search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெண்ணிடம் 30 பவுன் நகைகளை திருடியவர் கைது
    X

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெண்ணிடம் 30 பவுன் நகைகளை திருடியவர் கைது

    • நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • அன்பழகன் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார்.

    நாகர்கோவில்:

    சென்னையை சேர்ந்தவர் சாந்தி. இவர் குடும்பத்தோடு நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக நாகர்கோவிலுக்கு வந்தார்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வந்தபோது சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ரெயிலை விட்டு இறங்கினார்கள். அப்போது அவர்களது கைப்பை மாயமாகி இருந்தது. அதில் 30 பவுன் நகைகள் இருந்தது.

    இதையடுத்து அவர்கள் கைப்பையை அந்த ரெயில் பெட்டி முழுவதும் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    ஆனால் எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை. இந்த வழக்கை விசாரிக்க ரெயில்வே டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது சாந்தி பயணம் செய்த பெட்டியில் இருந்து இறங்கி செல்கிறார்களா என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது நெல்லை ரெயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.

    அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நெல்லை பாளையாங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 50) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் சாந்தியின் கைப்பையை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். அன்பழகனை கைது செய்த போலீசார் அந்த நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அன்பழகன் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார். அந்த நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பாதியளவு நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மீதி நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×