என் மலர்
சென்னை
- ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பண்டிகை சீசனில் ரெயில் டிக்கெட் தேவை அதிகரிப்பதால், இந்திய ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் 60 நாட்கள் முன்பு முன்பதிவு வசதி வழங்குகிறது.
அந்த வகையில், ஜனவரி 14-ந்தேதி போகி பண்டிகையன்று பயணிப்பதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய காலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலம் பயணிகள் முன்பதிவு செய்ததால் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.
- பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும்.
- பீகார் தேர்தலில் கடினமாக உழைத்த இளம் தலைவர் தேஜஸ்விக்கும் வாழ்த்துகள்.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
* பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிதிஷ்குமார் நிறைவேற்ற வேண்டும்.
* பீகார் தேர்தலில் கடினமாக உழைத்த இளம் தலைவர் தேஜஸ்விக்கும் வாழ்த்துகள்.
* பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்.
* தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை மிகவும் கீழ் நிலைக்கு சென்றுவிட்டது.
* பீகார் தேர்தல் முடிவானது தேர்தல் ஆணையத்தின் தவறான, பொறுப்பற்ற செயலை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
- வரும் ஜனவரி மாதம் 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
சென்னை:
சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது. இதுவரையில், இந்தியா முழுவதும் 92 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரெயில்கள் இருக்கை வசதி கொண்டதாக இருப்பதால் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
எனவே, இரவு நேர பயணிகளின் தேவைக்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தில், கடந்த ஆண்டு முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணிகள் நடைபெற்றது. பின்னர், ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டுவரப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் பலகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல, 2-வது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு பணிகள் முடிந்து தற்போது ஆமதாபாத்தில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில் சேவைகளும் வரும் ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதேபோல, வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 8 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
வரும் ஜனவரி மாதம் 2 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் கண்டிப்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரெயிலின் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் மார்ச் மாத இறுதிக்குள் கூடுதலாக 8 வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தேவைக்கேற்ப ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணி நடைபெறும். இதேபோல, பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கன்னியாகுமரி வரையில் ஒரு படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வாறு கூறினார்கள்.
- ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.
- 7 மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, 'நீரிழிவு நோய் வகை -1' விழிப்புணர்வு காணொளி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், தேசிய நலவாழ்வு குழுமத்துடன் இணைந்து பணியாற்றும் பங்குதாரர்களை சிறப்பித்தார்.
அதைதொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கர்ப்பகால நீரிழிவு நோயினை தடுப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கினால் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்காது என்பது குறித்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான மாதிரி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.
சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், நெல்லை, தர்மபுரி, திருச்சி ஆகிய 7 மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2.5 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது.
நீரிழிவு நோய் பாதிப்பு இந்திய அளவில் 12 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 13 சதவீதமாகவும் இருக்கிறது. தமிழகத்தில் பாதிப்புகள் இருந்தாலும் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதார இயக்குனர் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி இயக்குனர் சுகந்தி ராஜகுமாரி, ஊரகநலப்பணிகள் இயக்குனர் சித்ரா, நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் ஷேசையா மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
சென்னை:
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம்.
- உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.
இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்!
விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்.
- பெரும்பாலான மூச்சுக்குழாய் தொற்று நோய் பள்ளி பருவக்குழந்தைகளில் இருந்து வீட்டுக்கு பரவுகிறது.
- இருமல், தும்மல் வரும்போது முகத்தை மூட வேண்டும்.
சென்னை:
சென்னையில் மூச்சு கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் மூச்சுக்குழாய் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
லேசான மூச்சுக்குழாய் அறிகுறிகள், தும்மல், நீர்க் கோழை, வறண்ட இருமல், காய்ச்சல், தலைவலி ஆகியவற்றுடன் மீண்டு வருகிறார்கள். ஆனால் இணை நோய்கள் உள்ள முதியவர்கள் அதி தீவிர அறிகுறிகளுடன் நிமோனியா, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மூச்சுக்குழாய் பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தேசிய முகமை ஆய்வு நிறுவனத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு மூச்சுக்குழாய் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் காய்ச்சல் மற்றும் மூச்சுக்கோளாறு கொண்ட நோயாளிகள் அதிகரித்து வருவதாக அதன் இயக்குனர் டாக்டர் தீபா தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூச்சுக் குழாய் நோய், நோயாளிகள் 62 பேர் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலை தொடர்கிறது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
பெரும்பாலான மூச்சுக்குழாய் தொற்று நோய் பள்ளி பருவக்குழந்தைகளில் இருந்து வீட்டுக்கு பரவுகிறது. 70, 80 வயதுடையவர்களை இந்த நோய் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இணை நோய் போன்ற காரணிகளால் வயதானவர்களுக்கு அதிக இடர்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் மிகவும் தொற்றக்கூடிய வைரஸ். இது லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொடுத்தாலும் நிமோனியா, பிராங்கைடிஸ் போன்ற தீவிரமான நோய்களை உருவாக்கக்கூடியது. தும்மல், இருமல் மூலம் எளிதாக மற்றவர்களுக்கு பரவக்கூடியது. மூச்சுக்குழாய் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முதல் 8 நாட்கள் வரை வைரசை பரப்பலாம். சிலருக்கு 2 வாரங்கள் வரை கூட நீடிக்கலாம். காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், உதடு-சருமம் நீலநிறம், உணவு சாப்பிடும் ஆர்வம் குறைதல், கோபமடைதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோய் பாதிப்பில் இருந்து தவிர்க்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
இருமல், தும்மல் வரும்போது முகத்தை மூட வேண்டும். நோயாளிகளுடன் நெருக்கத்தை தவிர்க்க வேண்டும். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.
சென்னையில் காய்ச்சல் காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலானவர்கள் முதலில் இன்ப்புளூயன்சா என நினைக்கிறார்கள். ஆனால் தற்போது மூச்சுக்குழாய் நோய் பாதிப்பு அதிகம் கண்டறியப்படுகிறது.
இவ்வாறு டாக்டர்கள் கூறினார்.
- இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதமோ எடப்பாடி பழனிசாமி தனது 6-வது கட்ட பிரசாரத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளார்.
- குமரி மாவட்டம் மற்றும் மீதமுள்ள மற்ற இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார்.
கோவையில் தொடங்கிய இந்த பிரசாரம் தஞ்சையில் ஜூலை 27-ந் தேதி முடிவடைந்தது. இதன் பின்னர் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி 5 கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டார். இதுவரை 174 தொகுதியில் அவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
மீதம் உள்ள 60 தொகுதிகளிலும் அடுத்த கட்டமாக பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த மாத இறுதியிலோ, அல்லது அடுத்த மாதமோ எடப்பாடி பழனிசாமி தனது 6-வது கட்ட பிரசாரத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மாதமும் அடுத்த மாதமும் சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற இடங்களிலும் மழை பொழிவு எப்படி இருக்கும்? என்பதை அலசி ஆராய்ந்த பிறகே எடப்பாடி பழனிசாமியின் 6-வது கட்ட பிரசாரத்தை திட்டமிடுவதற்கு அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை காலம் ஓய்ந்த பிறகு பிரசாரம் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதனால் ஜனவரி முதல் வாரத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறினார்.
அதே நேரத்தில் குமரி மாவட்டம் மற்றும் மீதமுள்ள மற்ற இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு ஏற்ப பிரசார திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
- பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.
- தேர்தல் முடிவு சந்தர்ப்பவாத அரசியலை விட நல்லாட்சி, முன்னேற்றம், தேசிய நலன் மேலோங்கி உள்ளதை காட்டுகிறது.
தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பீகார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர்.
பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.
இந்த வெற்றி, பீகாரின் ஒவ்வொரு சகோதர சகோதரியும் வளர்ச்சி சார்ந்த எதிர்காலத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரமளித்தல், செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அர்ப்பணிப்பு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் எதிரொலித்துள்ளது. தவறாக வழிநடத்தவும் பிளவுபடுத்தவும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளது.
தேர்தல் முடிவு சந்தர்ப்பவாத அரசியலை விட நல்லாட்சி, முன்னேற்றம், தேசிய நலன் மேலோங்கி உள்ளதை காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பீகார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
- மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்!
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரசாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ஞானம் பெற்ற பீகார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
கடந்த ஆட்சிக் காலத்தில் "டபுள் இன்ஜின் சர்காராக" நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த பீகார் மக்கள் இந்தத் தேர்தலின் போதும் மாபெரும் வெற்றியை நமக்குப் பரிசளித்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நேர்மைக்குக் கிடைத்த வெற்றி! அதிலும் மத்திய அமைச்சர் சிராங் பஸ்வான் முக்கியப் பங்களிப்பு பீகார் கோட்டையில் நமது NDA-வின் வெற்றிக்கொடியை வலுப்படுத்தியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதும், தேர்தலில் தோல்வியடையும் பொழுது அதே தேர்தல் ஆணையத்தைச் சாடுவதும்தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் மக்கள் சேவையில் மட்டுமே தங்களை முன்னிறுத்தி மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே!
ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்து கொண்டு அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிசுமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15 மற்றும் 16-ந்தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19 மற்றும் 20-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிசுமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15 மற்றும் 16-ந்தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக தமிழகம் மாறிவிட்டது.
- நல்வாய்ப்புக் கேடாக தமிழ்நாடு தான் குழந்தைகளில் நரகமாக மாறிவிட்டது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம்!
ரோஜாவின் ராஜா என்றும், நேரு மாமா என்றும் குழந்தைகளால் போற்றப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் உலகம் மகிழ்ச்சியானது; குழந்தைகளின் உலகம் உன்னதமானது.
ஆனால், நல்வாய்ப்புக் கேடாக தமிழ்நாடு தான் குழந்தைகளில் நரகமாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக தமிழகம் மாறிவிட்டது.
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
மொத்தத்தில், திமுக ஆட்சியில், தமிழ்நாடு குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டை குழந்தைகளின் சொர்க்கமாக மாற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர கூறினார்.






