search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK MLA"

    • திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது.
    • மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    சென்னை:

    சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது அவரது மருமகள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில்,

    திருமணத்தின்போது 1000 சவரன் வரதட்சணை கேட்டனர். 2018ம் ஆண்டு திருமணம் நடந்தபோது, 600 சவரன் தங்கம், ரூ.1.65 கோடி மதிப்புள்ள 2 கார்கள், 20 கிலோ வெள்ளி ஆகியவை கொடுக்கப்பட்டது. மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது தந்தை கூறுகையில்,

    வரதட்சணை கேட்டு, தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தினர்.

    பெண் குழந்தை பிறந்த பிறகு 2021ல் தனது மகளை கே.பி.கந்தன் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

    மகளின் வாழ்க்கைக்காக நேரில் சென்று பேசினால் மேலும் 500 சவரன், ரூ.10 கோடி கே.பி.கந்தன் கேட்கிறார்.

    மகள் மருத்துவம் படித்தபோது, சக மருத்துவர்களுடன் எடுத்த புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புகிறார்கள்.

    கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் மஞ்சள்காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
    • வீரகேரளம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது

    கோவை,

    கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். இவரது மகன் கோபாலகி ருஷ்ணன் (வயது 39). இவர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி கலைவாணி என்ற மனைவியும், 11 மாதத்தில் செயான் என்ற மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் கோபா லகிருஷ்ணனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மஞ்கள்காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    அதன் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அதன் பின்னர் அவருக்கு மீண்டும் மஞ்சள்காமாலை பாதிப்பு அதிகமானது. இத னையடுத்து கோபாலகிருஷ்ணன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை அவரது உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் ரோட்டில் உள்ள திருநகர் 3-வது வீதியில் உள்ள வீட்டிற்கு மதியம் 1 மணியளவில் கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை 5 மணிக்கு வீரகேரளத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

    • போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
    • கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.

    கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. பா.ம.க. போராட்டம் நடத்தியதால் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பணி மீண்டும் தொடங்கியது. விளைநிலங்களுக்கு செல்லாமல் மேல் வளையமாதேவியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கரைகளை சமன்செய்யும் பணியிலும், பாலத்தின் அருகில் கால்வாய் வெட்டும் பணியிலும் என்.எல்.சி. நிறுவனம் ஈடுபட்டது.

    4-வது நாளான நேற்று பணிகள் நடைபெற்றது. விடிய விடிய இந்த பணி நடந்தது. இன்று 5-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,500 மீட்டர் அகலத்தில் சுமார் 1 ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வளையமாதேவியில் விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண் மொழிதேவன் அறிவித்து இருந்தார். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    வளையமாதேவியில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்காததால் புவனகிரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பவானிசாகர் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பண்ணாரி என்பவர் வெற்றி பெற்றார்.
    • பொதுமக்கள் அரசின் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரேசன் கார்டு, உதவித் தொகை உள்ளிட்டவை பெற பண்ணாரி எம்.எல்.ஏ.வை தினமும் சந்தித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கடந்த தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி), பவானி, பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 5 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 3 தொகுதியிலும் வெற்றி பெற்றது.

    இதில் பவானிசாகர் தனித்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பண்ணாரி என்பவர் வெற்றி பெற்றார். இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசின் திட்டங்கள், அடிப்படை வசதிகள், ரேசன் கார்டு, உதவித் தொகை உள்ளிட்டவை பெற பண்ணாரி எம்.எல்.ஏ.வை தினமும் சந்தித்து வருகின்றனர். இவர் பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வான தன்னை யாரும் மதிப்பதில்லை என்று பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து பண்ணாரி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பவானிசாகர் தொகுதியில் கடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் எங்கள் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மேலும் இத்தொகுதியில் அதிக முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இந்நிலையில் இந்த தொகுதியில் இதுவரை நடக்காத ஒன்று கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. எனது தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த திட்டபணிகளும் முறையாக நடைபெறவில்லை.

    நான் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த காலத்தில் பொதுமக்களின் கோரிக்கையான பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் உதவி கேட்டு என்னிடம் வந்த 2 ஆயிரம் மனுக்களை பரிந்துரை செய்து வருவாய்த்துறைக்கு அனுப்பி உள்ளேன். ஆனால் நான் பரிந்துரைக்கும் மனுக்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. என்னையும், என் பரிந்துரைகளையும் அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள்.

    நேரில் சென்று கேட்டால் கூட இதோ செய்து விடுகிறேன் என்று கூறுவார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள். பொதுவாக என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். பெயரளவுக்கு மட்டும் தான் நான் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். வி.ஏ.ஓ. முதல் தாசில்தார் வரை என்னை யாரும் மதிப்பதில்லை. மேலும் போலீசார், ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் என்னை புறக்கணிக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது உத்தரவுகள் மதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் நான் அருந்ததியினர் வகுப்பை சார்ந்தவன் என்பது தான்.

    இதனால் என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்னால் எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. எனக்கு முன் இந்த பதவியில் இருந்தவர்களுக்கு இந்த பிரச்சனை இருந்திருக்காது. அதற்கு அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். அரசு விழாக்களுக்கு அழைக்க தவறினால் விசயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் அரசு விழாக்களுக்கு எனக்கு அழைப்பு வருகிறது.

    அதிகாரிகள் என்னை மக்கள் பிரதிநிதியாக பார்க்கவில்லை. சாதி ரீதியாக தான் பார்க்கிறார்கள்.

    தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் நம்மை என்ன செய்து விடுவார் என்று அதிகாரிகள் இருப்பதை பார்த்து இருக்கிறேன். என்னிடம் அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து பலமுறை கலெக்டரிடம் முறையிட்டு உள்ளேன். இந்த விவகாரத்தில் இதுவரை நான் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லவில்லை. மக்கள் விண்ணப்பித்த மனுக்கள் மீது 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெருந்துறை பகுதியில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் பஸ்களில் யாராவது படிகளில் நின்று பயணம் செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர்.
    • படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    பெருந்துறை:

    திருப்பூரில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறை நோக்கி வந்த போது பஸ்சின் பின்புறமாக பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது காரில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பஸ்சின் பின்புற படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டு தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணித்ததை கண்டார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. அந்த பஸ்சை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரை அழைத்து அவர் அறிவுரை கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில் 'படிக்கட்டுகளில் நின்று தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை, ஏன் பஸ்சில் ஏற அனுமதித்தீர்கள்? திருப்பங்களில், பஸ்சில் தொங்கி கொண்டு வரும் மாணவர்களின் கால்கள், ரோட்டில் உரசியபடி வருவது, உங்களுக்கு தெரியுமா? பொறுப்பற்ற முறையில், நீங்கள் தொடர்ந்து மாணவர்களை பஸ்சில் பயணம் செய்ய அனுமதித்தால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பரிந்துரை செய்வேன்,' என எச்சரிக்கை விடுத்தார். மேலும் பெற்றோர் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

    இதையடுத்து, பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அனைவரும், பஸ்சின் உட்புறத்திற்கு சென்றனர். பின்னர் அந்த பஸ் ஈரோட்டை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பெருந்துறை பகுதியில் இன்று காலை போலீசார் பல்வேறு இடங்களில் பஸ்களில் யாராவது படிகளில் நின்று பயணம் செய்கிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர். மேலும் படிக்கட்டுகளில் பயணம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    • புதிய கொடிவேரி கூட்டு குடிநீர்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் போதிய தண்ணீர்வரத்து உள்ளது.
    • பில் கலெக்டர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அலுவலக பணிகளில் தாமதம் ஏற்பட்டுகிறது.

    திருப்பூர் :

    பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் திருப்பூர்மாவட்ட கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. தற்போது புதிய கொடிவேரி கூட்டு குடிநீர்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் போதிய தண்ணீர்வரத்து உள்ளதால் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கமாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். குன்னத்தூர் பேரூராட்சியில் பில் கலெக்டர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள்காலியாக உள்ளதால் அலுவலக பணிகளில் தாமதம் ஏற்பட்டுபொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இந்த பதவியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும்.

    குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் மிகப்பழமை வாய்ந்த கட்டிடமாக உள்ளதால் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம்கட்டிக்கொடுக்க வேண்டும். குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக புதிய டிராக்டர்வாங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    அப்போது மாவட்ட கவுன்சிலர்கள் கண்ணம்மாள் ராமசாமி,சக்திவேல், குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் குமாரசாமி, துணைதலைவர் ஜோதிமணி, கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.

    சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவுக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #SulurMLA #OPS #EPS
    சென்னை:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளருமான ஆர்.கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்பதை அறிந்து ஆற்றொணா துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.



    கனகராஜ், புரட்சித்தலைவி ஜெயலலிதா மீதும் கட்சியின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

    கனகராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SulurMLA #OPS #EPS
    புதுவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளார். #ADMK #MLA

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் எங்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர். எங்களின் நண்பரும் ஆவார். அவரது சமீபத்திய செயல்பாடுகள் சபாநாயகருக்குரிய நடுநிலையை தவறுகிறாரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். முதல்- அமைச்சர் நாராயணசாமி நடத்திய தர்ணா போராட்டத்திலும் பங்கேற்றார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக தனக்கு புகார் வந்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?

    இந்த ஆட்சி அமைந்த காலம் முதல் 3 பேர் கட்சி மாறுகின்றனர், 2 பேர் கட்சி மாறுகின்றனர் என்ற தகவல் வந்துகொண்டேதான் இருந்தது. தகுதியற்றவர்களை எம்.எல்.ஏ. ஆக்கியதால் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நிலை இது.

    அ.தி.மு.க.வை பொறுத்த வரை குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர ஒருபோதும் விரும்பமாட்டோம். ஆட்சி கவிழ்க்கும் நிகழ்ச்சிக்கு துணைபோக மாட்டோம். எங்கள் கட்சி எம்.எல்ஏ பேரம் பேசினார் என கூறும் புகார்கள் பொய்யானது.

    ஆதாரமற்ற இந்த புகாரை வைத்துக்கொண்டு எங்களை மிரட்ட முடியாது. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. புதுவையில் புதிதாக குரோத, விரோத அரசியலை புகுத்த வேண்டாம். அப்படி புகுத்தினால் அதை விதைத்தவர்களே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

    ஒருபோதும் முதல்- அமைச்சர் பயப்பட தேவையில்லை. அவர் ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். எங்களுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை புதுவை மக்கள் அளித்துள்ளனர்.

    நாங்கள் எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட்டு வருகிறோம். அரசியல் கண்ணோட்டத்தோடு சபாநாயகர் வைத்திலிங்கம் செயல்பட்டால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்.

    காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தறிகெட்டு நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவதை கைவிடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MLA

    டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களிடம் விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கத்தை நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உறுதிப்படுத்தியது. இதனால், 18 எம்.எல்.ஏ.க்களும் பதவியை இழந்துள்ளனர். 3-வது நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இந்த 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு பாதகமாக அமைந்துவிட்டதால், தங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுவிடுமோ? என்று இவர்கள் 3 பேரும் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்காத பட்சத்தில், கொறடா ராஜேந்திரன் மூலம் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    ப.தனபாலிடம் புகார் அளிக்கப்படும் பட்சத்தில், ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேரிடம் அவரும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார். அதற்கும் அவர்கள் பதில் அளிக்காத பட்சத்தில், 18 எம்.எல்.ஏ.க்களை போல் இவர்களும் தகுதிநீக்க நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்.



    எனவே, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்துவரும் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேர் என்ன முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் அமைதியாக இருந்து வருகின்றனர். அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது தெரியவரும்.

    இதேபோல், அ.தி.மு.க. கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த கருணாஸ் (திருவாடானை) தற்போது அ.தி.மு.க. அரசுக்கு எதிராக பேசி வருகிறார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவரிடமும் விளக்கம் கேட்க அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #ADMK #TTVDinakaran
    கடலூரில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவை அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள்ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். #ramasamiPadayatchiyar #ADMK #EdappadiPalaniswami

    கடலூர்:

    சுதந்திர போராட்ட வீரரும், சமூகநீதிக்காக பாடுபட்டவருமான ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் ரூ.2.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    அதே நேரத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், கடலூர் மாவட்ட அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முருகுமாறன் எம்.எல்.ஏ.(காட்டுமன்னார் கோவில்) , பாண்டியன் எம்.எல்.ஏ.(சிதம்பரம்) மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அமைச்சர் எம்.சி.சம்பத் தங்களை மதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

     


    இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் மைதானத்தில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டதால் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசமி ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ramasamiPadayatchiyar #ADMK #EdappadiPalaniswami

    பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு சென்றதால் வேறு வரன் பார்த்து 2 மாதத்தில் திருமணம் செய்ய எம்எல்ஏ வீட்டார் முடிவு செய்துள்ளனர். #ADMK #EswaranMLA
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).

    இவருக்கும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பனையம் பள்ளியை சேர்ந்த சந்தியா (23) என்ற பட்டாதாரி பெண்ணுக்கும் இன்று (புதன்கிழமை) சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

    திருமணம் நடக்க 9 நாட்கள் இருந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். அக்கா வீட்டுக்கு போவதாக கூறி விட்டு சென்றவர் மாயமாகி விட்டார். நண்பருடன் சென்று விட்டதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என அவரது தாயாரே கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காத மணமகள் சந்தியா மணப்பாறையில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் மணப்பாறை சென்று புதுப்பெண் சந்தியாவை மீட்டு வந்தனர்.

    அப்போது சந்தியா கூறும் போது, ‘‘எம்.எல்.ஏ.வுக்கு வயது அதிகம் என்பதால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தியதால் வீட்டை விட்டு சென்றேன்’’ என வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

    சந்தியா

    இதையொட்டி திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே நாளில் (இன்று) எப்படியும் வேறு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்ய எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்களும் தீவிரமாக இருந்தனர்.

    திருமணத்துக்கு தமிழக முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருந்ததால் பெண் பார்க்கும் படலம் முடுக்கி விடப்பட்டது. ஆனால் நாட்கள் மிகவும் குறைவாக இருந்ததால் பெண் பார்த்து முடிவு செய்ய தாமதம் ஏற்பட்டது.

    எப்படியும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் நடத்தி காட்ட வேண்டும் என்ற எம்.எல்.ஏ. தரப்பினர் முயற்சி நடக்கவில்லை. இன்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் நடக்கவில்லை.

    இன்னும் 2 மாதத்தில் அதாவது ஐப்பசி மாதத்தில் நல்ல வரன் பார்த்து எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். #ADMK #EswaranMLA
    புது ரக பட்டாசுகளை வெடிக்க தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் அதே பட்டாசுகளை புதுவை சட்டசபை வளாகத்தில் வெடித்துக்காட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீபத்தில் பள்ளி மாணவர்களிடையே ஒரு பட்டாசு புழக்கத்தில் வந்துள்ளது.

    ரூ.10க்கு தீப்பெட்டி அளவில் 50-க்கும் மேற்பட்ட சிறு சிறு பால்ரஸ் வடிவத்தில் பட்டாசுகள் உள்ளது. இதை தரையில் ஓங்கி அடித்தால் சிறிய சத்தத்துடன் வெடிக்கிறது.

    இதை மாணவர்கள் வாங்கி வைத்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் அடித்து ஆபத்தாக விளையாடுகின்றனர். இது தனியாக வெடிக்கும்போது சிறு சத்தத்தையே ஏற்படுத்துகிறது.

    ஆனால், மொத்தமாக வெடித்தால் உடலில் காயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. பட்டாசின் பெட்டியில் இந்திய தயாரிப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனால், இது சீன பட்டாசாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீன பட்டாசு விற்பனைக்கு தடை உள்ளது. இந்நிலையில் இன்று புதுவை சட்டசபை வளாகத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் இந்த பட்டாசுகளுன் வந்தனர்.

    அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் ஆபத்தான பட்டாசு குறித்து தெரிவித்து அதை சட்டசபை நுழைவு வாயிலில் எறிந்து வெடித்து காட்டினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    புதுவையில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களிடம் இந்த பட்டாசு பிரபலமாகியுள்ளது. இதை மாணவர்கள் வாங்கி விளையாட்டாக எரிந்து விளையாடி வருகின்றனர். தங்கள் பையில் பள்ளிக்கு எடுத்துச்சென்று எறிந்து விளையாடி வருகின்றனர்.

    சில சமயத்தில் ஒருவர் மீது ஒருவர் பட்டாசு வீசுகின்றனர். ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடித்தால் மாணவர்களுக்கு பெரும் காயத்தை ஏற்படுத்தும். மனரீதியாக மாணவர்களிடம் வன்முறை கலாச்சாரத்திற்கு இது ஊக்குவிக்கிறது.

    எனவே,. கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பட்டாசை தடை செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தின் அருகில் இந்த பட்டாசு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×