search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarry explosion accident"

    புதுக்கோட்டை அருகே கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு ஜல்லி மற்றும் பாறாங்கற்களாக அனுப்பப்படுகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்பட்டன. அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக அந்த வெடிகள் வெடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று மாலை குவாரிக்கு வந்த மேற்பார்வையாளரான முத்துடையான்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) அந்த வெடிக்காத வெடியை கையில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் மற்ற தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் கையில் இருந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் அங்கிருந்த வர தாவயல் பகுதியை சேர்ந்த பழனிவேல் (67) உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட கல் குவாரியை படத்தில் காணலாம்.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை பழனிவேல் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மற்றவர்கள் தொடர்ந்து சிசிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குவாரி வெடி விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்களிடம் பீதியை உருவாக்கியுள்ளது.

    இதற்கிடையே வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த செய்தியை கேட்டு முத்துடையான்பட்டியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் தாய் தீர்த்தாயி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×