என் மலர்tooltip icon

    சென்னை

    • இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
    • சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.

    நடப்பாண்டில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதிலும், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் காணப்படவில்லை. மேலும் இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும், வீரியம் இழந்த ஒமைக்ரான் வகை தீநுண்மியின் உட்பிரிவுகளான ஜெ.என்.1, எக்இசி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய தீநுண்மி பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாது சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது.

    இருந்தபோதிலும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவா்களும், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சாா்ந்த இணைநோய்களால் பாதிக்கப்பட்டவா்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறாா்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையும்.

    இதன் காரணமாக, இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் அவதி அடைந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    • தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு.
    • இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    பிறகு 2018ம் ஆண்டு சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக சுபாரஷ்கரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.

    ஆனால், தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வின் முன் வந்தது.

    இதில், சுபாஷ்கரன் தரப்பில் ஆஜரானி வழக்கறிஞர், "இவர் ஒரு இலங்கை தமிழர், அகதியாக வந்தவர். அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

    குறிப்பாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் குடியேறி விட்டனர். எனவே இவரையும் இந்தியாவிலேயே குடியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

    அதற்கு நீதிபதிகள், "இந்தியா என்பது உலக அளவிலிருந்து மக்கள் அகதிகளாக வந்து குடியேற ஒரு சத்திரம் கிடையாது. ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற இது சத்திரம் அல்ல, அவ்வாறு செய்யவும் இயலாது என தெரிவித்தனர்

    மேலும், "இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சட்டப்பிரிவு 19ன் படி இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" எனக் கூறினர்

    அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராகப் போராடியதால், அவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றால், அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் எனவே அவரை இந்தியாவில் குடியமர்த்த வேண்டும்" என மீண்டும் கோரினார்.

    ஆனால் நீதிபதிகள் அவ்வாறு அவருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருக்குமேயானால் அவர் வேறு நாடுகளை அணுகலாம், எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கை தமிழர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேதனை அளிக்கிறது. மனிதநேய மாண்பை உடைப்பதுபோல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.

    மனிதாபிமான அடிப்படையில் தஞ்சம் புகுவோருக்கு அடைக்கலம் கொடுப்பது தேசத்தின் கடமை. இந்தியா என்ன சத்திரமா? என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.
    • விண்ணப்பம் செய்தவர்களில் 46,691 பேர் மாணவர்கள். 75,959 பேர் மாணவிகள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் .

    பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர www.tngasa.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.

    இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர் 1,61,324 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 46,691 பேர் மாணவர்கள். 75,959 பேர் மாணவிகள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

    • பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா?
    • மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவரை தனியாருக்கு மாற்றி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க செல்லும் அரசு மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.

    பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா? என கண்காணிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி அரசு மருத்துவமனை தீக்காயப்பிரிவு மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஆஐண பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • திமுக `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
    • திருமணம் செய்துகொண்டு, பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம்.

    அரக்கோணம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை

    வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    21.5.2025 – புதன்கிழமை காலை 9.30 மணி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக `சார்'களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    அரக்கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, ஏற்கெனவே வேறு பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வரும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு. தெய்வச்செயல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அம்மாணவியை பின்தொடர்ந்தும், கைபேசி வாயிலாகவும் காதலிப்பதாகத் தொடர்ந்து வற்புறுத்தியும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தொடர்ந்து டார்ச்சர் செய்தும் மிரட்டிய நிலையில் அம்மாணவி, `எனக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது' என்று தெரிவித்த நிலையிலும், தொடர்ந்து திமுக நிர்வாகி தெய்வச்செயல் வலுக்கட்டாயமாக அம்மாணவியை கடத்திச் சென்று தனது உறவினர்களுடன் சோளிங்கர் அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு,

    பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மேலும் ஒரு பெண், கல்லூரி மாணவியிடம் ஏற்கெனவே ஐந்து வருடத்திற்கு முன்பு திமுக நிர்வாகி தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவும், மேலும், இந்த திமுக நிர்வாகி இதுபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ள விபரத்தையும் தெரிவித்துள்ளார்.

    எனவே, கல்லூரி மாணவி, திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கெனவே பலருடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னையும் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், தவறான வழியில் ஈடுபடுத்த துன்புறுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறை குஐசு பதிவு செய்ய மறுத்ததாகவும், கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை, தான் கூறிய முழு விபரங்களையும் குஐசு-ல் குறிப்பிடாமல் பதிவு செய்ததால், அறிக்கையை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் பேட்டியை அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன.

    திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற `சார்'களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கல்லூரி மாணவியின் புகாருக்கு உரிய நேரத்தில் முழு விபரங்களையும் குஐசு-ல் பதிவு செய்யாமல் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையைக் கண்டித்தும்;, தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.5.2025 – புதன் கிழமை காலை 9.30 மணியளவில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும்,

    கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர் திரு. திருத்தணி கோ. அரி, நுஒ. ஆ.ஞ., ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி

    துணை கொறடாவுமான திரு. சு. ரவி, ஆ.டு.ஹ., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வராகப் பதவியேற்ற ஒரே மாதத்தில் மின் கட்டணமானது சராசரியாக 52% உயர்த்தப்பட்டது.
    • TANGEDCO-வின் இழப்புகளைச் சரி செய்வதற்கு பதிலாக, திமுக அரசு மக்கள் தலையில் சுமையை தொடர்ந்து ஏற்றுவது நியாயமா?

    மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் எண்ணமிருந்தால் திமுக அரசு அதைக் கைவிடவேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கான மின் கட்டணத்தை வரும் ஜூலை மாதத்திலிருந்து உயர்த்தப்போவதாக தி ஹிந்து தமிழ்திசை நாளிதழில் இன்று வெளியாகியுள்ள செய்தி, சாமானிய மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இது உண்மையான தகவலாக இருப்பின், திமுக அரசின் இந்த முடிவானது கடும் கண்டனத்திற்குரியது!

    எதிர்க்கட்சியாக இருக்கையில் "தொட்டால் ஷாக்கடிக்கும் மின்கட்டணம்" என பட்டி தொட்டியெல்லாம் பரப்புரை செய்த திரு. ஸ்டாலின் அவர்கள் முதல்வராகப் பதவியேற்ற ஒரே மாதத்தில் மின் கட்டணமானது சராசரியாக 52% உயர்த்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஜூன் 2023, ஜூன் 2024 என இந்த இருண்ட திமுக ஆட்சியில் வருடாவருடம் உயர்த்தப்பட்டு வரும் மின்கட்டணத்தால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது அரசுக்கு தெரியாதா?

    செயல் திறன் அதிகரித்தல், பெரிய வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைத் தொகை வசூலித்தல், மற்றும் கசிவு குறைப்பு ஆகியவற்றின் மூலம் TANGEDCO-வின் இழப்புகளைச் சரி செய்வதற்கு பதிலாக, திமுக அரசு மக்கள் தலையில் சுமையை தொடர்ந்து ஏற்றுவது நியாயமா?

    ஏற்கனவே திமுக-வின் திறனற்ற ஆட்சியில் படாத பாடு படும் தமிழக மக்கள் தொடர விலையேற்றங்களாலும் வரி உயர்வினாலும் தங்கள் வாழ்வாதாரத்தையும் தொலைத்துவிட்டு வாழ வழி தெரியாமல் நிற்க வேண்டுமா? வாக்களித்த மக்களை வஞ்சிப்பதையே வாடிக்கையாக கொண்ட திமுக அரசு, தாம் என்ன செய்தாலும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறதா?

    2021 தேர்தலின் போது, "மாதக் கணக்கெடுப்பு முறையை பின்பற்றி மக்களின் மின் கட்டண சுமையை குறைப்போம் மற்றும் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் போன்ற திமுக வின் போலி வாக்குறுதிளை எல்லாம் காற்றில் பறக்க விட்டது மற்றும் தற்சார்பு மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் தனியாரை நம்பி தமிழகத்தைக் கடன் சுமையில் தத்தளிக்க விட்டது இவை நான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனைகள்.

    இப்படி மின்கட்டண உயர்வு ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்கிறது என்றால், ஆவின் பால் விலை, சொத்து வரி (25% 150% உயர்வு), சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், கட்டிட அனுமதிக்கான கட்டணம், தொழில்முறை வரி என திமுக ஆட்சியில் அதிகரிக்கும் மற்ற விலைவாசிகளும் வரி உயர்வும் மக்களை விழி பிதுங்க வைக்கிறது.

    வேடிக்கையான உண்மை என்னவென்றால், இந்த நான்காண்டு திமுக ஆட்சியில் மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டு, டாஸ்மாக் கொழுத்தது மட்டுமல்லாமல், அதில் ஆட்சியாளர்களும் கொழுத்தார்கள் என இப்பொழுது எழுந்திருக்கும் ரூ. 1000 கோடி டாஸ்மாக் மோசடி செய்தி சுட்டிக்காட்டுகிறது.

    ஆகவே, மறுபடியும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் அது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கும் என்பதை உணர்ந்து, அப்படிப்பட்ட முடிவை உடனடியாக திமுக அரசு கைவிட வேண்டும். மீறி, விலையேற்றமானது அமலுக்கு வந்தால், மிகப்பெரிய போராட்டங்களை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
    • சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தினர்.

    சாம்சங் நிர்வாகத்திற்கு, தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியது.

    தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக, சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.

    மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு நிர்வாகமும், தொழிலாளர்களும் சமரசமாகினர்.

    இந்நிலையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் சிவி. கணேசன் தலையில் சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்துறை மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் இடையே ஊதிய உயர்வு தொடர்பாக சுமார் 5 நேரம் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

    • கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
    • நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னையில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இதேபோல், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழை பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை அடுத்த சில தினங்களில் வலுப்பெறும். மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 21ம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக கூடும். இது, 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும்.
    • இயல்பான மழைப்பொழிவுதான் இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (19.05.2025) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தள கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தின் தொடக்கத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.

    பின்னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த நான்கு ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டு நாம் கடந்து வந்திருக்கின்றோம். அதற்குக் காரணம் மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நம்முடைய முதல் கடமையாக நினைத்துச் செயல்படுவதுதான்.

    இப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக புயல், வெள்ளம், கனமழை போன்ற பேரிடர்கள் எல்லாக் காலங்களிலும் ஏற்படுகின்றன. ஆனால், அந்த இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளான உங்களுக்கும்தான் இருக்கிறது. இப்போது, நாம் தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ளவிருக்கிறோம்.

    இதில் இயல்பான மழைப்பொழிவுதான் இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    என்னதான் நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மை உள்ளிட்டவற்றுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர் வெள்ளம், நீலகிரி மலைப் பகுதிகளில் ஏற்படுகிற நிலச்சரிவு போன்ற பாதிப்புகளையும் இதனால் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திடவேண்டும்.

    பேரிடர் மீட்பு மையங்கள் தூய்மையாகவும், மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற வசதிகளோடும் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதுமட்டுமல்ல; பேரிடர் மேலாண்மைத் திட்டம் – தகவல் தொடர்புத் திட்டம் – முதல்நிலை மீட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்கள் அனைத்தையும் சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடந்து, நாம் ப்ரோ-ஆக்டிவாகச் செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பல பாதிப்புகளைத் தவிர்க்கலாம். அதற்காக நான் சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

    பேரிடர் காலங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டும், தங்களுடைய குறைகளைச் சொல்லியும் குரல் எழுப்புவது ஊடகங்களிலேயும், சமூக வலைதளங்களிலேயும்தான்.

    எனவே, சோஷியல் மீடியாக்களில், செய்திகளில் வருகிற புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படி எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேருகிறதா என்பதைத் திரும்பவும் நீங்கள் ஃபாலோ-அப் செய்ய வேண்டும்.

    குறைகளைச் சொல்கின்ற மக்களிடையேயும், உதவி கேட்கின்ற மக்களிடையேயும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்மை நம்பிதான் உதவி கேட்கின்றார்கள் என்ற பொறுப்போடு நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

    பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் குறித்த தகவல்கள் நுகர்வோருடைய செல்போனுக்கு SMS-ஆ அனுப்ப வேண்டும்.

    அதுமட்டுமல்ல, அவர்கள் பகுதியில் எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும். அடுத்து, சாலைப் பணிகள் நடைபெறுகிற காரணங்களினால், சில அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    எனவே, தமிழ்நாடு முழுவதும் அப்படி இருக்கின்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கே தகுந்த தடுப்புச் சுவர்கள், தடுப்பு வேலிகள், போதிய வெளிச்சம், ஒளிரும் டைவெர்ஷன் போர்டுகள் போன்றவற்றை வைத்து விபத்துகளைத் தடுக்க வேண்டும்.

    அடுத்து, மழைக்காலங்களில், நெல் மூட்டைகள் மற்றும் உணவு தானியங்கள் மழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சேமிப்பு கிடங்குகள் மற்றும் கூடங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    அடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரைக்கும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மழைநீர் வடிகால், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    பருவமழை காலத்துக்குத் தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

    அடுத்து, நீர்வள ஆதாரத் துறையைப் பொறுத்தவரைக்கும் 17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடி உயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது.

    எனவே, வரும் ஜூன் 12-ம் நாள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்குப் போதுமான நீர் இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத் தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவை சாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அடுத்து, வேளாண்மை-உழவர் நலத்துறையைப் பொறுத்தவரையில், தென்மேற்குப் பருவமழையை எதிர்பார்த்து கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணையின் நீர் திறப்பு ஆகியவற்றால் குறுவை சாகுபடி அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுவதால், வேளாண் பெருமக்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட எல்லா இடு பொருட்களும் உரிய காலத்தில் கிடைப்பதையும், குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தினுடைய பயன்கள் முழுமையாக விவசாயிகளைச் சென்றடைவதையும் உறுதி செய்திட, வேளாண் களஅலுவலர்கள் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன். அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும்.

    எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள் மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தைக் கடந்து செல்ல அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.
    • அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்திட அரசு உத்தேசித்ததன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.

    மேலும், இதுகுறித்து நிதி அமைச்சர் தற்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்க வேண்டும்.

    விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர் கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித் தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.

    இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன. மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.

    இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட்டன.

    இந்நிகழ்வில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ்.நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி.சாருஸ்ரீ, வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.
    • அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.

    கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 



    ×