என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே பெட்ரோல் பங்க் கழிப்பறையில் செல்போனை மறைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    தஞ்சை மாவட்டம் ஆவணம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த அன்பழகன் மகன் பிரபாகரன் (வயது22). இவர் புதுக்கோட்டை மாவட்டம் புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். அங்கு பெண்கள் சிலரும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் பிரபாகரன் செல்போனில் அங்கு வேலை பார்த்து வந்த பெண்கள் சிலரின் ஆபாச படங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவரிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் , வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார்,  பிரபாகரனிடம்  விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், பெட்ரோல் பங்க்கில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து கேமரா மூலம் பெண்களை ஆபாச படம் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரபாகரன், பெண்களின் ஆபாச படங்களை வேறு யாருக்காவது அனுப்பியுள்ளாரா? அந்த படங்களை வைத்து மிரட்டினாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் கிரைம் போலீசாரும் செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.
    நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    இந்திய மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போதும், தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். 

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 4 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    ப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    சுதந்திர போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சத்தியமூர்த்தியின் பிறந்த நாளையொட்டி புதுக் கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு பால் விலையை அதிகமாக உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. ப.சிதம்பரம் மோடியை ஆதரித்து பேச எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை, பயமும் இல்லை. விமர்சனம் செய்யும் போது தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு நல்லது செய்தால் அதையும் ஆதரித்து கருத்து கூறுவதில் தவறில்லை. 
    ப சிதம்பரம்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ப.சிதம்பரம் பற்றி அவரது கருத்தை தெரிவித்துள்ளார் . அந்த கருத்தினால் கூட்டணிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை. காங்கிரஸ் குறித்து வைகோ விமர்சனம் செய்த போது, கூட்டணி கட்சித்தலைவர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின், இருவரிடமே தொலை பேசியில் பேசி சமரசம் செய்து வைத்தார். 

    மேட்டூர் அணை தற்போது திறக்கப்பட்டு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் தண்ணீர் நெருங்குவதற்கு முன்பே கடைமடை வரை வரத்து வாரிகளை சீர்செய்து இருக்கவேண்டும். ஆனால் அதை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டது . நான் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆகி 2 மாதங்கள் தான் ஆகிறது. திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். சிலர் விளம்பரத்திற்காக என்னை காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    தற்கொலைகள் அதிகரித்து வருவதால் எலி பேஸ்ட்டை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவம னையில் டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காதொலி கருவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்பவர்கள் எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்தது. தற்போது தமிழக அரசு எடுத்த முயற்சியில் ஆயிரம் டயாலிசிஸ் மிஷின்கள் மாவட்ட முதல் தாலுகா மருத்துவமனை வரை வழங்கியதன் அடிப்படையில் டயாலிசிஸ் செய்வோரின் எண்ணிக்கை 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    தற்கொலை செய்து கொள்பவர்கள் எலி பேஸ்ட் சாப்பிட்டு அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதால் அவர்களை உயிர் பிழைக்க வைப்பது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

    எலி பேஸ்ட்டில் கொடிய வி‌ஷத்தன்மை உள்ளது. எலி பேஸ்ட்டிற்கு தடை விதிப்பது அனைத்து துறையையும் சார்ந்தது. அதனால் அதற்கு தடை விதிக்க தமிழக அரசிடம் சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரைக்கப்படும்.

    அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிநீர் பிரச்சினை என்பது கிடையாது. இதனால் டயாலிசிஸ் செய்வதில் எந்தவிதமான சிரமமும் இல்லை.

    அனைத்து மருத்துவமனைகளிலும் தனி பிரிவு அமைக்கப்பட்டு டயாலிசிஸ் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் கடந்த ஆண்டு ஆய்வு நடத்திய அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மரங்கள் சாய்ந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என்றார்.

    ஆனால், சமீபத்தில் அவர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் நிவாரணம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இது தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அரசின் அத்து மீறல்களை கண்டிக்காமல், ஆதரவளித்து நடிகர் ரஜினி காந்த் பேசி வருவது வேதனையாக உள்ளது. அரசியலில் அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை, அவரது பேச்சு தெளிவாக்குகிறது.

    லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றியது வர வேற்கத்தக்கதாக இருந்தாலும் சிறப்பு அந்தஸ்தில் இருந்து குறைந்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புன்னம்சத்திரம் அருகே முட்புதரில் வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்பாறை அருகே கெங்கானம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது25).  இவர் கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே அதியமான் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள முட்புதரில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வன் சென்று பார்த்த போது மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.  உடனே மது பாட்டில்களை விற்பனை செய்த மணிமுத்து என்பவரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அறந்தாங்கி அருகே இன்று அதிகாலை வாகன உதிரிபாக கடையில் தீவிபத்து ஏற்பட்டது. தீயில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கட்டுமாவடியை சேர்ந்தவர் ராஜாராம். இவர் அங்கு மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்றிரவு விற்பனை முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று அதிகாலை அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக ராஜாராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனே கடைக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அப்போது கடைக்குள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    தீ மளமளவென பற்றி அருகில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான மரக்கடை மற்றும் அருகில் இருந்த கண்ணாடி கடைக்கும் பரவியது. உடனே இது குறித்து அறந்தாங்கி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி மோகன்தாஸ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மோட்டார் வாகன உதிரிபாக கடையில் ஆயில்கள் இருந்ததால் தீ வேகமாக பற்றி எரிந்தது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    இருப்பினும் மோட்டார் உதிரிபாக கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. அவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும். மேலும் மற்ற கடைகளில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புராணம் பற்றி தெரிந்தவர் வரலாறு குறித்தும் தெரிந்து பேச வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க., தொடர்ந்து மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க மறுத்து வருகிறது. எந்த மரபையும் கடைபிடிக்காமல் நிலை குழுக்களை அமைக்காமல் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மசோதாக்களை தாக்கல் செய்து அதை அமல்படுத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதை பா.ஜ.க. புரிந்து கொள்ள வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பா.ஜ.க., எதிர்ப்பு நிலையை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. மற்ற கட்சிகள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றன.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க.வை மட்டுமே பாராளுமன்றத்தில் விமர்சித்திருக்க வேண்டும். அதை தவிர்த்துவிட்டு காங்கிரஸ் கட்சி குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போது அவர் தனது எதிர்ப்பு நிலையை மாற்றி கொண்டுள்ளார். இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது.

    காஷ்மீர் விவகாரத்தில் மோடி-அமித்ஷாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கு உதாரணமாக புராண கதைகளை கூறியுள்ளார். இந்தியாவின் முந்தைய வரலாற்றை அவர் படித்திருந்தால் இது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கமாட்டார்.

    ரஜினிகாந்த்

    புராணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர் வரலாற்றுக்கும் வழங்க வேண்டும். காவிரி- குண்டாறு -வைகை இணைப்பு திட்டத்துக்காக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    அதில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளின் இணைப்புக்கு பின்னரே காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    தந்தை ப.சிதம்பரத்தின் செய்தி தொடர்பாளராக நான் பணியாற்றவில்லை. அவரது தகுதியை அடிப்படையாக கொண்டு என்னை யாரும் எடைபோட மாட்டார்கள். எனது செயல்பாடுகள்தான் எனது தகுதியை நிர்ணயிக்கும். அவருடைய நிலையும், எனது நிலையும் வெவ்வேறானது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விராலிமலை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 35). இவரும், மதுரையை சேர்ந்த கார்த்திகேயன்(35), திருச்சியை சேர்ந்த சந்திரமோகன்(42) ஆகியோரும் நண்பர்கள். இதில் பாலகிருஷ்ணனின் உறவினர் வீட்டு திருமண அழைப்பிதழை காரைக்குடியில் உள்ள உறவினர்களுக்கு கொடுப்பதற்காக திருச்சியில் இருந்து நேற்று மாலை ஒரு காரில் அவர்கள் 3 பேரும் புறப்பட்டு சென்றனர்.

    காரை பாலகிருஷ்ணன் ஓட்டினார். கார் நேற்று மாலை திருச்சி- புதுக்கோட்டை சாலையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே செப்பிளாந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பாலத்தில் மோதி, சாலையின் நடுவே உருண்டு கவிழ்ந்தது. இதில் கார் உடைந்து அப்பளம் போல் நொறுங்கியது.

    மேலும் காரில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலகிருஷ்ணன், கார்த்திகேயன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சந்திரமோகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்  வட்டஞ்கச்சேரி திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்துப் பேசினார்.

    மாவட்டக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாடியம்மை ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினார்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். அப்போது ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையாகக் குடிநீர் வழங்கப்படாதைக் கண்டித்தும், சாக்கடைகளை முறையாக பராமரிக்காததை  கண்டித்தும், பேசினார். மேலும்  ஜம்மு காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 ஐ ரத்து  செய்தது அம்மாநில மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி செய்த துரோகம் என்றும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சண்முகம், கனகராஜ், கருப்பையா, சாகுல் ஹமீது, கலைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உடையாண்டிப்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார்.

    புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் செல்லும் போது , காரின் முன்புற வலது பக்க டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார், நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    அப்போது திருச்சி மற்றும் புதுக்கோட்டையை நோக்கி சென்ற 6 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்த கார் மீது மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் கார்களின் கண்ணாடிகள், கதவுகள், மேற்கூரை உள்ளிட்ட பல பாகங்கள் சிதைந்தது.

    இதனால் காரில் இருந்த நபர்கள் காயமடைந்து அலறினர். இந்த விபத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே கீரனூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இருப்பினும் இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் துடையூரை சேர்ந்த சிதம்பரம் (50), கார் டிரைவர் உடையான்பட்டியை சேர்ந்த ரெங்க ராஜ் (32), திருமயம் அருகே வேகுப்பட்டியை சேர்ந்த ராமநாதன் மனைவி நாகரத்தினம் (78), காரைக்குடியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நாகலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    இந்த விபத்தில் காயமடைந்த 18 பேரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்த பகுதியை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற விபத்துக்கள் இதுவரை நடந்ததில்லை. விபத்து நடந்த சாலை நேரான சாலையாகும். அப்படியிருந்தும் 7 கார்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. இது தொடர்பாக போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ஆலங்குடி அருகே விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள புத்தாம்பூர் பூசாரித்தெருவை சேர்ந்தவர் வீரையா(வயது45).இவர் பெயிண்டர்.

    தொழில் காரணமாக மாந்தங்குடி வந்துள்ளார்.அங்குள்ள கடையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புத்தாம்பூர் திரும்பும்போது தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் செல்லும் போது சாலையில் வேகமாக வந்தகார் வீரையா மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட வீரையாவுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. அக்கம் பக்கத்தினர் வீரையாவை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஆனால்அங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    இதுகுறித்து சம்பட்டிவீடுதி போலீசார் வழக்குப்பதி செய்து விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுந்தர் மகன் சுந்தர்ராம் என்பவர் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×