என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நேற்று 2-ந் தேதி தொடங்கி வருகிற 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் இந்த மாநாடு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியாக வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை மத்திய குழு உறுப்பினர் வாசுகியிடமிருந்து கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஏ.கே.பத்ம நாபன் பெற்றுக் கொண்டார்.

    இதன் பின்னர் மாநாட்டு கொடியை மேற்கு வங்காள மூத்த தலைவர் பிமன்வாசு ஏற்றி வைத்தார். இதையடுத்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த மாநாட்டுக்கு திரிபுரா முன்னாள் முதல்-அமைச்சர் மாணிக் சர்கார் தலைமை தாங்கினார்.

    அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்தார். கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகாரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, விடுதலை அமைப்பின் பொது செயலாளர் தீபங்கர் பட்டச்சாரியா, புரட்சிக்கர சோசியலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

    முன்னதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநாட்டின் வரவேற்பு குழு உறுப்பினரான பால கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் சண்முகம், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    நேற்று மாலை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சினிமா டைரக்டர்கள் ராஜூ முருகன், நடிகர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாநாட்டில் வரலாற்று புகைப்படங்களின் கண்காட்சி, புத்தக கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள், இடதுசாரி தலைவர்கள் குறித்த கருத்தரங்கம், தியாகிகள் சுடர் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று 3-வது நாள் மாநாடு மாலை 5 மணியளவில் கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கமாக நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக இந்த நிகழ்ச்சியை ராஜா முத்தையா மன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கருத்தரங்கில் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்று பேசுகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் நோக்க உரையாற்றுகிறார்.

    மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். முடிவில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறுகிறார்.

    இந்த கருத்தரங்கில் நெய்யாற்றிங்கரை பெண்கள் குழுவினரின் சிங்காரி மேளம் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. கருத்தரங்கில் பங்கேற்ப தற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரைக்கு வரும் மு..க.ஸ்டாலின் அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து அவர் ராஜா முத்தையா மன்றம் சென்று கருத்த ரங்கில் பங்கேற்க ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கும் மாநாடு காரணமாக தல்லா குளம், கோரிப்பாளையம் பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை (4-ந்தேதி) 3-ம் நாள் மாநாடு மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லீம் பெண்கள் குழுவினரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. இதனை தொடர்ந்து சென்னை கலை குழுவினரின் நாடகம் கானா விமலா பாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    சினிமா நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குநர் வெற்றி மாறன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டபடி தமுக்கம் கலையரங்கில் நடைபெறு கிறது.

    • எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் தனித்தனியாக டெல்லி சென்று வந்தது மீண்டும் பேசும் பொருளானது.
    • போஸ்டரில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா, ராஜன் செல்லப்பா, வேலுமணி, தங்கமணி ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

    திருமங்கலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் இடையே எழுந்த விரிசல் சமீபத்தில் சமரசம் ஆனதாக பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையே அவர்கள் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று வந்தது மீண்டும் பேசும் பொருளானது.

    இந்தநிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கள்ளிக்குடி ஆகிய இடங்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த போஸ்டரில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

    அதில் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறாமல் போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழகம் வரும் பிரதமர் மோடியை தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு இருந்தார்.
    • மத்திய அரசு விடுவிக்காத நிதியை உடனடியாக விடுவிக்க நிதி அமைச்சர் வலியுறுத்துவார்.

    சென்னை:

    நம்ம ஊரு பள்ளி திட்டம் மூலம் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு தட்டச்சர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    மதுரை வரும் பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வலியுறுத்துவார்.

    வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம், சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். அதற்கு நியாயம் கேட்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புதுவையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் விஜய் வலம் வந்தான்.
    • போலீசாரை அரிவாளால் வெட்டிய போது சுட்டு கொல்லப்பட்டான்.

    புதுச்சேரி:

    கடலூரில் 2 போலீஸ் காரர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கொள்ளையன் விஜய் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜய் என்ற மொட்டை விஜய் (வயது 19) புதுவை திலாசுபேட்டை வீமன் நகர் ஓடை வீதியை சேர்ந்தவ ராவார். விஜய் 7-ம் வகுப்பு படிப்பை முடிக்கவில்லை.

    பள்ளியில் படிக்கும் காலத்திலேயே 13 வயது முதல் விஜய் ஆங்காங்கே திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். 15 வயது முதல் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட தொடங்கினான். மோட்டார் சைக்கிள், நகை, லேப்-டாப் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி அவற்றை விற்று சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தான்.

    மேலும் புதுவையை சேர்ந்த ரேவந்த், அசோக் அன்பரசன் அகியோரை தனது கூட்டாளியாக்கிக் கொண்டு திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து நடத்தி வந்தான்.

    விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது புதுவை கோரிமேடு, மங்களம் உருளையான்பேட்டை, மேட்டுப்பாளையம், பாகூர், வில்லியனூர், தவளக் குப்பம், சேதராப்பட்டு, அரியாங்குப்பம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    வழக்கில் ஜாமீனில் வெளி வந்திருந்தாலும் திருடுவதை விடவில்லை. இதனால் புதுவை போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக விஜய் இருந்து வந்தான்.

    இதனால் புதுவையில் கைவரிசை காட்டினால் எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தமிழக பகுதிக்கு இடம் பெயர்ந்தான்.

    புதுவையையொட்டிய தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தன்னுடைய கும்லுடன் கைவரிசையை காட்டத் தொடங்கினான். இதனால் தமிழகத்தின் ஆரோவில், கோட்டகுப்பம், கிளியனூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும் விஜய் மீது வழக்குகள் பதிவானது.

    தமிழகம் மற்றும் புதுவையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் விஜய் வலம் வந்தான். இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் எம்.புதூரில் பதுங்கியிருந்த விஜயை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை அரிவாளால் வெட்டிய போது சுட்டு கொல்லப்பட்டான்.

    • ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும்.
    • ரூ. 60 லட்சம் மதிப்பீட்டின் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 12,000 பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில், 2025 - 2026ம் ஆண்டுக்கான பால்வளத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்:-

    * ரூ. 9.34 கோடி மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் தரத்தினை மதிப்பீடு செய்து உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டு வழங்கி கண்காணிக்க ஏதுவாக 1,437 பால் பகுபாய்வு கருவிகள் நிறுவப்படும்.

    * ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் பாலில் கலப்படத்தை கண்டறியவும் 129 நவீன அகச்சிவப்பு பகுப்பாய்வு கருவுகள் வழங்கப்படும்.

    * ரூ. 10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் புதிதாக தொடங்கப்படும்.

    * ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

    * ரூ. 2.40 கோடி மதிப்பீட்டில் 14 மாவட்ட ஒன்றியங்களில் 30 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் புதுப்பிக்கப்படும்.

    * ரூ. 1.50 கோடி மதிப்பீட்டின் தரமான பால் கொள்முதல் செய்ய தேவையான பால் பரிசோதனை உபகரணங்கள் 165 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்களுக்கு வழங்கப்படும்.

    * ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் மாதாவரத்தில் உள்ள மாநில மைய ஆய்வகம் கூடுதல் உபகரணங்களுடன் மேம்படுத்தப்படும்.

    * ரூ. 2.63 கோடி மதிப்பீட்டில் 525 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும்.

    * ரூ. 72 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான பசுந்தீவன தேவையை பூர்த்தி செய்ய பால் உற்பத்தியாளர்களுக்கு தீவன விதைகள் வழங்கப்படும்.

    * ரூ. 2.38 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம், வேலூர், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள பயிற்சி நிலையங்களில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

    * ரூ. 1.94 கோடி செலவில் உம்பளச்சேரி இன பசுமாடுகளின் மரபணு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கில் தேசிய பால் பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    * ரூ. 58 லட்சம் மதிப்பீட்டில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும்.



    * ரூ. 60 லட்சம் மதிப்பீட்டின் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 12,000 பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்.

    * ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் சிறந்த மூன்று கறவை மாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும்.

    * ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கங்கள் நடத்தப்படும்.

    * ரூ. 2.10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க 600 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்படும்.

    * ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை முறை கருவூட்டல் பணியை சிறப்பாக செயல்படுத்தும் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

    * ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகள் மடி நோய் கண்டறியும் பொருட்கள் 100 சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.

    * ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் கன்று ஈனும் இடைவெளியை குறைப்பதற்காக 2000 மலடு நீக்க சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும்.

    * தொடக்கப்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நுண்கடன் வழங்கும் நோக்கில் வெண் நிதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    * ஆவின் விற்பனை முகவர்களின் நலன் கருதி அவர்களின் பங்களிப்புடன் ஆவின் விற்பனை முகவர்கள் நல நிதி உருவாக்கப்படும்.

    * தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய வகை மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.

    * தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பல்வகை சேவை மையங்களாக உருவாக்கப்படும்.

    • நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
    • ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன.

    செஞ்சி:

    செஞ்சியில் இன்று அதிகாலை பெய்த மழையால் செஞ்சி கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு நெல் அறுவடை சீசன் என்பதால் அதிகமாக நெல் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.

    இந்நிலையில் இன்று விற்பனைக்காக சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து திறந்த வெளியில்இறக்கி இருந்தனர். மேலும் நேற்று கொள்முதல் செய்யப்பட்ட வியாபாரிகளின் ஒரு பகுதி நெல் மூட்டைகளும் கமிட்டியின் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் கமிட்டியில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விலை குறைத்து போட படுமோ என்ற அச்சத்தில் வேதனை அடைந்தனர்.

    ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன. ஆகையால் செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து தொடங்கி மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.
    • ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும்.

    சென்னை:

    வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதும், வக்ஃப் மசோதாவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் உட்பட இன்று சட்டமன்றத்தில் தி.மு.க.வின் துரதிர்ஷ்டம் மிகவும் கணிக்கத்தக்கதாகிவிட்டது! இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.

    முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் கூட பாதிக்கப்பட்டார்கள் என்பதை தமிழக முதல்வர் உணரவில்லையா? தயவுசெய்து உங்கள் நாடகத்திற்காக சட்டமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்.

    அவர்களின் நாடகத்தின் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு "2025 வக்பு மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத தி.மு.க. ஒருவரை நியமிக்கும். தி.மு.க இதை ஒரு தேர்தல் பிரசாரமாக முன்னெடுத்து, 2026 சட்டமன்ற மற்றும் 2029 பாராளுமன்றத் தேர்தல்களில் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும்.

    ஏமாற்றவும் பிரிவினைப்படுத்தவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

    • தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
    • மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.

    பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

    இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

    சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.

    * இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே!

    * ஒன்றிய அரசே சிறுபான்மையினரை வஞ்சிக்காதே!

    * இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காதே!

    என்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    • மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பத்தின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூர், தேனி, வைகை அணை, பெரியகுளம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த சில நாட்களாக வறண்டு கிடந்த நீர் நிலைகளுக்கும், குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில் தற்போது 68 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2949 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1392 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 85.48 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 26.56 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 30.87 அடியாகவும் உள்ளது.

    ஆண்டிபட்டி 30.8, அரண்மனைபுதூர் 23, வீரபாண்டி 8.4, பெரியகுளம் 9.2, சோத்துப்பாறை 12, வைகை அணை 27.2, போடி 7.2, கூடலூர் 1.6, தேக்கடி 3.6, சண்முகாநதி 2.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானலில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் தருமத்துப்பட்டி, கன்னிவாடி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட்டது. வட்டப்பாறை, கோனூர், கசவனம்பட்டி ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்த போது மின்தடை நிலவியதால் தேர்வுக்கு படித்து வந்த மாணவர்கள் அவதியடைந்தனர்.

    திண்டுக்கல், சிறுமலை உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

    • கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.
    • இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் வாழும் பாட்டாளிகளின் தோழராக உருவெடுத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.

    இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.இராசா அவர்கள் திறந்து வைத்தார்.

    இவ்வார் அவர் கூறியுள்ளார் 

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1100 கனஅடியாக குறைந்து வந்தது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது.
    • காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது. அதனை தொடர்ந்து நேற்றிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய சாரல் மழை இன்று காலையும் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சூறைக்காற்றுடன் கனமழையாக கொட்டியது.

    இந்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காடு மலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் ஏற்காடு மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையின் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

    இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

    இதே போல சேலம் மாவட்ட கிழக்கு பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை மழை பெய்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் மேக மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    ×