என் மலர்
கன்னியாகுமரி
- நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்
இந்த சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளான சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்
பல்வேறு இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள் மூலமாக ஏற்படும் விபத்துக்களால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகின்றது ஆகவே சாலை தடுப்புகளினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்
மேலும் மீனவ கிராம மக்களின் கோரிக்கைகளையும் முன் வைத்தார்.
மணக்குடி கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள முகத்துவாரத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்பு சுவரை நீட்டி வளைத்து, கூடுதலாக மேலும் 3 நேர் கற்களை அமைப்பதுடன், காயல் பகுதியில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி பாரம்பரிய நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் மணவாளக்குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட சின்னவிளை ஊரில் அமைந்திருந்த மிக பழமையான குருசடி கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இடியால் பாதிக்கப்பட்டது. எனவே ஊர் மக்கள் அந்த குருசடியை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட 90% பணிகள் முடிவடைந்த நிலையில் ஒரு சில நிர்வாக காரணங்களால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
ஆகவே தங்கள் இந்த பிரச்னையை குறித்து ஆராய்ந்து இதனை சுமூகமாக முடித்து வைக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மடத்து பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் ஆண்டாண்டு காலமாக குடிநீர் கட்டணம் மின்கட்டணம் வீட்டுவரி கட்டணம் போன்றவை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் வங்கிகள் மூலமாக கடன்கள் பெற்று வீடுகள் கட்டியுள்ளனர் இந்த இடத்தில் வசித்து வரும் இவர்களின் முன்னோர்கள் தங்கள் வீடு மற்றும் இடத்தை விற்றும் வாங்கியும் மாற்றி மாற்றி பத்திரம் செய்தும் பயன்பாடுகளுக்கும் உட்படுத்தியுள்ளனர்.
மேற்படி மடத்தின் நிலங்கள் தனிநபர்கள் பெயரில் நில உடைமைப்பதிவு மேம்பாட்டு திட்டத்தில் தவறுதலாக இணைத்து பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் பெயரில் எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் இந்த நிலங்களை ஆய்வு செய்துள்ளனர்.
ஸ்ரீ ராமபகவதி கோவில் என்ற தனியார் கோவில் இவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இதனை தவறுதலாக மடம் சொத்து என்று அறிவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த 10-10-2019 -அன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தீர்ப்பு படி திருக்கோயில் மடம் நிலத்தை மட்டும்தான் மீட்டிருக்கவேண்டும். ஆனால் குடியிருப்பு பகுதியும் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் கடந்த 24-04-2020 அன்று அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் இந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அகவே இங்கு வசித்து வரும் குடும்பங்களை இந்த நிலத்தில் தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களை சொத்து வரி செலுத்த அனுமதிக்க வேண்டும்.
- மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள் (15-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தென் மாவட்ட பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அங்கு பிரசாரம் செய்கிறார். மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து பாதுகாப்பு படை அதிகாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பேச உள்ள நிகழ்ச்சிக்கான பந்தல் கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி, மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொதுக்கூட்ட இடத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
பிரதமர் மோடி பேசவுள்ள மேடை தெற்கு இருந்து வடக்கு பார்த்து அமைக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் ஜேசிபி எந்திரம் மூலமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
- தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
- மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார்.
நாகர்கோவில்:
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக இன்று குமரி மாவட்டம் வந்தார்.
அவருக்கு குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வந்த காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை நியாயமான பெண்களுக்கு சென்று சேரவில்லை. கட்சியை சேர்ந்த பெண்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதைதான் குஷ்பு கேட்டுள்ளார். அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
உரிமை தொகை வாங்குபவர்கள் பிச்சைக்காரிகள் என்று குஷ்பு கூறியிருப்பது அவருடைய கருத்து. என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு இல்லை. நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.
நன்றாக பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் காங்கிரசும், தி.மு.க.வும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களுக்கு பதவி கொடுக்காமல் எப்போது வேலை பார்த்தீர்கள் என்று ஒரு பெண்ணிடம் கேட்க முடியாது.
பாரதிய ஜனதாவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட்டு கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி, அதற்கு 2 விஷயங்கள் மையமாக கொண்டிருக்கும்.
ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சி இருக்கும். பெண்கள் களப்பணி ஆற்று தளத்தை உருவாக்குவார்கள். அது தான் பாரதிய ஜனதாவின் சீரிய தன்மை. அதை விரைவில் செய்வார்கள்.

பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். குடும்பக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணியை மட்டுமே பிரதான பணியாக நினைக்க கூடியது பாரதிய ஜனதா. மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பணியாற்ற நான் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளேன்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை எம்.பி.யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏ.வாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால் என்னை உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை.
அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரசில் இருக்க முடியும். ஆனால் சாமானிய மக்களால் பாரதிய ஜனதாவில் இருக்க முடியும்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்கு தான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்து இருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார். எனவே அதற்கு ஏற்றார் போல் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் வர வேண்டும்.
இங்கிருந்து 2014-ல் 39 எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள் சென்று என்ன பிரயோஜனம். எதுவும் இல்லை. பாராளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தி விட்டு வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.
மத்தியில் ஆளக்கூடிய கட்சி இங்கும் வெற்றி பெற வேண்டும். இங்கு வெற்றி உறுதி செய்யப்பட்டால் தான் மக்களுக்கு இன்னும் பலன்கள் கிடைக்கும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மாற்றமும் ஏற்றமும் பாரதிய ஜனதாவை உயர்த்தி பிடிக்கும். அதை நாங்கள் உறுதியாக எடுத்து செல்வோம்.
தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டீர்கள்? ஆனால் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
கன்னியாகுமரி:
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் வருகிறார். இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையின் மூலமாக கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பிரதமர் மோடி 18-ந் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், 19-ந் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார். சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்ததை வரவேற்கிறேன்.

பிரதமர் மோடி ஆளுமையை ஏற்று வரும் அனைத்து கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.
தமிழகத்தை பொறுத்த மட்டில் தி.மு.க.வை மிஞ்சும் அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சாதனைகளை செள்துள்ளது. அயல்நாட்டு தொடர்பு முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு வளர்ச்சிகளை செய்துள்ளது.
கோடிக்கணக்கான திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். இந்த தேர்தலை பொருத்தமட்டில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் விஜயதரணி போட்டியிடுவாரா? என்பது குறித்து தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு தலைமை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார்.
- அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விஜூ (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த சவுமியா என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆட்ஷிக் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. விஜூ தினமும் குடித்துவிட்டு வந்து சவுமியாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுமியா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
அங்கு அவரது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனை அறிந்த விஜூ, குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக மனைவி சவுமியா வீட்டுக்கு சென்றார். அப்போது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றபோது சவுமியாவும் வருவதாக கூறினார்.
அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விஜூ குழந்தையை தனது சகோதரர் சிஜினுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது சவுமியா மீண்டும் கணவனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த சவுமியாவின் 15 வயது சகோதரர் திடீரென வெட்டுக் கத்தியால் விஜூவை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த விஜூவை மீட்டு சிஜின் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு விஜூ நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிஜின் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சவுமியாவின் 15 வயது சகோதரர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது சகோதரி சவுமியாவை விஜூ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இது குறித்து எனது சகோதரி எனது குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று எங்கள் வீட்டில் வைத்து தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து வெட்டுக்கத்தியை எடுத்து விஜூவை வெட்டினேன் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சாலையை சரி செய்ய ரூபாய் 35 கோடி நிதி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.
- மாவட்ட நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கொல்லங்கோடு வள்ளவிளை கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போக்குவரத்து தடைப்பட்டிருந்த வள்ளவிளை இடப்பாடு கடலோர சாலையை சரி செய்ய தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்களுடன் சேர்ந்து தொடர் முயற்சிகள் எடுத்த பலனாக சாலையை சரி செய்ய ரூபாய் 35 கோடி நிதி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த சாலை பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து நீரோடி கிராமத்தில் இருந்து மார்த்தாண்டம் வரை புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், பங்கு தந்தையர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
- ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரல்வாய்மொழி:
நாகர்கோவில் இடலாக்குடி புத்தன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெய்குமார் (வயது 26). திருமணமான இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.
இவருக்கும் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஜெய்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஜெய்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே வந்துள்ளார்.
அவர் கள்ளக்காதலி வீட்டுக்குத் தான் செல்வார் என கருதிய அவரது மனைவி, உறவினர் ஒருவர் துணையுடன் ஜெய்குமாரை பின் தொடர்ந்து வந்தார். கள்ளக்காதலி வீட்டுக்கு ஜெய்குமார் வந்த போது, திடீரென அவர் முன்பு மனைவி வந்துள்ளார். இதனால் ஜெய்குமார் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெய்குமாரை, மனைவியும் உறவினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் ஜெய்குமார் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வரவேற்பாளராக இருந்த அஜய் (21) விசாரணை மேற்கொண்டார். அப்போது திடீரென ஜெய்குமார், போலீஸ் நிலையத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார்.
இதனை தடுக்க முயன்ற அஜய் மீதும் கண்ணாடியால் குத்தி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஜெய்குமார், தனது உடலிலும் கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் நிலைய வரவேற்பாளர் அஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்குமார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது.
- கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம்.
நெல்லை:
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.
அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. வாய்ப்பு வழங்குவது தொடர்பாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் பரிசீலிக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு எங்களுடைய சட்டப்பேரவை முதன்மைச் செயலாளருடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம்.
கால்டுவெல், ஜி. யு.போப் பற்றி கூறியபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்திய கலாசாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள்.
பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாசாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அவர்கள் தான் சொத்து வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் வெள்ளைக்காரர்களான கால்டுவெல், ஜி. யு.போப் போன்றவர்கள் வந்த பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதைத்தாண்டி இந்திய, தமிழக கலாசாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்.
தமிழர்கள், இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம். உயர் ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கும் முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் தான். கால்டுவெல்லை அங்குள்ள 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
- பிரதமர் மோடி பங்கேற்று பேசும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களிலும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் கணிசமான இடத்தை பிடிக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
அதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி சமீபகாலமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தது மட்டுமின்றி, பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
அவர் தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார்.
அவர் தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்வார் என்றும், கன்னியாகுமரியில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுவார் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவரது பயணத்தில் 'திடீர்' மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒரு நாள் முன்னதாக வருகிற 15-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பகல் 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
அப்போது அவர் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பிரதமர் மோடி பங்கேற்று பேசும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பொதுக்கூட்ட திடலுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காலை சென்றனர். பந்தல் அமைப்பது, பொதுக்கூட்ட மேடை அமைப்பு பணி குறித்து அவர்கள் திட்டமிட்டனர். அந்த பணிகளை இன்று மாலை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
பிரதமர் வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.
- புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் எழுதிய "மன் கீ பாத். மனதின் குரலுக்கு ஓர் இந்திய குடிமகனின் 108 கேள்விகள்" எனும் புத்தக வெளியீட்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.

மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெய ரஞ்சன் புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தொழிலாளி, வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (வயது 54), தொழிலாளி. இவரது மகன் செல்வா (19). நேற்று மாலை தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வா, தனது மோட்டார் சைக்கிளை அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டாராம். இதைதொடர்ந்து அவரது தந்தை ஸ்ரீ லிங்கம், மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்க அதே பகுதியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது, கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பல மணி நேரம் போராடி நள்ளிரவு மீட்டனர். பின்னர் 2 உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன.
கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் மூச்சு திணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டாரம் அருகே கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தொழிலாளி-வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சி பகுதியில் சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போதை பொருட்களை பொருத்தமட்டில் அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏராளமான கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் எந்த சமரசமும் இன்றி குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சிகளை முடக்குவதில் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இது ஜனநாயகத்தை படுகுழிக்கு கொண்டு செல்லும் செயலாகும். குமரி மாவட்டத்தில் ஏராளமான புதிய வழித்தடங்களில் புதிதாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ஒரு சில வழித்தடங்களில் பஸ்களை இயக்கும்போது அதற்கு போதுமான வரவேற்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும். கோவில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






