என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 55 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார்.

    இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக

    ஹான் ஹூ 21-14 என 2-வது செட்டை வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பி.வி.சிந்து 21-12 என கைப்பற்றியதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சலியா காலிறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • டி- 20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முன்னதாக 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 போட்டிகள் அமெரிக்காவில் நடந்துவருகிறது.
    • வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருங்கிணைக்கும் டி- 20 உலகக் கோப்பை 2024 சீரிஸ் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.

    இந்நிலையில் நேற்று (மே 23) சர்வதேச டி-20 தொடரின் 2 வது போட்டி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ப்ரேரி வியூ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில், வங்கதேசத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அமெரிக்கா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

     

    இந்த போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்யவே, வங்கதேச அணி பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு அமெரிக்காவை 144/6 என்ற ரன் கணக்கில் மட்டுப்படுத்தினர்.

    ஆனாலும் 145 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம் 138 ரன்கள் வரை மட்டுமே எடுத்தது.  இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவிடம்  அந்த அணி தோற்றது. வெற்றியின் விளிம்பு வரை சென்றும் அதை எட்ட இயலாதது வங்கதேச அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

     

     முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றில் கூறுகையில், உலகக்கோப்பை தொடருக்கு வங்கதேச அணி இன்னும் முழுமையாக தயாராகவில்லை, எங்களின் பயிற்சி போதாது, பெரிய அணிகளுடன் மோதுவதற்கான வலு இன்னும் வங்கதேச அணிக்கு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி,  அமெரிக்க அணி உடனான தோல்விக்குப் பின் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 3 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரின் 3 வது மற்றும் கடைசி போட்டி நாளை (மே 26) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு ஏற்றம் கண்டது.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ்- வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களை வரவேற்கும் விதமாகவும், ராஜஸ்தான் அணி கேப்டர் சஞ்சு சாம்சன் கேரளாவை சேர்ந்த என்பதாலும் தமிழ்நாடு - கேரள மக்களை இணைக்கும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலுடன் எடிட் செய்து அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டது. இதை நெட்டிசன்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை Tag செய்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

    • இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்

    டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

     

    நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

     

    • இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சுக்கே முன்னுரிமை அளிக்கும்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு ஏற்றம் கண்டது.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ்- வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான (2016-ம் ஆண்டு) ஐதராபாத் அணி லீக் சுற்றில் (8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 17 புள்ளி) புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்து மலைக்க வைத்த அந்த அணி முதலாவது தகுதி சுற்றில் 159 ரன்னில் முடங்கி தோல்வியை தழுவியது. அந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. அவர்கள் மீண்டும் ரன்வேட்டைக்கு திரும்பும் முனைப்புடன் காத்திருக்கிறார்கள்.

    டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 533 ரன்), அபிஷேக் ஷர்மா (3 அரைசதத்துடன் 470), ஹென்ரிச் கிளாசென் (3 அரைசதத்துடன் 413), நிதிஷ் குமார் ரெட்டி (2 அரைசதத்துடன் 285) ஆகியோர் தான் ஐதராபாத் அணியின் பேட்டிங் தூண்கள். அவர்கள் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அந்த அணியின் ரன் வேகம் அமையும். பந்து வீச்சில் டி.நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    அறிமுக சாம்பியனான (2008) ராஜஸ்தான் அணி லீக் சுற்றில் (8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 17 புள்ளி) ஐதராபாத்துடன் சமநிலை வகித்தாலும் ரன்-ரேட்டில் பின்தங்கியதால் 3-வது இடம் பெற்றது. முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்ற அந்த அணி கடைசி கட்டத்தில் சற்று தடுமாறினாலும், வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூருவின் கனவை சிதைத்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறி நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (4 அரைசதம் உள்பட 567 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (5 அரைசதம் உள்பட 521), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 393) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜோஸ் பட்லர் விலகலால் ஏற்பட்டு இருக்கும் சரிவை சமாளிக்க டாம் கோலர் காட்மோர், ஹெட்மயர், ரோமன் பவெல் பயனுள்ள பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த சீசனில் லீக் சுற்றில் ஒரு முறை சந்தித்துள்ளன. இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் முதலாவது தகுதி சுற்றில் செய்த தவறுகளை களைந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க ராஜஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 10 ஆட்டங்களில் ஐதராபாத்தும், 9 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன.

    சேப்பாக்கம் ஆடுகளம் பொதுவாக மெதுவான தன்மை கொண்டது என்பதால் இரு அணிகளும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகறது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினுக்கு இது சொந்த ஊர் மைதானம் என்பதால் அவரது பந்து வீச்சு ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

    பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சுக்கே முன்னுரிமை அளிக்கும். இந்த சீசனில் இங்கு நடந்துள்ள 7 லீக் ஆட்டங்களில் 5-ல் 2-வது பேட் செய்த அணியே வென்றிருப்பது நினைவு கூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம் அல்லது கிளென் பிலிப்ஸ் அல்லது விஜயகாந்த் வியாஸ்காந்த், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷபாஸ் அகமது அல்லது மயங்க் மார்கண்டே, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷவர்குமார், நடராஜன்.

    ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோலர் காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், ரோமன் பவெல் அல்லது கேஷவ் மகராஜ், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள்.
    • அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆர்வமில்லாதது போல் தெரிகிறது.

    ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அவர் இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 52 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்சிபி அணியில் விளையாடவில்லை எனவும் அடுத்து வருடம் ஆர்சிபி அணியில் இருந்து மேக்ஸ்வெல்லை கழற்றி விட வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னார் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாம் மேக்ஸ்வெல் பற்றி பேச வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்று வரும் போது மட்டும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இங்கே ஆர்வமில்லாதது போல் தெரிகிறது. குறிப்பாக அவுட்டானால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் சென்று விடுகிறது.

    அதனால் ஜாலியாக இருந்து சிரித்து விட்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வார். ஆனால் இறுதி முடிவு என்ன? நீங்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும். எனவே அவரை விட்டு ஆர்சிபி நகர வேண்டும். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாங்கள் இங்கே அமர்ந்து விவாதிக்கிறோம். ஆனால் அவர்கள் 6 வெற்றியுடன் தகுதி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான முடிவு கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது. அது அவர்களிடம் இல்லாததால் அங்கே பிரச்சினை இருக்கிறது.

    இவ்வாறு திவாரி கூறினார்.

    • 2007-க்குப் பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.
    • இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

    ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

    2007-க்குப் பின் 17 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்தத் தொடரில் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்வியை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

    இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்தியா அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய அணியாக இல்லை என முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.

    இது அவர் கூடியதாவது:-

    இந்தியா கணிக்கக்கூடிய அணியாகும். இந்திய அணியின் தரத்தை எதிரணியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். ஆம் அவர்கள் நல்ல வீரர்கள். ஆனால் அவர்கள் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் ரிஸ்க் எடுத்து விளையாட தயாராக இல்லை. அவர்கள் எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுப்பவர்களாக இல்லை.

    என்று டேவிட் லாய்ட் கூறினார். 

    • உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
    • எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

    அகமதாபாத்:

    இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளான ராஜஸ்தான் ராயல்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அதனால் 2008 முதல் தொடர்ந்து 17-வது வருடமாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் பெங்களூரு பரிதாபமாக வெளியேறியது. அதே காரணத்தால் விராட் கோலியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணிக்காக மொத்தம் 8000 ரன்கள் அடித்துள்ள அவர் இந்த வருடம் 741 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். இருப்பினும் வழக்கம் போல முக்கிய போட்டியில் மற்ற வீரர்கள் சொதப்பியதால் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை கோட்டை விட்ட விராட் கோலி சோகத்துடன் வெளியேறினார்.

    இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் மெஸ்சி, ரொனால்டோ போன்ற கால்பந்து ஜாம்பவான்கள்போல ஆர்சிபி அணியை விட்டு வெளியேறி விராட் கோலி வேறு அணிக்கு விளையாட வேண்டும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். மற்ற விளையாட்டுகளின் மகத்தானவர்கள் சில அணிகளை விட்டு வெளியேறி மற்ற அணிகளில் சேர்ந்து வெற்றிகளை கண்டுள்ளனர். அதேபோல கடுமையாக முயற்சித்த விராட் கோலி மீண்டும் ஆரஞ்சு தொப்பியை வென்றும் அவருடைய அணி தோல்வியை சந்தித்தது.

    ஆர்சிபி அணிக்கு அவர் மதிப்பை கொண்டு வருகிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் விராட் கோலி கோப்பைக்கு தகுதியானவர்.

    எனவே கோப்பையை வெல்ல பெற உதவும் அணிக்காக அவர் விளையாடத் தகுதியானவர். உண்மையில் டெல்லியில் பிறந்த விராட் கோலி அந்த அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே இது விராட் கோலி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரமாகும்.

    ரொனால்டோ, மெஸ்ஸி, ஹரி கேன் ஆகியோர் தங்களுடைய அணிகளை விட்டுச் சென்று வேறு அணியில் விளையாடி வெற்றி கண்டனர்.

    இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

    • இந்த ஐ.பி.எல் தொடரில் 14 ஆட்டங்களில் ஆடிய டோனி 161 ரன்களை எடுத்துள்ளார்.
    • அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

    இந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் டோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது.

    இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

    ஆனால் இதுவரை டோனியிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

    அதில், "எனக்கு அது தெரியாது. இதற்கான பதில் எம்.எஸ்.டோனிக்கு மட்டும் தான் தெரியும். அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் மரியாதை தருவோம். அவர் சம்பந்தமான முடிவுகளை எப்போதும் அவர் தான் எடுப்பார். சரியான சந்தர்ப்பங்களில் அந்த முடிவுகளை அவர் தெரிவிப்பார். ஆனால் அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் என்னுடைய விருப்பமும் ரசிகர்களின் விருப்பமும் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்டதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    • தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.
    • நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று ராயுடு பதிவிட்டுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து 17 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கோப்பை கனவு தகர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு அணியின் தோல்வியை சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்களாக வெளியிட்டு கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெங்களூரு அணியின் தோல்வி குறித்து முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ராயுடு காட்டமாக விமர்சித்துள்ளார்.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் பேட்டி அளித்த ராயுடு, "கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கோப்பைகள் வெல்லப்படுவதில்லை. சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளே ஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.

    திறமையான இந்திய வீரர்களை பெங்களூரு அணி கண்டுபிடிக்க வேண்டும். திறமையான இந்திய வீரர்களை கண்டுபிடித்ததால் தான் சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகள் வெற்றிகரமான அணிகளாக உள்ளது என்பதை பெங்களூரு அணி உணர வேண்டும்" என்று பேசியுள்ளார்.

    இது மட்டுமின்றி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கடந்த முறை கோப்பை வென்ற சென்னை அணி வீரர்களின் வீடியோ ஒன்றையும் ராயுடு பகிர்ந்துள்ளார். அதில், சில சமயங்களில் சிலவற்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. நாங்கள் (சி.எஸ்.கே.) 5 முறை சாம்பியன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹான்மேனுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இது இவரது 1100-வது வெற்றி ஆகும்.

    இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 4-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜூலை மாதம் முதல் 2027 டிசம்பர் மாதம் வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட வேண்டும்.
    • வருடத்திற்கு 10 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு சரிபட்டு வராது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

    இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளராக விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.

    தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் 2025 ஜூலை முதல் 2027 டிசம்பர் மாதம் வரையாகும். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் ஸ்டீபன் பிளமிங் யோசிப்பதாக தகவல் வெளியானது. எம்.எஸ்.டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக பிசிசிஐ தன்னை அணுகியது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வாய்ப்பை நிராகரித்தாகவும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இருந்தால் இதை ஏற்பேனா என்பதை அறிந்து கொள்வதற்காக, ஐபிஎல் போட்டியின்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை மெல்ல மெல்ல நடைபெற்றது. நான் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை விரும்புகிறேன். ஆனால் எனது வாழ்க்கையில் கூடுதலான நேரத்தை ஆஸ்திரேலியாவில் செலவழிக்க விரும்புகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக நீங்கள் பதவி ஏற்றுக் கொண்டால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே, தலைமை பயிற்சியாளராக விரும்பினால், ஐபிஎல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

    மேலும், தலைமைப் பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 அல்லது 11 மாத வேலையாகும். இப்போது எனது வாழ்க்கை முறைக்கும் நான் மிகவும் ரசிக்கும் விஷயங்களுக்கும் தலைமை பயிற்சியாளர் பதவி பொருந்தாது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    ×