என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா?
    • நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம் என்று கூறினார்.

    நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும் என செல்லூர் ராஜூக்கு டிஆர்பி ராஜா பதில் அளித்தார்.

    ஓசூர் ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதை தான் செய்தோம், தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    • ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும்.
    • பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், தென்னகத்து காசி என்றழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ராமநாதபுரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் இந்த பூஜையில் அதிகளவில் பங்கேற்பார்கள்.

    அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குழுவினர் இன்று காலை ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்க கோவிலுக்கு வந்தனர். இதில் ராஜ்தாஸ் (வயது 59) என்பவரும் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு மணிநேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது.

    இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த ராஜ்தாசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கேயே ஓரத்தில் படுக்க வைத்தனர். ஆனால் அங்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் அவரிடம் எந்த அசைவும் இல்லை.

    இதுகுறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஊழியர்கள் ராஜ்தாசை கோவில் தேவஸ்தானத்துக்குட்பட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ராஜ்தாஸ் இறந்து 20 நிமிடங்களுக்கு மேலாகி விட்டதாக தெரிவித்தனர். ராஜ்தாஸ் வரிசயைில் நின்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேசுவரம் கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவிலில் அதிகாலையில் நடந்த ஸ்படிக லிங்க பூஜையில் பக்தர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர் இறந்ததால் கோவிலில் சிறிது நேரம் தரிசனம் நிறுத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடைபெற்றன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவர் திருச்செந்தூரில் வரிசையில் நின்றிருந்தபோது மூச்சுத்திணறி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது.
    • அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதி கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பிரச்சனைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துமா ?

    அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் அமலாக்கத்துறையை தூண்டிவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆற்றல்மிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது. இதை எதிர்கொள்கிற பேராற்றலும், துணிவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.

    தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால் அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும்.
    • உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் முடியும் வரையிலும் கோடை கால மாகவே கருதப்படுகிறது. இந்த காலகட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நீராகாரங்களை பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த காலகட்டங்களில் ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் மண்பானைகளுக்கு மவுசு அதிகரித்து விடும்.

    பொதுவாக மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். நவ நாகரிகத்தை நாடிச் சென்ற தமிழ் மக்கள் சிலர் காலப்போக்கில் மண்பாண்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர் என்றேகூறலாம்.


    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையல் செய்வதில் தொடங்கி பொங்கல் வைப்பது, தண்ணீர் அருந்துவது என அனைத்தும் மண்பாண்ட பொருட்களையே பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறிப்போய் விட்டது. ஆனாலும் கோடை காலத்தில் மட்டும் மண்பானைகளின் பயன்பாடு அதிகரித்து விடுகிறது.

    இதற்காக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, சேரன்மகாதேவி அருகே உள்ள காருக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மான தொழிலாளர்கள் காலம் காலமாக மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வாறு தயாரிக்கும் இந்த மண்பாண்டங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் என்று மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது.

    இன்றளவும் காருக்குறிச்சி யில் தயாரிக்கப்பட்டு வரும் அகல் விளக்குகள், தேநீர் கோப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி பானைகள், சூப் கிண்ணம், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    காருக்குறிச்சி பகுதியில் தயாரிக்கப்படும் மண் பானை, மண் குடங்கள் உள்ளிட்டவை சுமார் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.600 வரை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்து வருகின்றனர்.


    மூடி வைக்கப்படும் குவளைகள் 5 லிட்டர் அளவு கொண்டவை ரூ.100 வரையிலும், 8 லிட்டர் பானைகள் ரூ.120-க்கும், 10 லிட்டர் அளவு கொண்ட பானைகள் ரூ.185 ஆகவும் விற்பனையாகிறது. இந்த கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டம் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் ஆண்டாண்டு காலமாக மண்பானை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இயற்கை முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், உடலுக்கு நன்மை பயக்கும் வகையிலும் இந்த மண்பானைகளை தயாரித்து வருகிறோம்.


    முதல் நாளில் கரம்பை மண்ணை நன்றாக காய வைத்து தூசி தட்டி வைத்துக்கொள்வோம். பின்னர் அதனை ஊற வைத்து தூசி தட்டிய பிறகு கரம்பை மண்ணை தனியாக போட்டு அதன் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக்க வேண்டும்.

    சுமார் 4 மணி நேரம் வரை அதில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 2-ம் நாள் கரம்பை மண்ணை எந்திரத்தில் போட்டு அரைத்து அதனை தனியாக வைத்துக்கொள்ள வே்ணடும்.

    பின்னர் பானைகளை வடிவமைத்து காய வைப்பார்கள். பின்னர் பானைகளை நெருப்பு மூலம் சுட்டு எடுத்து அடுக்கி வைப்பார்கள்.

    வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்பும்போது அட்டைப்பெட்டிகளில் வைக்கோலை சுற்றிவைத்து அடுக்கி லாரிகளில் ஏற்றி செல்வோம். பின்னர் அதனை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெயில் காலத்தில் குளிர்சாதன பெட்டியை விட மண்பானை, மண்குடம் மூலமாக குடிக்கும் தண்ணீர் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதால் காருக்குறிச்சியில் தயாரிக்கப்படும் இயற்கை யான மண்பாண்டங்கள், தண்ணீர் குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறது.

    இந்த மண்பானைகள் 5 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை தண்ணீர் நிரப்பி பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப குழாய் பொருத்தி கேட்டால் அந்த பானைகளில் நல்லி பொருத்தி கொடுக்கிறார்கள்.

    தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமான அளவில் மண்பானைகளை உபயோகப்படுத்த தொடங்கி உள்ளதால் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் அவரை மீட்க முயற்சித்தனர்.
    • காயமடைந்த மாரியப்பனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் தனது வீட்டின் முன் பகுதியில் கழிவறை புனரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். கழிவறை சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர் பெட்டி இருந்துள்ளது.

    இந்த நிலையில் புனரமைப்பு பணிக்காக அந்த மீட்டரின் கீழ் பகுதியில் உள்ள பொருட்களை கஜேந்திரன் மகன் வேலாயுதம்(வயது 30) என்பவர் எடுக்க சென்றுள்ளார். அப்போது திடீரென மீட்டரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு வேலாயுதம் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் வேலாயுதம் அலறி துடித்தார்.

    வேலாயுதத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். அப்போது மாரியப்பன் என்ற தொழிலாளியை மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட கஜேந்திரன் வீட்டில் கால்நடை பராமரிப்பாளராக வேலை பார்க்கும் ரவி என்பவர் அங்கு ஓடி வந்து வேலாயுதத்தை காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் மின் வயர்களை அறுத்து விட்டனர். தொடர்ந்து, மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த வேலாயுதம் மற்றும் ரவியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி இருவரும் உயிர் இழந்தனர்.

    காயமடைந்த மாரியப்பனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த வேலாயுதம் ஆக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலைக்கு சேரும் முயற்சியில் சென்னையில் தங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    உயிரிழந்த மற்றொரு நபரான ரவிக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். ரவியின் கடைசி மகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு இன்று பள்ளி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேர் போலீசில் சிக்கி இருக்கிறார்கள்.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வரும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக பயணிப்பவர்கள், ஒருவழிப்பாதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாகன சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போதிலும் கடந்த 2 மாதங்களாக மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2½ மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து சந்திப்புகளில் ஸ்டாப் லைன் என்று அழைக்கப்படும் நிறுத்த கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்ற 677 பேரும் போலீசில் சிக்கி இருக்கிறார்கள். 3 ஆயிரத்து 328 பேர் செல்போன் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டியதால் பிடிப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 4 ஆயிரத்து 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதாக 7 ஆயிரத்து 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 33 ஆயிரத்து 331 பேர் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்று விடுபட்டு இருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியாமல் அவர்களை ஓட்டிச்சென்ற 2 ஆயிரத்து 26 1 பேர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களை போலீசார் வாகன சோதனை மூலமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பிடித்து வருகிறார்கள்.

    இதன்படி சென்னை மாநகரில் தாமாகவே முன் வந்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 293 சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மூலமாகவும் வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாக விதிமீறல் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் எந்த சந்திப்பாக இருந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து வாகனங்களை இயக்காவிட்டால் நிச்சயம் மாட்டிக் கொள்வது உறுதி. இதுபோன்ற அபராதங்களை தவிர்க்க வேண்டும் என்றால் விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வாகனங்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57).

    இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.

    அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, டவுன் உதவி கமிஷனர் அஜிகுமார் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து சென்றனர். அப்போது முகம் மற்றும் பின் தலை பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள தொட்டிப்பாலம் தெருவை அடுத்த பிரதான சாலையில் 36 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை முற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜாகீர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மேலும் முன்விரோதம் அதிகரித்த நிலையில், எதிர்தரப்பினர் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களினால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலிக்கு மனைவி, 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    கும்பலால் வெட்டிக்கொலை செய்யபட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது ஜாகீர் உசேன் பிஜிலியின் உறவினர்கள், இடப்பிரச்சனை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையை தவிர்த்திருக்கலாம் என்று வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் உறவினர்கள் அவரது உடலை எடுக்க சம்மதம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, ஜாகிர் உசேன் பிஜிலி கொலை தொடர்பாக அக்பர்ஷா, தவ்ஃபீக் ஆகிய இருவர் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

    நெல்லை மாநகரின் முக்கிய இடத்தில் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.
    • விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதன் முக்கிய நிகழ்வான வள்ளி கல்யாணம் நடந்தது.

    முன்னதாக இன்று அதிகாலை திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் முதுமை வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது வள்ளி வயதான வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்வதாக அமையும் திருமண காட்சி நடைபெற்றது.

    தத்ரூபமாக நடந்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் வியந்து தரிசனம் செய்தனர்.

    • ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.
    • ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 700 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 500 கனஅடியாக குறைந்து வந்தது.

    காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • 2026 தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த அதிரடி வியூகம்
    • திமுக மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் 32 ஆண்டுகாலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர்., ஜெயலலதா ஆகியோரது அயராத பணியால் அ.தி.மு.க. என்ற ஆலமரம் ஆயிரம் காலத்து பயிராக மலர்ந்து உள்ளது.

    ஏழை, எளிய மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த இந்த மாபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை இன்றைக்கு வலிமையோடும், பொலிவோடும் பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார். எடப்பாடயார் சாமானிய தொண்டனும் உச்ச பதவி அடையலாம் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சியை சுமார் நாலரை ஆண்டு காலம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நல்லாட்சி நடத்தியவர் எடப்பாடியார்.

    வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களான அரசு பள்ளிகளில் படித்த மாணவர்க ளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவித உள் இடஒதுக்கீடு வழங்கியதுடன், ஒரே ஆண்டில் 13 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் அமைத்தும் சாதனை படைத்தார். நீர் மேலாண்மை பாதுகாக்க குடிமராமத்து உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை தந்தவர் தான் எடப்பாடியார்.

    ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரும்பும் திட்டமான தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, மகளிருக்கு இருசக்கர வாகன திட்டம், கால்நடை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறுத்திவிட்டார் .

    ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க மறுத்ததுடன், தி.மு.க. அரசு மக்களாட்சி தத்துவத்தையும் மறந்து மன்னர் ஆட்சியாக தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சியை செய்து வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், போலீசார் என்று யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் பாலியல் அத்துமீறல்கள், வழிப்பறி கொள்ளைகள், ஆதாய கொலைகள், போதை பொருள் நடமாட்டம் என்று அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.

    எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

    அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசா ரம் நடந்து வருகிறது. இது வரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள்.

    வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டுப் பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வார மும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்ச டிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கி வழங்கப்படுகிறது.

    வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்று வார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடை இன்றி கிடைக்கும்.

    வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
    • காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதில், வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.

    நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச்செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும். ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கிடையே கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைபிடிக்கவில்லை.

    காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நடைபயிற்சி செல்லும் போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும் போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதாவது, உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, வாய்மூடி அணிவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும். பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளில் அபராதம் குறித்து தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
    • ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.

    இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

    இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22-ந்தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

    ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக்குழுவினர் 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    ×