என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'ப' வடிவ வகுப்பறைக்கு அரசாணை வெளியிடவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
- மாணவர்களின் புரிதல் திறனை அறியவே, அடைவு தேர்வு நடத்தப்படுகிறது.
- போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ள பகுதி நேர ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மவாட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-
தேசிய கல்வி கொள்கை பின்பற்றப்படும் மாநிலங்களில் மத்திய அரசால் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய, தேசிய அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு இணையாக தமிழக அரசு சார்பில் மாநில அளவிலான அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட அடைவு தேர்வில் செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் 36-வது இடத்தை பிடித்தது.
மாணவர்களின் புரிதல் திறனை அறியவே, அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. கேள்வி கேட்கும் அளவிற்கு மாணவர்களை உருவாக்க வேண்டும். அதுபோல், தான் கற்றதை, பிற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களாகவும் அவர்களை உருவாக்க வேண்டும்.
சில மாவட்டங்களில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் உயர்ந்திருந்தாலும், அடைவுத்திறன் தேர்வில் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய மாணவர்களுடன் ஆசிரியர்கள் உரையாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறும்போது, "போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ள பகுதி நேர ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். முதலமைச்சர் இது தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பார்.
தற்போது 'ப' வடிவிலான வகுப்பறை அமைப்பது, சோதனை முயற்சி தான். பயனுள்ள இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை" என்றார்.






