என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து பிரதமர் மோடி அகற்றப்படுவார் என்று வைகோ கூறினார். #MDMK #Vaiko

    சென்னை:

    ம.தி.மு.க.வின் 26-வது ஆண்டு தொடக்க விழா எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடந்தது.  பெரியார், அண்ணா சிலைகளுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட தலைவர் சு.ஜீவன், கழக குமார், பூங்கா நகர் ராம்தாஸ், முராக்புகாரி, தென்றல் நிசார், மல்லிகா தயாளன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ம.தி.மு.க. தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை கடந்து இன்று 26-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு சோதனைகள், இன்னல்களை கடந்து தொண்டர்களின் உழைப்பால் வெற்றி நடைபோட்டு வருகிறது.

     


    வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து பிரதமர் மோடி அகற்றப்படுவார். 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். 18 சட்டமன்ற தொகுதிகளிலும், நடைபெற இருக்கிற 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றிபெறுவோம்.

    தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும். 25 ஆண்டுகால வரலாற்றில் பல எண்ணற்ற போராட்டங்களில் ம.தி.மு.க. பங்கேற்றுள்ளது.

    ‘ஸ்டெர்லைட் ஆலை’ மூடப்பட்டதன் மூலம் பிரதான வெற்றி ம.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. தன்னலமற்ற சேவை இயக்கமாக ம.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ம.தி.மு.க.வின் காவல் தெய்வமாக தொண்டர்கள் இருக்கிறார்கள்.

    இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழகத்திற்கு வர வேண்டிய பல்வேறு திட்டங்கள் ஊழல் அரசின் அணுகு முறையால் கிடைக்கப்பெறவில்லை. 80 லட்சம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

    குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஜனநாயக உரிமை, மக்கள் நலன் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளது. ஊழல் மலிந்த அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு வைகோ பேசினார். #MDMK #Vaiko

    மத்திய மந்திரியும், பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான ஸ்மிரிதி இரானி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரியங்கா தனது கணவரின் பெயரை விட என் பெயரை தான் அதிகம் உச்சரிக்கிறார் என சாடி பேசியுள்ளார். #SmritiIrani #Priyanka
    அமேதி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கி 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இன்று முக்கிய தொகுதிகளாக கருதப்படும் அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கு 5ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய மந்திரியும், பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான ஸ்மிரிதி இரானி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உத்தரபிரதேசத்தில் வாக்குச்சாவடிக்குள் 75 வயதுடைய மூத்த வாக்காளரிடம் அங்கிருந்த தலைமை அதிகாரி ஒருவர், காங்கிரஸ் சின்னம் இருக்கும் இடத்தில் விரலை வைத்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறியதாக அந்த வாக்காளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    இதனை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தை உஷார் படுத்த எனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக  நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். 



    இது போன்ற செயல்களில் ஈடுபடும் ராகுல் காந்தியின் ஆட்சி தேவையா, இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அமேதி தொகுதி மக்கள் அவரை நிராகரிக்கின்றனர் என்பது தெரிந்து தான் காங்கிரஸ் கட்சியினர்  இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அவருக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் பிரியங்காவுக்கு, 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை என் பெயர் கூட தெரியாது. ஆனால் இப்போது என் பெயரை ஏதோ சாதனை செய்வது போல தொடர்ந்து கூட்டங்களில் பயன்படுத்துகிறார். தற்போது பிரியங்கா அவரது கணவரின் பெயரை விட, என் பெயரையே அதிகம் உச்சரித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #SmritiIrani #Priyanka

    சூலூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றார். #TNByPolls #DMK #MKStalin
    கோவை:

    கோவை சூலூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவருக்கு மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

    இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பட்டணம்புதூர் பகுதியில் பொதுமக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொண்டனர். நீர் மோர் வழங்கினர். பட்டணம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் மரத்தடியில் அமர்ந்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

    தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறிவிடும். எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உங்களை தேடி வர வேண்டும். நீங்கள் அவர்களை தேடி போக வேண்டிய தேவையில்லை. அப்போது பட்டணத்தை சேர்ந்த குணசேகர் என்பவர் மு.க. ஸ்டாலினிடம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் கொடுப்பதாக கூறி உள்ளீர்களே என்று கேட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின், பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதனால் தான் என பதில் அளித்தார். பின்னர் ஸ்டாலின் அந்த பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு கண்மணி, அன்பழகன் என பெயர் சூட்டினார்.

    தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றார். பொதுமக்களிடம் ஸ்டாலின் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததற்கு காரணம் இந்த ஆட்சி தான் என்றார்.

    இன்று மாலை 5 மணி முதல் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாப்பம்பட்டி ஊராட்சியில் பிரசாரம் செய்கிறார். பின்னர் செலக்கரைச்சல் ஊராட்சி, வாரப்பட்டி ஊராட்சி, சுல்தான் பேட்டை, குமாரபாளையம் ஊராட்சி, செஞ்சேரிமலை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, ஜல்லிப்பட்டி ஊராட்சி ஆகியபகுதிகளில் பிரசாரம் செய்கிறார். #TNByPolls #DMK #MKStalin

    சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் உள்ளிட்ட 51 பாராளுமன்றத் தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. #LokSabhaElections2019 #RahulGandhi #Sonia
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடை பெற்றது.

    இன்று (திங்கட்கிழமை) 5-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்காளம் (7), மத்திய பிரதேசம் (7), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளிலும் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ஜெயந்த் சின்கா, அர்ஜுன்ராம் மேக்வால், வீரேந்திர குமார், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், சத்ருகன்சின்காவின் மனைவி பூனம் சின்கா, முன்னாள் முதல்-மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பாபுலால் மாரண்டி ஆகியோர் இன்று களத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள். 51 தொகுதிகளிலும் 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக 96 ஆயிரத்து 88 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 12.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 16.56 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    ராஜ்நாத்சிங் போட்டியிடும் லக்னோ, சோனியாவின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடந்து வரும் 7 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த 7 தொகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மேற்கு வங்க மாநிலத்தில் பல ஓட்டுச்சாவடிகளில் மின்னணு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவுரா தொகுதியில் 289, 291, 292 ஆகிய எண்கள் கொண்ட வாக்குச்சாவடிகளில் நீண்ட நேரம் ஓட்டுப்பதிவு தொடங்காமல் இருந்தது. மாற்று எந்திரங்கள் வந்த பிறகே ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காலை 7.30 மணியளவில் சென்று வாக்களித்தார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த 51 தொகுதிகளில் 39 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா சாதனை படைத்திருந்தது.



    திரிணாமுல் காங்கிரஸ்-7, காங்கிரஸ்-2, ராஷ்டீரிய லோக் ஜனசக்தி, பி.டி.பி, எல்.ஜே.பி. ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் இந்த தடவை பா.ஜனதாவுக்கு அத்தகைய வெற்றி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதனால் இன்று நடக்கும் 5-வது கட்ட தேர்தல் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இன்று களத்தில் நிற்கும் 674 வேட்பாளர்களில் 126 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 95 பேர் மீது மிக கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.

    அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களில் 41 பேர் கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களில் 27 பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் 16 பேர், சமாஜ்வாடி கட்சியில் 14 பேர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் 7 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கின்றன.

    674 வேட்பாளர்களில் 184 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியில்தான் அதிகபட்சமாக 38 வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.

    51 தொகுதிகளிலும் மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளில் மட்டும் பாதுகாப்பு கருதி மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    இன்றுடன் 424 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடுகிறது. இன்னும் 118 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

    வருகிற 12-ந்தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 19-ந்தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 7-வது கட்ட இறுதி தேர்தல் நடக்கிறது. அத்துடன் ஓட்டுப்பதிவு அனைத்தும் முடிந்து விடும்.

    23-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும். இந்த தடவை ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி சரி பார்க்க வேண்டியதிருப்பதால் பிற்பகலில் தான் முடிவுகள் தெரியத் தொடங்கும். #LokSabhaElections2019, #RahulGandhi #Sonia
    நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்களை பயங்கரவாதிகள் போன்று சோதனை நடத்துவதா? என முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #mutharasan #Neetexam

    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணையும் விழா மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் நடந்தது.

    இதில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க. தோல்வி பயத்தால்தான் 3 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய உள்ளனர். சபாநாயகர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது. மக்களை சந்திக்க அ.தி.மு.க.வினருக்கு பயம். அதனால்தான் அவர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போடுகிறார்கள். கூடுதல் கால அவகாசம் கேட்கிறார்கள். உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை அதிகாரிகள் பல மடங்கு உயர்த்தி விட்டனர்.


     

    தமிழகத்தில் 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்தும், இதுவரையில் அரசு அந்த மாவட்டங்களில் எவ்வித வறட்சி நிவாரண பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு குடிநீர் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வன்னியர் சமுதாய மக்கள் குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை. பொன்பரப்பியாக இருந்தாலும் சரி, குச்சிபாளையமாக இருந்தாலும் சரி, தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் 10 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை அனுப்பியும் இதுவரை தலைமை தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். வேலூரில் மட்டும் பண நடமாட்டம் என்று கூறுவது நகைப்பிற்குரியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பண நடமாட்டம் காணப்பட்டது. தமிழகத்தில் நடந்த ‘நீட்’ தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பயங்கரவாதிகளை விட அதிகளவு மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பின்னடைவு. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #Neetexam

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 இடங்களில் பிரசாரம் செய்கிறார். #EdappadiPalaniswami #ADMK

    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    முனியாண்டிக்கு ஆதரவு திரட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். திறந்த வேனில் செல்லும் எடப்பாடி பழனிசாமி தொகுதிக்குட்பட்ட விரகனூர், ஐராவதநல்லூர், சின்ன அனுப்பானடி, சிந்தா மணி ரோடு, பனையூர் மெயின் ரோடு, சாம நத்தம் மெயின்ரோடு, விராதனூர் மெயின் ரோடு, வளையங்குளம், பெருங்குடி, அவனியாபுரம் பஸ் நிலையம், நாகம்மாள் கோவில் ஆகிய 12 இடங்களில் இரவு 9.15 மணி வரை ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    முன்னதாக அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு மதுரை வந்தார். அவரை அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார்.

    இன்று காலை அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. #EdappadiPalaniswami #ADMK

    பாராளுமன்ற ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் 7 மாநிலங்களில், காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 12.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. #LokSabhaElections2019 #VoterTurnout
    புதுடெல்லி:

    பாராளுமன்ற 5-வது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர்.

    மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தன் மனைவி காயத்ரியுடன் ஜெய்ப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மத்திய மந்திரியும் ஹசாரியாபாக் தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெயந்த் சின்கா ஜார்க்கண்டில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, லக்னோ மாண்டிசோடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.



    காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 11.68 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜார்க்கண்டில் 13.46 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கோடர்மா தொகுதியில் 11.94 சதவீதம், ராஞ்சியில் 15.69 சதவீதம், குந்தியில் 12.85 சதவீதம், ஹசாரியாபாத்தில் 8.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    பீகார் மாநிலத்தில் 11.51 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 9.82 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 12.97 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 8.4 சதவீதமும், ராஜஸ்தானில் 13.24 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 0.8 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    10 மணி நிலவரப்படி சராசரியாக 12.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பீகாரில் 11.51 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 1.36 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 13.18 சதவீதம், ராஜஸ்தானில் 14 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 9.85 சதவீதம், மேற்கு வங்கத்தில் 16.56 சதவீதம், ஜார்க்கண்டில் 13.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.  #LokSabhaElections2019 #VoterTurnout
    ரேபரேலி, அமேதி தொகுதியில் சோனியா காந்தி , ராகுலுக்கு ஓட்டு போடுங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். #Mayawati

    லக்னோ:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 5-வது கட்டமாக இன்று 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவர்கள் தங்கள் கூட்டணியில் காங்கிரசை சேர்க்கவில்லை.

     


    ஆனாலும் சோனியாவுக்கும், ராகுலுக்கும் விட்டுக் கொடுக்கும் வகையில் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

    அமேதி தொகுதியில் ராகுல்காந்திக்கும், பா.ஜனதா வேட்பாளரும் மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளராக தினேஷ் பிரதாப்சிங் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் ராகுல்காந்திக்கும், சோனியா காந்திக்கும் ஓட்டு போட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரசையும், பா.ஜனதாவையும் அரசியல் ரீதியாக ஒன்றாகத்தான் நாம் கருதுகிறோம். காங்கிரசுடன் நாம் எந்த கூட்டணியும் வைக்கவில்லை. ஆனாலும் பா.ஜனதாவை தேற்கடிக்க வேண்டும் என்பதற்காக பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி கட்சி தொண்டர்கள் ரேபரேலி தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.

    மே 23-ந்தேதி சர்வாதிகார ஆட்சியில் இருந்து நாடு விடுதலை அடையும். பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கூட்டணி கட்சிகள் மத்தியில் புதிய பிரதமரை உருவாக்குவதோடு உத்தரபிரதேசத்திலும் புதிய அரசை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mayawati

    சினிமாவில் மார்க்கெட் போனதால் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #RajendraBalaji #KamalHaasan
    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொகுதியில் தங்கி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். புதியம்புத்தூர் சீனிவாசன் நகரில் வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் அல்லம்பட்டியில் காமராஜர் சிலை அருகே மதுக்கடை இருப்பதாக நாம் தமிழர் கட்சி காளியம்மாள் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரை தொடர்ந்து அந்த கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று இரவே அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இது போன்று தலைவர்களின் சிலையின் அருகே கடைகள் இருந்தால் எங்கள் கவனத்திற்கு வந்தால் அந்த மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    தருவைகுளம் கிராமத்தில் தி.மு.க.வுக்கு வாக்களித்த ஒரு பெரியவர் என்னிடம் கூறும்போது கருணாநிதி மரணத்திற்கு விசாரணை நடத்த வேண்டும் என்றார். தேர்தல் முடிந்தவுடன் இது குறித்து தமிழக முதல்வர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிடுவார். ஒட்டப்பிடாரம் தொகுதி மக்கள் என்றுமே அ.தி.மு.க. விசுவாசிகள். இந்த தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை மாபெரும் வெற்றி பெற செய்ய வைப்பார்கள்.


    கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகு அரசியல் ஞானம் பிறந்துள்ளது. ஓடி, ஆடி விளையாடிய வயதில் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது மார்க்கெட் போனதால் அரசியலுக்கு வந்துள்ளார். பிரசாரத்திற்கு வடிவேலு வந்தால் கூட அவரைப் பார்க்க கூட்டம் சேரத்தான் செய்யும். அதுபோலதான் கமல்ஹாசனை பார்ப்பதற்காக இப்போது மக்கள் வருவார்கள். ஆனால் அவரது கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajendraBalaji #KamalHaasan
    அமேதி தொகுதியில் ராகுலை 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோற்கடிப்பார் என்று அமித் ஷா கூறியுள்ளார். #SmritiIran #AmitShah

    லக்னோ:

    ராகுல்காந்தி போட்டியிடும் உத்தரபிரதேசம் அமேதி தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அவரை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.

    அந்த தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ரோடு ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அமேதி தொகுதி நிலவரம் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த தொகுதி இந்திராகாந்தி குடும்பத்திடம் உள்ளது. ஆனாலும் இங்கு எந்த முன்னேற்றமும் நடக்க வில்லை. கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.

    மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்தபிறகு தான் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த தொகுதியை பொறுத்தவரையில் வாரிசு அரசியலுக்கும், வளர்ச்சிக்கும் மத்தியில் போட்டி நடக்கிறது. இதில் வளர்ச்சி தான் வெற்றி பெறும் என்பது நிதர்சனமாக தெரிகிறது.


    கடந்த தேர்தலில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி நெருக்கடி கொடுத்ததால் ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மட்டுமே ராகுலால் வெற்றி பெற முடிந்தது.

    ஆனால் இந்த தடவை நிலைமை மாறுகிறது. ஒரு லட்சம் ஓட்டுகள் அதிகமாக பெற்று ஸ்மிருதி இரானி வெற்றி பெறுவது உறுதி.

    எங்களை எதிர்த்து போராடும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியிலும் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. சமாஜ்வாடி கட்சியில் மட்டும் ஒரே குடும்பத்தில் 5 பேர் போட்டியிடுகிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியிலும் தங்களது உறவினர்களுக்கு தான் டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த தேர்தலில் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முடிவை உத்தரபிரதேசம் எடுத்தது. கடந்த தேர்தலில் இங்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த தடவை அதைவிட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் மக்கள் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளனர். பிரதமரின் அவாஸ் யோஜனா, உஜ்வாலா, உஜாலா போன்ற திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளன. இது எங்களுக்கு தேர்தல் வெற்றியை கொடுக்கும். மே 23-ந்தேதி நல்ல முடிவை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார். #SmritiIran #AmitShah

    லக்னோவில் இன்று தனது வாக்கினை பதிவு செய்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். #LokSabhaElections2019 #RajnathSingh
    லக்னோ:

    பாராளுமன்ற 5-வது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர்.



    மத்திய மந்திரியும் லக்னோ தொகுதி பாஜக வேட்பாளருமான ராஜ்நாத் சிங், லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், வெற்றிவாய்ப்பு குறித்து கேட்டபோது, ‘எதையும் இப்போது கணிக்க இயலாது. முடிவை லக்னோ தொகுதி வாக்காளர்களிடம் விடுகிறேன்’ என கூறினார்.

    ‘மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரை தேர்வு செய்வதற்கு முழு உரிமை உள்ளது. எது எப்படி இருந்தாலும், மோடி மீண்டும் பிரதமர் ஆவார்’ என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #RajnathSingh
    சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிடும் தொகுதிகள் உட்பட 51 தொகுதிகளில் 5-வது கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElection #RajnathSingh #SoniaGanthi #RahulGanthi #SmritiIrani
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29-ந் தேதிகளில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

    இந்நிலையில் 5-வது கட்டமாக, உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று  தேர்தல் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்று வரும் தேர்தலில் 8¾ கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 675 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இவர்கள் முடிவு செய்கின்றனர். இதில் 12 சதவீத பேர் பெண் வேட்பாளர்கள்.



    இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலையொட்டி 96 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5-வது கட்டத்துடன் ராஜஸ்தான், காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நிறைவடைய உள்ளது.

    அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கும், பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.



    லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சத்ருகன் சின்கா மனைவி பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் களின் தலைவிதியை இந்த தேர்தல் நிர்ணயிக்க உள்ளது.

    5-வது கட்டத்துடன் 425 தொகுதிகளில் தேர்தல் முடிய உள்ளது. இதைத்தொடர்ந்து 12-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 6-வது கட்டமாகவும், 19-ந் தேதி 59 தொகுதிகளுக்கு 7-வது கட்டமாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது.    #LokSabhaElection #RajnathSingh #SoniaGanthi #RahulGanthi #SmritiIrani  
    ×