என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
    • தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக இருப்பவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை 2009 ஜூலை மாதம் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    படப்பிடிப்பில் பிஸியாக இருந்த போதும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்தார். இதனால் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக தகவல் கசிந்தது. 

    'லியோ' பட நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் பேசியபோது தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என அரசியல் பயணம் குறித்து சூசகமாக தெரிவித்தார்.

    விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்ட நிலையில் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பாக கடந்த சில மாதங்களாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது பூத் கமிட்டிகளை வலுப்படுத்த மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தினார்.

    இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசினார். 

    2026-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க முன்னோட்டமாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக விரைவில் மாற்றம் செய்ய நடிகர் விஜய் அப்போது மனதில் முடிவு செய்திருந்தார். அதைதொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்தநிலையில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ' தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நடிகர் விஜய் இன்று வெளியிட்டார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    • விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அரசியலுக்கு வர முடிவு எடுத்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என்றார் உதயநிதி.

    சென்னை:

    நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்நிலையில், சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும். புதிய கட்சியை தொடங்கிய விஜய்க்கு எனது பாராட்டு. இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை உள்ளது என கூறினார்.

    • நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்நிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நாளை நடைபெற இருந்த திருப்புதல் தேர்வுகள் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • விபத்தில் மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள சீலை பிள்ளையார்புத்தூரில் ஒரு சமுதாயத்தினரை அவதூறாக சித்தரித்து மற்றொரு சமுதாயத்தினர் துண்டு பிரசுரங்கள் ஒட்டியதாக தெரிகிறது. இதை கண்டித்து ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்,

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் வாகனத்தை இருட்டான பகுதியில் இருந்து வெளிச்சமான பகுதிக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓட்டி வந்தனர். அப்போது போலீஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள அறிவழகன் என்பவரது வீட்டின் முன்பகுதியிலும், ராஜா என்பவரது சிமெண்ட் கடையிலும் மோதியது.

    மேலும் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. இந்த வேளையில் அந்த வழியாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த முனையனூரை சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது மனைவி மருதாயியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அவர்கள் மீதும் போலீஸ் வாகனம் மோதியது. இந்த விபத்தில் மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தங்கராஜ் மற்றும் அப்பகுதியில் நின்ற முனையனூர் தினதயாளன் (48), சீலப்பிள்ளை யார்புதூர் இலுப்பைதோப்பு தெரு தீபன்(24) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.


    இந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் போலீஸ் வாகனத்தின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸ் வாகனத்தை சாய்த்து வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் அப்பகுதியில் மிகுந்த பதட்டம் நிலவியது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த சம்பவ இடத்தை திருச்சி மண்டல டி ஐ.ஜி.மனோகரன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், முசிறி கோட்டாட்சியர் ராஜன், தொட்டியம் வட்டாட்சியர் கண்ணாமணி மற்றும் வருவாய்த்துறையினர், முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்து குறித்து தீனதயாளன் காட்டுப்புதுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் டி.எஸ்.பி. யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் விசாரணை நடத்தியதில் விபத்தை ஏற்படுத்தியது திருச்சி ஆயுதப்படை காவலர் முசிறி அருகே உள்ள காந்திநகர் காலனியை சேர்ந்த லோகநாதன்(36) என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது துறை நீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    • ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
    • இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

    மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.

    பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.

    எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.

    அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.

    நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.

    • 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருபுறம் மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தாலும்கூட நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. கொருக்குப்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கி மெதுவாக நடக்கிறது.

    இந்த மேம்பால பணியை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 2,437 சதுர மீட்டர் தனியார் நிலத்தையும் 194 சதுர மீட்டர் அரசு நிலத்தையும் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

    வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.195.19 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைகிறது. இந்த பாலம் 570 மீட்டர் நீளம் கொண்டதாகும். 15 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது.

    மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் 30 பேரின் நிலம் தேவைப்படுகிறது. 2860 சதுரமீட்டர் அளவுள்ள தனியார் இடங்கள் கையகப் படுத்தப்பட வேண்டும். அரசு துறை நிலம் 8019 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகி றது. மொத்தம் 10,879 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் சென்னை கலெக்டரால் நியமிக்கப்பட்டு நடக்கிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை அதிகாரிகள் மூலம் இவை நடத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த மேம்பாலம் கான் கிரீட் தூண்கள் மூலம் அமைத்தாலும் உத்திரங்கள் (கிரேடர்) இரும்பு ராடுகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. ரெயில்வே மேம்பாலங்களுக்கு இதுபோன்ற இரும்பு உத்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கட்டுமான பணி காலம் குறையும்.

    இந்த மேம்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல.
    • எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    "அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்!"

    என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

    அயல்நாட்டில் இருந்தாலும் நினைவு முழுவதும் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்களே நிறைந்திருக்கிறீர்கள். இந்த மடலை நான் எழுதும்போது, உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இப்போது நேரம் மதியம் 12 மணி. உங்களில் ஒருவனான எனக்கு காலை 7.30 மணி. ஆம்.. இந்தியாவிலிருந்து நாலரை மணி நேர வேறுபாடு கொண்ட ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் இருக்கிறேன், தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக!

    ஜனவரி 27-ஆம் நாள் சென்னையிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு புறப்படும் நிலையில், ஊடகத்தினரிடம் பேசும்போது, "தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் பெருக்கி, 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்கை அடைவதற்கு கடந்த ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றேன். இந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டிற்குச் செல்கிறேன்" என்று தெரிவித்தேன். அதுமட்டுமல்ல, சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தின் விளைவாக கிடைத்துள்ள முதலீடுகள், தொடங்கவுள்ள தொழில்கள், கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் இவற்றையும், ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியையும் சுட்டிக்காட்டினேன்.

    இதோ, இங்கே ஸ்பெயின் நாட்டிலும் தமிழ்நாட்டிற்கானத் தொழில் முதலீடுகளை ஈர்க்கின்ற வகையிலான சந்திப்புகளும், அதன் தொடர்ச்சியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பயணத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுகின்றன. இருப்பது ஸ்பெயினில் என்றாலும், நினைப்பெல்லாம் தமிழ்நாட்டில்தான்.

    நம் தமிழ்நாட்டைப் போலவே மொழியையும் பண்பாட்டையும் இரு கண்களாகக் கருதி, உயிரெனப் போற்றக்கூடியவர்களாக ஸ்பெயின் நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பாரம்பரியப் பெருமை மிக்க ஸ்பெயின் நாட்டுக் கட்டடங்கள், தமிழ்நாட்டின் புகழ்மிக்க கலைப் படைப்புகளை நெஞ்சில் நிழலாடச் செய்கின்றன. நம்முடைய தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் ஏறுதழுவுதல் போல ஸ்பெயின் நாட்டிலும் எருது ஓடும் போட்டி உண்டு. நம் உயிருக்கு நேரான தமிழ்மொழி போல, அந்நாட்டு மக்களும் தங்களுடைய தாய்மொழியான ஸ்பானிஷ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறார்கள்.

    உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை ஸ்பானிஷ் பெற்றிருக்கிறது. ஸ்பெயினில் எல்லா இடங்களிலும் ஸ்பானிஷ் மொழியே முதன்மை பெற்றுள்ளது. ஜப்பான் நாட்டிற்குச் சென்றபோதும் அங்கே அவர்களின் தாய்மொழியே முதன்மை பெற்றிருப்பதைக் கண்டேன். ஆதிக்க மொழிகளுக்கு இடம் தராமல், உலகத் தொடர்புக்கேற்ற அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் நிலையை இருநாடுகளிலும் கண்டபோது, நம் மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் - நம் உயிருக்கும் மேலான இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான இருமொழிக் கொள்கை நினைவுக்கு வந்தது. அந்த அண்ணனுக்கு பிப்ரவரி 3 அன்று நினைவு நாள்.

    வங்கக் கடலோரம் தன் கழகத் தம்பியாம் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களுடன் நிரந்தரத் துயில் கொள்ளும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு நாளன்று அமைதிப் பேரணி நடத்தி, மலர் தூவி மரியாதை செலுத்துவது கழகத்தின் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான வழக்கமாக உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த அந்த நடைமுறை வெறும் சம்பிரதாயச் சடங்கல்ல. "எங்கள் அண்ணனே.. நீ தொடங்கிய இயக்கம் எந்த இலட்சியத்திற்காக உருவானதோ, அந்த இலக்கை அடையும் வகையில் எங்கள் வெற்றிப் பயணம் தொடர்கிறது" என்று மனதில் சூளுரை ஏற்று, அதற்கேற்ற வகையில் இயக்கத்தை வழிநடத்திடும் வலிமையைப் பெறுவதற்கான வாய்ப்பு.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில், இனமானப் பேராசிரியர் முன்னிலையில் அண்ணா சதுக்கம் நோக்கி எத்தனையோ அமைதிப் பேரணிகளில் நடந்து சென்றது என் நினைவுக்கு வருகிறது. இந்த முறை, கழக உடன்பிறப்புகளாம் உங்களுடன் வருவதற்கான சூழல் அமையவில்லை. எனினும், எந்த நாட்டைச் சுற்றினாலும் தென்னாட்டுக் காந்தி என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா நம்மோடுதான் இருப்பார்.

    உலக நாடுகளின் வரலாற்றை கழகப் பொதுக்கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தன் தம்பியருக்கு எடுத்துரைத்து அரசியல் தெளிவு தந்த அறிவுலக மேதை அவர். கழகத்தின் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகளாக்கி, உலக வரலாறுகள் பற்றிய வகுப்பெடுத்தவர்கள் நம் அண்ணாவும் அவர்தம் அன்புத் தம்பியரும்.

    அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயராது உழைத்து, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

    பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம். மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக்காப்பதற்கும் பாராளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது கழகம்.

    பாராளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த 19-ஆம் தேதி, கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழு, பாராளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என மூன்று குழுக்கள் அறிவிக்கப்பட்டு அந்தக் குழுக்கள் தங்கள் பணிகளை உடனடியாகத் தொடங்கிவிட்டன. ஜனவரி 21-ஆம் நாள் சேலத்தில் எழுச்சிமிகு உணர்ச்சி மாநாடாக நடைபெற்ற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடும் மாநில உரிமை மீட்பு முழுக்கத்தை முன்வைத்து வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.

    தோழமைக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் காங்கிரஸ் பேரியக்கத்துடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, மற்ற தோழமைக் கட்சியினருடன் ஆலோசனையில் உள்ளனர். தோழமை உணர்வை மதித்தும், நாட்டின் நிலைமையை உணர்ந்தும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவது குறித்த செய்திகள் எனக்கு எட்டியபடி உள்ளன.

    சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பதுதான் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பா.ஜ.க போலவோ அதன் கள்ளக்கூட்டணியான அ.தி.முக. போல தி.மு.க.வின் பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது என்பதால், கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று பலதரப்பு மக்களையும் அமைப்புகளையும் சந்தித்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற பொறுப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை நேரிலும், கடிதத்திலும், மின்னஞ்சலிலும், QR Code வாயிலாகவும் வழங்கி வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் கழகத்தின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமையிலான பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அடங்கிய இந்தக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்துத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    தினமும் 4 தொகுதிகள் வீதம் இதுவரை 22 பாராளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல் கழகத்தினர் சுட்டிக்காட்டும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது கழக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிகிறேன்.

    இந்தியாவின் குடியரசு நாளான ஜனவரி 26 அன்று, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. முன்னெடுத்து நடத்திய "வெல்லும் சனநாயகம்" மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான்.

    அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் கழக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி. பா.ஜ.க.வுக்கு எதிரான வெற்றிக் கூட்டணி எப்படி அமையவேண்டும் என்பதை கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைத்த கூட்டணி வாயிலாக நிரூபித்துக் காட்டின திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி உறுதியாகக் களம் கண்டு, வெற்றி பெற்றதன் விளைவாக திராவிட மாடல் அரசு அமைந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக ஆட்சியை வழங்கி வருகிறது. இதுதானே அண்ணாவின் இலட்சியம். இதுதானே தலைவர் கலைஞரின் செயல்திட்டம்.

    மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், 'மக்களிடம் செல். மக்களிடம் சொல்' என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு குடும்பமும் கழக ஆட்சியின் சாதனைகளால் பெற்றிருக்கும் பயன்களை உணர்த்துங்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிப்பதை நினைவுபடுத்துங்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலைவிடவும் கூடுதலான உழைப்பை வழங்கி, கூடுதலான வாக்கு வித்தியாசத்தில், கடந்த முறை மிச்சம் வைத்த ஒற்றைத் தொகுதியையும் சேர்த்து நாற்பதுக்கு நாற்பது என்ற முழு வெற்றியை உறுதி செய்யுங்கள். அந்த இலக்கை திமுக நிச்சயம் அடைந்துவிடும் என்கிற நம்பிக்கை அண்ணா அறிவாலயத்தில் கழக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடனான சந்திப்பின்போது நிர்வாகிகள் காட்டும் உற்சாகத்திலேயே நன்கு புலப்படுகிறது. அந்த உற்சாகம், தேர்தல் களப்பணிகளிலும் குன்றாமல் குறையாமல் வெளிப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும். எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம்.

    பாராளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளது. முழுமையான பட்ஜெட்டை அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியா கூட்டணி அரசு தாக்கல் செய்யும். மாநிலங்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அதற்கேற்ற வகையில் வெற்றி பெறுவோம் என பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவு நாளில் சூளுரைப்போம்.

    அமைதிப் பேரணியில் அன்பு உடன்பிறப்புகள் அலைஅலையாய் வங்கக்கடல் நோக்கிச் செல்கின்ற நேரத்தில், இங்கே அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன். அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது.
    • 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆலய 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது. இன்று முதல் தினமும் மாலையில் திருப்பலி நடக்கிறது. வருகிற 8, 9-ந்தேதிகளில் அருட்தந்தை ஸ்டீபன் தச்சீல் சிறப்பு நற்செய்தி கூட்டமும், குணமளிக்கும் வழிபாடும் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி நற்கருணை பவனி நடைபெறுகிறது. 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    இந்த 2 நாட்களிலும் மாபெரும் தேர் பவனியானது ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ரெயில்வே மைதானத்தில் ஒன்று கூடி திருப்பலியோடு நிறைவுபெறும். 11-ந்தேதி பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எரியும் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியவாறு பவனியாக வந்து பங்கேற்கிறார்கள்.

    • புரட்சித் தலைவர் ஆரம்பித்த கட்சி என்பது தி.மு.க.-வை எதிர்த்து தொடங்கப்பட்டது.
    • அ.தி.மு.க.-வை எந்த இயக்கத்துடனும் ஒப்பிடமுடியாது.

    நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அதாவது புரட்சித் தலைவர் மாதிரி இனியாரும் பிறக்க முடியாது. அவர் தெய்வப் பிறவி. அந்த தெய்வப் பிறவி மாதிரி விஜயை சித்தரித்து விட்டார்கள். 

    அவர்கள் தலைவர் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது சிவாஜி கணேசன் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது தியாகராஜ பாகவதர் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது பி.யூ. சின்னப்பா மாதிரி சித்தரித்து கொள்ளட்டும்.

    எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. அதனால் புரட்சித் தலைவர் ஆரம்பித்த கட்சி என்பது தி.மு.க.-வை எதிர்த்து தொடங்கப்பட்டது.

    அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். 50 ஆண்டுகள் கடந்தும் எழுச்சியாக உள்ளது. அதற்கு எம்.ஜி.ஆர். போட்ட விதை. அது இன்று ஆலமரமாக வளர்ந்து பலபேருக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது.

    அதனால் அ.தி.மு.க.-வை எந்த இயக்கத்துடனும் ஒப்பிடமுடியாது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. நிலைத்து நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
    • பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திரு நகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். (வயது 70).

    இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது ஆழ்வார்திருநகரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

    நேற்று ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் மழை பெய்த காரணத்தினால் அங்குள்ள சிறு அரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். அவர்கள் ஏரல் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் திடீரென மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் சொல்லி கொடுப்பது குறித்து அறிந்த அவர்கள் நேரடியாக 20 பேரும் வருகை தந்தனர்.

    காலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால் அரங்கத்திற்குள் நுழைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை சிலம்ப ஆசான் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

    பிரான்ஸ் நாட்டினர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.

    அதை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    உடனே அதே இடத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நெடுங்கம்பு, நடுகம்பு மற்றும் ரெங்கராட்டினத்தைச்சுற்றி பயிற்சி அளித்தார். சிறிது நேரத்திலேயே சிலம்ப கலையைக்கற்றுக்கொண்ட பிரான்ஸ் நாட்டினர், ரெங்கராட்டினத்தை தானாகவே சுற்றி அசத்தினர்.

    அப்போது உடன் இருந்த மாணவ-மாணவிகளும், அங்கு வந்த பிரான்ஸ் நாட்டினரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    • கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளார்.

    சென்னை:

    நடிகர் விஜய் இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளார். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்தார்.

    விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர், நடிகர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
    • அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2-ல் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதி மாதவரம் மில்க் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. தூரம் வரை அமைக்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் சுரங்கப்பாதையாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 116 கி.மீ. தூரத்திற்கு இரண்டாம் திட்டப் பணிகளில் 42 கி.மீ. கட்டுமானத்திற்கு 23 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் 19 எந்திரங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன.

    தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் போன்ற இடங்களில் களிமண் நிலம் இருந்தாலும் அடையாறு மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் பாறைகள் நிறைந்த பகுதியாகும்.

    இந்த திட்டப் பணியில் சில சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பாறை மண்ணின் வழியாக சுரங்கப் பாதைகளை அமைக்க இணைக்கப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் அடையாறு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது ஆற்றின் பாதி வரையில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. மற்றொரு எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே பல மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ளும். கிரீன்வேஸ் ரோடு ஸ்டேஷன் முதல் அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான 1.6 கி.மீ. தூரத்திற்கு அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் எந்திரம் இன்னும் 3 மாதங்களில் ஆற்றின் தெற்கு கரையை வந்தடையும் என்று மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தெரிவித்தார்.

    மேலும் ஒரு சுரங்கம் தோண்டும் எந்திரம் மெதுவாக ஸ்டெர்லிங் சாலையை நோக்கி முன்னேறி வருகிறது. ஸ்டெர்லிங் சாலையை அடைய 3 மாதங்கள் ஆகலாம். மற்றொரு எந்திரம் சேத்துபட்டு ஏரி வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று ஒரு மாதத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ×