search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pudukkottai accident"

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிம் ரூபாயும் வழங்க உத்தரவு.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில்

    வெவ்வேறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள், தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, பனஞ்சேரியை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் சாந்தி, திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்டம், அமைந்தகரையைச் சேர்ந்த சதீஷ் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

    மேலும் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராட்சத ட்ரெய்லர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
    • டிரைவர் உள்ளிட்ட 2 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விராலிமலை:

    தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன் படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னைக்கு புறப்பட்டனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (வயது 52) விருதுநகர் கிருஷ்ணகிரி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யு (52) விருதுநகர் நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (52), விருதுநகர் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம் (55) ஆகியோர் ஒரு காரில் நேற்று இரவு சிவகாசியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். காரை விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஈஸ்வர தேவர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வான திரையான் பட்டி பிரிவு ரோடு அருகே இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வந்தபோது விபத்தில் சிக்கியது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராட்சத ட்ரெய்லர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியானார்.

    பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இன்னொரு ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யு, கார் டிரைவர் பாஸ்கர் மற்றும் சங்கர், சமுத்திரம் ஆகிய 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மருத்துவமனை செல்லும் வழியிலேயே அபிமன்யு பரிதாபமாக இறந்துவிட்டார்.

    அதைத்தொடர்ந்து டிரைவர் உள்ளிட்ட 2 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த இரண்டு ஊராட்சி சம்பந்த தலைவர்களின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கோட்டையை நோக்கி நடைபெறும் பேரணிக்கு புறப்பட்டுச் சென்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அக்கட்சியினரையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை:

    மதுரை கூடல் நகரில் அ.தி.மு.க. மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஒன்றிய குழு கவுன்சிலருமான சாம்பசிவம் (வயது 65). இவர் நேற்று காலை மதுரை புறப்பட்டு சென்றார்.

    பின்னர் நேற்று இரவு கந்தர்வகோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் காரில் ஊர் திரும்பினார். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் முத்துடையாம்பட்டி கிராமத்தில் அவரது வீடு அமைந்துள்ளது.

    இதையடுத்து சாம்பசிவம் முத்துடையாம்பட்டியில் நேற்று இரவு 11 மணியளவில் காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரில் இருந்து இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் விபத்து நடந்து விட்டது. உடனே காரை திருப்பி கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் அங்கு விரைந்து வந்தார்.

    பின்னர் தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாம்பசிவத்திற்கு மனைவி மற்றும் 4 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    இதில் ஒரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அக்கட்சியினரையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார்.
    • டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள முதுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகள் மீனாசுந்தரி (வயது 22). இவர் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பில். படித்து வந்தார்.

    தினமும் தனது கிராமத்தில் இருந்து அவர் காடவராயன்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து பின்னர் பேருந்தில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை பஸ் நிறுத்தத்திற்கு தனது அண்ணன் கனகராஜூடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சோளம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகவும் குறுகிய சாலையாக இருந்தததால் குறிப்பிட்ட தூரம் வரை டிராக்டரை எந்த வாகனமும் முந்திச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால் அதனையும மீறி கனகராஜ் அந்த டிராக்டரை முந்த முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார். ஆனால் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார். இதைப்பார்த்த அவரது அண்ணன் கனகராஜ் கதறி அழுதார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவி மீனாசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மகள் பிணமாக வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறித் துடித்தனர். மாணவி பலியானதையடுத்து முதுகுளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் சென்றபோது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக வாலிபர்கள் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சீனிவாசன் என்கின்ற ஐயப்பன் (வயது 29). மேல 4-ம் வீதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்துகருப்பன் என்கின்ற ராஜா (27). இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று புதுக்கோட்டை திலகர் திடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த சிலைகள் புதுக்குளத்தில் கரைக்கப்பட்டன.

    இந்த சிலைகள் கரைப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் திரண்டனர். சிலை கரைப்பு முடிந்ததும் இவர்கள் இருவரும் நள்ளிரவில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

    புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் சென்றபோது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த நகர காவல் துறையினர் விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் வழக்கமான வழியில் செல்லாமல் தவறான வழித்தடமான நகர காவல் நிலையம் வழியாக செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் அடிக்கடி நடைபெறுகிறது.

    எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய பாதையில் செல்லாமல் தவறான மாற்றுபாதையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

    • விராலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னல் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் நடுரோட்டில் உயிருக்கு போராடினர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் உள்ள விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை வேலு, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி.

    இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார். மகன் கனகராஜ் (வயது 12) விராலிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தினமும் குழந்தைவேலு தனது மகனை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வருவது வழக்கம். அதேபோல் இன்று காலை மகனை குழந்தைவேலு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து பள்ளிக்கு அழைத்து சென்றார்.

    விராலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னல் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் நடுரோட்டில் உயிருக்கு போராடினர்.

    தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் கனகராஜ் ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த விராலிமலை போலீசார் பலியான மாணவர் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தைவேலு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பள்ளிக்கு செல்வதற்காக கூறிவிட்டு சென்ற ஒரு சில நிமிடங்களில் மகன் இறந்ததை அறிந்து அங்கு வந்த அவரது தாய் சரஸ்வதி மகனின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழந்தைவேலுவின் உடன் பிறந்த சகோதரர் செல்வம் மற்றும் அவரது மனைவி கல்யாணி ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி இதே பகுதியில் கார் மோதிய விபத்தில் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜேந்திரன் கவுண்டர் தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
    • இந்த விபத்தில் ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுதமன் (வயது 20), பிரவீன் (24) மற்றும் சூர்யபிரகாஷ் (24).

    இவர்கள் மூன்று பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் கொடும்பாளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வரும் திருவிழாவை பார்ப்பதற்காக நேற்று இரவு புறப்பட்டனர்.

    அதேபோல் கொடும்பாளூரை சேர்ந்த டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் ரெங்கசாமி (45), வடகாட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (25) இருவரும் கொடும்பாளூரில் இருந்து மூவர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    ராஜேந்திரன் கவுண்டர் தோட்டம் என்ற இடத்தில் வந்தபோது இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கவுதமன் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்த நடுரோட்டில் உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் செல்லும் வழியிலேயே கவுதமன் இறந்தார். மற்ற இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் பலியான மூன்று பேரின் உடல்களும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த கோர விபத்து குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவிழாவுக்கு சென்ற 3 பேர் விபத்தில் பலியானது அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலங்குடி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள வம்பன்காலனி பாப்பன் பட்டியைச் சேர்ந்தவர் சிவானந்தன் (வயது 35). இவர் சொந்த வேலை காரணமாக ஆலங்குடிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆலங்குடி- புதுக்கோட்டை சாலையில் ஆலங்குடி அருகே முந்திரி பருப்பு தயாரிக்கும் தொழிற் சாலை அருகே வந்த போது செங்கல்லோடு ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் லாரி டயரில் சிக்கி சிவானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குடி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். இறந்த சிவனாந்தத்திற்கு மகேஷ்வரி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
    புதுக்கோட்டை அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பியபோது கார் கவிழ்ந்த விபத்தில் நண்பர்கள் 3 பேர் பலியானார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முகமது பஷீர் (வயது 30). இவரது நண்பர்கள் புத்தாம்பூர் கார்த்திகேயன் (25), லேணா விலக்கு செல்வ கணபதி. 3 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் அறந்தாங்கி அருகே இவர்களின் கல்லூரி நண்பர் சந்திரசேகரன் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 பேர் நேற்று இரவு காரில் சென்றனர். மீண்டும் அவர்கள் புதுக்கோட்டை நோக்கி திரும்பிக்கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அவர்களது கார் புதுக்கோட்டையை அடுத்த குளவாய்பட்டி அருகே வந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காருக்குள் இருந்த பஷீர் அகமது, கார்த்திகேயன், செல்வகணபதி ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்கு சிக்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடன் பயணம் செய்த முருகானந்தம், மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க வீட்டுக்கு சென்று திரும்பிய போது நண்பர்கள் 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற தாசில்தார், விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PudukkottaiAccident
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் பார்த்தீபன் (வயது 52). நேற்றிரவு விராலிமலை சூரியூர் பஞ்சாயத்து வில்லாரோடை கிராமத்தில் உள்ள கோரையாற்றில் மர்மநபர்கள் சிலர் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் விராலிமலை வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோருடன் காரில் வில்லாரோடை பகுதிக்கு சென்றார். அங்கு சென்று பார்த்த போது மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் இல்லை. இதையடுத்து அவர்கள் இன்று அதிகாலை அலுவலகத்திற்கு திரும்பினர்.

    விராலிமலை ராஜகிரி குளவாய்ப்பட்டி பகுதியில் வரும் போது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரமுள்ள மரத்தில் மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தாசில்தார் பார்த்தீபன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாசில்தாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொலை செய்யும் நோக்கில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் விரட்டியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது.

    விபத்தில் பலியான தாசில்தார் பார்த்தீபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். புதுக்கோட்டை காந்திநகரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற அவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PudukkottaiAccident
    புதுக்கோட்டை அருகே கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு ஜல்லி மற்றும் பாறாங்கற்களாக அனுப்பப்படுகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்பட்டன. அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக அந்த வெடிகள் வெடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று மாலை குவாரிக்கு வந்த மேற்பார்வையாளரான முத்துடையான்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) அந்த வெடிக்காத வெடியை கையில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் மற்ற தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் கையில் இருந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் அங்கிருந்த வர தாவயல் பகுதியை சேர்ந்த பழனிவேல் (67) உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட கல் குவாரியை படத்தில் காணலாம்.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை பழனிவேல் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மற்றவர்கள் தொடர்ந்து சிசிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குவாரி வெடி விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்களிடம் பீதியை உருவாக்கியுள்ளது.

    இதற்கிடையே வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த செய்தியை கேட்டு முத்துடையான்பட்டியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் தாய் தீர்த்தாயி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×