என் மலர்
சென்னை
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர் அரியலூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும்.
சென்னை:
இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.
இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) முதல் பெய்யத்தொடங்கும் என சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். மேலும் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் நாடு முழுவதும் விலகி, வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் அன்றைய தினம் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் வருகிற 18-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55 கி.மீ. வரை வீசும். எனவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் அமுதா, நிருபரிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தென் கர்நாடகா, தென் கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய தினமே மழை கொட்டி தீர்க்கும் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எங்களை பொறுத்தவரை 50 இடங்களில் மழை பதிவானால் கூட, அது வடகிழக்கு பருவ மழையின் தொடக்கம்தான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த முறை இது 50 செ.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 14-ந் தேதி (அதாவது நேற்று) வரை 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட 2 செ.மீ. அதிகம் ஆகும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் சராசரி மழையளவு 33 செ.மீ. பதிவாகி உள்ளது. அதாவது இந்த பருவமழை கூடுதலாகவும், குறைவாகவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
- இந்த சந்திப்பின்போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை என பாக்ஸ்கான் விளக்கம்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று ஃபால்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
'ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்திருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் ஒருபடி சென்று, இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு. தமிழ்நாட்டைத் தேர்வு செய்தமைக்காகவும், எங்களுடன் இணைந்து எதிர்காலத்தை வடிவமைக்க முடிவெடுத்தமைக்காகவும் ஃபாக்ஸ்கானுக்கு நன்றி. தமிழ்நாட்டைத் தெற்காசியாவின் உற்பத்தி மற்றும் புதுமைக்கான மையமாக உயர்த்துவதற்கான நம் பயணத்தில் இது மற்றுமொரு மைல்கல்!" என்று தனக்குத்தானே பாராட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால், திமுக அரசு கட்டி எழுப்பிய இந்த பொய் பிம்பங்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நொறுங்கி விட்டன. இது தொடர்பாக ஃபாக்ஸ்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால் இந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை, உறுதியளிக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், திமுக அரசின் புளுகு அரை நாளில் அமபலமாகியிருக்கிறது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- 2023-ல் சுமார் 4 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
- 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
2025ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா கொண்டாட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகம் விளையாட்டுத்துறையில் நம்பர் ஒன் இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக, கலைஞர் முதல்வாராக இருக்கும்போது விளையாட்டுத்துறைக்கென தனி அமைச்சகத்தை முதன்முதலாக அமைத்தார்.
கலைஞர் லட்சியத்தை அடையும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு விளையாட்டிலும் நம்பர் ஒன் இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள். விளையாட்டு புரட்சியை, மாபெரும் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
2023-ல் சுமார் 4 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர். 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதிலிருந்து போட்டிக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளலாம். விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் இதனுடைய ஒரே நோக்கம்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்புவதற்கான ஏவுதளம்தான் (Launching Pad) இந்த முதலமைச்சர் கோப்பை கேம்ஸ். பயிற்சியும், உறுதியும் இருந்தால் நிச்சயம் சாதித்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராக இருக்கிறார்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
சென்னை:
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு உள்ளிட்ட பலவற்றை அதிக சத்தம், அதிக மருந்துகள் கொண்ட பட்டாசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 2018-ம் ஆண்டிலிருந்து தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- போட்டிகளை நடத்துவதில் தமிழகம் உயர்தரமாக உள்ளது.
- விளையாட்டுகளை வளர்க்க, திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்க முதலமைச்சர் கோப்பை.
2025ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் பேசும்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. தேசிய போட்டியாக இருந்தாலும், சர்வதேச தொடராக இருந்தாலும் போட்டிகளை நடத்துவதில் தமிழகம் உயர்தரமாக உள்ளது.
தமிழக வீரர்கள் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணமாக பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்ததுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
விளையாட்டுகளை வளர்க்க, திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்க, உரிய அங்கீகாரம் வழங்க 37 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறோம்.
- சாதி பெயர்களில் உள்ள 'ன்' எழுத்தை நீக்கி 'ர்' சேர்க்க வேண்டும்.
- இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, ஜெ. முகம்மது ஷா நவாஸ், எம். பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது சாதி பெயர்களில் உள்ள 'ன்' எழுத்தை நீக்கி 'ர்' சேர்க்க வேண்டும் என முதலமைச்சரிடம் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
அத்துடன் தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி கூறியதுடன் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
- மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
- மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மாம்பழ விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்துவோர் நலன் கருதியும் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 10-10-2025 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி 24.06.2025 அன்று தாம் எழுதியிருந்த கடிதத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் அடிப்படையில், பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றும் கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்தப் பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இக்கடிதத்தை தாம் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தபடி, இந்தியாவில் விற்கப்படும் மாம்பழ பானத்தில் உள்ள பழக்கூழின் அளவு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல், பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழச் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில் FSSAI தரநிலைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பிறப்பிக்குமாறு இந்திய அரசைக் தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இதுகுறித்த தனது கடிதத்திற்கு இன்னும் நேர்மறையான பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், நம்நாட்டில் இந்த பானத்தை அதிகளவில் பயன்படுத்தும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டும், மாம்பழங்களை அடிப்படையாகக் கொண்ட பான உற்பத்தித் தொழிலில் குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படவேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் அதனால் அப்பானத்தின் தரமும் மேம்படும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மாம்பழ ஏற்றுமதிக் கொள்கையானது மாம்பழ வகை ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், மாம்பழப் பொருட்களை பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகவும், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஏற்றுமதி தரநிலைகளுக்கு இணங்க செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் சாத்தியப்படும் என்றும் அத்தகைய நடவடிக்கைகள் மாம்பழங்களுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கும் அதே வேளையில், மாம்பழக்கூழ் தொழில்களை அதிகமாகச் சார்ந்திருப்பதையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட இந்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), ஒருங்கிணைந்த பேக்கிங் செய்யும் வசதிகள், உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட துறைமுகங்கள், தரச்சோதனை ஆய்வகங்கள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டு வாங்குபவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இத்தருணத்தில் தலையிட்டு, மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய உதவிடுமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
- இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
- சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்கள், நிறுவனங்களுக்கு தினந்தோறும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மெயில் ஐ.டி.யை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
- போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இதனிடையே, மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாளை முதல் மெட்ரோ ரெயில் பணிகளுக்கு தடை விதிப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் பண்டிகை கால கூட்ட நெரிசல் மற்றும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.
- அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட 'அ.தி.மு.க' வருகிற 17-ந்தேதி அன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
- கழகத்தின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட ''அ.தி.மு.க.'' வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில், பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக்கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும், நம் இருபெரும் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
- இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தது.
புதிய டெண்டர் பணிகள் நிறைவடையாததால் தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தன.
ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
2026 மார்ச் மாதம் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.
இதையடுத்து 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.






