என் மலர்
கன்னியாகுமரி
- பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பின்பு பேச தொடங்கிய பிரதமர், என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
* தமிழக மண்ணில் நான் ஒரு மாபெரும் மாற்றத்தை காண்கிறேன்.
* தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழகம் அடக்கும்.
* தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக எப்போதும் மாற்றாது.
* மக்களை கொள்ளையடிக்கவே இவர்கள் ஆட்சியமைக்க நினைக்கிறார்கள்.
* நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம். அவர்கள் 2ஜியில் ஊழல் செய்தார்கள்.
* இந்தியா கூட்டணி ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தார்கள்.
* இந்தியா கூட்டணியின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது.
* பா.ஜ.க அரசு ஏராளமான விமான நிலையங்களை கட்டியது.
* கன்னியாகுமரி பா.ஜ.க.வுக்கு எப்போதும் மாபெரும் ஆதரவு தந்திருக்கிறது.
* வாஜ்பாய் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.
* கன்னியாகுமரி- திருவனந்தபுரம் 4 வழிச்சாலை கொண்டு வர மாநில அரசு உதவவில்லை.
* இரட்டை ரெயில் பாதை வேண்டும் என்ற மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை இவர்கள் நிறைவேற்றவில்லை.
* பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* நாம் தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறோம்.
* உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
* மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை உணர்ந்து பாராட்டுகிறேன்.
* தமிழ்நாட்டின் ரெயில்வே, சாலை வசதிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார்.
#WATCH | "DMK-Congress' INDI alliance can never make Tamil Nadu a developed state as its history is of scams and corruption...," says PM Modi during a public rally in Kanniyakumari, Tamil Nadu. pic.twitter.com/mcKvjA8QkO
— ANI (@ANI) March 15, 2024
- குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.
- மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
* குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.
* கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் பிரதமர் மோடி.
* குமரியில் 1995-ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார்.
#WATCH | PM Modi to address a public rally in Tamil Nadu's Kanniyakumari, shortly pic.twitter.com/HhbJVBmrqE
— ANI (@ANI) March 15, 2024
* அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்.
* 400 தொகுதிகள் வெற்றி என்பது வெறும் வார்த்தை அல்ல, இந்திய மக்களின் உணர்வு.
* 1892-ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.
* தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்.
* மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.
* 147 கோடி மக்களின் விஸ்வ குருவாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றார்.
இதையடுத்து மகளிர் அணியின் சார்பில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி பா.ஜ.க. சார்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
#WATCH | Women BJP leaders felicitate PM Modi during a public rally in Tamil Nadu's Kanniyakumari pic.twitter.com/3GowmX6Wg7
— ANI (@ANI) March 15, 2024
முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. 40 மக்களவை தொகுதிகளிலும் நாம் நிச்சயம் வெல்வோம் என்றார்.
- தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம்.
- மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் அனைத்து மாநிலங்களிலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தி.மு.க. தன் வழக்கமான கூட்டணி கட்சிகளோடு களம் இறங்க, அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி முறிந்து தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை அமைத்து செயலாற்றி வருகிறது.
குறிப்பாக தமிழகம், கேரளாவில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 மாநிலங்களிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் அவர் கேரளா மற்றும் தமிழகத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதற்காக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விஜயதாரணி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் மீனா தேவ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் உள்ளது. தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம் என்றார்.
இதன்பின்னர் பேசிய சரத்குமார், நாட்டை ஆள்வதற்கான நல்ல தலைவர் மோடி. 3-வது முறையாக பிரதமராக அமர உள்ளார். மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் அற்ற, சுயநலம் அற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
- 74-வது திருஏடு வாசிப்பு விழா.
- நாளை மறுநாள் பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை நெட்டியான்விளையில் அய்யா வைகுண்டர் பதி உள்ளது. இங்கு 192-வது அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 74-வது திருஏடு வாசிப்பு விழா ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் திருஏடு வாசிப்பு, விளக்கவுரை, உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்து வருகிறது.
8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்க உரை, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சுருள் வைப்பும் சாமிதோப்பு தலைமை பதியை சேர்ந்த பால் பையன் தலைமையில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் நாடகம் நடக்கிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு உகப்படிப்பும் நடக்கிறது.
18-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பள்ளி உணர்த்தல் 9.30 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் ஒருங்கிணைந்த நிலப்பறவை கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பறவைகள் கணக்கெடுப்பானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் என மொத்தம் 25 பகுதிகளில் நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
பறவைகள் கணக்கெடுப்பில் மொத்தம் 191 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. முந்தைய ஆண்டான 2023-ம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பினை ஒப்பிடுகையில் இந்த வருடம் கூடுதலாக 18 இன வகை பறவைகள் அதிகமாக கண்டறியப்பட்டன. அதாவது இந்த கணக்கெடுப்பில் குமரி வனக்கோட்டத்தில் மொத்தம் 6,055 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகளான நீல தலை பூங்குருவி, வடக்கு சிட்டு பருந்து, கதிர்குருவி, பிளைட் நெட்டைக்காலி, பெரிய அலகு கதிர் குருவி ஆகிய வலசை பறவைகள், புதியதாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இங்கு கூடுதலாக வசித்து வருகிற பறவைகளில் நீண்ட அலகு நெட்டைக்காலி, சிறிய வல்லூறு, கேரள கொண்டைக்கழுகு, கருஞ்சிவப்பு வயிற்று கழுகு, மலை இருவாச்சி, பொன்முதுகு மரங்கொத்தி, மஞ்சள் கண் சிலம்பன், பருத்த அலகு கதிர்குருவி ஆகிய பறவைகளும் புதியதாக கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகவலை மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
- கன்னியாகுமரி கடற்கரை, காந்திமண்டபம், சன்செட் பாயிண்ட், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
- 7 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கழமை) பகலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். எனவே பாதுகாப்பு கருதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர குமரி மாவட்ட போலீசார் 1,200 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி வருகையையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. எந்தவித டிரோன்கள் பறக்கவும் அனுமதி இல்லை.
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுக்கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி கடற்கரை, காந்திமண்டபம், சன்செட் பாயிண்ட், கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், ஹெலிகாப்டர் இறங்குதளம், கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை திறக்கக்கூடாது.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று மதியம் 2 மணி வரை மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவைநகர், கோவளம் ஆகிய 7 கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி காரில் வந்து- செல்லும் சாலை ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்குகிறார்.
அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு சென்று பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் மதியம் 12.15 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு புறப்படுகிறார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் மோடி காரில் வந்து- செல்லும் சாலை ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து குமரி மாவட்ட போலீசார் என மொத்தம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்தார்.
- நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- அன்பழகன் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார்.
நாகர்கோவில்:
சென்னையை சேர்ந்தவர் சாந்தி. இவர் குடும்பத்தோடு நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக நாகர்கோவிலுக்கு வந்தார்.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வந்தபோது சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ரெயிலை விட்டு இறங்கினார்கள். அப்போது அவர்களது கைப்பை மாயமாகி இருந்தது. அதில் 30 பவுன் நகைகள் இருந்தது.
இதையடுத்து அவர்கள் கைப்பையை அந்த ரெயில் பெட்டி முழுவதும் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை. இந்த வழக்கை விசாரிக்க ரெயில்வே டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது சாந்தி பயணம் செய்த பெட்டியில் இருந்து இறங்கி செல்கிறார்களா என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது நெல்லை ரெயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நெல்லை பாளையாங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 50) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் சாந்தியின் கைப்பையை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். அன்பழகனை கைது செய்த போலீசார் அந்த நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அன்பழகன் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார். அந்த நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பாதியளவு நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மீதி நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது
- மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது
பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.
தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வாம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜோக்குமார் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடைசியாக காங்கிரசே அங்கு வெற்றி பெற்றிருந்ததாலும் தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
- காங்கிரசுக்கு தான் தொகுதி என்பது முடிவான நிலையில் அந்த கட்சியின் சார்பில் யார் களம் இறக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், 3 முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
கடந்த சில மாதங்களாக கட்சி தலைமை மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்தார். கட்சி தலைமை பதவி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காதது குறித்து அதிருப்தியில் இருந்த அவர், சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
அத்தோடு தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதமும் எழுதினார். அதனை பெற்றுக்கொண்ட சபா நாயகர், விஜயதரணியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து சட்டசபை செயலகம், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் அனுப்பியது. எனவே விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவானது. இடைத்தேர்தலை பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
எனவே பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், விளவங் கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் சேர்ந்து தயாராகி வருகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் அதிகமுறை வெற்றி பெற்றிருப்பதாலும், கடைசியாக காங்கிரசே அங்கு வெற்றி பெற்றிருந்ததாலும் தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடமும் வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையில் விளவங்கோடு தொகுதியில் தி.மு.க. களம் இறங்க வேண்டும் என அக்கட்சியினர் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.எனவே விளவங்கோடு தொகுதியில் களம் இறங்கப் போவது யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தநிலையில் அந்த தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க, தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டிவரும் தி.மு.க., சட்டமன்ற இடைத்தேர்தலில் கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதாலும், அந்த தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு தான் தொகுதி என்பது முடிவான நிலையில் அந்த கட்சியின் சார்பில் யார் களம் இறக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அங்கு பெண் வேட்பாளரே நிறுத்தப்படுவார் என சமீபத்தில் தொகுதியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்திருந்தார்.
எனவே குமரி மாவட்ட மகளிர் காங்கிரசார் இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில துணைத் தலைவர் ராபர்ட் புரூஸ், ஜவகர் பால்மஞ்ச் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர்.டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சர்மிளா ஏஞ்சல், தாரகை கட்பர்ட் உள்ளிட்ட பலர் தொகுதியில் களம் இறங்க கட்சியின் தலைமையை அணுகி வருகின்றனர்.
இடைத்தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? என்று காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. இதனால் தற்போதே விளவங்கோடு தொகுதி சூடுபிடித்துள்ளது.
- பானக்காரம் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
- பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி:
பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருக்கும். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து அனல் காற்று வீசும். இந்த கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானக்காரம், மோர், கரும்பு ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றை குடித்து சூட்டை தணித்துக் கொள்வார்கள்.
இதேபோல இறைவனுக்கும் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக `பானக்காரம்' என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் `பானக்காரம்' நிவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவது தான் `பானக்காரம்' ஆகும். இந்த பானகாரத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.
இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது ஐதீகம் ஆகும். இதனால் இந்த பானக்காரம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
- டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளும் வந்துள்ளனர்.
- பிரதமர் மோடி பேச உள்ள மேடை தெற்கிலிருந்து வடக்கு பார்க்கவும் அமைக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி தமிழகத்தை குறி வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பிரசாரம் மேற்கொண்ட அவர், நாளை (15-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வருகிறார்.
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்கும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வருகிறார். அங்கு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்து பகல் 12.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளும் வந்துள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள ஹெலிபேடில் மோப்ப நாய் மூலம் போலீசார் சோதனை செய்த காட்சி - கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான மூன்று ஹெலிகாப்டர்கள் கன்னியாகுமரிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரி முதல் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரையிலும் பிரதமர் மோடி செல்ல உள்ள பாதையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
சாலையின் இருபுறமும் 5 அடிக்கு ஒரு போலீசாரை நிறுத்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அந்த சாலையில் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் விழா நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பணியை மேற்கொண்டு உள்ளனர்.
பிரதமர் மோடி பேச உள்ள மேடை தெற்கிலிருந்து வடக்கு பார்க்கவும் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்க முனைப்பு காட்டி வருகிறார்கள். பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் வருகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமையும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் கருதுகிறார்கள். மோடி வருகையையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 19-ந்தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.






