search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூலூர் தொகுதி"

    சூலூர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சந்தித்த கூலி தொழிலாளியை நினைவில் வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி நலம் விசாரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 19 -ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூலூர் வந்தார்.

    அப்போது அவர் கிராம திண்ணையில் அமர்ந்து பிரசாரம் செய்தார். அதன் படி சூலூர் தொகுதி அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகருக்கு சென்றார்.

    அங்கு வசிக்கும் கூலித்தொழிலாளர் சர்க்கரை (63) என்பவரிடம் செல்போன் எண்ணை வாங்கி சென்றார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொழிலாளி சர்க்கரைக்கு போன் செய்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    உறவினர்கள் நலம் குறித்தும் கேட்டறிந்தார். தேர்தல் முடிவுகள் குறித்து அவரது கருத்தினை கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடம் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதனால் கூலி தொழிலாளி சர்க்கரை மகிழ்ச்சியில் திளைத்தார். அவர் தனது நண்பர்கள், உறவினர்களிடம் இதனை சொல்லி மகிழ்ந்தார்.

    இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சந்தித்த கூலி தொழிலாளியை நினைவில் வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி நலம் விசாரித்த சம்பவம் அப்பநாயக்கன் பட்டி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
    சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
    சென்னை:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    கடந்த ஏப்ரல் 22-ந்தேதி முதல் 29-ந்தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2-ந்தேதி வெளியிடப்பட்டது. 4 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செர்வம் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து பொது மக்களிடம் குறை கேட்டார்.

    அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் அனல் பறக்கும் பிரசாரம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதன் பிறகு தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்.

    தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து விவரங்கள் நாளை மாலை தெரிவிக்கப்படும்.
    தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    கோவை:

    கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 2 நாட்கள் பிரசாரம் செய்தார்.

    இந்நிலையில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில் இன்று இறுதி கட்ட பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.

    இன்று காலை 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட அப்பநாயக்கன் பட்டிக்கு சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    அப்போது பொதுமக்கள் மு.க. ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். வெற்றி பெற்றதும் அனைத்து குறைகளையும் சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.

    தொடர்ந்து ஏ.டி.காலனி பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் அமர்ந்து கலந்துரையாடினார்.

    அப்போது பெண் ஒருவர் மு.க. ஸ்டாலினுக்கு டீ கொடுத்தார். அதனை வாங்கி குடித்த மு.க. ஸ்டாலின் மக்களிடம் தொடர்ந்து கலந்துரையாடி பொதுக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதிக்குட்பட்ட முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி குரும்பபாளையம், வங்கி அருகில் வேன் பிரசாரம் செய்கிறார். 7 மணிக்கு கரவழி மாதப்பூரிலும், இரவு 8 மணிக்கு இருகூரிலும் வேன் பிரசாரம் செய்கிறார்.
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சூலூர் தொகுதிக்குட்பட்ட சின்னியம் பாளையத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
    சூலூர்:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். சூலூர் தொகுதியில் அவர் ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் 2-வது கட்ட பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு கோவை வந்தார். இங்குள்ள ஓட்டலில் தங்கி உள்ளார்.

    இன்று மாலை 5மணிக்கு அவர் சூலூர் தொகுதிக்குட்பட்ட சின்னியம் பாளையத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். 5.45 மணிக்கு முத்துகவுண்டன் புதூர், 6.45-க்கு வாகராயம் பாளையம், இரவு 7.15 மணிக்கு கிட்டாம் பாளையம் நால் ரோடு, 8 மணிக்கு கருமத்தம்பட்டி (சோமனூர் பவர் அவுஸ்) 8.30 மணிக்கு சாமளாபுரம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார். இரவு 9.20 மணிக்கு சூலூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.
    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை பிரசாரம் செய்கிறார். #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
    கோவை:

    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

    சூலூர் தொகுதியில் 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் நாளை(1-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். திறந்தவேனில் நின்று அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் கோவை வருகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிப்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து செஞ்சேரி மலை, சுல்தான்பேட்டை, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு ஆகிய 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார். பின்னர் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மீண்டும் வருகிற 14-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூலூர் தொகுதியில் 2-வது கட்டமாக பிரசாரம் செய்கிறார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5, 6-ந்தேதிகளில் சூலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.

    சூலூர் தொகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சூலூர் பகுதியில் தேர்தல் களைகட்டியுள்ளது. #TNByPoll #ADMK #EdappadiPalaniswami
    சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இது வரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

    இன்று தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் விஜயராகவன் ஆகியோர் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    சூலூர் தொகுதியில் வருகிற 1-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்கிறார். தலைவர்கள் பிரசாரத்திற்கு பின்னர் தான் சூலூர் தொகுதி தேர்தல் களை கட்டும்.

    நாளை மறுநாள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பிரசாரம் செய்ய உள்ளார். சூலூர் தொகுதியில் 1-ந் தேதிக்கு பின்னர் தான் பிரசாரம் சூடுபிடிக்கும். அ.தி.மு.க.மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சூலூரில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.

    சூலூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்டது. மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. ஆனால் சூலூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    சூலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளது.

    சூலூர் தொகுதியில் 9 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் வாகன சோதனை நடைபெற்றது.

    சூலூர் பகுதி மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். #TNAssemblyByElection #TNElections2019

    சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பண வினியோகத்தை தடுக்க கூடுதலாக 9 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #Election

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் எடுத்து செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடத்தை விதிமீறல் புகார்களை பொதுமக்கள் 1800 425 4757 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

    மேலும், சூலூர் தொகுதியில் பணி வினியோகத்தை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொகுதியில் உள்ள பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தவிர கூடுதலாக 9 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடை பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜா மணி கூறினார். #Election

    சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவுக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #SulurMLA #OPS #EPS
    சென்னை:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளருமான ஆர்.கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்பதை அறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.



    கனகராஜ், புரட்சித்தலைவி ஜெயலலிதா மீதும் கட்சியின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

    கனகராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SulurMLA #OPS #EPS
    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மரணம் அடைந்தார். #SulurMLA #MLAKanagaraj
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் (64). இவரது வீடு சூலூர் அருகே உள்ள காம நாயக்கன் பாளையம் வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் உள்ளது.

    இன்று காலை கனகராஜ் எம்.எல்.ஏ. தனது வீட்டில் பத்திரிகை படித்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார்.



    அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சூலூர் தொகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    கனகராஜ் எம்.எல்.ஏ.வுக்கு ரத்தினம் என்ற மனைவியும் சண்முக சுந்தரம் என்ற மகனும், பாபா விஜயா என்ற மகளும் உள்ளனர். சூலூர் பகுதி மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் கனகராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்.

    விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் கோழிப் பண்ணை நடத்தி வந்தார். தேங்காய் வியாபாரமும் செய்து வந்தார். 7-ம் வகுப்பு படித்துள்ள இவர் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளராக இருந்து உள்ளார். கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சூலூர் தொகுதியில் கனகராஜ் எம்.எல்.ஏ. தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சி. மனோகரனை விட 36 ஆயிரத்து 631 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    அவர் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு-

    கனகராஜ் (அ.தி.மு.க.)- 1,00,977

    வி.எம்.சி. மனோகரன் (காங்கிரஸ்) - 64,346

    மோகன் மந்திராசலம் ( பா.ஜனதா)- 13,517

    தினகரன் (தே.மு.தி.க.)- 13,106

    பிரிமியர் செல்வம் என்கிற காளிச்சாமி (கொ.ம.தே.க.) - 9,672

    கனகராஜ் எம்.எல்.ஏ. மரணம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #SulurMLA #MLAKanagaraj
    சூலூர் தொகுதியில் நகை பறிப்பவர்களை பிடித்து கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று கனகராஜ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

    சூலூர்:

    சூலூர் பகுதியில் அடிக்கடி வீடுகளில் திருட்டு, நகைபறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இதில் அங்கிருந்த இலவச சீருடைகள், காலணிகள் எரிந்து நாசமாயின. இதனால் இந்த பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பெற்றோர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில், அந்த பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் நடமாடி வருவதாக சூலூர் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ், பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், தீப்பிடித்து எரிந்த அறைகளுக்கு சென்ற அவர், சூலூர் வட்டார கல்வி அதிகாரி நேசமணியிடம் கேட்டு அறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், சூலூர் தொகுதியில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடித்து தந்தாலோ அல்லது உரிய தகவல் தெரிவித்தாலோ அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசும், சங்கிலி பறிப்பு குற்றவாளிகளையும், நகைகளையும் மீட்கும் போலீசாருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக கொடுப்பேன்.

    மேலும், தீயினால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கு என் சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் தரப்படும். பள்ளியின் அனைத்து பராமரிப்பு பணிகளுக்கு ஆகும் தொகையை, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையுடன் இணைந்து அரசிடம் கேட்க ஆவன செய்யப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×