என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.
    • புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்க இருக்கின்றனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆம்புலன்சுகளும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதேபோல, மாநாட்டு திடலுக்கு வருபவர்களின் வசதிக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் முழு கட்டுப்பாடுடன், போலீசாரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றி அமைதியான முறையில் வாகனத்தில் வர வேண்டும். அதேபோல், மாநாட்டை நிறைவு செய்து மீண்டும் அமைதியான முறையில் ஊர் திரும்ப வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

    இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்படும். பின்னர், மாலை 6.10 மணியளவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டு திடலுக்கு வருகிறார். அப்போது, மேடையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து, வன்னியர் சங்க கொடியை டாக்டர் ராமதாஸ் ஏற்றி வைக்கிறார். பின்னர், டாக்டர் ராமதாஸ் குறித்த வரலாற்று குறும்படமும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    மாநாட்டில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மதுவிலக்கு உள்ளிட்டவைகள் குறித்து வலியுறுத்தப்பட இருக்கிறது. பின்னர், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மாநாட்டின் நிறைவாக டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள். அப்போது, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாநாட்டை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தால் நடவடிக்கை.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 11ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருவிடந்தை கிராமத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் (FL1. FL2. FL3. FL3A. FL3AA, மற்றும் FL11) மூடப்பட்டிருக்கும் என்றுதெரிவிக்கப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் FL1. FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிம நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    அன்றைய தினத்தில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்டவிரோதமான இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துக் கொள்கிறார்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கார் டிரைவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பிரபல தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கீரப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது27) என்பவர் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்தார்.

    இன்று அதிகாலை கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மணிகண்டனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

    இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை.

    கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கார் டிரைவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினார்கள்.
    • வணிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.

    மறைமலைநகர்:

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு செங்கல்பட்டு மறைமலைநகரில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:-

    சிறு-குறு வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய முதலீடு மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கவில்லை என்றால் சிறு வணிகமே இல்லாமல் போகும்.

    எனது தலைமையிலான ஆட்சியில் 24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    காரணம் இன்றி உள்நோக்கத்துடன் அரசு அலுவலர்கள் வணிக நேரத்தில் தொடர்ந்து ஆய்வு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்தி வருகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    விழுப்புரத்தில் பேன்சி கடையில் போதை ஆசாமிகள் கடையில் புகுந்து வியாபாரியை தாக்கினார்கள். காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் வணிகர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படுகிறார்கள். வணிகர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.

    நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு வணிகர்கள். உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே அச்சாணியாக திகழ்வது நமது வணிகர்களே. அவர்கள் நலனை பாதுகாப்பதில் அ.தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    சிறிய தேனீர் விடுதி, அடகு கடைகள், சிற்றுண்டி சாலைகள், பழ வியாபாரிகள் தொழில் செய்வதற்கு முழு அளவில் போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று வியாபாரிகள் என்னிடம் தெரிவித்தனர். எங்கள் ஆட்சியில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. செவி சாய்க்கும். நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2017ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.
    • சிறுமி வசித்து வந்து குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் கைது செய்யபட்டு, நீதிமன்றம் தூக்கத்தண்டனை வழங்கியது.

    2017ஆம் ஆண்டு சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஹாசினி என்ற சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமி வசித்து வந்த அதே குடியிருப்பில் தங்கியிருந்த தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தஷ்வந்த்-ஐ அவரது தந்தை ஜாமினில் வெளியே கொண்டு வந்தார். அதோடு வீட்டையும் குன்றத்தூருக்கு மாற்றினார்.

    இதனிடையே தனது செலவுக்கு பணம் தராததால், தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினான். சென்னை காவல்துறையினர், தனிப்படை அமைத்து தஷ்வந்த்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு 2018ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கியது. தந்தை பிழற்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.

    • கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதியில் ஆயிஷா, மகேஷ்வரி, அம்மினி, ஆகிய 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகைகளை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகைபறிப்பில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள்

    நகைபறிப்பு சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

    இதில் உத்தரபிரதேச மாநிலம், சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும் அவரிகளில் 2 பேர் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட சென்னைக்கு ரெயிலில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் சுற்றிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சஞ்சய், சோகான் தபஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது சோகான் தபஸ், தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது இடது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.

    பின்னர் கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சூரஜ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
    • 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பயணிகள் வசதிக்காகவும், செங்கல்பட்டு கோர்ட்டு அருகே மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

    இந்த புதிய பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில், 9.95 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய பஸ் நிலையத்தில், 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், 55 கார்கள், 325 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கு போதுமான வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன.

    பஸ் நிலையத்தில் 35 கடைகள், உணவகங்கள், பயணிகளுக்கான ஓய்வறைகள், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

    இந்த பஸ் நிலைய வளாகத்தில் அரசு பஸ்களுக்கான பணிமனையும் அமைக்கப்படுகிறது. தற்போது புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் அரசு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்தி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

    செங்கல்பட்டில் ஏற்கனவே உள்ள பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவை நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து மிகுந்த சாலையில் இருப்பதால், செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்படுவதோடு, அரசு பஸ்களின் பணிமனையும் இதே வளாகத்தில் அமைக்கப்படுவதால், இந்த புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் வரும் தீபாவளிக்கு முன்னதாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற தகவல் செங்கல்பட்டு நகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. நேற்று அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதுபற்றி தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தபோது அவர் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி என்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாழம்பூர் போலீசார் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியிடம் விசாரித்தனர். விசாரணையில் மாணவி படித்து வந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நாமக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி அவரை கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது.

    கடந்த மாதம் ராஜேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றதால், தனது கர்ப்பத்தை கலைக்க ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை தாழம்பூர் போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து சென்னையில் வசித்து வரும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாணவியின் தந்தை தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    அந்த வகையில், நாளை உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.
    • கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.

    சென்னை:

    தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் 'தடம் எண் 55 பி' என்ற பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.

    சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகள் கோரிக்கையை ஏற்று பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் தொடங்கி உள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த பஸ் பழைய பெருங்களத்தூர், மண்ணிவாக்கம் கூட்ரோடு, ரூபி பில்டர்ஸ், ஸ்ரீநிகேதன் பள்ளி, காசா கிராண்ட், கணேஷ் நகர், படப்பை பிரதான சாலை சந்திப்பு, ஆதனூர், கிரவுன் பேலஸ், அண்ணா நகர், செல்வராஜ் நகர், ஊரப்பாக்கம் ரெயில் நிலையம், ஆதனூர் பிரதான சாலை, வண்டலூர் பங்கா, ஊரப்பாக்கம் பள்ளி வழியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை வந்தடையும். இது போல கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் தாம்பரம் வரை இப்பேருந்து செல்லும்.

    புறப்படும் நேரம்: இப்பஸ் சேவை தாம்பரத்தில் இருந்து காலை 7.30, நண்பகல் 12, பிற்பகல் 3.50 மற்றும் மாலை 6.15 ஆகிய நேரங்களிலும் கிளாம்பாக்கத்தில் இருந்து காலை 8.15, பிற்பகல் 1.20, மாலை 5 மற்றும் 7.25 ஆகிய நேரங்களிலும் புறப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது.

    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 11-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு-2025 நடைபெற உள்ளது.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 52 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருவிடந்தையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் கட்சியின் பொது செயலாளர் வடிவேல் ராமன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்னொரு நாள் பதில் சொல்றேன் என்று கூறி நழுவிச் சென்றார். 

    • அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.
    • சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.

    மாமல்லபுத்திரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * ராமதாஸின் கொள்கைக்கு இணங்க சித்திரை திருவிழா மாநாடு நடைபெறுகிறது.

    * அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவே சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது.

    * சின்ன அசம்பாவிதமும் நடக்காத வகையில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும்.

    * மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களையும் ராமதாஸ் அழைத்துள்ளார். குறிப்பாக பின்தங்கிய மக்களை அழைத்துள்ளார்.

    * தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான யோசனைகள் மாநாட்டின் மூலம் வழங்கப்படும்.

    * தமிழ்நாட்டில் இருந்து போதைப்பொருள், மது விற்பனையை ஒழிக்க வேண்டும் என்றார். 

    ×