search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக மீனவர்கள்"

    • ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
    • கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மற்றொருபுறம் தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா-இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்கிறது.
    • நெடுந்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தினமும் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிப்பதும், அவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளை பறிமுதல் செய்து இலங்கை அரசின் நாட்டுடமை ஆக்குவதும் அதிகரித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள் மாற்று தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த 14-ம் தேதி கட லுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசைப்படகுடன் 15 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இன்று ராமேசுவரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் பெரும்பாலான படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் மின்னல் வேகத்தில் வந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அச்சத்துடன் தாங்கள் கடலில் விரித்திருந்த வலைகளை அவசரம் அவசரமாக சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் ஆரோக்கிய சுகந்தன் மற்றும் இஸ்ரோல் என்பவரது 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர்.

    அந்தப் படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தர பாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, சந்திவேல், இஸ்ரோல் படகில் இருந்த மீனவர்கள் அந்தோணி லோபாஸ் (34), அடிமை (44), திவாகர் (34), யோஸ்வா (35), அஜித்குமார், பிரவீன் (26), ரெஜீஸ் (35), செந்தில் (44), இருளாண்டி ஆகிய 21 மீனவர்களை கைதுசெய்தனர்.

    இதனைதொடர்ந்து, இன்று காலையில் 2 படகுகள் மற்றும் 21 மீனவர்களை காங்கேசம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பகுதிக்குள் வந்த மீன்பிடித்ததாக கூறி 2 படகுகள் மற்றும் படகில் பிடிக்கப்பட்டிருந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யக் கூறி, யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இந்திய அரசின் பதிவு எண் இல்லை. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என இலங்கை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதை தடுக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியா-இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
    • மீனவர்கள் கைது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் அதையே அறிவுரையாக வழங்கியிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக மீன் பிடிக்க உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    இந்தியா-இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மீனவர்கள் கைது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் அதையே அறிவுரையாக வழங்கியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமிநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ந்தேதி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்காலை சேர்ந்த முருகானந்தம், இரும்பன், பாபு, பரசுராமன், முருகன், சுந்தரவேல், வடிவேல் உள்ளிட்ட 15 பேர் விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அவர்கள் நேற்று யாழ்பாணம் அருகே மயிலட்டி என்ற பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்தாக கூறி மீனவர்கள் 15 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் மீனவர்கள் காங்கேசன்நகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் அவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.
    • நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    அறந்தாங்கி:

    தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது இஅலங்கை கடற்படையினர் கைது செய்தது.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமானவை உள்பட 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்டவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேரும் அடங்குவர்.

    மீனவர்கள் உடனடியாக விடுவிக்கவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சமீபத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர்.

    தமிழக அரசும் இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியுள்ள நிலையில், மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
    • ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் அங்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ராமேசுவரம்:

    இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினா். அப்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 151 தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.

    இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதில் ஏராளமான மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 8-வது நாளை எட்டி உள்ளது.

    இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 8-வது நாளாக நேற்று மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று மாலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் அங்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து எம்.எல்.ஏ.வின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், கடந்த 2 நாள் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதேபோல் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்தி அதன்பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    • இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்.
    • விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் இருந்து வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை மன்னர்வளைகுடா மற்றும் கச்சத்தீவு பகுதிகளில் எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் எல்லைதாண்டி கைது செய்யப்படும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் அரசுடமையாக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதனை கண்டித்து இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட 10 படகுகளை மீட்க அரசு ஒப்பபுதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேதமடைந்த படகுகளுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை இன்று காலை தொடங்கினர்.

    இதில் மாவட்ட மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமை வகித்தார். மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், ஆல்வீன், தெட்சிண மூர்த்தி, சமுதாய தலைவர் சாம்சன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    உண்ணாவிரதத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

    • தோப்புத்துறை அருகே மீன் பிடித்த, நாகை செருதூரை சேர்ந்த மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளனர்.
    • 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    நாகை:

    தமிழக மீனவர்களின் வலைகளை புதுச்சேரி மீனவர்கள் சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தோப்புத்துறை அருகே மீன் பிடித்த, நாகை செருதூரை சேர்ந்த மீனவர்களின் வலைகளை காரைக்கால் மீனவர்கள் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

    30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள், நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

    • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
    • மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீனவர்களை விடுவிக்க இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மீனவ சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

    மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பிடிக்கப்பட்ட படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, மீனவர்களின் நடைபயண போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    எனினும், திட்டமிட்டபடி கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரத்தில் 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் 2 படகு ஓட்டுநர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் வழங்கியது. இதனை கண்டித்து இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கச்சத்தீவு, புனித அந்தோணியார் ஆலய திருவிழா புறக்கணிப்பு போராட்டத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

    இதையொட்டி இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை சூப்பிரண்டு உமாதேவி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீனவர்களின் பேரணி காரணமாக ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அறந்தாங்கி:

    ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் மற்றும் அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடித்துச் சென்றனர்.

    அதனை தொடர்ந்து 23 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மாநில அரசுகளின் பரிந்துரையால் 21 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, படகை இயக்கிய ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அதில் 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

    இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்தும், அதனை திரும்பப்பெற வேண்டும் எனவும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை தங்களது ரேசன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.
    • 3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.

    3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் 20-ந்தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.

    ×