெ.க. ஆளும் கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்மளுடன் நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேணும். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் நட்பு ரீதியான கூட்டணி என்பார்கள்.
    • தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது அனைத்து மக்களும் அதிகமான வெறுப்பில் இருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னரும் 30 சதவீத பகுதிகளுக்கு இன்னும் குடிநீர் போய் சேரவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்கள் அனைவரும் பயனடைவார்கள்.

    தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் நட்பு ரீதியான கூட்டணி என்பார்கள். அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அடிமை என்கிறார்கள்.

    இது தி.மு.க.வுக்கு தான் பொருந்தும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது தமிழ்நாட்டில் இந்தியை கொண்டு வந்தவர்கள் தி.மு.க.வினர். தற்போது அதி.மு.க., பா.ஜ.க. கூட்டணி செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்களின் ரத்தத்தை உறிஞ்சி பதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன் செல்லாகாசாகி விட்டார். அவரைப் பற்றி பேசுவது தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். அவர் மு.க. ஸ்டாலினை விட பன்மடங்கு சிறந்த நிர்வாகியாக திகழ்கிறார். அவருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பதட்டம் அதிகரித்துள்ளது.

    மத்திய பட்ஜெட்டை தமிழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக தாக்கல் செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மத்திய பட்ஜெட் சிலருக்கு கசப்பாகவும், பலருக்கு இனிப்பாகவும் இருக்கிறது.

    ஆனால் மத்திய பட்ஜெட் பொருத்தவரை நெல்லிக்கனி போல சிறப்பாக அமைந்துள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு தர மறுக்கவில்லை. ஆனால் தி.மு.க. அரசு தயார் செய்துள்ள திட்ட விவரங்களில் குளறுபடிகள் உள்ளன.

    எனவே தான் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு மெட்ரோ ரெயிலை ரத்து செய்து விட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மீது அனைத்து மக்களும் அதிகமான வெறுப்பில் இருக்கிறார்கள். இப்படி ஒரு ஆட்சி நமக்கு தேவை இல்லை என்று உறுதியாக இருக்கிறார்கள். எனவே வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மாற்றத்தை மக்கள் நிச்சயம் கொண்டு வருவார்கள்.

    இவர் அவர் கூறினார்.

    • சுற்றி இருப்பவர்களால் விஜய்க்கு பிரச்சனை.
    • அரசியலில் ரசிகர்களை பக்குவப்படுத்த வேண்டிய கடமை விஜய்க்கு இருக்கிறது

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகாவிஷ்ணுவிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த மகாவிஷ்ணு, "அரசியல் என்பது விளையாட்டல்ல, சுற்றி இருப்பவர்களால் விஜய்க்கு பிரச்சனை. ரசிகர்களின் உயிரை பணயம் வைத்து விஜய் அரசியல் செய்கிறார். இன்னும் அவருக்கு கவனம் தேவை. அரசியலில் ரசிகர்களை பக்குவப்படுத்த வேண்டிய கடமை விஜய்க்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    • கமலேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார்.
    • நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியில் வசித்தவர் கமலேஷ் (வயது 48). இவர் கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களது மகள் யாஷிகா (10). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கமலேசின் மனைவி இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை என தெரிகிறது. இதனால் கமலேசும், அவரது மனைவியும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் கமலேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் துடிதுடித்து இறந்துள்ளனர்.

    இதற்கிடையே கமலேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் உடல்நல பாதிப்பு சரியாகாததால் குடும்பத்துடன் தற்கொலை செய்யப்போவதாக வீடியோவில் பேசி உள்ளார். பின்னர் வீடியோவை அந்த பகுதியில் உள்ள ஒருநபருக்கு அனுப்பி இருக்கிறார்.

    இரவு வெகுநேரத்துக்கு பிறகு வீடியோ அனுப்பியதால் அந்த நபர் உடனடியாக வீடியோவை பார்க்கவில்லை. இன்று அதிகாலை தான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் கமலேசும், அவரது மனைவி மற்றும் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் நோய் பாதிப்பு காரணமாக தான் அவர்கள் இறந்தார்களா அல்லது எதற்காக அவர்கள் தற்கொலை செய்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • த.வெ.க. தொண்டர்களை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
    • தமிழ்நாட்டில் த.வெ.க. விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.

    தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:

    * தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க.

    * எத்தனை எஞ்சின் இருந்தாலும் டாப் எஞ்சின் த.வெ.க. தான் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

    * த.வெ.க. தொண்டர்களை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.

    * த.வெ.க. தொண்டர்கள் தான் எனக்கு மிகப்பெரிய பலம்.

    * தொண்டர்களை மட்டும் நம்பி தான் தமிழக வெற்றிக்கழகமும், நானும் இருக்கிறேன்.

    * தமிழ்நாட்டில் த.வெ.க. விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருக்கிறது.
    • என்னுடைய அக்கா, அம்மா என அனைவரும் த.வெ.க.விற்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருக்கிறது.

    * திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டுமே முடியும்.

    * என்னுடைய அக்கா, அம்மா என அனைவரும் த.வெ.க.விற்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.

    * தீய சக்தி தி.மு.க.வை வீழ்த்த தூய சக்தியாக தமிழக வெற்றிக்கழகத்தால் மட்டுமே முடியும்.

    * 2026 சட்டசபை தேர்தலில் மக்களின் ஒரே ஆப்ஷன் த.வெ.க. மட்டும் தான்.

    * தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும் போட்டி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. தலைமையில் ஒரு அணி போட்டி என்று அ.தி.மு.கவை த.வெ.க. தலைவர் கிண்டலாக கூறினார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.
    • மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.

    தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான்.

    * தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.

    * 1977 ஜூன் மாதம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரேடியோவில் பேட்டி ஒன்று கொடுத்தார். அதில், பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தேன். அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சிதான் அ.தி.மு.க. என்று கூறினார்.

    * 2017-க்கு பிறகு, 2021-க்கு பிறகு தமிழ்நாட்டு நிலையை யோசித்த தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தனர்.

    * இன்றைக்கு இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சி தான் தமிழக வெற்றிக்கழகம்.

    * 1977-ம் ஆண்டு போல பழைய நஞ்சு போன தீஞ்சு போன ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

    * பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும்.

    * அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு.

    * மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் ஏராளமாக சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக பல்வேறு சுற்றுலா நிறுவனங்களுடன் 217 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவரது முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் ஏராளமாக சுற்றுலா தலங்கள் உள்ளன.

    * நமது பாரம்பரியத்தை உலக அளவில் கொண்டு செல்லும் திறன் சுற்றுலா துறைக்கே உண்டு.

    * கலைகள், கலைஞர்கள், பண்பாட்டை கொண்டு செல்லும் வலிமை சுற்றுலாத்துறைக்கு உள்ளது.

    * தமிழின் தொன்மையும், தமிழர்களின் நாகரிகமும் உலகம் முழுமைக்கும் தெரியும்.

    * கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

    * சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடமாக தமிழ்நாடு உள்ளது.

    * பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக அநீதியில் ஊறித் திளைக்கும் திமுக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் துரோகம் செய்து வருகிறது.
    • திமுக அரசு செய்த சமூக அநீதி மற்றும் துரோகம் காரணமாக பட்டதாரி இளைஞர் புதுப்பாளையம் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக போராடியும் அரசு வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் மன உளைச்சலால் திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 1405 நாள்களாகியும் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்காமல் திமுக செய்த துரோகம் தான் ஒரு ஏழை பட்டதாரியை பலி வாங்கியுள்ளது. திமுகவின் இந்த துரோகத்தை வன்னிய சமுதாயம் மன்னிக்காது.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் 2018-ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து விட்டு, கடந்த 7 ஆண்டுகளாக அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகளை எழுதி வந்திருக்கிறார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல ஆள்தேர்வு அமைப்புகள் நடத்திய போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற போதும் அவருக்கு அரசு வேலை எட்டாக் கனியாகவே இருந்தது. அதனால் மன உளைச்சல் அடைந்த விஜயகுமார் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது தான் தமது தற்கொலைக்கு காரணம் என்றும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமது டைரியில் 20 பக்கங்களில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சமூகநீதி கிடைக்காமல் ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. வேதனையில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினரை ஆறுதல்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

    வன்னியர்களுக்கான சமூகநீதியை மறுப்பதன் மூலம் பட்டதாரி இளைஞர் விஜயகுமாரை தற்கொலைக்கு தூண்டிய திமுக அரசு, அவரது தற்கொலையை திசை திருப்பும் நோக்கத்துடன், ''வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்காததால் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை; குடும்பப் பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்'' என்று கூறும்படி திமுகவைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.. வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் மு.க.ஸ்டாலின் அரசு, திமுக செய்த துரோகத்தால் தான் அந்த இளைஞர் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மையைக் கூட மூடி மறைக்க முயல்வதிலிருந்தே வன்னியர்கள் மீது திமுக எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருக்கிறது என்பதை உணரலாம்.

    வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை திமுக அரசு பாதுகாத்திருந்தாலோ அல்லது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியவாறு தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி இருந்தாலோ அப்பாவி இளைஞர் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், வன்னியர்களுக்கு அடுத்தடுத்து இரு துரோகங்களை செய்து அவர்களின் சமூகநீதி உரிமையை பறித்த திமுக அரசு தான் பட்டதாரி இளைஞர் விஜயகுமாரின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

    வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 31.03.2022ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஆணையிட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1405 நாள்களாகிவிட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டு இன்றுடன் 1118 நாள்களாகி விட்டன. ஆனால், சமூக அநீதியில் ஊறித் திளைக்கும் திமுக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் துரோகம் செய்து வருகிறது.

    திமுக அரசு செய்த சமூக அநீதி மற்றும் துரோகம் காரணமாக பட்டதாரி இளைஞர் புதுப்பாளையம் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் பல லட்சம் வன்னிய இளைஞர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் விஜயகுமாரின் மனநிலையில் தான் உள்ளனர். விஜயகுமாரின் ஆன்மாவும், திமுக அரசின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களின் மனங்களும் திமுகவை மன்னிக்காது. அவர்களின் சாபம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தப்போவது உறுதி.

    சமூக நிலையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் காலம் காலமாக மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான உள் இடஒதுக்கீட்டை வென்றெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. எனவே, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க.
    • திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவுநாள் மடல்.

    தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற நம் மக்களுக்கான அரசியல் இயக்கத்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கி, 18 ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன் தி.மு.கழகத்தை அரியணை ஏற்றியவர்.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி. 'மக்களிடம் செல். மக்களுடன் வாழ். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்கு சேவை செய். அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு' என்பது அண்ணா நமக்கு வகுத்துத் தந்த அரசியல் பாதை.

    தன்னுடைய ஆட்சிக்காலத்தில் உலகம் வியக்கும் வண்ணம் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்தி, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட ஏற்பளிப்பு வழங்கி, தமிழ்நாட்டில் என்றைக்குமே இந்திக்கு இடமில்லை என்கிற வகையில், தமிழ் - ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, தமிழ்நாடு என்று மாநிலத்திற்குப் பெயர்சூட்டி, தமிழ்நாடு அரசின் இலச்சினையில் 'வாய்மையே வெல்லும்' என்று தமிழை இடம்பெறச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்புமிக்க ஆட்சி இரண்டாண்டுகள் கூட முழுமையாக நீடிக்கவில்லை. கொடிய புற்றுநோய் காரணமாக இயற்கை நம் அண்ணனைப் பறித்துக்கொண்டது.

    தவித்து நின்றது தமிழ்நாடு. கலங்கி அழுதனர் கழகத்தினர். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அலைகடலெனத் திரண்டனர் தமிழர்கள். அது உலக சாதனை அளவாக கின்னஸ் புத்தகத்தில் பதியக்கூடிய வகையில் அமைந்தது. அண்ணாவை இழந்துவிட்ட கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் வேறு கதி ஏது என்று மாநிலமே கலங்கி நின்ற நிலையில்தான், கழகத்தை இதயத்திலும், ஆட்சியைத் தோளிலும் சுமந்தார் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை வழிநடத்தி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தார்.

    தன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான நமக்கு, ஐம்பெரும் முழக்கங்களை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், முதல் முழக்கமே 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்பதுதான். சொன்னதைச் செய்வோம் என்பதை அரசியல் இலக்கணமாகக் கொண்ட தலைவர் கலைஞர், அதன்படி உழைத்தார், உழைத்தார், 81 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகத் தன் 95 வயது வரை ஓயாமல் உழைத்தார்.

    அண்ணா வழி என்பது அன்பு வழி. அறவழி. சுயமரியாதைப் பாதையில் சமூகநீதி எனும் இலக்கை அடைகின்ற வழி. உறுதிமிகுந்த அந்த இலட்சியப் பாதையில், அண்ணா வழியில் அயராது உழைத்தால்தான் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும், இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து இன்பத்தமிழ் மொழியைக் காத்திட முடியும், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல முடியும். மாநிலத்தில் சுயாட்சியையும் மத்தியில் கூட்டாட்சியையும் நிலைநாட்ட முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

    பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்குப் பிறகு இந்த இயக்கம் என்னவாகும் என்று நினைத்தவர்களுக்கு, எதுவும் ஆகாது.. அண்ணா வழியிலேயே தொடர்ந்து பயணிக்கும் என்பதை உணர்த்தும் வகையில், அரைநூற்றாண்டு காலம் இந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் அண்ணாவின் கொள்கைத் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர்.

    வழிநடத்தியது மட்டுமின்றி, ஆண்டுதோறும் அண்ணா நினைவிடம் நோக்கி அவரது நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் நாள் அமைதிப் பேரணியில் அவரே நடந்தார். அவர் வழியில் நாம் நடந்தோம். 50 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடிநிலைக் காலத்தில் கழக ஆட்சி கலைக்கப்பட்டு, மிசா சட்டத்தின்கீழ் கழக முன்னோடியினர் பலருடன், உங்களில் ஒருவனான நானும் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதைகளை எதிர்கொண்ட தருணத்தில், மன உறுதி குலையாமல் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த நெருக்கடியான நிலையிலும், அண்ணா நினைவு நாளில் அமைதிப் பேரணியை நடத்தினார். 'அண்ணா துயிலுமிடத்தில் அஞ்சலி செலுத்த இயலாதோர் பட்டியல்' என்று முரசொலியில் வெளியிட்டு, கைதான கழகத் தோழர்களின் விவரங்களைப் பத்திரிகைத் தணிக்கையை மீறி, கழகத்தினரும் அவர்தம் குடும்பத்தினரும் அறிந்துகொள்ளும்படி செய்தவரும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான்.

    பேரறிஞர் அண்ணாவிடம் இதயத்தை இரவலாகப் பெற்று, 50 ஆண்டுகாலம் இயக்கத்தைத் திறம்பட நடத்தி, இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் தலைவராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் நம்மைவிட்டுப் பிரிந்தபோது, அவர் விரும்பியபடியே வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுக்குப் பக்கத்திலேயே நிரந்தர ஓய்வெடுக்கத் தொடங்கினார். கழகத்தைத் தலைமையேற்று நடத்திய அந்த இருபெரும் தலைவர்களையும், ஐம்பெரும் முழக்கங்களையும் நெஞ்சில் ஏந்தி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை உங்களில் ஒருவனான நான், உங்களின் பேராதரவுடன் வழிநடத்தி வருகிறேன்.

    கழகத்தை 6-ஆவது முறையாக அரியணை எற்றியதில் உடன்பிறப்புகளான உங்களின் அயராத உழைப்புக்கு முதன்மையான பங்கு உண்டு. உங்களை வழிநடத்தும் பொறுப்பைச் சுமந்திருக்கும் நான் ஒவ்வொரு நாளும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறேன். பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விடியல் வெளிச்சத்தைக் காண்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழ்நாடு பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கல்வியிலும் கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை அந்த ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது. இந்தியாவுக்கே முன்னோடியான சமூகநலத் திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது.

    உங்களில் ஒருவனான என்னுடைய இந்தப் பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகளும்தான். அதனால்தான் எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதலமைச்சர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை.

    பேரறிஞர் அண்ணா தி.மு.கழகத்தைத் தமிழ்நாட்டில் அரியணையில் ஏற்றியது என்பது இந்திய அரசியலில் ஒரு பெரும் திருப்பம். 1967-இல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் பாதையைப் பின்பற்றியே ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், அண்ணாவின் பெயரைத்தான் உச்சரிக்க வேண்டியிருந்தது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் கொள்கைக்கான வெற்றி.

    இப்போதும் நாம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க..

    வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அ.தி.மு.க.

    மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அ.தி.மு.க.

    மக்களிடம் செல் என்று பேரறிஞர் அண்ணா சொன்னது போல, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாத கொரோனா காலத்திலும் மக்களிடம் சென்றது, ஆட்சியில் மகத்தான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஐந்தாண்டுகளிலும் மக்களுடனேயே பயணிக்கிறது. மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பா.ஜ.க.வும் அதனுடன் இணைந்துள்ள அ.தி.மு.க.வும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, அண்ணாவின் தம்பிகளான-கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும். அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம்.

    என்றென்றும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் கழகக் கிளைகள்தோறும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம்.

    அண்ணா வழியில் அயராது உழைப்போம். மக்களிடம் செல்வோம். அவர்களின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
    • வண்ணாரப்பேட்டை பகுதியில் திருவையாறு புறவழிச்சாலையில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் திரண்டனர்.

    தஞ்சாவூா்:

    டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி மூடப்பட்டது.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டு சம்பா, தாளடி சாகுபடி காலதாமதமாக நடவு செய்யப்பட்டது.

    இதனால் நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதால் மேட்டூர் அணையில் இருந்து இந்த மாதம் இறுதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் விவசாயிகள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் 15 தினங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் திருவையாறு புறவழிச்சாலையில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் திரண்டனர்.

    பின்னர் டிராக்டரை சாலையில் மறித்து வைத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீரை திறந்து பயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகள், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்தோம். தற்போது தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளோம். உடனடியாக தண்ணீர் திறந்தால் மட்டுமே இந்த பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் சாகுபடியை காப்பாற்ற முடியும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் .

    இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.
    • இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து பிரசாரத்தை தொடங்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு தி.மு.க. கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன.

    ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு கட்சியினருடனும் இந்த குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் விரைவில் பேச்சு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

    கூட்டணி தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து பிரசாரத்தை தொடங்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    கூட்டணியில் இணைய தே.மு.தி.க. விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×