என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா.
- வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில் "அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது இது முதல்முறை. உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவுக்கு எனக்கு சந்தோஷம்" என்றார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"ராஜாவைத் தாலாட்டும் தென்றல்" - நம் பாராட்டு விழா!
இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா!
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
- குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரை மாவட்டம் திரு மங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகா இ.கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகள் அர்ச்சனா (வயது 23). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ராஜீவ்நகரை சேர்ந்த பரத் (25) என்பவருக்கும் கடந்த 25.10.2023-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் திருமணமான 6-வது மாதத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரின் கோர முகம் வெளிப்பட தொடங்கியது. அதாவது கணவர் பரத், அவரது தம்பி ஆதிதர்மலிங்கம், தாயார் ஈஸ்வரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, அர்ச்சனாவிடம் உனது தந்தையிடம் சென்று 100 பவுன் நகை மற்றும் சொத்தில் பங்கு கேட்டு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் மருமகள் என்றும் பாராமல் அவரை அடித்து, உடைத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கி உள்ளனர்.
ஆபாச வார்த்தைகளால் திட்டித்தீர்த்த அவர்களிடம் இனிமேலும் வாழமுடியாது என்று கருதிய அர்ச்சனா, நடந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலத்திற்கு சென்று தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அர்ச்சனா அங்கு சென்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். கடந்த 14-ந்தேதி தான் பெற்றெடுத்த குழந்தையுடன் அர்ச்சனா சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சனாவின் கணவர், மனைவியின் கையில் இருந்த குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. மேலும் அவரது தம்பி மற்றும் அர்ச்சனாவின் மாமியாரும் சேர்ந்துகொண்டு தாக்கியுள்ளனர்.
இதனை தடுத்த அர்ச்சனாவின் தந்தை முருகேசனும் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போது அர்ச்சனா கழுத்தில் இருந்து அறுந்து விழுந்த 1 பவுன் சங்கிலியை கணவர் பரத்தின் தம்பி ஆதிதர்மலிங்கம் அபகரித்துக்கொண்டதாக அர்ச்சனா, மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பரத், ஆதிதர்மலிங்கம், ஈஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 சேவைகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கும், 2 சேவைகள் திருப்பதியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.
- தற்போது எல்.எச்.பி. பெட்டிகளுடன் கூடிய நவீன பாதுகாப்பு அம்சங்களுடன், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை - திருப்பதி இடையே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் 1976-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த ரெயில் சென்னை - திருப்பதி இடையேயான 145 கி.மீ. தூரத்தை 3.30 மணி நேரத்தில் சென்றடைகிறது.
இந்த ரெயில் தினமும் 4 சேவைகள் இயக்கப்படுகிறது. 2 சேவைகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கும், 2 சேவைகள் திருப்பதியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஏற்கனவே இழுவை ரெயில் என்ஜின் இணைக்கப்பட்டு இருந்தது. இப்போது ராஜ்தானி மற்றும் வந்தே பாரத் ரெயிலில் இருக்கும் இந்த அம்சங்கள் கடந்த 1990-ம் ஆண்டு காலகட்டத்திலேயே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்தது. ரெயில் பயண நேரத்தை 30 நிமிடங்கள் குறைப்பதற்காக இந்த வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்பிறகு கடந்த 2016-2017-ம் ஆண்டு இழுவை ரெயில் என்ஜின் அகற்றப்பட்டு வழக்கமான ஐ.சி.எப். பெட்டிகளாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எல்.எச்.பி. பெட்டிகளுடன் கூடிய நவீன பாதுகாப்பு அம்சங்களுடன், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரெயில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நவீன வசதிகளை கொண்ட சப்தகிரி ரெயிலில் 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு குளிர்சாதன பெட்டி, 4 பொதுப்பெட்டிகள், மாறுத்திறனாளிகள் செல்லும் வகையிலான ஒரு பெட்டி ஆகியவையும் அடங்கும்.
சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பெட்டிகளை கொண்ட நவீன சப்தகிரி ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
- ஆட்சியில் உள்ளவர்களால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை.
- அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்துள்ளோம்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் தான் ஆலோசனை கூட்டம் நடத்துகிறேன். ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் தான் தொகுதிக்கு ஒரு கூட்டம் நடத்தி வருகிறோம்.
அ.தி.மு.க ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதாக கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பசுமை வீடுகள் கட்டி தரப்படும். இதற்கு என்று கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து நல்ல தரமான முறையில் கான்கிரீட் முறையில் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும். அத்துடன் திருமண உதவி திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டு சேலை, பட்டு வேட்டி வழங்கப்படும்.
அ.தி.மு.க ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு என எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக துணி நெய்யப்பட்டு, அதிகளவில் தேக்கம் அடைந்த போது, கைத்தறி நெசவாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 350 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. இதுதவிர ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையும் கொண்டு வந்தோம். கொரோனா காலத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 930 கைத்தறி நெசவாளர்களுக்கு பேருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை கொடுத்துள்ளோம். இதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்தோம்.
அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்த அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூ.500 கோடி வேண்டும். இந்த ஆட்சியில் பணம் இல்லை. அதனால் தான் இதுவரை எந்த மாவட்டத்தையும் அவர்களால் அறிவிக்க முடியவில்லை. நான் முதலமைச்சராக இருக்கும் போது 6 மாவட்டங்களை அறிவித்தேன். இப்போது ஆட்சியில் உள்ளவர்களால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை.
அ.தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளுக்கும் சரிசமமாக நிதி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதனால் எல்லா துறைகளும் வளர்ச்சியடைந்தது. இந்த ஆட்சியில் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இவ்வளவு கடன் வாங்கியுள்ளனர். இதனை எப்படி திருப்பி கட்டுவது. பெரிய ஒரு போராட்டமாக தான் இருக்கிறது.
குறிப்பிட்ட அளவுக்கு கடன் வாங்கினால் தான் ஒரு அரசால் திருப்பி செலுத்த முடியும். அளவுக்கு மீறி கடன் வாங்கினால் அதனை திருப்பி செலுத்துதவற்கே புதிய வரிகள் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனை தான் இந்த தி.மு.க அரசு புதிது புதிதாக வரி போட்டு வைத்துள்ளது. இவ்வளவு வரி போட்டும், இந்த ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை.
அ.தி.மு.க ஆட்சியில் சாலை வசதிகள், மேம்பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கால்வாய்களை கூட கான்கிரீட் கால்வாய்களாக மாற்றியுள்ளோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்திற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 2, 3 தடவை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. எல்லாம் கூடி வந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தி.மு.க ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள் அப்படியே நின்று போய்விட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோன்று விவசாயிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு என்னென்ன பிரச்சனை என்பதை முழுமையாக ஆய்வு செய்து, அவர்களை அந்த பிரச்சனையில் இருந்து விடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
- கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, ஜெர்மனி நாட்டின், கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன், (ஓய்வு), இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோரிடம் வழங்கினார்.
பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரத்திற்கும் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் உடனடியாக கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 7.7.2021 அன்று உத்தரவிடப்பட்டு, வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நல்ல கருத்து தான்.
- தர்மயுத்தத்தின் அடிப்படையில் கோர்ட்டில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்ற தத்துவத்தை எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் வரவேற்கிறேன். அதற்கான முழு ஒத்துழைப்பை தருவேன். அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாகி விடும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். என்னை கட்சியில் சேர்ப்பதற்கு எந்த டிமாண்ட்டும் வைக்கவில்லை. அரசியலில் எதிரிகளும் இல்லை. நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது நல்ல கருத்து தான். தர்மயுத்தத்தின் அடிப்படையில் கோர்ட்டில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே ஒன்றிணைவதற்கு முன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச வேண்டி உள்ளது. செங்கோட்டையன் அனைவரும் இணைய வேண்டும் என எடுத்த முயற்சி வெற்றி பெறும். என்.டி.ஐ. கூட்டணி தொடர்பாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தொடர்ந்து நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
- ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கோவை:
கோவை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் தினமும் 5000 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள், உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் சென்று நோயாளிகள் சிகிச்சை பெறவும், சிகிச்சை முடிந்த நோயாளிகள் வார்டுக்கு அழைத்துச் செல்லவும் அங்கு ஸ்ட்ரக்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 70 வயதான தனது தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்க வந்த அவரது மகன், தந்தைக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்த நிலையில் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். வார்டில் இருந்து வாகன நிறுத்துமிடம் நீண்ட தூரம் இருந்ததால் அவர் நடக்க முடியாது என்று கூறினார்.
எனவே ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கும்படி அவரது மகன் கேட்டுள்ளார். அப்போது ஊழியர்கள் அவரை காத்திருக்கும் படி கூறியுள்ளனர். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவரது மகன் தந்தையை தனது உடலில் சாய்த்துக் கொண்டு மேல் தளத்திலிருந்து இறங்கி கீழே வந்தார். பிறகு அவரை இழுத்தபடியே ஆஸ்பத்திரி வாசலில் நின்ற வாகனத்திற்கு கொண்டு சென்றார்.
ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் தந்தையை மகன் தோளில் சாய்த்துக் கொண்டு இழுத்து சென்ற காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை மேற்கொண்டார்.
அதன்பேரில் ஊழியர்கள் எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
- பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது.
- தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், தி.மு.க. அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. தி.மு.க.வின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.
தி.மு.க.வினருக்கு சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு. தி.மு.க.வின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
- இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களாலும் முன்மொழியபட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் மேதகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வு பெற்று உள்ளது இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள் ஆகும்.
தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
- கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
தொடர்ந்து அவர் அதே மாதத்தில் 4-ந்தேதி அவரது பண்ணை வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் உடல் இரும்பு கம்பி மூலம் கட்டப்பட்டிருந்ததாகவும், உடலில் சிமெண்ட் கல் கட்டப்பட்டிருந்ததாகவும், வாயில் ஸ்டீல் ஸ்க்ரப்பர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உவரி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனக்கு பணம் தர வேண்டிய நபர்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு 'மரண வாக்குமூலம்' மற்றும் கடிதம் ஒன்றை எழுதியிருந்ததார்.
அந்த கடிதத்தில் பல அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கூடுதல் சூப்பிரண்டு சங்கர் மற்றும் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழு இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
ஆனால் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பலமுறை சம்பவ இடங்களை ஆய்வு செய்தும், பல்வேறு கோணங்களில் விசாரித்தும் எவ்வித முடிவுக்கும் இதுவரை போலீசாரால் வர முடியவில்லை. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் எவ்வித பயனுள்ள தடயங்களையும் அளிக்கவில்லை. இதனால், விசாரணை அதிகாரிகள் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பிற மறைமுக ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விசாரணை நீடித்து வரும் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் ஜெயக்குமார் மரணத்தை சுற்றியுள்ள மர்மம் நீடிக்கிறது. அவரது குடும்பத்தினரும், கட்சித் தொண்டர்களும் இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த தெளிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து காங்கிரசார் கூறுகையில், ஜெயக்குமாரின் கொலை வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. மீது எங்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்தனர்.
சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கூறுகையில், ஜெயக்குமார் கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று சுருக்கமாக தெரிவித்து முடித்து விடுகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தின் மர்மம் சுமார் 500 நாட்களாகியும் இதுவரை விலகாமல் உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.
- சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இதற்கு ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில்,
அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தென் தமிழ்நாட்டில் தேவையற்ற வசனங்களை பேசிவிட்டு, பசும்பொன் தேவர் திருமகனார் பெயரில் எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.
எல்லா சமுதாக மக்களும் தேவரை மதிக்கின்ற பூமியில், சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன்.
- இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். தேர்தல் பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கிய உதயநிதி, செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* இ.பி.எஸ். ஆம்புலன்சில் செல்வார் என பேசவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒரு மனிதர் அப்படி பேசுவானா?
* அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன்.
* அ.தி.மு.க. கட்சி ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படும்போது காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் வருவார் என்று கூறினேன்.
* எந்தக் கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வரத்தான் செய்யும்.
* இ.பி.எஸ்.-ஆல் பா.ஜ.க.விடமிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை.
* அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ்.தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும்.
* அ.தி.மு.க.வினர் இதை ஒத்துக்கொள்வார்களா என தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர்.
இவ்வாறு அவர் கூறினார்.






