என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.
- இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து பிரசாரத்தை தொடங்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்கு தி.மு.க. கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு கட்சியினருடனும் இந்த குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் விரைவில் பேச்சு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
கூட்டணி தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து பிரசாரத்தை தொடங்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கூட்டணியில் இணைய தே.மு.தி.க. விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- விஜயை பேட்டி எடுத்தவர்கள் அவர் இவ்வாறு கூறியதாக பேட்டி அளித்தனர்.
- விஜயின் இந்த பேட்டி இணையத்தில் விமர்சிக்கப்பட்டது.
என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டை ஒட்டி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பேட்டி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. விஜயை பேட்டி எடுத்தவர்கள் அவர் இவ்வாறு கூறியதாக பேட்டி அளித்தனர். இது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விஷயமாக பார்க்கப்பட்டது. விஜயின் இந்த பேட்டி இணையத்தில் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், விஜய் ஏன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது இல்லை? என்று தவெக நிர்வாகி ராஜ் மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ராஜ் மோகன், ""நான் விஜய்.. இவங்க விஜய்.. இவரு விஜய்.. இந்த அம்மா விஜய்.. நாங்க எல்லாரும் விஜய்.. எளிய வீட்டுப் பிள்ளைகள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். நாங்க எல்லாரும் உங்களைச் சந்திக்கிறோம். சரியான சந்தர்ப்பத்தில் அதுவும் நடக்கும்" என்று வித்தியாசமான பதிலை அளித்தார்.
- தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
3-ம் ஆண்டு விழாவையொட்டி தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
த.வெ.க.. கொள்கை தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. த.வெ.க. கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. இதையடுத்து த.வெ.க. கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.
- சென்னையில் விஜித் பச்சான் & ப்ரீத்தா தம்பதியின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
- இது தொடர்பான புகைப்படங்களை திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்கர் பச்சான் தனது மகன் விஜித்தின் திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்றது.
நேற்று சென்னையில் விஜித் பச்சான் & ப்ரீத்தா தம்பதியின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்கள் விஜித் பச்சான் & ப்ரீத்தா ஆகியோரை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், இந்த திருமண வரவேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை.
கோவை:
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்து உள்ளது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 டாலர்களாக குறைந்தபோதிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மக்களின் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை.
11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ள நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது நடைமுறைக்கு சார்ந்தது அல்ல. அதுவும்தவிர இது நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறி அல்ல.
கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்காக எந்தவித சிறப்பு திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் சுங்கவரியை குறைத்து உள்ளது மட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.
ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரிக்கை வைப்பது ம.தி.மு.க.வின் நோக்கம் அல்ல. வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சி தொடரும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பது குறித்த பேச்சுகளை முன்கூட்டியே பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபிறகே சீட் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், உ யர்மட்டக்குழு உறுப்பினர்மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு, தினமும் வரலாறு காணாத உச்சம் என்ற பட்டத்துடனேயே பயணித்து வந்தது. இப்படியாக விலை உயர்ந்து கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. இந்த விலை உயர்வு மேலும் இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.
அப்படிப்பட்ட சூழலில், நேற்று முன்தினம் தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டது. காலை மற்றும் பிற்பகலில் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் சரிந்திருந்தது.
மேலும் விலை குறையுமா? அல்லது மீண்டும் வழக்கம் போல ஏற்றம் கண்டுவிடுமோ? என எல்லோரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், 2-வது நாளாக நேற்றுமுன்தினம் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்தது.
கடந்த 31-ந்தேதி ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 850-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
கடந்த மாதம் 24-ந்தேதி விலை தொடர்ந்து அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்திருந்த சூழலில், தொடர்ந்து விலை குறைந்ததால், மீண்டும் தங்கம் விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் நேற்று வந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,900-ம், சவரனுக்கு ரூ.15 ஆயிரத்து 200-ம் குறைந்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
1-2-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
31-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
30-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800
29-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,34,400
28-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
1-2-2026- ஒரு கிராம் ரூ.320
31-1-2026- ஒரு கிராம் ரூ.320
30-1-2026- ஒரு கிராம் ரூ.405
29-1-2026- ஒரு கிராம் ரூ.425
28-1-2026- ஒரு கிராம் ரூ.400
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- வருமான வரி சலுகையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டே போதுமான சலுகைகளை அறிவித்துவிட்டார்கள்.
- கண்டெய்னர் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார்கள்.
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி சலுகை அறிவிப்புகள் இடம்பெறாதது குறித்து, பொருளாதார நிபுணர் ராமசேசன் கூறியதாவது:-
நடுத்தர மக்கள் எப்போதும் வருமான வரி சலுகையை எதிர்பார்ப்பார்கள். இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகை அறிவிப்பு எதுவும் இல்லை.
தற்போதுள்ள சூழலில் பொருளாதாரத்தில் நிலையான தன்மையை தக்க வைத்து கொள்வது அவசியம் என்ற அடிப்படையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி தான் காரணமாகும். இந்தியா அதிகளவு இறக்குமதியும், குறைந்த அளவு ஏற்றுமதியும் செய்கிறது. இதை சரி செய்வதற்கு நிலையான அறிவிப்புகளை மட்டுமே வெளியிட முடியும்.
வருமான வரி சலுகையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டே போதுமான சலுகைகளை அறிவித்துவிட்டார்கள். எனவே, இந்த ஆண்டு மேலும் வருமான வரி சலுகைகளை கொடுக்க முடியாத நிலை இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டே சில துறைகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.
சீனா தயாரிக்கும் 'செமி கண்டக்டர்' மீது மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை இல்லாததால் செமி கண்டக்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்திக்கு, இந்த பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மிகப்பெரிய தொழில் மாற்றத்தை உண்டாக்கும். கண்டெய்னர் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார்கள். இதன் மூலம் ஏற்றுமதிக்கு தேவையான செலவினம் குறையும்.
உற்பத்தி அமைப்புகளுக்கு தேவையான அறிவிப்புகள் அனைத்தும் தற்போதைய பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது வரவேற்கக்கூடிய பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது.
- தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்.
த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.
முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.
- பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் - ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
"நம்முடைய நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள், என்னென்னவோ கனவுகள் கண்டார்கள்... இந்த ஒற்றுமையைச் சிதைக்க முடியுமா என்று பார்த்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணங்கள்தான் சிதைந்து போயிருக்கிறது. நம்முடைய இந்தத் தோழமையை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. ஏன் என்றால், இது எண்ணிக்கைக்காக அமைந்த கூட்டணி அல்ல; எண்ணங்களுக்காக அமைந்திருக்கும் கூட்டணி. நம்முடைய இந்திய நாட்டையும் - தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை, லட்சியமாகக் கொண்டு அமைந்திருக்கும் கூட்டணி.
பாசிச பா.ஜ.க., தன்னுடைய ஆக்டோபஸ் கொடுங்கரங்களை அனைத்துப் பக்கமும் நீட்டி, கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. இந்திய நாடு, இதுவரை காப்பாற்றி வைத்து வந்த அனைத்து விழுமியங்களையும் சிதைக்கும் செயலை, ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை, தங்களுக்கு ஏற்ற மாதிரி சிதைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.
பா.ஜ.க. எவ்வளவு ஆபத்தானது; எவ்வளவு குறுகிய சிந்தனை கொண்டது; எந்தளவிற்குப் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றால், அவர்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு நாடு என்றால், அதில் ஒரு மதம் - ஒரு மொழி - ஒரு பண்பாடு - ஒரே ஒரு தலைமைதான் இருக்க வேண்டும். மாநிலங்களின் வளத்தைச் சூறையாடி, ஒன்றியத்தில் குவிக்கிறார்கள். மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
மதச்சார்பின்மை - சோசலிசம் - சமநீதி - சமூகநீதி - பொதுவுடைமை - பொது உரிமை உள்ளிட்ட சொற்களைக் கேட்டாலே, பா.ஜ.க.வினருக்குக் கசக்கிறது. இந்தச் சொற்களை எல்லாம், ஆட்சியில் இருந்து மட்டுமல்ல - அகராதியில் இருந்தே அழிக்க வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள். பரந்து விரிந்த நம்முடைய இந்திய நாடு, இப்போது மிகப்பெரிய நெருக்கடிக்கும் - ஆபத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நினைத்தது போன்று, 400 இடங்கள், 370 இடங்கள் என்று வெற்றி பெற்றிருந்தால், இப்போது இருப்பதைவிட நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இந்தியாவில் இருக்கும் ஜனநாயகச் சக்திகள் அனைத்தையும் இன்றைக்கு இணைத்து, இந்தியா கூட்டணியை உருவாக்கி, பா.ஜ.க.வின் வேகத்தைக் குறைத்திருக்கிறோம். ஆனாலும், பெரும்பான்மை இல்லாத நேரத்திலேயே, பா.ஜ.க. தன்னுடைய கொடூரமான நகங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில், அனைவரும் குறிப்பிட்ட நாம் எச்சரிக்கையாகவும் - கவனமாகவும் இருக்க வேண்டும்!
ஏன் என்றால், வரப்போகும் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டுக்கும் - N.D.A. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் - தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டுக்கும் - அடுக்கடுக்காக துரோகங்களை செய்துவிட்டு, துரோகத்திற்கு ஏற்ற கொத்தடிமைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி வருகிறது, பா.ஜ.க.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை வழக்குகளைக் காட்டி மிரட்டி அமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர்தல் கூட்டணியின், தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி , அ.தி.மு.க. என்ற பெயரையே சொல்லவில்லை. ஏன், அவர் அ.தி.மு.க.வின் பெயரைச் சொல்லவில்லை தெரியுமா? ஏன் என்றால், அ.தி.மு.க. என்பது தனிக்கட்சி கிடையாது. பா.ஜ.க.வின் கிளை அமைப்பு. அந்தக் கிளை அமைப்பைச் சேர்ந்த பழனிசாமி அவர்கள், மோடி கொடுக்காத வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முக்கியமாக, மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தில், 50 நாட்கள்கூட வேலையைத் தராமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் சீரழித்தது என்று, நாட்டுக்கே நன்றாகத் தெரியும். இப்போது, தேசத்தந்தை காந்தியின் பெயரையே அழித்திருக்கும் அந்தத் திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போவதாக பா.ஜ.க. சொல்கிறது! ஆனால் பழனிசாமி அவர்கள், 150 நாட்கள் வேலை தருவோம் என்று, முதலாளிகளை மிஞ்சும் பர்ஃபார்மென்ஸ்-ஐ இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எப்படியும் தோல்வி உறுதி என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசும் இந்தப் பட்ஜெட்டிலும் நம்மைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில், நேரடியாக பா.ஜ.க. ஆட்சி என்று சொல்ல கூச்சப்பட்டு, டபுள் எஞ்சின் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. சொல்லும் டபுள் எஞ்சின் என்பது டப்பா எஞ்சின் என்று நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன்... போதை மருந்து கடத்தலா? பா.ஜ.க. ஆளும் குஜராத்தைப் பாருங்கள்! குற்றச்சம்பவங்களா? பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தைப் பாருங்கள்! மாநிலமே பற்றி எரிவதை பார்க்க வேண்டுமா? பா.ஜ.க. ஆட்சி செய்த மணிப்பூரைப் பாருங்கள்! இன்னும் சொல்கிறேன்... பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களாக, ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே எந்த மாநிலம் என்று சொல்கிறதே... உத்தரப்பிரதேசம் - ராஜஸ்தான் - மத்தியப் பிரதேசம்! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆளும் கட்சி! சரி, முதல் மூன்று மாநிலங்கள் மட்டும்தானா? அடுத்த மூன்று இடங்களில் இருப்பது யார்? பீகார் - ஒடிசா - மகாராஷ்டிரா! இந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்கிறது. இதுதான் டப்பா எஞ்சினின் லட்சணம்!
நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாம் இன்றைக்குச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிகமான வளர்ச்சியடைந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை திராவிட மாடல் உயர்த்தியிருக்கிறது! இங்கு பா.ஜ.க.வின் டப்பா எஞ்சினுக்கு வேலையே கிடையாது! இதே உணர்வைத்தான், மக்களின் முகங்களில் மகிழ்ச்சியாக நான் பார்க்கிறேன்!
அண்மையில், இந்தியா டுடே பத்திரிகையும் - சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்! நான் உறுதியாகச் சொல்கிறேன், நமக்கான ஆதரவு நிச்சயம் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்! கருத்துக்கணிப்புகள் - கருத்துத்திணிப்புகள் அனைத்திலும் கவனத்தைச் செலுத்தி, நம்முடைய எண்ணத்தை சிதறவிட்டுவிட வேண்டாம்; மெத்தனமாக இருந்துவிட வேண்டாம். மக்களுடன் இணைந்து நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! தோழமைக் கட்சியினர் அனைவரும் இன்னும் வேகமாகப் பரப்புரைகளைத் தொடங்க வேண்டும் என்று உரிமையுடன் நான் கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் நாம் பொறுப்பேற்று, நாம் பெறப்போகும் வெற்றி - "பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்" என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழங்கும் வெற்றியாக இருக்க வேண்டும்! ஒற்றுமை இருக்கும் இடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்! வெல்வோம் ஒன்றாக!" என தெரிவித்தார்.
- தலைவர் கருணாநிதி, "திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், நானே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்" என்று சொன்னார்.
- ஸ்டாலின் என்று என்னை அழைக்கும்போதெல்லாம், என்னுள் சிவப்பு வந்து குடிகொள்கிறது.
சென்னையில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
"'எல்லாருக்கும் எல்லாம்' எனும் சமத்துவச் சமுதாயத்தை அமைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் தோழர்களின், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, உரையாற்றுவதை, எனக்குக் கிடைத்த பெருமையாக எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கம்யூனிசம் என்பது, ஒரு உணர்வு! மனிதர்கள் அனைவருக்குள்ளும் உருவாக வேண்டிய உணர்வு! அந்த உணர்வுக்கு அரசியல் வடிவம் கொடுத்து, செங்கொடியை ஏந்தி உழைத்துக் கொண்டிருக்கும் உங்களின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை. இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்ட அய்யா நல்லக்கண்ணு அவர்களும் நூற்றாண்டைக் கடந்திருக்கிறார். இது எந்த இயக்கத்திலும் இல்லாத மிகப்பெரிய சாதனை.
நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும், தமிழ்நாட்டில் இயக்கத்தை வலிமையாக நடத்திக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல; திராவிட மாடலால் தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களில் ஒருவனாக நான் மனதார வாழ்த்துகிறேன்.
திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடைமை இயக்கத்திற்கும் இலக்கு ஒன்றுதான்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய ஒற்றை இலக்கு. அதனால்தான், திராவிட இயக்கக் கொடிகளில் சிவப்பு இருக்கிறது; திராவிட முன்னேற்றக் கழக கொடியிலும் சரிபாதியாக சிவப்பு இருக்கிறது. நம்முடைய கொள்கைகளில், அரசியல் வழிமுறைகளில், சிறு சிறு வேறுபாடுகள் இருந்தாலும், நம்முடைய பொது இலக்கு சமத்துவச் சமுதாயம்தான்.
அதனால்தான், இந்த மேடையில், தோழமைக் கட்சியினர் அத்தனை பேரும், இந்த நூற்றாண்டு ஆலமரத்தை வாழ்த்த ஒன்று கூடியிருக்கிறோம். இந்த ஒற்றுமைதான், இந்திய நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒற்றுமை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கொள்கைகள் இங்கு நிலைபெற வேண்டும்; அதிகமான உழைப்பை கொடுக்க வேண்டும் என்று, நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
திராவிட இயக்கத்திற்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உள்ள நட்பு அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இது நூறாண்டு காலமாகத் தொடரும் நட்பு. தலைவர் கருணாநிதி, "திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், நானே கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன்" என்று சொன்னார். அனைத்திற்கும் மேல், எனக்கு ஸ்டாலின் என்று பெயரும் வைத்தார். எனக்குள்ளும் அந்த உணர்வு ஓடுவதால்தான், உங்களில் ஒருவனாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்புகூட, சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சிராவயலில், உத்தமர் காந்தி - தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்திருக்கும் அரங்கத்தை நான் திறந்து வைத்தேன். அதேபோன்று, தொடர்ந்து, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காரல் மார்க்ஸ் சிலையை, வரும் 6-ஆம் நாள் திறந்து வைக்க இருக்கிறேன். இவ்வாறு, உங்களில் ஒருவனாக நானும் - என்னில் பாதியாக நீங்களும் இருப்பதால்தான், ஸ்டாலின் என்று என்னை அழைக்கும்போதெல்லாம், என்னுள் சிவப்பு வந்து குடிகொள்கிறது.
நமக்குள் இருக்கும் நட்பு என்பது, தேர்தல் அரசியலை கடந்த நட்பு. சாதியவாதம் - வகுப்புவாதம் - பெரும்பான்மை வாதம் – எதேச்சாதிகார வாதம் என்று, மக்களை ஒடுக்கும் அத்தனைக்கும் எதிராக, ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமை, நம்முடைய தோழமை. நான் உறுதியாக சொல்கிறேன்... இந்தத் தோழமைதான், பாசிசத்தை ஒழிக்கும் - வீழ்த்தும். இந்தத் தோழமைதான், எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும். இந்தத் தோழமைதான், மதவாதத்தை வீழ்த்தும். இந்தத் தோழமைதான், சர்வாதிகாரத்தை வீழ்த்தும்!" எனப் பேசினார்.
- கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை.
- கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
ஒன்றிய அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை எரியும் பொருளாதார பிரச்சனைகள் எதற்குமே தீர்வு காண்பதாக அமையவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளர்ச்சி, மக்களின் எதிர்பார்ப்புகள், அனைவருக்குமான பயன் என்பதை மூன்று குறிக்கோள்கள் என நிதிநிலை அறிக்கை உரையை நிதியமைச்சர் துவங்கினாலும் அது உண்மையில் கார்ப்பரேட் வளர்ச்சி, செல்வந்தர்களின் எதிர்பார்ப்புகள், பெரும்பான்மை மக்களிடமிருந்து பறிப்பு என்பதாகவே அமைந்திருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, செல்வக்குவிப்பிற்கு வழிவகுக்கிற இன்னொரு நிதிநிலை அறிக்கையாகவே இது அமைந்திருக்கிறது. ஆகவே, எளிய நடுத்தர மக்களின் நலனுக்கோ, சிறு தொழில்களை நெருக்கடியிலிருந்து மீட்கவோ, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கோ இந்த நிதிநிலை அறிக்கை உருப்படியான முன்மொழிவுகள் எதையும் உள்ளடக்கியதாக இல்லை.
நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான பகுதியாக திகழும் வருமான வரி திரட்டல் வர்க்க பாரபட்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் 10 சதவிகித மேல் தட்டு மக்கள் 65 சதவிகித செல்வத்தை வைத்துள்ள நிலையிலும் செல்வ வரி போன்ற ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை. மறுபுறம் மத்தியதர ஊழியர்களின் எதிர்பார்ப்பான கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரிகளின் பங்கு கார்ப்பரேட் வரிகளை விட மொத்த வரி வசூலில் அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் அறிவித்ததாக இந்த அரசு பறைசாற்றி கொண்டாலும் வருவாய் திரட்டலில் பெருமளவு மறைமுக வரிகள் வாயிலாகவே வசூலிக்கப்படுவது சாதாரண மக்கள் மீதே சுமைகளை ஏற்றுவதாக உள்ளது.
கிராமப்புற மக்களுக்கு இந்தநிதிநிலை அறிக்கை வஞ்சனை இழைத்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை ஒழித்து, 100 வேலை நாட்களாக இருந்ததை 125 நாட்களாக உயர்த்தப்படுவதாக படாடோபமாக அறிவித்தாலும், அதற்கான ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. ஆண்டிற்கு 125 வேலை நாட்களை சராசரி நாட்கூலி ரூ 355 என்பதை கொண்டு கணக்கிட்டால் 9 கோடி பயனாளிகளுக்கு ரூ 4 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் வி பி ஜி ராம் ஜி திட்டத்திற்கு ரூ 95692 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு பங்கு கூட இல்லை எனும் போது அரசின் பொய்மைகள் அம்பலம் ஆகியுள்ளன. கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ 8000 கோடி அதாவது 4 சதவிகிதம் மட்டுமே கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது அதிகரிப்பல்ல, உண்மை மதிப்பில் வெட்டே ஆகும். கடந்தாண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளை விட கிராம சாலைகள் மேம்பாடு, கிராமப்புற மக்கள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றுக்கான திருத்திய மதிப்பீடுகள் குறைவாக உள்ளன. நிதிநிலை அறிக்கையில் குறைவாக ஒதுக்கப்படும் தொகைகள் கூட இன்னும் குறைவாகவே மக்களுக்கு போய்ச் செல்கின்றன.
அமெரிக்காவின் 50 சதவிகித இறக்குமதி வரிகளும், அச்சுறுத்தப்படும் 500 சதவிகித உத்தேச வரிகளும் இந்திய நாட்டின் சிறுதொழில்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில் அவற்றின் மீட்சிக்கான நம்பிக்கையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிதியத்திற்கு 10000 கோடி, சுயசார்பு இந்தியா நிதியத்திற்கு ரூ 2000 கோடி என்ற அறிவிப்புகள் எல்லாம் யானை பசிக்கு சோளப் பொரி போன்றதே ஆகும்.
இந்திய நாட்டின் பெரும் பிரச்சனையாக உள்ள வேலையின்மைக்கு நிதிநிலை அறிக்கை உரிய கவனம் எதுவும் செலுத்தவில்லை. 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் 14 சதவிகித வேலையின்மை நிலவுகிற சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமும், வேலை வாய்ப்பு ஊக்கத்தொகை திட்டமும் கார்ப்பரேட்டுகளுக்கு பயனளித்துள்ளனவே தவிர, வேலை வாய்ப்புகளில் பிரதிபலிக்கவில்லை. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான பொது முதலீடுகள் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்கிற சூத்திரமும் நடைமுறையில் பொய்த்து போய் உள்ளது. கல்வி, சுகாதார ஒதுக்கீடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க உயர்வும் இல்லை.
பொதுத்துறை பங்கு விற்பனைக்கு 80000 கோடி ரூபாய் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் கீழே 26 சதவிகிதம் வரை கூட குறைக்கலாம் என்பதும் அபாயகரமான முன்மொழிவு. அரசு உடமை என்பதிலிருந்து அரசின் கட்டுப்பாடு என்பதாக தரம் இறக்குவது எதிர்காலத்தில் முழுமையாக தனியார்கள் வசம் ஒப்படைப்பதற்கான திட்டமே தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய முன்மொழிவு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி ஏற்பாடுகள் மீதும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில்வே திட்டங்களில் வஞ்சனை தொடர்ந்து உள்ளது. அரிய வகை கனிம வளங்கள் பற்றிய அறிவிப்பு கார்ப்பரேட் சுரண்டலுக்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கீழடிக்கான எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டில் உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எந்த வகையிலும் தேசத்தின் நலனுக்கோ, மக்களின் வாழ்வுக்கோ, தமிழ்நாட்டின் உரிமைக்கோ உதவாத இந்த நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்த்து மக்கள் அனைவரும் கண்டன குரல் எழுப்பிட முன்வருமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






