என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கழக நிர்வாகிகளை விடியா திமுக மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
- எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது போன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படுபவர்கள் கழகத்தினர் அல்ல. எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
- நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.
- பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
சென்னை:
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி பாரதிதாசன் பிறந்தநாளான ஏப்ரல் 29-ந்தேதி தொடங்கி மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழ்வார விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்வார விழாவின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 4 ஆண்டுகளில் 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு நூலுரிமைத் தொகையாக ரூபாய் 3 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வரிசையில், இந்த ஆண்டு மறைந்த தமிழறிஞர்களான கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ. பழநி ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களது மரபுரிமையர்களுக்கு ரூ.10 லட்சம் வீதமும் வாழும் தமிழறிஞர்களான கொ.மா. கோதண்டம் புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வீதமும் தமிழ்நாடு முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.
கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரை மாவட்டம், கிழக்குச் சந்தைப் பேட்டையில் 1937-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பேராசிரியராகவும், கவிஞராகவும் சிறந்து விளங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டவர். தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்ற நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகவும், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள்(வசன கவிதை), ஆலாபனை, பித்தன் உள்ளிட்ட 41 நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர்.
தமிழறிஞரும் எழுத்தாளருமான மெர்வின் சென்னை, துரைப்பாக்கத்ததைச் சேர்ந்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் முழு நேர எழுத்தாளராக பணிபுரிந்தவர். 1968-1970-ம் ஆண்டுகளில் 'பூச் செண்டு' என்ற மாணவ மாத இதழை நடத்தியவர். 'உன் வாழ்க்கை உன் கைகளிலே' என்ற நூலுக்காக அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு அவர்களால் பாராட்டப்பெற்றவர். இவர் உயர்வு உன்னிடமே, முயற்சியே முன்னேற்றம், மேதைகளின் வாழ்விலே, வாழ்க்கை ஒரு வசந்தம், பெண் வாழ்வின் கண் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த பண்பாளர்.
ஆ.பழநி 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு 9-வது மகனாக காரைக்குடியில் பிறந்தவர். 1962-ல் புலவர் பட்டம் பெற்றார். 1964-ம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1997-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப்பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய இவர் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார். சாலிமைந்தன், பாரதிதாசன் பாரதிக்கு தாசனா, காரல் மார்க்சு காப்பியம் மாணிக்கனாரின் கவிதைத் தமிழ் உள்ளிட்ட 16 நூல்கள் படைத்தவர்.
கொ.மா. கோதண்டம் ராசபாளையத்தில் 1938, செப்டம்பர் 15-ல் மாடசாமிராஜா- சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். மணிமேகலை மன்றம், திருக்குறள் சிறார் பயிற்சிக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் கோகுலம் சிறுவர் சங்கம், வாசுகி மாதர் சங்கம், தமிழ்நாடு இலக்கிய பெருமன்றக் கிளை ஆகியவற்றில் பொறுப்பேற்று செவ்விய முறையில் செயல்பட்டு வருபவர். புதினம், கவிதை, புதுக்கவிதை, சிறுவர் புதினம், சிறுவர் கதைகள், சிறுவர் நாடகங்கள், சிறுவர் கவிதைகள் எனப் பன்முகப்பாங்கில் 125க்கும் மேலான நூல்களைப் படைத்தவர். இவரது படைப்புகள் சில உருசிய ஆங்கிலம், சிங்களம், இந்தி, வங்காளம், தெலுங்கு முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
புலவர் இலமா. தமிழ்நாவன் சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்தவர். தமிழாசிரியராகவும் உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் வள்ளுவம் கண்ட அறமும் வாழ்வும், பெரியார் ஈ.வே.ரா. குறும் பாவியம், பாவேந்தரும் பாட்டாளியும், சுரதா பிள்ளைத்தமிழ், நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம், உள்ளிட்ட 34 நூல்களை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், நடன நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தனர். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வரவேற்று பேசினார். முடிவில் கவிதா ராமு நன்றி கூறினார்.
- பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
- புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த லட்சுமி காந்த் (வயது54). இவர் ஓசூர் அருகே சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பூஜைகள் செய்வதற்காக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கனியூரை சேர்ந்த சசிகுமார் (61), சங்கர் கணேஷ் (43), செல்வராஜ் (61), உடுமலைப்பேட்டை நக்கீரர் தெருவை சேர்ந்த சசிகுமார் (48), திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரை சேர்ந்த பிரபாகர் (37), சேலம் குகை முங்கபாடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் (45), கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆலடி ரோட்டை சேர்ந்த நடராஜன் (48), சுந்தர்ராஜ் நகரை சேர்ந்த முத்து குமாரவேல் (48), விஜயவாடா கொத்தப்பேட்டை சையத்குலாம் தெருவை சேர்ந்த பிரகாஷ் குப்தா (68) மற்றும் அவர்களுடன் சில பெண்கள் உள்ளிட்டோரை ஓசூருக்கு அழைத்து வந்து ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தார்.
இந்த பூஜைகள் குறித்து லட்சுமி காந்த், சாந்தபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்த கிஷோருக்கு கூறியுள்ளார். கிஷோர் மூலம் பூஜைகள் குறித்து அவரது சகோதரரான குள்ளப்பாவிற்கும் குள்ளப்பாவின் மனைவி ராதாம்மாவிற்கும் (46) தெரியவந்தது.
சாந்தபுரம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற அவர்கள் கோவிலில் பூஜைகளை நடத்தியுள்ளனர். தொடர்ந்து தாங்கள் பல்வேறு பூஜைகளை செய்து புதையல் எடுத்து தருவதாக குள்ளப்பா மற்றும் அவரது மனைவி ராதாம்மா ஆகியோரிடம் ஆசை வார்த்தை கூறினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் சிறியதாக புதையல் பூஜை ஒன்றை நடத்தியவர்கள். இந்த புதையல் பூஜையில் ஒரு பானையில் சிறிய அளவில் தங்க காசுகள் கிடைத்ததாக ராதாம்மாவையும் அவரது கணவர் குள்ளப்பாவையும் அனைவரும் நம்ப வைத்துள்ளனர். தங்க காசுகளை கணவன், மனைவி இருவரும் கடைக்கு கொண்டு சென்று சோதித்து பார்த்து உண்மை என நம்பினர்.
அதனை தொடர்ந்து அந்த கும்பல் ராதாம்மா மற்றும் குள்ளப்பா ஆகியோரிடம் இந்த பகுதியில் பெரிய அளவில் புதையல் ஒன்று உள்ளது. அதனை பல்வேறு தீய சக்திகள் தடுத்து வருகின்றன.
பெரிய அளவில் பணம் கொடுத்தால் அந்த சக்திகளை விரட்டி புதையலை எடுக்கலாம். அதன் மூலம் கோடீஸ்வரராக மாறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கான செலவுக்காக ரூ.8 லட்சம் அளவில் பணம் வாங்கியுள்ளனர்.
பூஜைகளை செய்த அவர்கள் ஒரு பானையில் தங்கம், வைரம், வைடூரியம் இருப்பதாக கூறி அதனை பத்திரமாக வீட்டில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறி பானையை கொடுத்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட ராதாம்மா தன்னுடைய வீட்டில் வைத்து அந்த பானையை பூஜை செய்து வந்துள்ளார். அதே நேரத்தில் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது, புதையலை வாங்குவதற்கு ஒரு கும்பல் வந்தனர்.
அவர்களிடம் ரூ.2½ கோடி பணம் அட்வான்ஸ் வாங்கி ராதாம்மாவிடம் கொடுத்து புதையல் பானை அருகே வைத்துள்ளனர். இரண்டையும் ஒரே நேரத்தில் தான் திறக்க வேண்டும் எனவும் கூறி நம்ப வைத்துள்ளனர். புதையல் வீட்டில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்த ராதாம்மா, குள்ளப்பா தம்பதியினரிடம் பூஜை நடத்துபவர்கள் தொடர்ந்து பணத்தை கேட்டுள்ளனர்.
இதனிடையே ராதாம்மாவின் மகனுக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படவே வீட்டிலிருந்த பானை மற்றும் ரூ.2½ கோடி பணம் இருந்த பெட்டியை அவர் உடைத்துப் பார்த்தார்.
அப்போது இரண்டிலும் பழைய காகிதங்கள் தான் இருந்துள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அவர்கள் உணர்ந்தனர்.
அதே நேரத்தில், பூஜைக்காக வந்தவர்களை தினந்தோறும் காரில் அழைத்து வந்த கார் டிரைவர், தனக்கு வாடகை வேண்டும் என கேட்டுள்ளார்.
வாடகை பணத்தை அவர்கள் கொடுக்காததால் அவர்கள் பேசுவதில் பல்வேறு புதையல் சார்ந்த விஷயங்கள் இருப்பதை அறிந்த அவர், 100 எண் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கவனத்திற்கு தகவல்சென்றது. அவரது உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் அந்த கும்பல் தங்கி இருந்த விடுதியில் சுற்றி வளைத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
இந்த புதையல் பூஜை விவகாரத்தில் தலைமறைவான மேலும் 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களில் செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
- சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கிணத்துக்கடவு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த ஆண்டு தோட்டத்து வீட்டில் வசித்த தந்தை, தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் மர்ம கும்பால் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், சிவகிரியிலும் தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்டு, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தோட்டத்து வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகள் குறித்து ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு சிவகுமார் மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத நேரு, மதிவண்ணன் தலைமையிலான போலீசார், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் தனியாக உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிகின்றனரா? என கண்காணித்தனர். மேலும் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களின் பெயர் விவரம், வீடுகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்துவது, காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வது, வீடுகளில் நாய் வளர்க்க வேண்டும், சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீடுகளில் கதவில் அலாரம் பொருத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கினர். அத்துடன் போலீஸ் நிலைய எண்ணை கொடுத்து, ஏதாவது தகவல் இருந்தால் இந்த எண்களை தொடர்பு கொள்ளுமாறு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமும் 10க்கும் மேற்பட்ட போலீசார் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள 47 கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பண்ணை வீடுகளை கண்காணித்து, அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர்.
இதேபோல் அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய போலீசார் அங்குள்ள தோட்டத்து வீடுகளுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
குறிப்பாக முதிய தம்பதிகளிடம் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சந்தேகப்படும் படியான சத்தம் கேட்டால் உடனே கதவை திறந்து வெளியே வரவேண்டாம். அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையத்தில் போலீசார் சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பது, எச்சரிக்கையாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பங்கேற்று பேசியதாவது:-
குற்ற சம்பவங்களை தடுக்க தோட்டத்து வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கதவுகளில் எச்சரிக்கை அலாரம் வைக்க வேண்டும். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களில் செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
- பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரி. இவர் மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரது 17 கேரட் வைர நகையை விற்பனை செய்ய இடைத்தரகர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த ராகுல், மணலி சேக்காடு பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த சுப்பன் ஆகியோரை அணுகினார்.
இதையடுத்து இடைத்தரகர்கள், வைரத்தை வாங்குவதற்காக லண்டன் ராஜன் மற்றும் அவரது நண்பரான விஜய், மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்கள் வைர நகையை பார்த்து விட்டு ரூ.23 கோடி விலை பேசி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை சந்திரசேகரை தொடர்பு கொண்ட இடைத்தரகர்கள் வைரத்தை வாங்க பணம் ரெடியாகிவிட்டது. வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வைர நகையுடன் வந்து அதனை கொடுத்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து சந்திரசேகர், தனது வளர்ப்பு மகள் ஜானகியுடன் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அப்போது சந்திரசேகர் மட்டும் குறிப்பிட்ட அறைக்குள் வைரத்துடன் சென்றார். ஜானகி ஓட்டலுக்கு வெளியே நின்றார்.
இதற்கிடையே நீண்ட நேரம் வரை சந்திரசேகர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஜானகி அறைக்கு சென்று பார்த்த போது அங்கு சந்திரசேகர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும், அறையில் இருந்த நபர்கள் அவரை தாக்கி வைரத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை மீட்டு வைரநகை கொள்ளை குறித்து வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
மேலும் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக இடைத்தரகர்கள் ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
வைர நகை கொள்ளை குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே புதியம் புத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அதில் சென்னை ஓட்டலில் வைரத்தை கொள்ளையடித்து தப்பி வந்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், அய்யப்பன் தாங்கலை சேர்ந்த ஜான் லயார், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காடு ரதீஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வைரம் மற்றும் தப்பி செல்ல பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளையர்கள் பிடிபட்டது தொடர்பாக சென்னை தனிப்படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விமானம் மூலம் தூத்துக்குடி விரைந்து சென்று பிடிபட்ட அருண்பாண்டியராஜன் உள்பட 4 பேரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வைரம் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? தூத்துக்குடிக்கு தப்பி சென்றது ஏன்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இடைத்தரகர்கள், நகை வாங்க வந்தவர்கள் மற்றும் தற்போது பிடிபட்டவர்கள் என குழப்பங்களுக்கு விடை காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கொள்ளையில் 4 பேர் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
- மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமம் எட்டையம்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்பெரிய கண்மாய் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இங்கு மீன் பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதையொட்டி நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி, செந்துறை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளையும், வலைகளையும் பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு, விரால், ஜிலேபி, குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது. தொடர்ந்து 2 கிலோ முதல் 3 கிலோ வரை கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
கிராம மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக மீன் பிடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு இனங்களை கடந்து மக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்கின்றனர். காலங்காலமாக தொடர்ந்து வரும் மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
- காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
- தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை அமைந்து உள்ளது. இது மலைஅடிவாரத்தை ஒட்டிய கிராமம் ஆகும்.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை இன்று அதிகாலை நெலாக்கோட்டை கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற வாகனங்களை தந்தத்தால் முட்டி சேதப்படுத்தியது. மேலும் நெலாக்கோட்டை வீடுகளின் பக்ககவாட்டு சுவர்களை இடித்து தள்ளியது.
இதற்கிடையே தெருநாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கிராம மக்கள் திடுக்கிட்டு விழித்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது தெருவில் காட்டு யானை சுற்றி திரிவது தெரிய வந்தது.
இதனை பார்த்து கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து நெலாக்கோட்டை கிராமத்தினர் திரண்டு வந்து பெரிதாக சத்தம் எழுப்பியும், தகரங்களை தட்டி ஓசை எழுப்பியும் காட்டு யானையை விரட்டினர். பின்னர் அந்த யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
நெலாக்கோட்டை கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு நின்ற வாகனங்களை தாக்கியதுடன் வீடுகளையும் சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நெலாக்கோட்டை-கூடலூர் போக்குவரத்து சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன்காரணமாக நெலாக்கோட்டை-கூடலூர் ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நெலாக்கோட்டை கிராமத்தினர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும் அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தொடர்ந்து நாங்கள் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் அவர்கள் நெலாக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
- வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.
- சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன.
இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வன விலங்குகளுக்கான உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.
காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.
தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
இதனால் உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அஜ்சல் செயின் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஜ்சல் செயின்(வயது26).
இவர் டாக்டருக்கு படித்து முடித்து வேலைக்காக காத்திருந்தார். இவரது நண்பர் பாகில்.
இவர்கள் 2 பேரும் தமிழ்நாடு மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ் டாப்சிலிப் பகுதியில் மலையேற்றம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர். நேற்று மலையேற்றத்துக்காக பொள்ளாச்சி டாப்சிலிப்புக்கு வந்தனர்.
அதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற வழிகாட்டிகளான சந்தான பிரகாஷ், அஜித்குமார் மற்றும் வனத்துறையினருடன் அஜ்சல் செயினும், பாகிலும் டாப்சிலிப்பில் ஆனகரி சோலா முதல் பண்டாரப் பாறைக்கு மலையேற்றம் மேற்கொண்டனர்.
8 கி.மீ தூரம் அடர்ந்த காட்டிற்குள் மலையேற்றம் மேற்கொண்ட இவர்கள் பண்டாரப்பாறையில் இருந்து டாப்சிலிப்புக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அஜ்சல் செயின் மற்றும் பாகிலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக வனத்துறையினர் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக வேட்டைக்காரன்புதூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது அஜ்சல் செயின் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருடன் வந்த நண்பர் பாகிலை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த அஜ்சல் செயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் ரூ.108-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும் சவரனுக்கு 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.108-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200
30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-05-2025- ஒரு கிராம் ரூ.108
03-05-2025- ஒரு கிராம் ரூ.108
02-05-2025- ஒரு கிராம் ரூ.109
01-05-2025- ஒரு கிராம் ரூ.109
30-04-2025- ஒரு கிராம் ரூ.111
- மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் உரசிச் சென்ற நிலையில், இது திட்டமிட்ட சதி, தன்னை கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன். ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசி இருந்தார்.
இதையடுத்து, இச்சம்பம் குறித்து விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம் அளித்தனர். அதில், மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும் ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்த போது விபத்து நடந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, மதுரை ஆதீனத்தின் கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுந்சாலையில், மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது சாலையின் எதிர் பகுதியில் வெள்ளை நிறக் கார் மெதுவாக வந்துள்ளது. ஆதீனத்தின் கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்தபோது விபத்து நடந்துள்ளது.
இந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் வந்த காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






