search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samithoppu"

    • 74-வது திருஏடு வாசிப்பு விழா.
    • நாளை மறுநாள் பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை நெட்டியான்விளையில் அய்யா வைகுண்டர் பதி உள்ளது. இங்கு 192-வது அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 74-வது திருஏடு வாசிப்பு விழா ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் திருஏடு வாசிப்பு, விளக்கவுரை, உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடந்து வருகிறது.

    8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்க உரை, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, சுருள் வைப்பும் சாமிதோப்பு தலைமை பதியை சேர்ந்த பால் பையன் தலைமையில் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் நாடகம் நடக்கிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடை, 8.30 மணிக்கு உகப்படிப்பும் நடக்கிறது.

    18-ந் தேதி மாலை 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு பள்ளி உணர்த்தல் 9.30 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
    • உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும்.

    அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.

    நிலைக்கண்ணாடி

    அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

    அகிலத்திரட்டு அம்மானை

    அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனை யையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    மறு அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டர்

    அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார். இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர்.

    1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர். 3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.

     முத்திரி கிணறு

    அய்யா வைகுண்டர் சாமி தோப்பின் வடக்கு வாசல் பக்கம் இருந்தபடியே நிறைய அற்புதங்களையும், சமூக மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலானார். தீண்டாமை சிக்கலில் தவித்த மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் கிணறு ஒன்றை உருவாக்கி அதற்கு முத்திரி கிணறு என்று பெயரிட்டு அனைத்து சமுதாயத்தினரும் ஒரே கிணற்றில் நீர் எடுத்து பருக ஆரம்பித்தனர்.

    ஒரு வீட்டு கிணற்று தண்ணீரை மற்றொரு வீட்டுக்காரர் எடுத்து பழகினாலே தீட்டு என்று கருதிய மேற்குடியினர், பல சாதியினரும் ஒரே கிணற்று தண்ணீரை பருகியதை கண்டு ஆச்சரியப்பட்டு தான் போனார்கள்.

    • வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இங்கு தினமுமே திருவிழா போன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வருடத்திற்கு 3 முறை திருவிழா நடைபெறுகிறது. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆவணி, தை திருவிழாக்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளிலும், வைகாசி திருவிழா தமிழ் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையும் கொடி ஏறி 11 நாட்கள் நடைபெறும். இதில் 6-ம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்று மாலை சர்ப்ப வாகனம் எடுக்கப்படும். நாகதோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்க வந்து வழிபட்டு செல்வார்கள். அய்யாவிற்கு பால், சுருள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    இதேபோல் 8-ம் திருவிழா அன்று கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் காட்சி யளித்து வருகிறார். 11-ம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறும். நான்கு ரத வீதிகளிலும் அய்யா வழி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருவார்கள்.

    தேர்த் திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு செல்வார்கள்.

    அய்யா வைகுண்டருக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பன்னீர், பழம், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை சுருளாக வைத்து வழிபடுவார்கள். உப்பும், மிளகும் வாங்கியும் காணிக்கையாக செலுத்துவார்கள்.

    கார்த்திகை மாதம் 17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறும். தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அய்யா வைகுண்டசாமி பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தினமும் அதிகாலை 3 மணிக்கு முத்திரி கிணற்றில் குளித்த பின்பு பணிவிடை செய்து வருகிறார்கள். கருவறை திறக்கப்பட்டு வாகன பவனி நடைபெறும். காலை, மாலை இருவேளையும் நான்கு ரத வீதிகளிலும் வாகன பவனி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனப்பால் வழங்கப்படும். காலை 11 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு உகப்படிப்பும், அதைத் தொடர்ந்து வாகன பவனியும் நடைபெறும்.

     தலைமை பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் முத்திரி கிணற்றில் பதமிட்டு அங்கிருந்து அய்யா வைகுண்ட சாமி பதிக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். அய்யாவை நினைத்து பக்தர்கள் பதமிட்டு வருகிறார்கள்.

    அன்பில் எல்லோரையும் அரவணைத்து ஆள வேண்டும் என்று அய்யா விரும்பினார். எவருக்கு எவரும் குறைந்தவர் இல்லை, எல்லோரும் இந்த நாட்டின் மன்னர்கள் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்கு அய்யாவழி பக்தர்கள் தலைப்பாகை அணிந்துவர சொன்னார். எனவே தற்போதும் கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் யாராக இருந்தாலும் தலையில் தலைப்பாகை அணிந்தே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வடக்கு வாசலில் பக்தர்களுக்கு நாமம் கொடுப்பதில்லை. மாறாக திருமண்எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புனித மண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடிபட்ட மண் தான். இந்த மண்ணுக்கு அரிய மருத்துவ குணங்கள் உண்டு.அந்த திருமண் வடக்கு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் திருநாமமாக பூசி வழிபட்டு வருகிறார்கள். மேலும் பதிக்குள் நுழைந்ததும் குருமார்கள் நெற்றியில் நாமம் விட்டு வருகிறார்கள்.

    முந்தைய காலத்தில் கீழ்ஜாதியை சேர்ந்தவர்களுக்கு ஆலயங்களில் நுழைய தடை இருந்தது. ஆனால் அய்யா காலத்தில் அது மாறுதல் அடைந்தது. ஆகவே அடுத்த சீர்திருத்தம் 'தொட்டு நாமம் சாற்றுதல்'என்ற பெயரில் வந்தது. பக்தர்கள் நெற்றியில் ஒருவர் நாமம் இடுவதே அது. பூசாரிகள் ஆலயங்கள் தரப்படும் விபூதியை பிரசாதத்தை தொடாமல் மேலிருந்து தூக்கி போடுவார்கள். ஆகவே நிழல் தாங்கல் அனைத்திலும் நாமம் இடும் வழக்கம் தொடங்கப்பட்டது.

    அங்கிருந்து குருமார்கள் 2 விரல்களை கொண்டு பக்தர்கள் நெற்றியில் ஜோதி போன்ற நாமம் இடுமாறு கட்டளை இட்டார். பக்தர்கள் நாமமிட்ட பிறகு கருவறைக்குள் சென்று வழிபடுவார்கள்.

    அய்யாவை நினைத்து வழிபடுபவர்களுக்கு நினைத்தது கை கூடி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார். இதனால்தான் அய்யா வைகுண்டசாமி பதிக்கு பக்தர்கள் அதிக அளவு வருகை தருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    சாமிதோப்பு தலைமை பகுதியில் வைகுண்டருக்கு கை குத்தல் அரிசி மூலம் காய்கறிகளை சேர்த்து சமைக்கப்பட்ட உணவே பணிவிடை செய்யப்படுகிறது. அந்த உணவு மண்பானை கொண்டே சமைக்கப்படுகிறது. சமையலில் பூசணிக்காய், மிளகாய், கத்தரிக்காய், இளவக்காய், வாழைக்காய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அய்யாவிற்கு பக்தர்கள் தென்னங்கன்று மற்றும் கோமாதாவை காணிக்கையாக வழங்கி வருகிறார்கள். மேலும் நினைத்தது நடக்க வேண்டி பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்தும் வழிபடுகிறார்கள்.

     சந்தன குடம் எடுக்கும் பக்தர்கள் பதியை சுற்றியுள்ள 4 ரத வீதிகளை சுற்றி வருவார்கள். குழந்தை வரம் வேண்டியும் பலரும் அய்யாவை வழிபட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்த பிறகு அந்த குழந்தையோடு வந்து அய்யாவை வழிபட்டு செல்கின்றனர். அப்போது அந்த குழந்தைக்கு முடி இறக்கி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    பெண் குழந்தையாக இருந்தால் காதுகுத்தியும் செல்கின்றனர்.அய்யா வைகுண்ட சாமி தலைமை பதியில் தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் தேங்காய் எண்ணையையும் காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

    மேலும் பதியில் தங்கி இருப்பவர்களுக்கு வஸ்திரங்கள் வாங்கி கொடுத்து வருகிறார்கள். அன்னதர்மம், கருப்புகட்டி தர்மம், பழ தர்மங்கள் மிகச்சிறந்ததாக விளங்கி வருகிறது. நினைத்தது நிறைவேறியதும் தர்மம் வழங்குவதே இங்கு பிரதான ஒன்றாக உள்ளது.

    நோய்கள் குணமாக சிலர் சாமித்தோப்பு பதிவில் தங்கியிருந்து தினமும் காலை மற்றும் மாலையில் முத்திரி கிணற்றில் பதம் இட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். நோய் குணமாகிய பிறகு இங்கிருந்து வீடுகளுக்கு திரும்பி செல்கிறார்கள். இதன்மூலம் அய்யாவை நம்பி வந்தவர்களை வாழவைக்கும் புண்ணிய பூமியாக சாமிதோப்பு விளங்கி வருகிறது.

    புண்ணிய பூமியாக விளங்கும் சாமிதோப்பு. நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் அய்யா வைகுண்டர்.

    ×